ஜனவரி 29 – ஒரு வரலாற்றின் துவக்கம்.

இனி தமிழ் மற்றும் தமிழினம் ஆகிய வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படாது போகும் என நம்பியவர்கள் ஏமாந்து போனதற்கு பின்னால் இருக்கும் நாள் – ஜனவரி 29. இந்த நூற்றாண்டில் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லோர் மனதிலும் இருக்கும் பெயர் – முத்துக்குமார்.

இந்த கட்டுரையின் சாயலில் ஏராளமான கட்டுரைகளை இதற்குள் வெளிவந்திருக்கும். நான் புதிதாகவோ சிறப்பாகவோ எழுதுவதற்கு எதுவுமில்லை. ஆயினும், என் அம்மா அன்பானவள் என்பது பலரும் சொல்லிவிட்ட கருத்து என்பதற்காக அதை நான் சொல்லாமலிருக்க முடியுமா?  முத்துகுமாரும் அப்படியே.. அவரைப் பற்றி நினைவுகூர நம் எல்லோரிடமும் ஏதோ ஒரு செய்தி நிச்சயம் இருக்கிறது.

பெரும்பான்மை தமிழக மக்களின் கருத்துக்கு எதிராகவே எப்போதும் செய்தி வெளியிடும் பார்ப்பன ஊடகங்கள் முத்துகுமார் விடயத்தில் மட்டும் இன்றுவரை அடக்கிவாசிக்கின்றன. சோனியா சொன்னால் பெற்ற தாயையே வேசி என சொல்லத் தயங்காத காங்கிரஸ்காரர்கள், தங்கள் கட்சியின் மீதான பரவலான வெறுப்பை உருவாக்கியதில் முக்கியமானவரான முத்துகுமாரைப் பற்றி மூச்சுகூட விடுவதில்லை. அவரைப் பற்றி எதிர்மறை செய்திகள் வெளியிடுவதும் குறை சொல்வதும் தங்களை முற்றாக தனிமைப்படுத்திவிடும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்றைய தமிழக சூழலில் முத்துகுமார் ஒரு தவிர்க்கவியலாத ஆளுமை என்பதற்கான எளிய உதாரணங்கள் இவை.

தமிழர்கள் உணர்ச்சிவயப்பட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள் எனும் கருத்தோட்டம் தமிழ்நாட்டிலேயே பலருக்கும் உண்டு. துரதிருஷ்டவசமாக அது உண்மை என நம்புவதற்கான உதாரணங்கள் தமிழகத்தில் ஏராளமுண்டு. ஆனால் முத்துகுமாரின் “தற்கொலை” முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. செய்தியையும் சீரியல்போல பார்க்க பழகிவிட்டிருந்த ஒரு சமூகத்தை குற்ற உணர்வு கொள்ளவைக்க தனது உடலை தீயிலிட்டார் அவர். மரணத்தின் போது உணர்ச்சி வயப்படுபவர்களை மட்டுமல்ல தற்கொலை செய்துகொள்வது மூடத்தனம் என அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களையும் தன் இறுதி ஊர்வலம் வரை தன்னுடன் நிற்க வைத்தார் அவர்.

எந்த நிலைப்பாட்டை எடுப்பது எனும் குழப்பத்தில் இருந்தவர்களை முடிவெடுக்க வைக்கும் கருவியாக இருந்தது அவரது இறுதிக் கடிதம். ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும் அதனை வெளிப்படையாக காட்டிக்கொள்ள தயங்கியவர்களை துணிவு கொள்ளச்செய்தது அந்த கடிதம். வெறும் ஊழியர்களாக மட்டுமே பல ஆண்டு காலம் நான் அறிந்திருந்த பலரும் திருப்பூரில் நடந்த பல ஈழ ஆதரவு கூட்டங்களில் அவரது மரணத்திற்குப் பிறகு தட்டுப்பட ஆரம்பித்தார்கள். தானொரு தமிழீழ ஆதரவாளன் என பல இளைஞர்கள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முத்துகுமார் ஒரு காரணமாக இருந்தார் என்பது நிச்சயம் மிகையான வாசகமல்ல.

நல்லடக்க வல்லுனர்களான காவல்துறை, நாடக கலைஞரான முதல்வர் எனும் சூழ்நிலையில்கூட அவரது உடலை மூன்று நாட்களுக்கு அவர்களால் கைப்பற்ற இயலவில்லை. ஒரு உடலை எப்படியாவது எரியூட்டிவிடவேண்டும் என தமிழ்நாட்டின் எல்லா ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும் மெனக்கெட்டது அவரது மரணத்தின்போதுதான். தன் உடலை ஆயுதமாக்குங்கள் என்று சொல்லி மரணித்தார் அவர். உண்மையில் அவரது உடல் ஒரு ஆயுதமாகவே இருந்தது, அதைக் கண்டுதான் அன்று ஆண்ட கட்சி கூட்டணியும் அன்றைய எதிர்க்கட்சிக் கூட்டணியும் அஞ்சி நடுங்கின. முத்துகுமாரின் உடலை காண திரண்டு வந்த கூட்டம்தான் அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு நாம் அளித்த ஒரேயொரு மற்றும் குறைந்தபட்ச நம்பிக்கை. அவரது இறுதி ஊர்வலத்தின்போதே கல்லூரிகளை மூடி தாங்கள் மாணவர்களுக்கும் பயப்படுகிறோம் என காட்டிக்கொண்டது தமிழக அரசு. இந்த இரண்டு அங்கீகாரங்களுக்கும் உண்மையான உரிமையாளர் முத்துகுமார்தான்.

இந்த நூற்றாண்டின் தமிழக அரசியல் களத்தை முத்துகுமாருக்கு முன் மற்றும் முத்துகுமாருக்கு பின் என பிரித்து பார்த்தால் அவரது வீச்சை நம்மால் உணர இயலும். அவரது மரணத்துக்கு முன்னால் தமிழ், தமிழீழம், தமிழினம் என பேசுவோர் யாவரும் சுலபமாக தீவிரவாதியென அடையாளப்படுத்தப்பட்டார்கள். தமிழகத்தில் ராணுவ வண்டிகளை மறிக்கும் வீரம் அவரிருந்திருக்காவிட்டால் 99 விழுக்காடு வந்திருக்க சாத்தியமில்லை. ராஜீவ் காந்தியின் சாவுக்கு தமிழகம் இன்னமும் அழுகிறது எனும் காங்கிரஸ் கூட்டம் உருவாக்கிய மாயையையும் தன் உடலிலிட்ட தீயைக்கொண்டு பொசுக்கினார் அவர். இணையத்திலும் பொது வெளியிலும் கூடும் தமிழ் இளைஞர்கள் கூட்டத்தின் பிண்ணனியில் முத்துகுமார் இருக்கிறார். சோனியா கும்பல் அவரது இறுதி ஊர்வலத்துக்கு பிறகு தமிழகத்தை இன்னும் அதிகமாக வெறுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சோனியாவால் வெறுக்கப்படும் தேசம் என்பதைத் விட தமிழகத்துக்கு வேறு பெரிய கௌரவம் இருக்கிறதா என்ன?

அவரது தியாகத்தை வீணாக்கிவிட்டோம் எனும் குற்ற உணர்வில் நாம் இருந்தால் முத்துகுமார் எனும் சகாப்தம் முடிந்துவிட்டதாக பரப்புரை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஆகவே, அவரது நினைவை போற்றும் பணியையேனும் தவறாது செய்வோம். வருங்கால இளைஞர்களாவது அவரது கனவை நிறைவேற்றும் வாய்ப்பை அது உருவாக்கும். இன்னொரு இளைஞனை பெட்ரோல் கேனுடன் சாஸ்திரி பவனுக்கு விரட்டும் அநியாயத்தை நாம் செய்யாதிருக்க முத்துகுமாரை நாம் மறக்காதிருப்பதுதான் முதல் பணி.

இனிவருங்காலங்களில், தன் உயிரை மாய்த்துக்கொள்வது தியாகமா? இதற்கு இத்தனை ஆர்பாட்டம் தேவையா என தினமலர் வகையறாக்கள் பிரச்சாரம் செய்யலாம். அதையே உங்களுக்கு அருகிலிருக்கும் ஒருவரும் சொல்லலாம். அப்போது தயங்காது சொல்லுங்கள்,சம்பளமும் இதர சலுகைகளும் பெற்றுக்கொண்டு மேலதிகாரி உத்தரவிடுமிடத்துக்குப் போய் செத்துப்போகும் ராணுவவீரன் தியாகி என்றால், எங்கள் முத்துக்குமார் அவர்களைவிட கோடி மடங்கு மேலானவன்.

மூன்று லட்சம் மக்களின் போராட்டமும் நான்கு ஜெனரேட்டர்களும்… 2

அணுசக்தியின் தேவை குறித்த பிரச்சாரமும், அதன் உற்பத்தி செலவீனம் பற்றிய விவரங்களும் அபத்தமானவை. ஒரு விஞ்ஞானி உற்பத்தி செலவு மூன்று ரூபாய்/ யூனிட் என்கிறார் (சூரிய மின்சக்திக்கு 20, காற்றாலைக்கு 10 என கூடுதல் தகவல்கள் வேறு). இது எப்படியான நிர்ணயம் என யாரும் கேட்கமுடியாது. முதலீட்டு செலவு மற்றும் உற்பத்தி செலவு மட்டுமே ஏனைய தொழில்களுக்கு அடிப்படை கணக்கீடு. இங்கோ அது கட்டுமானத்தைவிட அதிகம் செலவு பிடிக்கும் மூடும் செலவு, கழிவுகளை பல்லாண்டு காலம் காப்பாற்றும் செலவு என புதிய தலைவலிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது, இவையெல்லாம் அவர்கள் 3ரூ விலைநிர்ணயத்தில் நிச்சயம் வந்திருக்காது. 2000 மெகாவாட் உற்பத்திக்கு முதலீடு 15000 கோடி, இயக்க செலவுகள் தனி. இதே அளவுக்கான முதலீட்டில் எவ்வளவு சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் என்றோ அல்லது எவ்வளவு காற்றாலை மின்னுற்பத்தி செய்ய இயலுமென்றோ அரசு நிச்சயம் ஒப்பிட்டு பார்க்க விரும்பாது.

குஜராத்தில் நிறுவப்படவிருக்கும் 3000 மெகாவாட் சூரியசக்தி மின் திட்டமொன்றுக்கான உத்தேச முதலீடு 50000 கோடி. கூடங்குளத்தின் 2000 மெ.வா நிர்மாண செலவையும் 30 வருடங்களுக்குப் பிறகு அதற்கு ஆகும் கருமாதி செலவையும் (அணுவுலையின் கருமாதி செலவு மட்டும்- நமக்கு தனி கணக்கு) கணக்கிட்டால் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. நூற்றுக்கணக்கிலான வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் தேவையும் சூரிய சக்தி மின்நிலையங்களுக்கு கிடையாது. ஆனால் ஏன் இந்திய அரசு அணுசக்திக்கு மட்டும் பணத்தை இறைக்கிறது?

நட்டம் ஏற்படுத்தும் அரசு நிறுவனங்களை விற்றே தீருவோம் எனும் நிலைப்பாட்டை மத்தியஅரசு எடுத்து பல ஆண்டுகளாகிறது. இப்போதுகூட மூன்று நிறுவனங்களை கைகழுவ முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் பல லட்சம் கோடி பணத்தை விழுங்கிவிட்டு அணுசக்தித் துறை நாட்டுக்கு சம்பாதித்து கொடுத்த லாபம் என்ன?  ஏன் அணுவுலைகளை புதிதாக நிறுவ மட்டும் இந்தியா இத்தனை மெனக்கெடுகிறது எனும் நியாயமான கேள்வியும், எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியாவில் உள்ள பாமர மக்களின் நல்வாழ்வைப்பற்றி சிந்தித்திராத பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே ஆட்சி நடத்தும் “கொலைவெறி ரசிகர்” மன்மோகன் ஏன் அணுமின்சார நிலையங்களுக்காக இத்தனை தூரம் சிரமம் எடுத்துக்கொள்கிறார் எனும் சந்தேகமும் அணுமின்சக்தி பற்றி நாம் முடிவெடுக்க போதுமான அடிப்படை ஆதாரங்கள். (ஒப்பந்த விதிகளை திருட்டுத்தனமாக மாற்றுவது, எம்.பிக்களுக்கு பணம் கொடுப்பது, அமர்சிங்கை அமெரிக்காவில் வைத்து குளிப்பாட்டியது ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் மன்மோகனின் அணுசக்தி சிரமம் கொஞ்சநஞ்சமல்ல)

 

தார்கரீதியாகவும் அணுவுலை ஆதரவு கோஷம் வலுவில்லாத்து. மேலோட்டமாக பார்த்தால் அணுவுலை எதிர்ப்பு பயம் எனும் உணர்வை அடிப்படையாக கொண்டதாகவும் ஆதரவு அறிவியல்பூர்வமானதாகவும் தெரியலாம். உண்மையில் எதிர்ப்பவர்கள் அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் பேசுகிறார்கள். செர்னோபில் விபத்தால் உண்டான நீண்டகால விளைவுகள், புகுஷிமா உலையை மூட ஆகும் 78000 கோடி செலவு, யுரேனிய சுரங்கங்களின் அருகே வசிக்கும் மக்களிடையே உருவாகும் உடல்நல பாதிப்புக்கள் எல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள். ஆதரவு கட்சியினர்தான் நம்பிக்கையின் அடிப்படையில் யோசிக்க சொல்கிறார்கள். கூடங்குளத்தில் ஆறு ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் வராது, செர்னோபில், புகுஷிமா போல விபத்துக்கள் நடக்காது, அணுவுலைக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படும்.. இவையெல்லாம் வெறும் நம்பிக்கையன்றி வேறென்ன?

கட்டுரை தேவையற்ற திசையில் பயணிப்பதாக கருதுகிறேன். காரணம் அணுவுலையின் பாதிப்புக்கள் அதனை எதிர்ப்பவர்களைவிட ஆதரிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அவர்கள் அணுவுலையை தீவிரமாக ஆதரிக்க காரணம் அவர்கள் இருக்கும் அல்லது இருக்க விரும்பும் வர்கம்தான். மேல்தட்டு வர்கத்தின் நலன் எப்போதும் பாமரமக்களின் துயரத்தை நம்பியிருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைகளில் அவர்கள் எப்போதும் காசை வாங்கிகிட்டு காலி பண்ணவேண்டியதுதானே என்றுதான் பதில் சொல்வார்கள்.. நிலமற்ற கூலி விவசாயிகள் என்ன செய்வார்கள் என்ற யோசனைகூட அவர்களுக்கு வராது. இந்தியாவில் பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதெல்லாம் சென்செக்ஸ் விழுந்துவிடுமோ என்று மட்டுமே அஞ்சிய மேல்தட்டு கூட்டம் தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த உடன் கைகளில் விளக்கு பிடித்துக்கொண்டு வீதிகளில் ஊர்வலம் போனது. குஜராத் பூகம்பத்துக்கு தாரளமாக நிதியளித்து போதாதென்று உண்டியல் குலுக்கும் அளவுக்கு வந்த பெரிய மனிதர்கள் அதற்கு முன்னால் நிகழ்ந்த பெரும் பேரழிவான ஒரிசா புயலின்போது பெரிதாக எதுவும் செய்திருக்கவில்லை. அங்கு மாதக்கணக்கில் பிணங்கள் கூட அகற்ற நாதியற்று கிடந்தன. காரணம், குஜராத் ஒரு உற்பத்தி கேந்திரம், ஒரிசாவோ சோற்றுக்கு வழியற்று மாங்கொட்டை சாப்பிட்டு உயிரை விட்ட மக்கள் வாழும் மாநிலம். பேரழிவின்போதான கருணையிலும் மேல்தட்டு வர்கத்தினரிடையே ஒரு கபடத்தனம் இருக்கும்.

கூடங்குளம் விவகாரத்திலும் இதுதான் நடக்கிறது. நிதி மிகுந்தோருக்கு அணுவுலையின் அபாயங்கள் குறைவு. அவர்கள் கூடுமானவரை பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறார்கள், அப்படியே அபாயம் நேர்ந்தாலும் தப்பிவிடும் வாய்ப்புடையவர்களாக இருக்கிறர்கள். ஆகவே அவர்களுக்கு மின்சாரம் மட்டுமே பிரதானமாக தெரிகிறது. கைகா, கல்பாக்கம் என அணுவுலைகளுக்கு அருகிலிருப்போர் மாநிலத்தின் வழக்கமான மின்வெட்டைத்தான் சந்திக்கிறார்கள். மாறாக அதன் அபாயங்களை அவர்கள் மட்டுமே பெரிதும் எதிர்கொள்கிறார்கள். அணுவுலை தொடர்பான நிலைப்பாட்டில் இரண்டு பெரும் துருவங்களுக்குப் பின்னால் இருப்பது அவர்களது வர்கம் மட்டுமே.

எந்த பக்கம் இருக்கிறோம், எந்த பக்கம் இருப்பது எனும் குழப்பத்தில் இருக்கும் பலரும் இங்கிருக்கிறோம். அவர்களை கவனத்தில் கொண்டே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஏழையாகிவிடக்கூடாது எனும் ஒற்றை லட்சியத்தில் இருக்கும் நடுத்தரவர்கம் தாராளமயத்துக்கு பிறகு தம் நடவடிக்கைகளில் ஒரு பணக்காரத்தனத்தை காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அன்னா ஆதரவு தொடங்கி ஜாக்கி ஜட்டி வாங்குவது வரை சாத்தியப்படும் இடங்களிலெல்லாம் இப்பழக்கம் பின்பற்றப்படுகிறது. அணுவுலை தொடர்பிலும் இது பிரதிபலிக்க வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்த காப்பியடிக்கும் இயல்பு அசிங்கமானது, நன்றிகெட்டத்தனம் மற்றும் பிரயோஜனமில்லாதது. சாலையில் நிகழும் விபத்தின்போது எந்த மெர்சிடீஸ் காரும் நின்றதாக சரித்திரமில்லை. சமானிய மக்கள்தான் ஒவ்வொரு விபத்து மீட்பு நடவடிக்கையின்போதும் உடனிருக்கிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு வரும் பத்திரிக்கை விளம்பரங்களை பார்த்து பணம் அனுப்புவோரில் பாதிபேர் தமது எதிர்காலத்துக்கென சேமிக்க வழியற்ற தினக்கூலிகள் (மேலோட்டமான கருத்தல்ல.. முழு உண்மை). ஒவ்வொரு தேசத்தின் விடுதலைப்போராட்டத்திலும் முன்னால் நின்றுவிட்டு விடுதலைக்குப் பிறகு மீண்டும் கடைசிக்கு போவது ஏழை மக்கள்தான். இப்படி ஒவ்வொரு தருணத்திலும் அவர்களது உழைப்பிலும் தியாகத்திலும் வாழ்க்கையை நடத்தும் நாம் சிந்தனையில் மட்டும் பணக்காரனைப்போல வாழ நினைப்பது…. கோடிட்ட இடங்களை பூர்த்திசெய்வது உங்கள் வசதியைப் பொறுத்த்து, நான் சொல்ல எதுவுமில்லை.

கூடங்குளம் விவகாரத்தில் முதலில் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்வி, யாருடைய நல்வாழ்வை நாம் விரும்புகிறோம் என்பதுதான். அதுதான் நமது முடிவை தீர்மானிக்கிறது.

கூடங்குளம் மக்களுக்கு சீக்கிரம் லஞ்சம் கொடுங்கள் இல்லாவிட்டால் இந்த போராட்டம் இந்தியா முழுக்க மற்ற அணுவுலை திட்டங்களுக்கு எதிராக பரவிவிடும் என பிரதமருக்கு புலம்பல் கடிதம் எழுதியிருக்கிறார் கலாம். அதையேதான் நானும் சொல்கிறேன். இந்த எழுச்சி நாடு முழுமைக்கும் பரவியாகவேண்டிய ஒன்று. சாதாரண மக்களிடமிருந்து எடுத்தே பழக்கப்பட்ட நடுத்தர வர்கம், அதற்கான தமது நன்றியை காட்டுவதற்கான மகத்தான வாய்ப்பு இது. மென்மேலும் நமது பணம் பன்னாட்டு அணுஉலை முதலாளிகளுக்கு சென்று சேராது தடுக்க கிடைத்த பொன்னான சந்தர்பம் இது. ஆகவே எளிய மக்களின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் துணையிருப்போம், கூடங்குளம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதை அதற்கான முதல் நடவடிக்கையாக்குவோம்.

மூன்று லட்சம் மக்களின் போராட்டமும் நான்கு ஜெனரேட்டர்களும்…

பெரும்பாலான வலைதள தமிழர்கள் விஞ்ஞானிகளாகி ஒரு நான்கு மாதங்கள் ஆகியிருக்கலாம், தமிழ் இணைய உலகில் இவ்வளவு அறிவியல்பூர்வமான கருத்துக்கள் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஏராளமான தொழில்நுட்ப விளக்கங்கள், மின்சாரத்தின் தேவை பற்றிய அறிவுரைகள் என நீண்ட அதிகாரவர்கத்தின் குரல் அப்துல் கலாமின் தியாகம் செய்வது எப்படி எனும் விளக்க உரை வெளியாகும்வரைக்கும் மென்மையாகவே இருந்தது. அவர்களது கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்ட கலாம் எனும் பொம்மை ஒப்பித்த ரைம்சும் நிராகரிக்கப்பட்ட பிறகு தேசவிரோதம், தேசிய பாதுகாப்பு சட்டம் என அதிகாரவர்கத்தின் குரல் கடுமைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. பாமர மக்கள் ஒன்றும் கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் அல்ல என கலாமும் அவரது ஸ்பான்சர்களும் உணர்ந்ததால் வந்த விளைவு இது.

தமிழகம் பல சந்தர்பங்களில் இந்தியாவுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. சமூகநீதிக்காக, மரணதண்டனை ஒழிப்புக்காக நடக்கும் மக்கள்திரள் போராட்டங்களாகட்டும் அல்லது ரயிலில் டிக்கட் எடுத்து பயணிக்கும் தனிமனித ஒழுக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நம் மாநிலம் ஒரு முன்னோடியாகவே இருந்திருக்கிறது.. இருக்கிறது. அந்த பட்டியலில் இணைக்க வேண்டிய இன்னொரு விடயம் அணுஉலை எதிர்ப்பு.

ஜெய்தாபூர் மக்களின் போராட்டம் பற்றிய தொலைக்காட்சி விவாதங்களில் இருந்து நான் தொடர்ச்சியாக கவனித்தவரை விஞ்ஞானிகள் (அப்படியான பொறுப்பில் இருப்பவர்கள் என பொருள் கொள்ளவும்) திமிர்தனமாகவும் எதிரே இருப்பவனுக்கு எதுவுமே தெரியாது எனும் மமதையிலுமே பேசுகிறார்கள். பெரும்பாலான ஊடகங்கள் இரண்டு தரப்புக்கும் பொதுவாக விவாதம் செய்வதாக காட்சியை உருவாக்கி அதன் முடிவை அணு உலைக்கு சாதகமானதாக ஆக்குகின்றன. இப்போது அணுவுலை ஆதரவு என்பது திட்டமிட்ட முறைப்படுத்தலோடு இயங்க ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது. ஆகவே அணுவுலை எதிர்ப்பும் எல்லா கோணங்களிலும் கொண்டு செல்லப்பட்டாகவேண்டும். ஆகவே தொழில்நுட்பம் தவிர்த்த மற்ற விடயங்களை விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

வளர்ச்சிக்காக அணுவுலை எனும் கோஷம் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கும் வேளையில் வளர்ச்சி என்பது என்ன என்பதை நாம் முடிவு செய்தாகவேண்டும். கடந்த இருபதாண்டுகளில் இந்தியா வளர்கிறது என பல கணக்குகளை அரசு சொல்கிறது. டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளின் சொத்துக்கள் கணக்கிட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கருப்பு பணம் பெருமளவு விளையாடும் ரியல் எஸ்டேட் துறை வளர்ந்து இந்தியாவின் பெரு மற்றும் சிறு நகரங்களின் நில மதிப்பு கற்பனைக் கெட்டாத அளவுக்கு கூடியிருக்கிறது. பெரும்பாலான சாமானிய மக்களுக்கு டி.வியும் செல்போனும் கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு பொருட்களும் பயன்படுத்துபவனைவிட சேவை வழங்குபவனுக்கே லாபம் தருபவை.

நமக்கு என கிடைத்த வளர்ச்சி என்ன? இருபதாண்டுகளில் நாம் நமக்கான வாழிடங்களை சுருக்கிக்கொண்டிருக்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன்னால் கிடைத்த அளவு இடத்திலா இப்போது நீங்கள் வசிக்கிறீர்கள்? சொந்த ஊரில் இருந்து பிழைக்கும் சாத்தியம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? இலவசமாக கிடைத்த தண்ணீருக்கு பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். தனிநபர்கள் நுகரும் கலோரியின் அளவு இந்தியாவில் குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நான்கில் மூன்று இந்தியர்கள் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான பணத்தைக்கொண்டு வாழவேண்டியவர்களாக இருப்பதாக அரசே ஒப்புக்கொள்கிறது. இதுவரை நாம் சாதித்த வளர்ச்சி இதுதான். இந்திய அரசு நாம் இழக்கப்போவதாக அச்சுறுத்தும் வளர்ச்சியும் இதுதான். நாம் முதலில் முடிவு செய்யவேண்டியது நமக்கு செல்போனையும் டிவியையும் கொடுத்துவிட்டு மிச்ச சொச்சத்தை பறித்துக்கொள்ளும் வளர்ச்சி தேவையா என்பதைத்தான்.

இந்தியாவில் மருத்துவத்துக்கு செலவாகும் மொத்த தொகையில் பதினேழு சதவிகிதத்தைத்தான் அரசுகள் செலவிடுகின்றன. கல்வியின் லட்சணம் இன்னும் மோசம். இந்தியாவில் 13 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் பட்டினியாலும் சத்துக்குறைபாட்டினாலும் இறக்கின்றன, (இந்த எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு பூடான் நாடுகளுக்கு சமம்). எழுபது சதம் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நாட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தியில் பாதிக்கும் மேலானவற்றை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் எதை சரிசெய்யவும் முயலாத அரசுகள் அணுமின்சார நிலையங்களை காப்பாற்றவும் இன்னும் மிகையாக கொண்டுவரவும் ஏன் இந்த முக்கு முக்க வேண்டும் எனும் கேள்வி நம்மிடம் எழுந்தாலே கூடங்குளம் விவகாரத்தில் நாம் எடுக்கவேண்டிய முடிவு என்ன என்பதில் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் நாம் கவனிக்க தவறும் செய்தி ஒன்றுண்டு. பெரிய முதலாளிகளை சந்தித்து ஆலோசனை செய்துவிட்டுத்தான் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பார். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டு சிறைகளில் யாதொரு குற்றமும் செய்யாமல் வாடுவதைப் பற்றி கவலைகொள்ளாத அரசுகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் போலாரீஸ் நிர்வாகிகள் இந்தோனேசியாவில் சிறைவைக்கப்பட்டபோது துடித்த துடிப்பு எந்த கல்நெஞ்சுடையோரையும் கரையவைப்பது. மருத்துவமனைகளில் குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு வரிவித்தார் பிரணாப் முகர்ஜி (கடந்த பட்ஜெட்டில்). ஒரே சந்திப்பில் அந்த வரியை விலக்க வைத்தார் தேவி ஷெட்டி, பெங்களூரில் உள்ள ஒரு கார்பரேட் மருத்துவமனையின் முதலாளி.

ஆக, இங்கு இருப்பது முழுமையானதொரு முதலாளிகள் ராஜ்ஜியம். இதில் நடுத்தர வர்கத்துக்கோ அல்லது பாமர மக்களுக்கோ ஏதேனும் நன்மை நடந்தாலும் அது தவிர்க்கவியலாமல் நடப்பதேயன்றி அரசின் விருப்பமல்ல. ஆகவே நம் அரசு எடுத்த முடிவு என்பதற்காக நாம் அதனை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. எந்த முடிவெடுத்தாலும் ஆதரிக்க வேண்டிய அளவுக்கு இவர்கள் நியாயமான மனிதர்களும் அல்ல எதையும் ஆதரித்தேயாக வேண்டிய அளவுக்கு நாம் அவர்களுக்கு கடன்பட்டவர்களும் அல்ல. அணுவுலை விவகாரத்தில் நம் பரிசீலனைக்கு உரியவை நம் எதிர்காலமும் நம் மனசாட்சியும்தான் (இதற்கான விளக்கம் பின்னால்..).

ஒருவேளை நம் அரசுகள் மின்சார வசதியில் முழுமையான தன்னிறைவை பெற்றுவிட்டு பிறகு பட்டினியால் சாகும் குழந்தைகளைப் பற்றியோ அல்லது தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பற்றியோ கவலைப்படலாம் எனும் லட்சியத்தில் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அணுவுலையால் இவர்களால் 10 சதம் மின்தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதற்காக இவர்கள் பல்லாயிரம் கோடிகளை செலவிடுகிறார்கள். யுரேனிய உற்பத்தியில் 8ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். இந்த ஒப்பந்தம் நிறைவேற வாஜ்பாயை பீஷ்ம பிதாமகன் என வர்ணித்து ஆதரவு பிச்சை கேட்டார் மன்மோகன். அமர்சிங்கை அமெரிக்காவுக்கு அனுப்பி (அல்லது அழைத்து) எல்லா “சேவைகளும்” செய்து அனுப்பிவைத்தார்கள். 10 சதவிகித மின்சாரத்துக்கு இவ்வளவு பாடு படுகிறவர்கள் மீதி 90 சதவிகித மின்சாரத்துக்கு என்ன செய்தார்கள்? எதுவுமில்லை. இங்கே மின் தேவை பற்றிய பீதி அணுசக்தியை ஏற்றுக்கொள்ள வைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு அணுமின் நிலையம் கணக்கு கேட்கவியலாத பெரும்பணத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொண்டுசேர்க்க உதவுகிறது. உலகெங்கும் 8 கோடிபேர் வேலைபார்க்கும் அணுசக்தி வியாபாரம் ஒருசில முதலாளிகளுக்கு மட்டும் உரியது. அவர்களால் சம்பாதிக்காமல் இருக்க முடியாது. இனியும் அவர்களுக்காக தங்கள் நாட்டுக்கு ஆபத்தை தேடிக்கொள்ள வளர்ந்த நாட்டு மக்கள் தயாரில்லை. ஆகவேதான் அதிகபட்சமாக 1500 கோடிக்குமேல் நட்டஈடு தரதேவையில்லாத இந்தியாவை அவர்கள் குறிவைக்கிறார்கள். மகள் நன்றாக வாழவேண்டுமாயின் அவளை விற்றுவிடு எனும் அதிசிறந்த கொள்கையுடைய நமது பிரதமரும் அவர்களை வரவைப்பதே நாட்டுக்கு ஒளியேற்ற ஒரேவழி என கூவிக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அணுமின்சாரத்தில் 100 சதவிகிதம் பாதுகாப்பான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் (அது சாத்தியமல்ல என்றாலும்) அது இந்தியாவில் அபாயகரமானதாகவே இருக்கும். இங்கு எந்த ஒப்பந்தக்காரர் சரியான தரத்தில் தங்கள் கட்டுமானத்தை செய்கிறார்கள், அணுவுலை கட்டும்போது மட்டும் இவர்கள் பரிசுத்தமாகிவிடுவார்களா? நமது அணுவுலை கட்டுமான பொறியாளர்களுக்கு மட்டும் கைநீட்டாதிருக்க சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டிருக்கிறதா? காமன்வெல்த் போட்டிக்காக தலைநகரில் கட்டிய பாலம் திறக்கும் முன்னரே இடிந்துபோனது. போபால் மரணங்களுக்கே நீதி வழங்க வக்கற்ற இந்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம் என சொல்லவே அருகதை கிடையாது.

ஃபுகுஷிமாவுக்கு முன்னால் ஜப்பானை பார், பிரான்சை பார் என்றார்கள். அவர்களால் முடியும்போது நம்மால் முடியாதா என முழங்கினார்கள். ஜப்பானிலும் ஜெர்மனியிலும் விபத்து நடந்த பிறகு அவர்களைவிட நமது தொழில்நுட்பம் உசத்தி என்கிறார்கள். ஒருவேளை ஊழல் செய்வது பற்றி சொன்னார்களா என்று தெரியவில்லை. பஸ்ஸ்டாண்டில் ஒழுங்காக கக்கூஸ் கட்டமுடியாத அரசுகள் அணுசக்தியில் கரைகண்ட மாதிரி பேசுவதை என்னவென்று சொல்வது? கனவு நாயகனோ செர்னோபில் விபத்தில் 37 பேர்தான் செத்தார்கள் என புதிய வரலாறு சொல்கிறார். அணுக்கழிவு விவகாரத்திலோ அதை உருண்டையாக்கி உள்ள வச்சு பூட்டிரலாம் என்று புதிய கண்டுபிடிப்பை அவிழ்த்துவிடுகிறார். இன்னொருவரோ அதை பாதுகாப்பாக ரயிலில் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் வைத்துவிடுவோம் என்கிறார் மற்றொருவர் கழிவில் முக்கால்வாசியை மீளவும் பயன்படுத்திவிடுவோம் என்கிறார். நல்லவேளையாக அதை எடைக்கு போட்டுவிடலாம் என சொல்லவில்லை.. அந்த அளவுக்கு நமது அறிவுத்திறனை அவர்கள் மதித்திருக்கிறார்கள் என்று நாம் பெருமைப்படவேண்டியதுதான்.

காலக்கொடுமையாக இன்னொரு அணுசக்தி விஞ்ஞானி நாராயணசாமி, உதயகுமாரை அன்னிய கைக்கூலி என்கிறார். அன்னியரால் ஆளப்படும், அன்னியர் வந்தால்தான் நாடு செழிக்கும் என்று சொல்லும், கொள்ளையிட்ட பணத்தை அன்னிய நாட்டில் வைத்திருக்கும் நபர்களின் பெயரைக்கூட சொல்ல மறுக்கும் ஒரு கட்சியின் பிரதிநிதி இன்னொருவரை அன்னிய கைக்கூலி என்றால்.. என்ன செய்ய, சோனியா காந்தி ஊழலை ஒழிப்போம்னு சொன்னபோதுகூட அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர்கள்தானே நாம்.

நிறைவுப் பகுதி நாளை அல்லது அதற்கு மறுநாள் வெளியாகும்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 98 other followers