ஜனவரி 29 – ஒரு வரலாற்றின் துவக்கம்.

இனி தமிழ் மற்றும் தமிழினம் ஆகிய வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படாது போகும் என நம்பியவர்கள் ஏமாந்து போனதற்கு பின்னால் இருக்கும் நாள் – ஜனவரி 29. இந்த நூற்றாண்டில் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லோர் மனதிலும் இருக்கும் பெயர் – முத்துக்குமார்.

இந்த கட்டுரையின் சாயலில் ஏராளமான கட்டுரைகளை இதற்குள் வெளிவந்திருக்கும். நான் புதிதாகவோ சிறப்பாகவோ எழுதுவதற்கு எதுவுமில்லை. ஆயினும், என் அம்மா அன்பானவள் என்பது பலரும் சொல்லிவிட்ட கருத்து என்பதற்காக அதை நான் சொல்லாமலிருக்க முடியுமா?  முத்துகுமாரும் அப்படியே.. அவரைப் பற்றி நினைவுகூர நம் எல்லோரிடமும் ஏதோ ஒரு செய்தி நிச்சயம் இருக்கிறது.

பெரும்பான்மை தமிழக மக்களின் கருத்துக்கு எதிராகவே எப்போதும் செய்தி வெளியிடும் பார்ப்பன ஊடகங்கள் முத்துகுமார் விடயத்தில் மட்டும் இன்றுவரை அடக்கிவாசிக்கின்றன. சோனியா சொன்னால் பெற்ற தாயையே வேசி என சொல்லத் தயங்காத காங்கிரஸ்காரர்கள், தங்கள் கட்சியின் மீதான பரவலான வெறுப்பை உருவாக்கியதில் முக்கியமானவரான முத்துகுமாரைப் பற்றி மூச்சுகூட விடுவதில்லை. அவரைப் பற்றி எதிர்மறை செய்திகள் வெளியிடுவதும் குறை சொல்வதும் தங்களை முற்றாக தனிமைப்படுத்திவிடும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்றைய தமிழக சூழலில் முத்துகுமார் ஒரு தவிர்க்கவியலாத ஆளுமை என்பதற்கான எளிய உதாரணங்கள் இவை.

தமிழர்கள் உணர்ச்சிவயப்பட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள் எனும் கருத்தோட்டம் தமிழ்நாட்டிலேயே பலருக்கும் உண்டு. துரதிருஷ்டவசமாக அது உண்மை என நம்புவதற்கான உதாரணங்கள் தமிழகத்தில் ஏராளமுண்டு. ஆனால் முத்துகுமாரின் “தற்கொலை” முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. செய்தியையும் சீரியல்போல பார்க்க பழகிவிட்டிருந்த ஒரு சமூகத்தை குற்ற உணர்வு கொள்ளவைக்க தனது உடலை தீயிலிட்டார் அவர். மரணத்தின் போது உணர்ச்சி வயப்படுபவர்களை மட்டுமல்ல தற்கொலை செய்துகொள்வது மூடத்தனம் என அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களையும் தன் இறுதி ஊர்வலம் வரை தன்னுடன் நிற்க வைத்தார் அவர்.

எந்த நிலைப்பாட்டை எடுப்பது எனும் குழப்பத்தில் இருந்தவர்களை முடிவெடுக்க வைக்கும் கருவியாக இருந்தது அவரது இறுதிக் கடிதம். ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும் அதனை வெளிப்படையாக காட்டிக்கொள்ள தயங்கியவர்களை துணிவு கொள்ளச்செய்தது அந்த கடிதம். வெறும் ஊழியர்களாக மட்டுமே பல ஆண்டு காலம் நான் அறிந்திருந்த பலரும் திருப்பூரில் நடந்த பல ஈழ ஆதரவு கூட்டங்களில் அவரது மரணத்திற்குப் பிறகு தட்டுப்பட ஆரம்பித்தார்கள். தானொரு தமிழீழ ஆதரவாளன் என பல இளைஞர்கள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முத்துகுமார் ஒரு காரணமாக இருந்தார் என்பது நிச்சயம் மிகையான வாசகமல்ல.

நல்லடக்க வல்லுனர்களான காவல்துறை, நாடக கலைஞரான முதல்வர் எனும் சூழ்நிலையில்கூட அவரது உடலை மூன்று நாட்களுக்கு அவர்களால் கைப்பற்ற இயலவில்லை. ஒரு உடலை எப்படியாவது எரியூட்டிவிடவேண்டும் என தமிழ்நாட்டின் எல்லா ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும் மெனக்கெட்டது அவரது மரணத்தின்போதுதான். தன் உடலை ஆயுதமாக்குங்கள் என்று சொல்லி மரணித்தார் அவர். உண்மையில் அவரது உடல் ஒரு ஆயுதமாகவே இருந்தது, அதைக் கண்டுதான் அன்று ஆண்ட கட்சி கூட்டணியும் அன்றைய எதிர்க்கட்சிக் கூட்டணியும் அஞ்சி நடுங்கின. முத்துகுமாரின் உடலை காண திரண்டு வந்த கூட்டம்தான் அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு நாம் அளித்த ஒரேயொரு மற்றும் குறைந்தபட்ச நம்பிக்கை. அவரது இறுதி ஊர்வலத்தின்போதே கல்லூரிகளை மூடி தாங்கள் மாணவர்களுக்கும் பயப்படுகிறோம் என காட்டிக்கொண்டது தமிழக அரசு. இந்த இரண்டு அங்கீகாரங்களுக்கும் உண்மையான உரிமையாளர் முத்துகுமார்தான்.

இந்த நூற்றாண்டின் தமிழக அரசியல் களத்தை முத்துகுமாருக்கு முன் மற்றும் முத்துகுமாருக்கு பின் என பிரித்து பார்த்தால் அவரது வீச்சை நம்மால் உணர இயலும். அவரது மரணத்துக்கு முன்னால் தமிழ், தமிழீழம், தமிழினம் என பேசுவோர் யாவரும் சுலபமாக தீவிரவாதியென அடையாளப்படுத்தப்பட்டார்கள். தமிழகத்தில் ராணுவ வண்டிகளை மறிக்கும் வீரம் அவரிருந்திருக்காவிட்டால் 99 விழுக்காடு வந்திருக்க சாத்தியமில்லை. ராஜீவ் காந்தியின் சாவுக்கு தமிழகம் இன்னமும் அழுகிறது எனும் காங்கிரஸ் கூட்டம் உருவாக்கிய மாயையையும் தன் உடலிலிட்ட தீயைக்கொண்டு பொசுக்கினார் அவர். இணையத்திலும் பொது வெளியிலும் கூடும் தமிழ் இளைஞர்கள் கூட்டத்தின் பிண்ணனியில் முத்துகுமார் இருக்கிறார். சோனியா கும்பல் அவரது இறுதி ஊர்வலத்துக்கு பிறகு தமிழகத்தை இன்னும் அதிகமாக வெறுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சோனியாவால் வெறுக்கப்படும் தேசம் என்பதைத் விட தமிழகத்துக்கு வேறு பெரிய கௌரவம் இருக்கிறதா என்ன?

அவரது தியாகத்தை வீணாக்கிவிட்டோம் எனும் குற்ற உணர்வில் நாம் இருந்தால் முத்துகுமார் எனும் சகாப்தம் முடிந்துவிட்டதாக பரப்புரை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஆகவே, அவரது நினைவை போற்றும் பணியையேனும் தவறாது செய்வோம். வருங்கால இளைஞர்களாவது அவரது கனவை நிறைவேற்றும் வாய்ப்பை அது உருவாக்கும். இன்னொரு இளைஞனை பெட்ரோல் கேனுடன் சாஸ்திரி பவனுக்கு விரட்டும் அநியாயத்தை நாம் செய்யாதிருக்க முத்துகுமாரை நாம் மறக்காதிருப்பதுதான் முதல் பணி.

இனிவருங்காலங்களில், தன் உயிரை மாய்த்துக்கொள்வது தியாகமா? இதற்கு இத்தனை ஆர்பாட்டம் தேவையா என தினமலர் வகையறாக்கள் பிரச்சாரம் செய்யலாம். அதையே உங்களுக்கு அருகிலிருக்கும் ஒருவரும் சொல்லலாம். அப்போது தயங்காது சொல்லுங்கள்,சம்பளமும் இதர சலுகைகளும் பெற்றுக்கொண்டு மேலதிகாரி உத்தரவிடுமிடத்துக்குப் போய் செத்துப்போகும் ராணுவவீரன் தியாகி என்றால், எங்கள் முத்துக்குமார் அவர்களைவிட கோடி மடங்கு மேலானவன்.

4 Responses to ஜனவரி 29 – ஒரு வரலாற்றின் துவக்கம்.

  1. அம்பேதன் says:

    ஆம். நீங்கள் கூறுவது உண்மைதான். முத்துக்குமார் தான் தமிழர்களின் தான் எது நடந்தா என்ன என்கிற விட்டேத்தியான போக்குக்கு அதிர்ச்சி வைத்தியமளித்தான்.
    சடாரென்று சிலகாலம் விழித்த தமிழினத்தை திரும்ப தூக்க நிலைக்கே கொண்டு போக தமிழகத்து அரசியல்வாதிகளும், காங்கிரஸ் கைக்கூலிகளும் ரொம்பவும் திணறித்தான் போனார்களென்றால் அது மிகையில்லை.
    இன்றைக்கு வரை கசாப்புடன் சேர்த்து தூக்கு… என்று என்னென்னவோ மாய்மாலங்களை செய்யத்தான் வேண்டியிருக்கிறது இந்த அரசுகளுக்கு.

  2. Arul says:

    /////////////தயங்காது சொல்லுங்கள்,சம்பளமும் இதர சலுகைகளும் பெற்றுக்கொண்டு மேலதிகாரி உத்தரவிடுமிடத்துக்குப் போய் செத்துப்போகும் ராணுவவீரன் தியாகி என்றால், எங்கள் முத்துக்குமார் அவர்களைவிட கோடி மடங்கு மேலானவன்./////////////////அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்………

  3. சுவாமி says:

    தயங்காது சொல்லுங்கள்,சம்பளமும் இதர சலுகைகளும் பெற்றுக்கொண்டு மேலதிகாரி உத்தரவிடுமிடத்துக்குப் போய் செத்துப்போகும் ராணுவவீரன் தியாகி என்றால், \\\\\\\\\\\\தவறாண உதாரணம்

  4. maraimalai says:

    weldon thozha. muthu tamilanin veeeramuthu and vairamuthu

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers