மன்மோகன் – இனியும் நீங்கள் யோக்கியர் என அழைக்கப்பட வேண்டுமானால்… உங்கள் பெயரையே யோக்கியன் என மாற்றிக்கொண்டால்தான் உண்டு.

இந்தியாவில் நம்பப்படும் அனேக “உண்மைகள்” வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலானவை.  பிராமணர்கள் அறிவாளிகள் என்பதில் தொடங்கி ஸ்தீர்லோலர்களை கடவுள் என வழிபடுவதுவரை (இதற்கு விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன்) நமது நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளில் பல ஏதோ ஒரு செவிவழிச்செய்தியினை  சார்ந்து உருவானவை.

இப்படியான ஒரு மாயத்தோற்றம்தான் மன்மோகன் மீதான யோக்கியர் என்ற அடையாளமும். அவரை உத்தமர் எனும் யாருக்கும் அவர் எதனால் உத்தமர் என அழைக்கப்படுகிறார் என்று தெரியாது. ஏனெனில் அவர் அயோக்கியர்களால் உத்தமர் என சான்றளிக்கப்பட்டு ஏராளமான அப்பாவிகளாலும் அப்படியே நம்பப்படுபவர். ராகுல் காந்தி போன்ற தலைவர்களாகட்டும், கலாம் போன்ற அறிவுஜீவிகளாகட்டும் அல்லது ரஜினி போன்ற ஆன்மீக அரசியல் பீஸாகட்டும் எல்லோருமே அவர்களது தகுதிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பூதாகரமாக்கப்பட்ட வர்ணனைகளால் வளர்த்துவிடப்படுபவர்கள்தான். ஆனால் மன்மோகன் மட்டும் மற்ற யாவரிடமிருந்தும் முற்றிலும் வேறுபடுபவர். காரணம் மற்றவர்கள் போலன்றி அவர் குறித்தான புகழுரைகளுக்கு நேரெதிரான இயல்புடைவர்.

அவர் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டபோது அவர் மீது படித்தவர் அதனால் அவர் யோக்கியராக இருப்பார் எனும் பிம்பம் இருந்தது. இந்த அடிப்படையே தவறானது. இந்தியாவின் மாபெரும் கொள்ளையர்களான அம்பானி முதல் லாலு பிரசாத் வரை எல்லோரும் படித்தவர்கள். மக்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்த சஞ்சய் காந்தி முதல் பாமரர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையைக்கூட தர மறுக்கும் காவல்துறை கடைநிலை அதிகாரிகள் வரை எல்லோரும் படித்தவர்களே. படிப்பு எனும் தகுதியால் குற்றத்தை இன்னும் “சிறப்பாக” செய்யும் வழக்கம்தான் இப்போது இங்கு இருக்கிறது. ஆகவே பேஜரைப்போல இதுவும் வழக்கொழிந்துபோன ஒரு கருவியே. ஆனால் அந்த கருவி ஆரம்பகாலங்களில் அவருக்கு பேருதவி செய்தது என்பதை மறுப்பதற்கில்லை.

ஊழலுக்கும் இந்தியாவுக்குமான பந்தம் எந்த பிரதமர் வந்தாலும் மாறப்போவதில்லை. வெள்ளைக்காரன் காலம்தொட்டே அரசு என்பது மக்களை அச்சுறுத்தவும் அவர்களிடம் கொள்ளையிடவும் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் மன்மோகன் ஏனைய பிரதமர்களிடம் இருந்து மாறுபட்டவர். மற்றவர்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க அதிபரின் காலை நக்குவார்கள் என்றால் மன்மோகன் அமெரிக்க அதிபரின் காலை நக்குவதற்காகவே பதவிக்கு வந்தவர். மற்றவர்களுக்கு அது ஒரு கடமை என்றால் மன்மோகனுக்கு அது ஒரு வழிபாடு. அமெரிக்க அடிமைத்தனம் என்பது அவர் ஒருவருக்கு மட்டும் பிடித்தமான விடயமாக இருந்தால் நாம் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஒருவேளை அவர் ஒபாமா வீட்டு நாயை குளிப்பாட்டுவதையோ அல்லது மிஷலுக்கு பேன் பார்ப்பதையோதான் வாழ்வின் பெரும் பேறு என சொல்வாரானால்கூட அவர்மீது பரிதாபப்பட்டு  விட்டுத்தொலைக்கலாம்.

அவர் தன் எஜமான விசுவாசத்தை ஒரு தேசத்தை விற்பதன் வாயிலாக காட்டுவதுதான் ஆபத்தாக இருக்கிறது. தமிழீழப்படுகொலைகள் குறித்து பிரிட்டன் பிரதமர் வரை கருத்து சொல்லியாயிற்று, இந்த கல்லுளிமங்கன் இன்னும் அதுகுறித்து மூச்சு காட்டக்கூட இல்லை. ஆனால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானபோது ஜி8 நாடுகளின் கூட்டத்தில் “அமெரிக்காவை காப்பாற்றவேண்டியது உலகத்தின் கடமை” என் சொல்லி உலகத்திடம் தன் எஜமானனுக்காக பிச்சை கேட்டார். ஈரானிடமிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டுவரும் திட்டம் அமெரிக்காவின் லேசான முறைப்புக்கு பிறகு ஒட்டுமொத்தமாக ஊற்றி மூடப்பட்டது. அதில் முனைப்பு காட்டிய மணி சங்கர் அய்யர் அந்த துறையில் இருந்தே தூக்கியெறியப்பட்டார். ஆய் போகும்போதுகூட அமெரிக்க நலனுக்காக சிந்திக்க இவரைப்போல ஒரு மனிதன் அமெரிக்காவிகூட பிறக்க மாட்டான். இவர் சிந்தனை, லட்சியம் யாவும் அமெரிக்க அரசின் நலன் குறித்தே இருப்பதால் ஏனைய அமெரிக்க அடிமைகளைவிட இவர் பேராபத்தானவர்.

சென்ற ஆட்சிகாலத்தின் துவக்கத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. நாள் கணக்கில் நீடித்த அப்போராட்டத்தில், ஊழியர் சங்க நிர்வாகிகளை சந்திக்கவே மறுத்தார் இந்த பொருளாதாரப் புலி. போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் கால்நடையாக டெல்லி சென்று ஏறத்தாழ மூன்றுவாரம் தலைநகர வீதிகளில் தங்கி காத்திருந்தார்கள், நோக்கம் ஒன்றுதான், இந்த தேசத்தின் பிரதமரை சந்தித்து முறையிடுவது. கடைசிவரை மன்மோகன் மனமிரங்கவில்லை.

சட்டீஸ்கரில் மூன்றரை லட்சம் “இந்திய” மக்கள் அகதி முகாம்களில் வசிக்கிறார்கள், பத்தாயிரம் பெண்கள் ராணுவத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், ஐந்நூறு தமிழக மீனவர்கள் இலங்கை அரச ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்,  ஒரு மனநோயாளி தீவிரவாதியாக “அப்கிரேடு” செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார், எந்த ஒரு விவகாரம் குறித்தும் கருத்து சொல்லக்கூட மன்மோகன் முன்வந்ததில்லை. அரிதினும் அரிதாக அவர் கொடுக்கும் பத்திரிக்கை பேட்டியொன்றில் இந்திய விவசாயிகள் நிலங்களை முதலாளிகளிடம் ஒப்படைத்து வாழ்வில் முன்னேறும் வழியை பார்க்க வேண்டும் என்றார். இந்திய மக்களின் நல்வாழ்வு குறித்த அவரது இலவச அறிவுரைகூட முதலாளிமார்களில் நலனை உள்ளடக்கியத்தாக இருக்கிறதென்றால், காசுக்கு செய்யும் வேலை எந்த லட்சணத்தில் இருக்கும்?

மன்மோகனின் தனிப்பட்ட சுபாவத்தை மதிப்பிடுவது சற்று சிரம்மானது. அவர் முக்கியமான விவகாரங்கள் யாவற்றிலும் ஒரு கபடத்தனமான மௌனத்தை மட்டுமே பதிலாக்குகிறார். ஆனால் அவரது நண்பர்களை வைத்து அவரது பர்சனாலிட்டியை தெரிந்துகொள்வது கொஞ்சம் எளிதானதே. மான்டெக் சிங் அலுவாலியா என ஒரு உயிர் நண்பன் அவருக்குண்டு. அவரைப்போலவே உலக அளவில் பொருளாதார தீவிரவாதம் செய்துவிட்டு இந்தியா வந்தவர். அவர் பேட்டியொன்றில் சொல்கிறார், எனக்கு ஏழ்மையைப்பற்றி அதிகம் தெரியாது என்று. எழுபத்தேழு சதம் மக்கள் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக பணத்தில் வாழ்வை நடத்தும்  பரம ஏழை தேசத்தின் திட்டக்குழு உறுப்பினருக்கு ஏழ்மையைப் பற்றி அதிகம் தெரியாது என்பது எத்தனை அசிங்கமான சூழ்நிலை. நக்கத்தெரியாத நாய்க்கு தட்டு நிறைய பால் வைத்த மாதிரி இவரை எதற்கு திட்டக்கமிசனின் துனைத்தலைவராக மன்மோகன் நியமனம் செய்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை  நாம் மதிப்பீடு செய்யவேண்டும் .

எப்படி நாளொன்றுக்கு முப்பத்து இரண்டு ரூபாயில் ஒருவர் எப்படி வாழ இயலும் எனும் கேள்விக்கு மான்டெக் சிங்கின் பதில் “உங்கள் அருகாமையில் மாதம் மூவாயிரம், நான்காயிரம் ரூபாயில் வாழ்க்கை நடத்தும் ஐந்து பேர் கொண்ட குடும்பம் எதையும் நீங்கள் பார்த்ததில்லையா?”. அவரது பதில் ஆமாம் இதுவும் சரிதானோ எனும் என்னத்தை உருவாக்கும். இதை நிதானமாக பரிசீலிக்கையில் மான்டெக்கின் திமிரையும் திசைதிருப்பலையும் நாம் உணரஇயலும். உதாரணத்துக்கு, அரசின் வறுமைக்கோட்டுவரம்பு 32 ரூபாயில் பாலுக்கு என ஒதுக்கும் தொகை இரண்டு அல்லது அதற்கும் கீழான தொகை என நினைவு.  ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒரு மனிதன் நாளொன்றுக்கு 300 மி.லி பால் அருந்த வேண்டும் என மருத்துவ அளவீடுகள் சொல்கின்றன. கால் லிட்டர் பால் ஏழு ரூபாய்க்கு விற்கிறது. இந்த அளவீட்டை எப்படி புரிந்துகொள்வது., திட்டக்கமிஷன் ஒரு அடிமுட்டாள்களின் கூடாரம் என்றா? அல்லது திட்டக்கமிஷனின் வாழ்வதற்கான அளவீடுதானேயன்றி ஆரோக்கியமான வாழ்வு என்பதற்கான அளவீடு அல்ல என்றா? நான் பார்த்தவரையில் மான்டெக்கின் வார்த்தைகள் சொல்வது இதைத்தான் “மாதமொன்றுக்கு நாலாயிரம் சம்பாதிக்கும் குடும்பமெல்லாம் உயிரோடதானே இருக்கு.. அப்புறமென்ன?”

இந்தியாவில் ஐந்து சதவிகிதம் மக்கள் விவசாயம் செய்தால் போதும்.  அறுபது சதவிகிதம் மக்கள் அத்தொழிலை செய்வது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என சொல்லியிருக்கிறார் சிகாகோ வர்தகப்பள்ளியின் பொருளாதாரப் பேராசிரியர் ரகுராம் ராஜன். இதை இங்கே குறிப்பிட ஒரு காரணமிருக்கிறது, இவர்தான் மன்மோகனின் பொருளாதார ஆலோசகர். அப்படியானால் மீதமிருக்கும் 55 சதவிகிதம் மக்கள் எங்கே போவார்கள் என அவரிடம் நாம் கேட்க முடியாது. அவர் கவலை, பெருநிறுவனங்கள் இந்திய விவசாயத்தை கைப்பற்றும்போது ஐந்து சதவிகித மக்களுக்கு பிச்சை போடலாம் , அறுபது சதம் மக்களுக்கும் பிச்சைபோட்டால் அவர்கள் லாபம் என்னாவது என்பதுதான்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு நபர்களும் வெறும் உதாரணங்களே. மன்மோகனின் சுற்றம் எங்கும் இப்படிப்பட்ட மரண வியாபாரிகளும் மரண தரகர்களுமே வியாப்பித்திருக்கிறார்கள். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அநாவசியமான சுமைகள் என கருதி அவர்களை ஆராய்ச்சி செய்துபார்க்க அனுப்பியது ஹிட்லர் அரசு. இவர்கள்கூட அந்த ஆராய்ச்சி சாலையின் ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களே. அந்த குரூரமான சிந்தனை மட்டும் மன்மோகனுக்கு உரிமையானது. வறுமைக்கோட்டு வரம்பில் நிர்ணயத்தில்கூட நம் கவனம் மான்டெக் மீது மட்டுமே இருக்கிறது. தேளைவிட்டுவிட்டு கொடுக்கை மட்டும் குறை சொல்வது மாதிரி…

சில மாதங்களுக்கு முன்னால் செய்த பயணமொன்றில், கிருட்டிணகிரி பேருந்து நிலையத்தில் ஒரு மூதாட்டியை பார்த்தேன். பனைவெல்லம் விற்றுக்கொண்டிருந்த அவர் என் முன்னிருக்கைப் பயணியிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு வெல்லக்கட்டிகள் பதினைந்து ரூபாய் விலை. மூன்று- இருபது ரூபாய் என்பது அவர் இறங்கி வரத்தயாராயிருக்கும் விலை, பயணி இரண்டை கையில் வாங்கிக்கொண்டு, பத்து ரூபாய்னா எடுத்துக்கிறேன் என்றார். உடனே அந்த பெண்மணி பனைவெல்லத்தை பயணியிடமிருந்து பிடுங்கிக்கொண்டு “இந்த பொருளுக்கு உன்னால ஏழு ரூவாகூட தரமுடியாதா” என உரக்க கேட்டபடி நகர்ந்தார். ஒரு சாதாரண பெண்மணிக்கு தான் விற்கும் பொருள் குறைத்து மதிப்பிடப்படுவது கோபப்படுத்துகிறது. அப்படியானால், தன் கட்டுப்பாட்டில் உள்ள பொருளை அடிமாட்டுவிலையைவிட மட்டமான விலைக்கு விற்பனை செய்பவன் நிச்சயம் அதை திருடியவனாகத்தானே இருக்க முடியும்?  ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நாம் சட்டரீதியாகவோ தொழில்நுட்ப ரீதியகவோ ஆராய்ந்து மன்மோகனது யோக்யதையை  புரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த சாதாரண தெருவோர வியாபாரியுடன் ஒப்பிட்டாலே போதும். தேசத்தின் மாபெரும் செல்வங்கள் கொள்ளைபோவதை அமைதியாக அனுமதித்துவிட்டு, மாட்டிக்கொண்டபிறகு எனக்கு தெரியாமலே அவையெல்லாம் நடந்துவிட்டது என கண்ணீர் வடிப்பது திருடனைவிட கேவலமானவன் செய்யும் செயல்.

 

மன்மோகனின் பெயரை காப்பாற்றுவது, அவர் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இல்லை என்பதும் சொத்து சேர்த்த்தற்கான ஆதாரம் இல்லை என்பதும்தான்.துரதிருஷ்டவசமாக நாம் பெரிதும் அச்சமடையவேண்டிய செய்தியும் இதுதான். கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் வாழிடங்களில் இருந்து விரட்டுவதையும், திவாலாகப்போகும் அணுமின்சார கம்பெனிகளை காப்பாற்ற சொந்த நாட்டு மக்களுக்குத் தெரியாமல் ஒப்பந்தம் போட்டு ஏய்ப்பதையும், சர்வதேச விவகாரங்களில், சொந்த நிலைப்பாடு ஏதுமின்றி அமெரிக்காவின் பக்கவாத்தியமாக இந்தியாவை மாற்றியதையும் தன் சொந்த  லாபத்திற்காக அவர் செய்யவில்லை என்றால் இது அவரது சுபாவம் என்றல்லவா பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது??  தேவைக்காக குற்றமிழைப்பதைவிட ஆபத்தானது குற்றத்தை ரசித்து செய்வதும் அதனை நியாயம் என நம்புவதும். அந்த வகையில் கார்பரேட் ஊழல்களை ஆதரிக்கும் மன்மோகனும்  பேராபத்தானவரே.

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மன்மோகன் தூக்கியெறியப்பட்டு அந்த இடத்தில் ராகுல் காந்தி உட்கார வைக்கப்படுவார். ஆகவே அவரை விமர்சனம் செய்வது அனாவசியம் என கருத இயலாது. ஒரு அரசு பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச நெறிகள் பலவற்றை மிக சாதாரணமாக தூக்கியெறிந்துவிட்டு ஆட்சி செய்யும்  கலைக்கு மன்மோகனின் ஆட்சி ஒரு மாடல். பெரும்பான்மை மக்களைப் பற்றி அக்கறை சிறிதும் இல்லாமல் பத்து ஆண்டுகள் ஆளமுடியும் என அவர் நிரூபணம் செய்திருக்கிறார். இனி வரப்போகும் எல்லா ஆட்சியாளர்களும் அவரது பாதையில்தான் பயணிப்பார்கள்.  ஆக மன்மோகனை தெரிந்துகொள்வது என்பது நம் சமகால வாழ்வியல் துன்பங்களுக்கும் எதிர்கால அவலங்களுக்குமான காரணங்களை புரிந்துகொள்ள உதவும் வழிகாட்டி.. ஒருவேளை நாம் மன்மோகனை சரியாக புரிந்துகொண்டிருந்தாலும் அவரை மட்டும் அதிகாரத்தில் இருந்து நீக்கிவிட்டால் போதும் என எண்ணினால் அது அவரை உத்தமர் என நம்புவதைவிட மோசமான நிலைப்பாடாகிவிடும்.

காந்தி- வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்.

(சற்று நீளமான கட்டுரை. தமிழ்பேப்பர் மின்னிதழுக்காக எழுதப்பட்டது)

தமிழ் சினிமாவில் வரும் “மாஸ்” திரைப்படங்கள் எப்படி இருக்கும்? ஹீரோ இளமையில் இருந்தே அதிபுத்திசாலியாக இருப்பார். அம்மா சென்டிமென்ட் இருக்கும். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும். தன்வழியில் சிவனே என்று போய்க்கொண்டிருக்கும் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன். அதன்பிறகு முட்டியை மடக்கிக் கைகளை உயர்த்தும் ஹீரோவிடம், வரிசையில் வந்து அடிவாங்கிச் செல்வார்கள் வில்லனின் அடியாட்கள். கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ அறிவுரை சொல்லியோ திருத்துவார் கதாநாயகன்.

காந்தியின் கதையும் சற்றொப்ப இதேபாணியில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். (காந்தி பக்தர்கள் கொஞ்சம் நிதானிக்கவும்…) அவர் பெற்றோருக்குக் கட்டுப்பட்ட பிள்ளை, நன்றாகப் படிப்பவர், லண்டனுக்குப் படிக்கப் போகையில் மதுவைத் தொடமாட்டேன், பெண்களைப் பார்க்கமாட்டேன் என்ற சத்தியங்களைச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் அவரது வக்கீல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வெள்ளையன் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். பிறகு மக்களைத் திரட்டிப் போராடினார். கடைசியாக இந்தியாவுக்கு கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்தார்.

ஜாலியன் வாலாபாக்கில் பயன்படுத்தப்பட்டது துப்பாக்கிகள் என்பதால் மேற்சொன்ன வாக்கியம் பாதி உண்மை என்றே கொள்வோம். (எப்படியோ கத்தி இல்லை இல்லையா?!) 1915ல் இந்தியாவுக்கு வந்த காந்தியிடம் நூற்றைம்பது வருட விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ராயல்டியும் தரப்பட்டது எப்படி? போகட்டும், விடுதலை அவர் பேசி வாங்கித் தந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைத் தேசத்தந்தை என்றோ அல்லது தேச சித்தப்பா என்றோ அழைப்பது சரி. மகாத்மா எனும் அடைமொழி ஏன் காந்தி பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது?

எந்த கேள்வியும் இல்லாமல், தோராயமாக மூன்று தலைமுறை மக்கள் காந்தியை ஏற்றுக்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரது வாழ்வின் சில நேர்மறையான அம்சங்கள் மட்டும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு அவரை மகாத்மாவாகவே வைத்திருக்கும் வேலை இன்றளவும் தொடர்கிறது. காந்தி கொண்டாடப்பட வேண்டியவராகவும் பின்பற்றப்பட வேண்டியவராகவும் நூறாண்டுகாலமாக பிரசாரம் செய்யப்படுகிறார். சமகால அரசியல்வாதிகளில் தொடங்கி அவ்வப்போது வந்துபோகும் அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் போன்ற காமெடி டிராக் நபர்களையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள காந்தியைத் தெரிந்துகொள்வது அவசியம். அவர் பயன்படுத்திய அல்லது அவருக்காகப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தியாவில் ‘மாகாத்மா’ காந்தியின் காலம் 1915ல் தொடங்குகிறது. சத்யாகிரகம் எனும் தொழில்நுட்பத்துக்கான பேட்டன்ட்டுடன்தான் அவர் நம் நாட்டுக்கு வந்தார். சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1921ல் அவர் அகில இந்திய காங்கிரசுக்கு தலைவராகிறார். பெரிய அளவில் ஊடக வலுவில்லாத அந்தக் காலத்தில், வெறும் ஆறாண்டு காலத்தில், காந்தியால் முப்பதுகோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தின் தலைவராக முடிந்ததன் விளைவுதான், திடீரென ஒருநாள் இரவில் அண்ணா ஹசாரேவால் ஊழல் ஒழிப்புப் போராளியாக முடிகிறது.

சத்யாகிரகம் என்பது வெள்ளையன் உதைவாங்காமல் நாட்டை ஆள உருவாக்கப்பட்ட போராட்டமுறை மட்டுமல்ல. பிரிட்டிஷ் அரசுக்கெதிராக வீரத்துடன் போராட முன்வந்தவர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்களைச் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் நோக்கமும் அதற்கு இருந்தது. காந்தியின் ஜால்ராக்களில் ஒன்றான அன்றைய ஆனந்தவிகடன் 1929 மே இதழில், பகத்சிங் பாராளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டு வீசியதைக் கண்டிக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்:

// இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டுகைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச் சிகாமணிகள்’ என்றபட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாகமகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகார வர்க்கத்தை வெங்காய வெடியினாலும்,ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம்…//

காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் தெரிவு செய்யப்பட்டபோது, ‘பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி’ என பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார் காந்தி. காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்ய, சுபாஷ் வெறுத்துப் போய் பதவியை உதறினார். பகத்சிங் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை குறித்து காந்தியின் ஆலோசனையைக் கேட்டு இர்வின் பிரபுவின் செயலாளர் கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தியின் விசுவாசி பட்டாபி சீதாராமையா எழுதிய பதில் இதுதான்:

//“Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.”// (அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.)

இவ்விரு சம்பவங்களும் சொல்லும் கருத்து இதுதான். எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி. (அப்போது காந்தி அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் பகத்சிங் எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசின் அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம்.)

காந்தியின் சமத்துவ சிந்தனையும் பாசாங்குகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இறுதி நாள்வரை அவர் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களைப் பற்றிக் கொண்டவராகவே இருந்தார். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக அங்கீகரிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தவர் காந்தி. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரும் சட்டம் கொண்டுவருவதில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரை வெல்ல முடியாத காந்தி, தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரக்கூடாது என்பதற்காக, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்களின் விடுதலைக்கான அவரது முயற்சி, காந்தியைக் கொல்ல அவர் காட்டும் பிடிவாதமாக காங்கிரஸ்காரர்களால் திரிக்கப்பட்டது. காந்தி எனும் ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த தலித் மக்களின் உரிமைகளையும் விட்டுத்தர வேண்டிய நிலைக்கு ஆளானார் அம்பேத்கர்.

தலித் மக்கள் ஏனைய உயர்சாதி மக்களை சார்ந்திருக்கும்படியாகவும் ஏழைகள் பணக்காரர்களை சார்ந்திருக்கும்படியாகவும் உள்ள சமூகத்தைத்தான் அவர் விரும்பினார். அவர் வலியுறுத்தியது சாதிகளுக்குள் இணக்கம் இருக்கவேண்டும் என்பதுதான், சாதி ஒழிப்பல்ல. (சாதி ஒழியவேண்டும் என காந்தி சொல்லவில்லை- ராஜாஜி.) அது வேலைக்காரனுக்கும் முதலாளிக்குமான இணக்கம். அது வேலைக்காரன் அடிமையாக இருக்கும் வரைதான் சாத்தியம். பணம் பணக்காரர்களிடம்தான் இருக்கவேண்டும், ஏழைகளுக்கு அவர்கள் புரவலர்களாக இருப்பார்கள் எனும் காந்தியின் சொற்றொடர் ஒன்றே போதும், அவர்களது செல்வந்தர்கள் மீதான பாசத்தைக் காட்ட.

Sarla Devi

தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.

ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது. பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார். காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - “மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.

மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த  பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்படவேண்டியதே. பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?

Manu

இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்? இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது. அவரது கதை ஏதோ ராமாயணம் அல்லது திருத்தொண்டர் புராணம் போலவோ, வெறும் பஜனையாகவோ பாடப்பட்டால் நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர் தேசத்தின் முகமாகக் காட்டப்படுவது வேறு பல காரணங்களுக்காக.

விடுதலைக்கு முன்பாக சத்தியாகிரகம் எப்படி ஆங்கிலேயனுக்குத் தேவைப்பட்டதோ இப்போதும் அது நவீன அதிகார வர்க்கத்துக்கும் தேவைப்படுகிறது. காந்தியை ஆதர்ச தலைவனாகத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலம்தான், அனேக மக்கள்திரள் போராட்டங்களைத் தீவிரவாதமாகச் சித்திரிக்க முடியும். சமீபத்தில் கூடங்குளம் போராட்டம் பற்றி சுப்பிரமணியம் சாமி சொன்ன ஒரு விமர்சனம்- “அது நக்சலைட்டுக்கள் நடத்தும் போராட்டம்.” (டைம்ஸ் நவ் டிவியில்.) ஆக ஒரு போராட்டம் நடத்தப்படும் காரணிதான் அதனை சாத்வீகப் போராட்டமா அல்லது தீவிரவாதமா என அதிகாரவர்கத்தை முடிவெடுக்க வைக்கிறது. காந்தி எனும் பிம்பத்தை உயிருடன் வைத்திருப்பது இந்த கபடத்தனத்தைச் சுலபமாக்குகிறது.

ராகுல் காந்தியின் ஒரு கோடி ரூபாய் ஏழைவீட்டுச் சப்பாத்திக்கான யோசனை எம்.கே.காந்தியிடமிருந்து பெறப்பட்டதுதான். அவர்தான் பிர்லா கட்டிக்கொடுத்த மாளிகைகளில் தங்கிக்கொண்டு இந்தியாவின் கடைக்கோடி ஏழைகளைப்போல உடுத்திக்கொண்டிருந்தவர். காரணமேதும் தெரியாமல் காந்தி மகாத்மா என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டதன் விளைவுதான் தளபதி, அஞ்சாநெஞ்சன், புரட்சித்தலைவி என அடைமொழிகள் பொருத்தமில்லாத நபர்களை அலங்கரிக்கின்றன.

மதத்தை அரசியலுடன் கலந்தது மற்றும் பஜனையைப் போராட்டமாக்கியது என அவர் இந்திய அரசியலுக்கு இரண்டு மோசமான முன்னுதாரணங்களைத் தந்திருக்கிறார். இந்து வைணவரான காந்தி தன் ராம பக்தியைத் தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாமல் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தார். பாரதீய ஜனதா பிற்பாடு இந்த அடிப்படைவாதத்தில் ஏராளமான ரத்தத்தைக் கலந்து வளர்ச்சியடைந்தது.

காந்தி சாத்வீகத்தை மக்கள் போராட்டத்தில் மட்டும்தான் வலியுறுத்தினார். இயல்பில் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறார். பம்பாய் கப்பற்படையினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க தனது தொண்டர்களை அனுப்பியது காங்கிரஸ் கட்சி. அதன் தோல்விக்குப் பிறகு காந்தி சொன்னது:

அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழவிரும்பவில்லை. மாறாகத் தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” (: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946.)

அவர் நடத்த விரும்பிய அரசு வெள்ளையன் நடத்திய ஆட்சியை ஒத்ததாகவே இருந்திருக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்பதை அவர் தயக்கமில்லாமல் விரும்பினார், வெள்ளையனைப் போலவே. பெஷாவரில் நடைபெற்ற எழுச்சிமிக்க மக்கள் போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு தன் படைகளை அனுப்பியது. சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வீரர்கள் மறுத்தார்கள். அதனைக் கண்டித்து காந்தி சொன்ன வாசகங்கள்:

”இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுடவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவன் கீழ்ப்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதைச் செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும்  பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும்போதும் இவர்கள் இதே போல கீழ்ப்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்.’’

பிடிவாதம், எதேச்சதிகாரம், மத அடிப்படைவாதம், ஜனநாயக விரோதம் என நம் சமகால அரசியல்வாதிகளில் எல்லா அடாவடிகளையும் அப்போதே கொண்டிருந்தவராக இருந்திருக்கிறார் காந்தி. எத்தனை உதைத்தாலும் வாங்கிக்கொள் என அவர் மக்களுக்கு மட்டும் அறிவுரை சொன்னதால்தான் இன்றுவரை அவரை அதிகாரவர்க்கம் கொண்டாடுகிறது.

எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும் என்பது மாதிரியான நிலைப்பாட்டை நாம் காந்தியின் மீது வைக்க முடியாது. காந்தியை ஏற்றுக்கொள்ளும்போதே நீங்கள் பகத்சிங்கை நிராகரிக்கிறீர்கள், கட்டபொம்மனின் தியாகத்தைக் குறைத்து மதிப்பிடும் மனோநிலைக்கு ஆளாகிறீர்கள். பாஸ்கோவுக்கு ஆதரவாக, பழங்குடிகளுக்கு எதிராகத் தரகு வேலை பார்க்கும் மன்மோகன் கும்பலும் தான் காந்திய வழியிலான அரசை நடத்துவதாக கருதிக்கொள்ளலாம், அதற்காக அவர் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ள அவசியமிருக்காது.

நிறைவாக, காந்தியைக் கொண்டாடாதீர்கள் எனக் கேட்பதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை. கொண்டாடும் முன்பு அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்ளவே எழுதப்படுகிறது. காந்தியின் நோக்கங்கள் உயர்வானவை, நடைமுறைப்படுத்துவதில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என நீங்கள் வாதிட்டால் அதற்கு காந்தியின் வார்த்தைகளிலேயே பதில் இருக்கிறது,

“முடிவைவிட முறையே முக்கியம்!” (சௌரி சௌரா சம்பவத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது காந்தி உதிர்த்த வாசகம்.)

தாமதமாகப்போகும் புதிய மீட்பரது வருகை- ஆம், திரீ இடியட்சில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.

தமிழ் நாட்டில் ஒரு கட்சி தொடங்க பெரிய காரணங்கள் இருக்கத் தேவையில்லை. திமுக தொடங்கி நாடாளும் மக்கள் கட்சிவரை இதில் விதிவிலக்கில்லை.  மற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பதற்கும் சினிமாகாரர்கள் ஆரம்பிப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. மற்றவர்கள் கட்சி ஆரம்பித்து பெரிய கூட்டத்தை கூட்டினால்தான் அவர்களுக்கு போதிய கவனம் கிட்டும். சினிமாக்காரர்களுக்கு மட்டும் மூன்று படம் ஓடிய உடனே அவர்களது அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்புக்கள் கிளப்பப்படுகின்றன.

ஒவ்வொரு நடிகனையும் இந்த கேள்வி பின் தொடர்கிறது.. நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?. நடிகர் விஜயும் இதற்கு ஆட்பட்டு இப்போது ஆனந்தவிகடனில் தன் அரசியல் வருகைக்கான முன்னோட்ட பேட்டியை கொடுத்திருக்கிறார். புலனாய்வு வார இதழ்கள் அவருக்கு இருக்கும் பதின்நான்காயிரம் ரசிகர் மன்றங்கள் ஆட்சியை தீர்மானிக்கவல்ல சக்திகள் என்று சந்திரசேகர மைந்தனை உசுப்பேற்றுகின்றன. ரசிகர் மன்றம் எனும் பெயரில் இயங்கும் அல்லது இயக்கப்படும் முட்டாள்கள் கூட்டத்துக்கு தரப்படும் இயக்கம் மற்றும் சக்தி ஆகிய பெயர்கள் தமிழகத்தை கேவலப்படுத்துபவை என்பதை வேறொரு சந்தர்பத்தில் விவாதிக்கலாம்.

இந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தங்களை நாட்டின் அதிசக்திவாய்ந்த நபர்களாக கற்பனை செய்துகொள்கிறார்களோ என எண்ண வேண்டியிருக்கிறது. சரி விஜய் பெரிய ரசிகர் கூட்டம் கொண்ட மனிதராகவே இருக்கட்டும், அது மட்டுமே எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தகுதியாகும்? ஆனால் கோடம்பாக்கத்துக்காரர்களுக்கு இந்த கேள்விகள் பிடிக்காது. அரசியலுக்கு யார்வேண்டுமானாலும் வரலாம் எனும்போது சினிமாக்காரன் வந்தால் மட்டும் ஏன் உங்களுக்கு வயிறு எரிகிறது எனும் ரெடிமேட் பதில் அவர்கள் எல்லோரிடமும் இருக்கும். நடிகனாவதற்கு நடிக்கத்தெரியவேண்டும் என்பது போய் அப்பனுக்கு செல்வமும் செல்வாக்கும் இருந்தால்போதும் என்ற நிலை வந்த பிறகு கட்சி ஆரம்பிக்க ரசிகர் கூட்டம் மட்டும் போதும் எனும் எண்ணம் எழுவதில் ஆச்சரியமில்லை.

விஜய் பேட்டியைப் பாருங்கள். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் அடுத்த நபராக தன்னைக் காட்டிக்கொள்கிறார். அவரது கணிப்புப்படி ராமச்சந்திரனை கட்சியை விட்டு துரத்தினார்கள் அதனால் அவர் விசுவரூபம் எடுத்து முதல்வரானார். ஜெயாவை எம் ஜிஆரின் சவ வண்டியை விட்டு இறக்கினார்கள் , அவரும் முதல்வரானார். கல்யாண மண்டபத்தை இடித்தார்கள் ஆகவே விஎஸ்ஓபி காந்த் மன்னிக்கவும் விஜயகாந்த் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியானார். இப்போது என் படத்துக்கு தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறார்கள் என எச்சரிக்கை செய்திருக்கிறார். அவருக்கு போதிய வரலாற்று ஞானம் இல்லாதது நல்லதாய் போயிற்று, இல்லாவிட்டால் லெனின், ஸ்டாலின் மற்றும் காஸ்ட்ரோவுக்கு அடுத்தது நான்தான் என்றுகூட சொல்லியிருப்பார்.

சிவனே என மாடுமேய்க்கும் லதா வீட்டுக்காரர் வில்லன்களால் சீண்டப்பட்டு கோடீசுவரனாக்கப்படும் படங்களைப் பார்த்து மட்டுமே வளர்ந்த இளைஞரில்லையா.. அவரை முதல்வராக்க காவலன் படத்துக்குத் தரப்படும் இடையூறுகள் மட்டுமே போதாதா என்ன? விஜயின் அப்பா கடந்த சில ஆண்டுகளாக மகனின் அரசியல் பிரவேசம் பற்றி உடுக்கை அடித்துக்கொண்டேயிருக்கிறார். அரசியல் ஆசை வந்த பிறகாவது மக்கள் பிரச்சனையி பற்றி ஏதாவது கருத்து சொன்னார்களா என்றால் கிடையாது. அட சங்கவி, சுவாதி போன்ற நடிகைகளின் தயவில் நடித்தபோது சொல்லியிருக்காவிட்டால் பரவாயில்லை, பத்து வருடங்களாக படத்தின் தயாரிப்பாளர்களே அவரை நம்பி இருக்கும் நிலையிலும் எதையும் சொல்லக்காணோமே?  சில மாதங்களுக்கு முன்னால்கூட இந்த திடீர் புரட்சிக்காரர் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று சொல்லி வைரமுத்து வேலைபார்த்தவர்தான்.

கருணா குடும்பத்தால் தமிழன் வீட்டில் எழவு விழுந்தபோதெல்லாம் அவரை வெட்கமில்லாமல் குளிப்பாட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்போது படத்தை வெளியிட இடையூறு செய்கிறார்கள் என்பதால் அவரை குறை சொல்வதும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதையும் நாம் சாதாரணமாக கேட்டுக்கொண்டிருப்பதும் நம் தலையில் நாமே செருப்பால் அடித்துக்கொள்வதும்  ஒன்றுதான் (செருப்பு பழசாக இருப்பது அவசியம்). தனது கால்சட்டை உருவப்பட்டால்தான் அநியாயம் குறித்து கவலைப்படுவேன் என்பது தமிழனின் தனிப்பட்ட குணம், அதையே விஜய் செய்தால் நாம் குற்றம் சொல்வது நியாயமில்லை. ஆனால் அதனை தியாகமாக்குவதும் அரசியலுக்கு வர நியாயமான காரணமாக கருதுவதும்தான் அநாகரீகமானது என்கிறோம். திரீ இடியட்சுக்காக முடியை ஒட்ட வெட்டிய விஜய்க்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரது அப்பா கடுங்கோபம் கொண்டு தமிழ்நாட்டின் அம்மாவை சந்தித்திருக்கிறார். இப்போது ஏதேதோ மாற்றங்கள் நடந்து திரி இடியட்சில் அவரது இருப்பு உறுதியாகிவிட்டது. ஆகவே ஏழுகோடி இடியட்சுக்கும் அவரது அரசியல் பிரவேசத்தைக் காணும் வாய்ப்பு தள்ளிப்போயிருக்கிறது. ஆனால் அவர் வீட்டு சாக்கடை அடைத்துக்கொண்டால்கூட அவருக்கு அரசியல் சிந்தனை வரும் என்பதை மறுப்பதற்கில்லை.

இது விஜய் எனும் ஒரு நடிகனின் இயல்பு மட்டுமல்ல. தமிழ் சினிமா எனும் துறையினை கட்டி ஆளும் ஜாம்பவான்களின் பொது இயல்பு. ரஜினி வீட்டுக்கு போக தாமதானதுதான் அவர் ஜெயலலிதாவை எதிர்த்தற்கான முதல் காரணம். ஒரு படம் மூன்றாண்டுகளுக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகக் கூடாது என்பது விதி, அது மீறப்படுவதை எந்த சினிமாக்கார பிரபலமும் எதிர்த்ததாக காணோம். வீடியோ பைரசியை ஒழிக்க மட்டும் வீரமுழக்கமிடுகிறார்கள் எல்லோரும். பைரசி தயாரிப்பாளரையும் மற்ற பிரபலங்களையும் பாதிக்கும், சீக்கிரமே டிவியில் ஒளிபரப்பானால் இரண்டாம் ரிலீஸ் செய்யும் சிறு மற்றும் புறநகர் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். திரைத்துறையினருடைய போர்குரலின் அழகிற்கு இது ஒன்றே சிறந்த உதாரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இவர்களது தர்ம சிந்தனையும் கட்சி நடத்தும் முறையுமே சினிமா தொற்றுகொண்டதாகவே(இன்ஃபெக்ஷன்) இருக்கிறது. சரத்குமார் சமீபத்தில் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமார் குடும்பத்துக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார். விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள், சரத் அவரது குடும்பத்துடன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சாப்பிடப்போனால் ஆகும் செலவு எவ்வளவு இருக்கும்? அதனுடன் இந்த இருபத்தைந்து ஆயிரம் ரூபாயை ஒப்பிடுங்கள். எத்தனை அருவறுப்பாக இருக்கிறது? ஆனால் இதை ஒரு நாட்டாமைக்குரிய கம்பீரத்துடன் தருகிறார் சமக தலைவர்.

இவர் லட்சணம்தான் இப்படியென்றால் இவரைக் காட்டிலும் பல வகையிலும் சிறந்தவரும் யோக்கியருமான சீமானின் நிலை எப்படி இருக்கிறது? ஒரு நல்ல நாளில் வைகோவை சந்திக்கிறார் சீமான், அப்போதே அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்கிறார். ஒரு அதிமுக்கியமான கட்சி நிலைப்பாட்டை தன்னிச்சையாக அறிவிப்பது அவரது கட்சி உறுப்பினர்களுக்கு இழைக்கப்படும் அநீதியன்றி வேறென்ன? தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு தமிழ்தேசிய சிந்தனையைக் காட்டிலும் அவசியமானது ஜனநாயக சிந்தனை. இந்த அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை அவரது கட்சியினருடன் விவாதிக்க ஒரு வாரம் ஆகுமா? ஒரு குறுந்தகவலை அனுப்பியே கருத்து கேட்கலாமே..        

ஆக சினிமாவில் இருந்து வருவோர் தன் முகரையை மட்டும் நம்பி அரசியலுக்கு வரும் சரத் ஆனாலும் சரி, மாதக்கணக்கில் சிறைசென்று போதிய அரசியல் அனுபவத்தோடு (அது சரியானதா இல்லையா என்பது விவாதத்துக்குரியது) வரும் சீமானாலும் சரி அடிப்படையான அரசியல் தகுதிகள் இல்லாமலே இங்கு வருகிறார்கள். இவர்கள் தங்களை உப்பரிகையில் நின்று மக்களுக்கு தரிசனமும் தானமும் தரும் ஜமீனாகவும் கூட்டதின் முன்னால் நின்று கைகளை உயர்த்தி கோஷமிட்டு மக்களை வழிநடத்தும் சூப்பர் கதாநாயகனாகவுமே எண்ணிக்கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் கருணா நாற்பது ஆண்டுகளில் செய்த அக்கிரமங்களை நான்காண்டுகளில் செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். இன்றைக்கு ஜெயலலிதாவை ஆதரிப்பதில் தெரியும் நியாயம் நாளை நிச்சயம் ஜெயலலிதா ஆட்சியில் செய்வதும் நியாயம் என்ற நிலைக்கு இவர்களை இட்டுச்செல்லும்.

யுத்தம் செய் படத்தை கலைஞர் டிவி வாங்கியிருக்கிறது. அதன் கதாநாயகன் சேரன் சினிமாவில் கருணா குடும்ப ஏகாதிபத்தியத்துக்கு வக்காலத்து வாங்குகிறார் (முடிஞ்சா நீயும் அவங்களோடு போட்டி போடு என பொருள்கொள்ளும்படி இருக்கிறது அவரது சென்றவார விகடன் பேட்டி). எது விஜயை அரசியலுக்கு வர வைக்கிறதோ அது சேரனுக்கு நியாயமாக தெரிகிறது. இதுதான் கோடம்பாக்க சுயநல சிந்தனையின் விகாரமான ஆதாரம்.

இவற்றுக்கெல்லாம் நாம் திரையுலகினரை குறை சொல்லிப் பயனில்லை. நமக்கு அரசியல் அறிவு இல்லாதபோது நம் நாட்டு அரசியலை தகுதியற்ற ஆட்களும் பேராசைக்கார ஆட்களும்தான் நிறைப்பார்கள். சாதாரணமாகவே கதாநாயகர்கள் தங்கள் உழைப்பிற்கு சற்றும் சம்மந்தமில்லாத அளவுக்கு பெரும் பொருளை சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து இருக்கும் சுரண்டல் மையம் அரசியல்தான். (எனக்கு நினைவு தெரிந்து விஜயகாந்த் நடித்து ஓடிய படங்கள் பத்துகூட இருக்காது. ஆனால் அவருக்கு நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு சொத்து இருக்கிறது). அதிகாரத்தையும் சம்பாத்தியத்தையும் விரும்புபவனெல்லாம் அரசியலுக்கு வராதிருக்க நமக்கு அரசியல் கொஞ்சமாவது தெரிந்திருப்பது அவசியம்.

ஆகவே அரசியலை கற்போம், பிறகு அதில் சரியானதை சுலபமாக கண்டுபிடிக்கலாம். ஒரு நகைச்சுவைக் காட்சியை நூறுமுறை பார்க்க தேரமிருக்கும் போது இதற்கு நேரமிருக்காதா என்ன? நேரமில்லை என கருதினால் மேனேஜர் சீனா கட்சி ஆரம்பிக்கும் காலம்கூட வந்து தொலைக்கலாம்…

லஞ்சம் ஊழல் என்று வந்துவிட்டால் நான் நெருப்பு.. (என் பங்கை சரியாக கொடுக்காதபட்சத்தில்)

வழமையாக தமிழக முதல்வர் தானே கைப்பட தயாரித்த (மேட் இன் கோபாலபுரம்.. எங்களுக்கு சிஐடி காலனி தவிர வேறு எங்கும் கிளைகள் கிடையாது) கேள்வி பதிலை தினசரி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் பல கேள்விகளையும் அவர் தவிர்த்துவிடுவதாக இரக்கமற்ற தமிழ் மக்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

சினிமா நிகழ்ச்சி, பாராட்டுவிழா என ஏராளமான பணிகள் காத்திருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கும் இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் வசனகர்த்தாவுக்கும் உள்ள பணிச்சுமையை மக்கள் உணராதது துரதிருஷ்டவசமானதே. தலைவர் சாய்சில் விட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, உடன்பிறப்புக்கு எழுதிய ஒரு ரகசியக் கடிதம் கீழே தரப்படுகிறது (நம் கேள்வியை அவரே எழுதிக்கொ(ல்லு)ள்ளும்போது அவர் பதிலை நாம் எழுதக்கூடாதா என்ன???)

உடன்பிறப்பே, சில தினங்களுக்கு முன்னால் நான் வெளியிட்ட சொத்துப்பட்டியலைக் கண்டு நீ உள்ளம் பூரித்துப்போயிருப்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் சிறுமதிகொண்ட லட்சக்கணக்கான மக்கள் அச்செய்தி வெளியான அன்று பேப்பர் வங்கிய உடன் என் சொத்துக்கணக்குக்கான இலவச இணைப்பை கேட்டு கடைக்காரர்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள். நான் மஞ்சள் துண்டிலிருந்து பட்டு வஸ்திரத்துக்கு முன்னேறிய கேப்பில் ஆரியம் திராவிடத்தை கெடுத்துவிட்டதைப் கண்டாயா?

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவையே மண்டியிட வைத்த என்னை, குமுதத்தின் குடுமியை கொத்தாக பிடித்திருக்கும் என்னை இந்த பத்திரிக்கையுலகம் என்ன பாடுபடுத்துகிறது பார்த்தாயா? பத்திரிக்கைக் குடும்பத்தில் மூத்த உறுப்பினரான என்னை குடும்பமே இல்லாத அம்மையாரைப்போல விமர்சிக்கிறார்கள் இவர்கள். விஜயகுமார் வீட்டில் இத்துனை களேபரம் நடக்கும் இவ்வேளையிலும் அந்த செய்திக்கு மயிரளவும் மரியாதை தராது இன்னமும் ஸ்பெக்ட்ரம் ஊழலையே இந்த வட இந்திய ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கும்போதே தெரியவில்லையா நம் மீது வைக்கப்படுபவை உள்நோக்கமுடைய குற்றச்சாட்டு என்று?

இந்த இலங்கைப் பிரச்சனையில் இந்த மாநிலமே என்னை துவைத்து காயபோட்ட விசயம் நீ அறியாததல்ல. உலக வரலாற்றில் ஒரு வேளை உண்ணாநோன்பிருந்து ஒரு போரையே நிறுத்தி அதற்காக ஒரு பாராட்டுவிழாகூட நடத்திக்கொள்ளாத ஒரு உத்தமனை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டார்களே இந்த வீணர்கள்?. இலங்கைத் தமிழர்களுக்காக நூற்றுக்கணக்கில் கடிதம் எழுதி அதனை லட்சக்கணக்கான முறை நானே சொல்லியும் காட்டிவிட்டேன். இன்னமும் இந்த வரலாற்றை தமிழ்நாட்டு மூடர்கள் புரிந்துக்கொள்ளவில்லையே என்று அவர்களை நீ வையாதே. அண்ணாமலை பல்கலைக்கழக உதயகுமார் முதல் மாஞ்சோலை தொழிலாளர்கள் வரை உள்ள நீண்ட வரலாற்றை அவர்கள் புரிந்துகொண்டு நினைவில் வைத்திருந்தார்கள் என்றால் நம் கதை கந்தலாகிவிடும் என்பதை நீ மறக்கலாகாது.

தமிழுணர்வாளர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் அடிக்கும் கொட்டம் என்னை கொந்தளிக்க வைத்தாலும் நீ அதனைக்கண்டு கலங்காதே. ஏற்கனவே அங்கே இருந்து கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த சுப.வீயும் வீரமணியும் இப்போது நம்மிடம் தினக்கூலிக்கு வேலைக்கு வந்துவிட்டதை நினைத்து தைரியம் கொள். ஜெயலலிதா ஒரேயொரு முறைதான் சோனியாவை பதிபக்தியற்றவர் என்று சொன்னார், நானோ நாளுக்கொருமுறை அவர் சொன்னாரென்பதை சொல்லிக்கொண்டேயிருக்கிறேன், இதெல்லாம் யாருக்காக?

தியாகத்தாயின் கடும் கண்காணிப்பில் இருக்கும்போதே தமிழ்செல்வனுக்கு இரங்கற்பா இயற்றியவன் நான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொன்னபோது பண்டார வன்னியன் பற்றி கவிதை எழுதி ஒரு குத்துமதிப்பாக அஞ்சலி செலுத்தியவன் நான். பக்தி கொஞ்சம் முற்றிவிட்டதால் இவர்களை வீடணன் என்று சொல்வதா ராவணன் என்று சொல்வதா என எனக்கே புரியவில்லை. என்ன செய்வது., தமிழ்நாட்டில் இருக்கும் எண்ணற்ற நன்றி கெட்டவர்களில் இவர்களும் இருந்து தொலைக்கட்டும் என்று விட்டுவிடுவோம். இந்த சூழலிலும் இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சொல்லும் டி.கே.ரங்கராஜனும், இந்த நில்லா நெடுஞ்சுவர்களோடு ஜோடிபோடாமல் கமுக்கமாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியும் நம் மனதுக்கு கொஞ்சமேனும் ஆறுதலாக இருக்கிறார்கள் என்று என்னைப்போல ஆனந்தம் கொள்.

நீரா ராடியாவுடன் ராசாத்தி அம்மையாரும் கனிமொழியும் பேசிய ஆங்கில உரையாடல் கேட்டபோது பெண்கள் மேம்பாட்டுக்கு கழகம் எடுத்த நடவடிக்கை உனக்கு தெரியவில்லையா? கனிமொழியின் சொத்து விவரத்தைப் பார்த்து புலம்புகிறார்கள் புல்லுருவிகள். சிலி நாட்டு கவிஞன் பாப்லோ நெருடாவுக்கு அந்நாட்டிலேயே பெரிய அரண்மனை இருந்ததாம். காலச்சுவட்டிலேயே கவிதைகள் எழுதிய கவிதாயினிக்கு சிங்கப்பூரில் மாளிகை இருந்தால் மட்டும் வயிறு எரிகிறது இந்த பத்திரிக்கைகளுக்கு. இவர்கள் முதலில் நெருடாவின் சொத்து விவரத்தை வெளியே கொண்டுவந்தால் பத்திரிகா தர்மத்தை கடைபிடிப்பவர்கள் என்று நம்பலாம்.

என் சொத்து விவரத்தை சொன்ன பிறகும் அதில் குற்றம் காண்கின்றன பல குள்ளநரிகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பத்தாயிரம் சம்பளம் பெற்றவன் நான். பள்ளியில் படித்தபோதே எங்கள் வீட்டில் திருடர்கள் போக்குவரத்து இருந்திருக்கிறது என்று சொன்னால் கள்ளச்சிரிப்பு சிரிக்கிறார்கள் கயவர்கள். இப்போதுகூட பெண் சிங்கம் படத்துக்கு வசனம் எழுதி ஐம்பது லட்சம் சம்பளம் பெற்றவன் நான், அப்படியென்றால் வசனம் எழுதாமல் இருப்பதற்கு எத்தனை கோடி எனக்கு கிடைத்திருக்கும் என்று இவர்கள் கணக்கு போட்டு பார்த்திருக்க வேண்டாமோ?

சமாதனத்துக்கான நோபல் பரிசுக்கே தகுதியுடைய தயாளு அம்மாவையும் இவர்கள் விட்டுவைக்கவில்லையே. அவர் அறுநூறு கோடி பணம் பெற்றுக்கொண்டு தயாநிதி மாறனுக்கு பதவி பெற்றுத்தந்ததாக யாரோ இரண்டு பேர் பேசினார்களாம். அதை வைத்து அவர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். ஒரு பெண்மணி தனியாக அறுநூறு கோடியை பெற்றிருக்க முடியுமா?

நூறு கோடி கொடுத்தற்கான சண்டையிலேயே மூன்று பேர் செத்தபோது அறுநூறு கோடிக்கு பதினெட்டு பேர் போய்ச்சேர்ந்திருக்க வேண்டுமா இல்லையா? அப்படியேதும் நடைபெறாதபோதே இந்த குற்றச்சாட்டு அபாண்டமானது என்பது உள்ளங்கை நெல்லிகனிபோல தெற்றென உனக்கு விளங்கியிருக்கும். நான் தயாளு அம்மாளுக்கு வக்காலத்து வாங்குவதாக சிலர் நாக்கூசாமல் பேசுவார்கள் அது குறித்து நான் அஞ்சவில்லை.. ஆனாலும் இது ராசாத்தி அம்மையார் வட்டாரத்தில் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறேன் என்பது நீ அறியாததா என்ன?

மதுரையில் அமைதியை நிலைநாட்ட டெல்லிக்கு போயிருக்கும் தம்பி அழகிரி மீது விமர்சன அம்பை எய்கிறார்களே சில அசட்டுதைரியம் கொண்டவர்கள் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லையே என்று நீ நினைக்கலாம். என்ன செய்வது அதில் பாதி விமர்சனம் எங்கள் வீட்டுக்குள்ளிருந்துதான் வரும் போலிருக்கிறதே!!!. ஆனாலும் அதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை, அதை அஞ்சாநெஞ்சனும் அகிம்சாமூர்த்திகளான அவரது அடிபொடிகளுமே பார்த்துக்கொள்வார்கள்.

இணையம் என்றொரு ஏரியா இருக்கிறது, அங்கே நீங்கள் யாரும் இருப்பதாகவே தெரியவில்லை. இடைத்தேர்தல்களில் வெற்றிபெற நாம் எண்ணற்ற நுட்பங்களை புகுத்தி புகுந்து விளையாடுகிறோம். ஆனால் இணையத்தளக்காரர்களை முடக்கிவைக்கும் நுட்பத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையே.. ஏற்கனவே கூகுளும் வேர்டுபிரஸ்ஸும் வலைப்பூவை இலவசமாக தந்து தொலைக்கிறார்கள். இல்லாவிட்டால் அதைக் கொடுத்தாவது ஆதரவு தேடலாம். சவுக்குக்கு தினசரி பதின்மூன்றாயிரம் பேர் வருகிறார்களாம், இந்த கீபோர்டு கிறுக்கர்களின் மொத்த கும்பலும் நமக்கு எதிராக இருப்பதைப் பார்த்தால் தேர்தலுக்கு மொத்த ஸ்பெக்ட்ரம் பணத்தையும் போட்டால்தான் தேறமுடியும் போலிருக்கிறதே?

ரஜினி கமலையே விழாவுக்கு மைக்செட் கட்டுபவன்போல வரவழைக்கும் நம்மால் இந்த பொடியர்களை வழிக்கு கொண்டுவரமுடியவில்லையே? .ஜெகத் கஸ்பர் மாதிரி தொழில்தெரிந்தவர் நம்மிடம் இருந்தும் என்ன புண்ணியம்? நாலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத இவர்களை வைத்துக்கொண்டு நாம் செம்மொழி மாநாடு நடத்திய வரலாற்றை நினைத்துப்பார்க்கிறேன். ஏதோ ஒப்புக்காவது வீரமணியின் அடிபொடிகள் சிலர் நமக்கு ஆதரவாக இணையத்தில் இருப்பது இந்த காயத்துக்கெல்லாம் ஒத்தடம் கொடுத்த மாதிரி இருக்கிறதே என்று அமைதிப்படவேண்டியதுதான்.

குடும்ப அரசியல், குடும்ப அரசியல் என்று குடும்பம் குடும்பமாக அமர்ந்து தமிழகத்தில் பேசிக்கொள்கிறார்கள். நீ இதையெல்லாம் எப்போதோ கடந்து வந்தவன் என்று எனக்குத்தெரியும். ஆனாலும் தேர்தல் வருவதால் நாம் இதற்கும் பதில் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. நேருவின் குடும்பமே வாரிசு அரசியலை வளர்க்கவில்லையா என்று நீ அவசரப்பட்டு பேசிவிடாதே.. ஒருவேளை காலங்கள் மாறி, காட்சிகள் மாறி, கோலங்கள் மாறி கடைசியில் மத்தியில் ஆட்சியே மாறினால் நாம் பாஜகவோடுகூட கூட்டணி அமைக்கவேண்டியிருக்கும், அப்போது இந்த வசனத்தை வைத்துத்தான் நாம் வண்டியோட்ட வேண்டும், அதுவரை அமைதியாக இரு.

காலம் காலமாக கட்சிக்கு உழைக்கும் அப்பவித் தொண்டனே கண்டுகொள்ளாதபோது மற்றவர்களுக்கு என்ன வந்தது? கனிமொழியின் கணவர் என்ன சட்டமன்ற உறுப்பினராகவா இருக்கிறார்? கயல்விழியின் கணவர் என்ன கட்சியில் கொறடா பதவியிலா இருக்கிறார்?

ஆகவே, குடும்பத்தில் பலர் அரசியலிலேயே இல்லை எனும் உண்மை உணர்ந்து,

குடும்ப ஆட்சி கழகத்தில் இல்லை என நெஞ்சம் நிமிர்த்து.

இதற்குமேலும் உழைப்பால் உயர்ந்து பதவியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பற்றி உனக்கு நினைப்பு வந்தால் அதை கட்சி பார்த்துக்கொண்டிருக்காது. ஆம், கட்சியின் கொள்கைக்கு எதிராக யாரேனும் சிந்தித்தாலும் அதை கழகமும் பொறுக்காது, கலைஞராலும் பொறுக்க முடியாது.

அயோத்தி தீர்ப்பு- நல்லகாலம், உடன்கட்டை ஏறுதல் வெள்ளையன் காலத்திலேயே சட்டவிரோதமாக்கப்பட்டுவிட்டது.

இது இன்னமும் ஒரு மதச் சார்பற்ற தேசமா? தீர்ப்புக்கு அடிப்படை சாட்சி ஆதாரமா அல்லது நீதிபதியின் சொந்த மத நம்பிக்கையா? இந்தியாவின் காவிமயமான அரசு அமைப்பை மீண்டும் ஒருமுறை இவ்வுலகம் காண்பதற்கு வாய்ப்பளித்து இருக்கிறது அலகாபாத் தீர்ப்பு. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது வழக்கு. ஒரு கட்டப்பஞ்சாயத்தைப் போல இடித்தவனுக்கும் இழந்தவனுக்கும் இடத்தை பாதியாக அல்லது அதனைவிட மோசமாக பங்கிட்டுத் தந்திருக்கிறது அலகாபாத் நீதிமன்றம். ராமர் பிறந்த இடம் அதுதான் என இரண்டு நீதிபதிகள் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.  மக்கள் நம்புவதாகக் கருதும் எதையும் நீதிபதிகள் இனி தீர்ப்பாக்கலாம், மேலும் மக்கள் யார் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம்.ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இனி தாராளமாக ராமனின் ஆயிரக்கணக்கான சித்திகளின் பிறந்த வீட்டைத் தேடலாம், இனிதான் அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கவும் வழியிருக்கிறதே . பாமியன் புத்தர் சிலைகளை இசுலாமுக்கு எதிரானவை என்ற தீர்ப்பை எழுதிவிட்டு இடித்தார்கள் தாலிபன்கள், இங்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு  இடிக்கப்பட்ட இடம் ராமன் பிறந்த இடம் என்று தீர்பாகியிருக்கிறது.

இது வேறுவழியில்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு போலத்தோன்றலாம். தேசத்தின் சட்டம் ஒழுங்கை மனதில் கொண்டு தரப்பட்ட முடிவாகவும் தோன்றலாம். ஆனால் இத்தீர்ப்பின் பின்னே இருப்பது நீதித்துறையில் வியாப்பித்திருக்கும் அப்பட்டமான காவி சிந்தனை. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது வழக்கு. மதம் என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் இவ்வழக்கு அடிப்படைகூட இல்லாதது. இதற்கு முன்பு எந்த ஒரு தீர்ப்புக்கும் முன்னால் உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ சட்டம் ஒழுங்கு பற்றி கவலைப்பட்டதாக வரலாறு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கை காப்பது அரசின் கடமை என்றே நீதிமன்றங்கள் சொல்லியிருக்கின்றன. முடியாவிட்டால் ஆட்சியை விட்டு இறங்குங்கள் என்றுகூட ஒரு பந்த் வழக்கின்போது நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.  பொது அமைதியை காப்பாற்றும் முகமாக இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கான முகாந்திரம் எவ்விடத்திலும் இருப்பதாக தெரியவில்லை. (எட்டாயிரம் பக்கமென்றாலும் தீர்ப்பின் உள்ளடக்கம் சில வாக்கியங்களுக்குள் அடங்கிவிடக்கூடியதே.. ஆகவே தீர்ப்பை படித்துவிட்டு கருத்துசொல்லலால் என்பது தள்ளிப்போட ஒரு வாய்ப்பு மட்டுமே).

மாறாக இந்நாடு இந்துக்களுக்கானதே என்று மறைமுகமாக ஊர்ஜிதப்படுத்தும் கடைசி நிகழ்வாக இத்தீர்ப்பைக் கருத பல ஆதாரங்கள் இருக்கின்றன. வழக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேல் தாமதிக்கப்பட்டது. மக்களிடம் இது ராமனுக்கு பாத்தியப்பட்ட இடம் என்ற பிரச்சாரத்துக்கான அதிகபட்ச காலக்கெடு. கூடுதலாக ராமன் சிலையை வைக்கவும் மற்ற ‘ஆதாரங்களை’ வானரப்படைகள் அங்கு உருவாக்கவும் இது தேவைக்கதிகமான காலமே. பாபர் மசூதி என்பது மாறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமாகி பிறகு எல்லா தரப்பினராலும் அது சர்ச்சைக்குரிய இடமென குறிப்பிடப்படுவதற்கும் இக்கால அவகாசம் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  இடம் யாருக்கு என்பது பிரச்சனை, ஆனால் பாபர் மசூதியின் மையப்பகுதி ராமன் பிறந்த இடம் என்பதை ஏற்பதாக இரண்டு நீதிபதிகள் சொல்கிறார்கள். ஆதாரமெதுவுமில்லையென்றாலும் இதை நீதிபதிகள் இதை நம்புவார்களாம். எந்த பெயர் நூற்றுக்கணக்கான இசுலாமியர்களது உயிரைப் பறித்ததோ எந்த பெயர் கோடிக்கணக்கான சிறுபான்மையோரை பாதுகாப்பற்றவர்களாக்கியதோ அந்த கற்பனைக் கதாபாத்திரத்துக்கு இப்போது சட்டபூர்வமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

பாபர் காலத்தில் கட்டப்பட்டது உண்மை என்பது ஏற்கப்பட்டாயிற்று. பிறகெதற்கு அங்கு தொழுகை நடந்ததற்கு ஆதாரமில்லை என்றும் அது மசூதியின் அமைப்பு மாதிரி தெரியவில்லை என்றும் தேவையில்லாத சப்பைக்கட்டு? காவி காலிகளால் இடிக்கப்பட்டது ஒரு புனிதத்தலமல்ல என்று வேறு வார்த்தைகளால் சொல்கிறார்கள், அவ்வளவுதான். ராமன் பிறந்த இடம் என்ற ஒப்புதலும் அங்கு கோயிலின் இடிபாடுகள் இருக்கின்றன் என்ற தொல்லியல் துறையின் கருத்து தீர்ப்பில் சுட்டப்படுவதும் பாபர் மசூதியிடமிருந்து வெட்டப்பட்ட புனிதத்தன்மையை ராமன் கோயிலுக்கு ஒட்ட வைக்கும் நரித்தனம். ராமர் கோயில் இருந்தது என்பது மக்கள் நம்பிக்கை என்றால் மக்கள் என்பவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ்சில் உள்ள  மக்களா அல்லது ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மட்டும்தான் மக்களா?

இது வெறும் ஒரு இடம் தொடர்பான பிரச்சனை அல்ல. இத்தீர்ப்பின் மூலம் கரசேவைக்கு ஒரு சட்டபூர்வ அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் சில ஏற்ற இறக்கங்களோடு இத்தீர்ப்பை ஆதரித்திருக்கின்றன. இசுலாமியர்களின் காவலன் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கருணாநிதி ஆதரித்திருக்கிறார் (அவருக்கு பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்தில்லாத அத்துனை சமாச்சாரமும் வரவேற்கக்கூடியதே). அயோத்தியில் இல்லாமல்  ராமனுக்கு வேறு எங்கு கோயில் கட்டுவது  என்று கேட்ட ஜெயாவோ எல்லையில்லாத மகிழ்ச்சியில் அறிக்கை தந்திருக்கிறார். அனேகமாக இந்த அறிக்கையை எழுத அவர் பூங்குன்றனை எதிபார்த்திருக்க மாட்டார்.  ராஜீவ் காந்தியால் ராமன் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டு பிறகு நரசிம்மராவால் இடிக்கப்பட அனுமதிக்கப்பட்டிருப்பதால் காங்கிரசின் நிலையும் பாரதீய ஜனதாவின் நிலையும் இவ்விவகாரத்தில் ஒன்றாகவே இருக்கும்.

தீர்ப்பு அநீதியானது என்பது முதல் பிரச்சனை என்றால் அனேக தலைவர்கள் இதை வரவேற்றிருப்பது அதைவிட பெரிய பிரச்சனை. தங்கள் மதசார்பற்ற மூகமூடி காணாமல் போவது பற்றிக்கூட கவலைகொள்ளாது கருணாநிதி போன்றோர் கருத்து சொல்வது இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளின் பெயரளவுக்கான சிறுபான்மையோர் ஆதரவுக் குரல்களும் காலாவதியாவதற்கான அறிகுறி.  இவர்கள் சொல்ல விரும்பிய கருத்தைத்தான் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் தீர்ப்பின் பின்னால் நின்றுகொண்டு சிறப்பான தீர்ப்பு என்றோ வரவேற்கத்தக்க தீர்ப்பு என்றோ அல்லது சாத்தியமான தீர்ப்பு என்றோ சொல்லி சிக்கலை இத்துடன் முடித்துக்கொள்ளச் சொல்கிறார்கள். கொடுப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இரு என்ற செய்தி அரசு எந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எல்லா அதிகாரமட்டத்தினராலும் இப்போது இசுலாமியர் யாவருக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது ஊர்ஜிதமாகியிருக்கிறது என்ற ஷபனா ஆஸ்மியின் கருத்து வெறுமனே விரக்தியின் வெளிப்பாடல்ல அப்பட்டமான யதார்த்தம்.

பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பான வழக்கின் முடிவு பல எதிர்கால சிக்கல்களுக்கான தொடக்கமே. இனி நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்தை தீர்ப்பாக்க இயலும் என்ற ஒரு மிகமோசமான முன்னுதாரணம் இவ்வழக்கினால் கிடைத்திருக்கிறது (ஒரு சாதாரண சிவில் வழக்கில் பின்பற்றப்படும் நடைமுறைகூட இங்கு பின்பற்றப்படவில்லை). வானரங்கள் இப்போது தமது வெற்றியை அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இனி அவர்கள் காசி, மதுரா, பரங்கிமலை என இடிப்புப்பட்டியலை நீட்டிப்பார்கள். இது மிகையான அனுமானமல்ல, சங்கப் பரிவாரங்கள் எப்போதும் கலவரங்களாலேயே தங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு, காவி எப்போதுமே அப்பாவி மக்களின் ரத்தத்தால்தான் தனது நிறத்தை மங்காமல் பாதுகாக்கிறது. அதனால்தான் வினாயகர் ஊர்வலங்கள் மசூதிகள் இருக்கும் பக்கமாக செல்லும்படி வம்படியாக திட்டமிடப்படுகின்றன.

மதசார்பற்றவர்கள் மட்டுமல்ல மனிதன் என்று தன்னை நம்புகிற யாவருமே எதிர்க்க வேண்டிய தீர்ப்பு இது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காவி பயங்கரவாதிகளால் பறிபோன நாட்டின் மானம் இப்போது சட்டத்தின் வாயிலாகவே பறிபோயிருக்கிறது. இந்த இந்துத்துவாதான் கடுமையான சாதீயப்பகுபாடுகளையும் கவுரவக்கொலைகளையும் இன்றளவும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. வெள்ளையன் காலத்தில் பிளேக் நோய் பரவியபோது எலிகளைக் ஒழிக்க வந்த ஆய்வுக்குழுவை குஜராத்தில் எரித்துக்கொன்றது இதே இந்துத்துவாதான் (ஸ்பான்சர்டு பை பால கங்காதர திலகர் ). குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏ(ற்)றுவது, விதவைகளை காசியில் கொண்டுபோய் விட்டுவிட்டு அவர்களை விபச்சாரத்தில் தள்ளியது என இந்துத்துவத்தின் நீண்ட சைக்கோத்தனத்தின் பட்டியலில் கடைசி சேர்க்கை ராமர் கோயில்.  ஒரே கோத்திரமுடையோர் திருமணம் செய்வது சட்டவிரோதமென  அறிவிக்கப்படவேண்டும்  என்று ஒரு கூட்டம் மத்திய அரசை சமீபத்தில் கேட்டுக்கொண்டது. அதேபோன்ற முட்டள்த்தனம்தான் ‘இது ராமன் அவதரித்த இடம் என்றோ ராமன் ஒன்னுக்கு போன இடம்’ என்றோ சொல்வதும்.

நாம் எதிர்க்காமல் இருக்கும்பட்சத்தில் நம்மையும் அமைதியாக இருக்கும் பங்காளிகளாகவே காவிக்கூட்டம் கருதும். நடத்தப்படும் எல்லா அரஜகங்களும் நமது பெயராலேயே நடத்தப்படும். நான் உங்களோடு இல்லை என்று சங்கப் பரிவாரங்களுக்கு  சொல்ல வேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம். அதன்பொருட்டுத்தான் எல்லோரும் அறிந்த தகவலென்றாலும்  நானும் என் பங்கிற்கு பதிவிட்டிருக்கிறேன். நீங்கள் ரவுடியில்லை என்று நிரூபிக்க விரும்பினால் நான் இந்துவெறியன் இல்லை என்று சொல்லுங்கள், ராமன் கோயில் அங்கில்லை என்று சொல்லுங்கள். நான் முட்டாள் இல்லை என்று சொல்லிக்கொள்ள விரும்பினால் நான் இந்து இல்லை என்றும் ராமன் என்றொருவன் இல்லை என்றும் உரக்க சொல்லுங்கள்.

கோவிந்தசாமி- மார்க்சிஸ்ட் கட்சியின் துரோகியல்ல., முன்னோடி.

கடந்த வாரம் புதனன்று திருப்பூரின் சகல திசைகளிலும் பயணித்தாக வேண்டிய நிலையில் இருந்தேன். போகும் திசையெங்கும் திருப்பூரின் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மக்களை பேனர்கள் வாயிலாக அழைத்துக்கொண்டிருந்தார். வியாழக்கிழமை மாலை அவரது அடுத்த கட்ட திட்டம் பற்றி மக்களிடம் விளக்கப்போவதாக ஒலிபெருக்கியில் ஊரெங்கும் அறிவித்தவண்ணமிருந்தார்கள். ஒரே நாளில் ஒரு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ இத்தனை செலவு செய்து ஒரு பொதுக்கூட்டம் நடத்த முடியுமா? என்று விவரமறியாத சிலர் ஆச்சர்யப்பட்டார்கள். இது பற்றி எழுதலாம் என்ற எண்ணம் எழுந்தாலும் அன்றைய பெங்களூர் பயணத்தின் பொருட்டு அந்த யோசனையை கைவிட்டேன்.

ஐந்து நாள் கர்நாடகாவில் தங்கியமையால் கோவிந்தசாமியின் பொதுக்கூட்டம் பற்றிய செய்திகளை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. வெறும் ஐந்து நாளிலேயே எனது சட்டை பேண்டெல்லாம் பெரிதானது உள்ளிட்ட வெளியூர் பயணத்துக்கே உரித்தான பல கவலைகள் இருந்தமையால் கோவிந்தசாமி பற்றி யோசிக்கவே எனக்கு அவகாசமில்லை. ஒருவழியாக திருப்பூர் வந்து இறங்கினால் வேறு பல பேனர்கள் தெருவெங்கும் முளைத்திருந்தன. இந்த முறை கோவிந்தசாமி திமுகவினரோடு இணைந்து ஸ்டாலினை வரவேற்றுக்க்கொண்டிருந்தார். ஒரு மார்க்சிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் இப்படி நிறம் மாறுவது சாத்தியமா என்று நான் சந்தித்த சிலர் கேள்வி எழுப்பினார்கள். கட்டுரை எழுதும் யோசனையை மீண்டும் கையிலெடுக்க இது போதாதா?

எங்க ஊர் MLAவின் கதை தெரியாதவர்களுக்கு இந்த முன்னோட்டம் கொஞ்சம் உபயோகமாக இருக்கும். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு வரை இவர் கொஞ்சம் யோக்கியராக இருந்தாரென கல்வெட்டுக்கள் சொல்கின்றன ( அவரது ஆரம்பகால தொழிற்சங்க நண்பர் சொல்கிறார்). முன்னாள் தொழிற்சங்கவாதியான இவர் இந்த முறை சட்டமன்றத்துக்குத் தேர்வான பிறகு அவரது நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறியிருக்கின்றன. ஆளுங்கட்சியுடன் அதீதமான நெருக்கம் பாராட்டியது, தனது கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்தது என பல கட்சித்தாவல் அறிகுறிகளை அவர் கடந்த மூன்றாண்டுகளாக வெளிப்படுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார். இம்மாதம் நடந்த பொதுவேலைநிறுத்தத்தின் போது அவர் மட்டும் அப்போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்தபோதே அவரது நிலைப்பாடு சற்றே வெளிப்படையாக தெரியவந்தது. கடைசியாக, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஸ்டாலினுக்கு பாராட்டுவிழா நடத்தப்போவதாக அவர் அறிவித்ததன் வாயிலாக மார்க்சிஸ்ட் கட்சியே அவரை துரத்திவிடும் சூழலை திறமையாக உருவாக்கியிருக்கிறார்.

திருப்பூரில் விவரமறிந்தவர்களுக்கு கோவிந்தசாமியின்  சமீபகால “வளர்ச்சி” தெரிந்தேயிருக்கிறது. ஒரு நாள் அவகாசத்தில் ஒரு மாநகரையே தன் முகம் பதித்த பேனர்களால் நிரப்பமுடியும் அளவுக்கு அவர் செழிப்பானவராக இருக்கிறார். திருப்பூரைச் சுற்றி ஏராளமான நில முதலீடுகள் அவரது சுற்றத்தாரால் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. திருப்பூரின் பெருமுதலாளிகளே பொறாமைப்படும் அளவுக்கு கோடிகளை விழுங்கிவிட்டு பிரம்மாண்டமாக எழும்பியிருக்கிறது அவரது வீடு. முதலாளிகளை அழைத்துப்போய் தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்திக்க வைக்கும் தரகர் வேலை பார்ப்பவர் மற்ற முறைகேடுகளைச் செய்யத் தயங்கியிருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. ஒரு தொழிற்சங்கவாதி, பணி நேரத்தை பத்து மணி நேரமாக மாற்றச்சொல்லும் கோரிக்கையோடு வரும் ஆலை அதிபர்களை அமைசரிடம் கூட்டிச்செல்கிறார் என்பதைவிட வேறு என்ன அயோக்கியத்தனம் இருக்க முடியும்?

ஊரின் எதிகாலமே கேள்விக்குரியதாக இருக்கும் காலத்தில் ஸ்டாலினுக்கு இங்கு பாராட்டுவிழா நடத்துவது அசிங்கத்தின் உச்சம். நகரம் பற்றியெறிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனின் செய்கைக்கு இது சற்றும் சளைத்ததல்ல. ஆயினும் நாம் சிந்திக்கவேண்டியது இவ்விடயத்தில் குற்றவாளி கோவிந்தசாமி மட்டுமா என்பதே.

பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஸ்டாலினுக்கு பாராட்டுவிழா எடுக்கும்வரை மார்க்சிஸ்ட் ஏன் அமைதியாக இருந்தது? ஒரு பார்சலில் இருபத்தைந்து லட்சத்தை அமைச்சருக்கு லஞ்சமாகக் கொடுத்ததை கோவிந்தசாமி ஒப்புக்கொண்டதாக இப்போது சொல்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. தொழிலாளருக்கு விரோதமான ஒரு செயலுக்காக ( 10 மணிநேர வேலைநேரம்) முதலாளிகளிடம் வசூலித்த தொகையை அமைச்சருக்குத் தந்த ஒரு உறுப்பினரை கட்சியின் சில பொறுப்புக்களில் இருந்து மட்டும் நீக்கிவிட்டு இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது கட்சி. இதை எவ்வாறு ஒரு தொண்டர் புரிந்து கொள்வார் ? ஒரு குற்றவாளி தண்டிக்கப்படுவதைக் காட்டிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி கட்சிக்கு முக்கியம் என்றா? இல்லை லஞ்சக் குற்றச்சாட்டுக்கு தண்டனை தருமளவுக்கு கட்சி அதிகாரம் மிக்கது என்றா?

உண்மையில் கோவிந்தசாமியை கண்டிக்கும் யோக்கியதை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இல்லை என்பதுதான் முதல் பிரச்சனை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேரளாவின் பினராயி விஜயன் மீது இன்றுவரை கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. பெருநிறுவனங்களுக்கு நேரடியாகவே அடியாள் வேலை பார்க்கும் புத்ததேவ் பட்டாச்சார்யா அதை திமிருடன் பிரகடனமும் செய்கிறார், கட்சி அமைதியாகத்தான் இருக்கிறது. தமிழகத்திலும் ஊழலில் ஊறிய திமுகவையும் அதிமுகவையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறிமாறி ஆதரித்தவண்ணமிருக்கின்றன. ஆக ஊழலோ அல்லது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளோ மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரானவை இல்லை. அவர்களது பிரச்சனை தமது சட்டமன்ற உறுப்பினரது எண்ணிக்கையை காப்பாற்றிக்கொள்வதுதான். சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துவிடாமல் காப்பாற்ற கோவிந்தசாமியை சகித்துக்கொண்டது கட்சி. அந்தப் பதவியை வைத்து அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும் என்று திட்டமிட்டு ஸ்டாலினை சரணடைந்திருக்கிறார் கோவிந்தசாமி. என்ன வேறுபாடு இருக்கிறது இருதரப்புக்கும்?

திருப்பூரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வெறும் பஞ்சாயத்து பேசும் அமைப்புக்களாக மாறி பலநாட்கள் ஆகின்றன. பனிரெண்டுமணிநேர கட்டாயவேலையை எதிர்த்து இவர்கள் யாரும் போராடியதில்லை, தொன்னூறு சதம் தொழிலாளர்களுக்கு பி.எஃப் கிடையாது அதற்காகவும் இவர்கள் எதுவும் செய்தது இல்லை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் சுமங்கலி திட்டம் என நூதன உழைப்புச் சுரண்டலை எதிர்த்தும் இவர்கள் செயல்பட்டதில்லை. மேலே சொன்ன எல்லாவற்றையும் சங்கங்கள் எதிர்க்கின்றன என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆயினும் இவற்றை வீரியத்துடன் எதிர்க்கவேண்டிய தேவையிருக்கும் ஒரு நகரில் இவர்கள் வெறுமனே நிதிவசூல் மட்டும் செய்ய பயிற்றுவிக்கப்படுவார்களேயானால், அதில் உருவான கோவிந்தசாமி புரோக்கராக இருக்க முடியுமேயன்றி போராளியாக முடியாது.

ஒரு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதிய உறுப்பினர்களை சேர்த்த இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் இப்போது கிடைப்பவரை எல்லாம் சேர்க்கும் நிலையின் இருக்கின்றன.  கம்யூனிசத்தின் அடிப்படையைக்கூட இவர்கள் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்வதில்லை. அதை செய்தால் தொண்டன் முதலில் அவன் கட்சியைத்தான் கேள்வி கேட்பான். இந்தியாவின் அதிகார அமைப்புக்குத் தக்கவாறு கம்யூனசத்தை ரீமேக் செய்வதென்பது கொஞ்சமும் பிரயோஜனப்படாதது. வாரம் ஐந்து நாட்கள் நான் ஏகபத்தினி விரதனாக இருப்பேன் என்று யாரேனும் சொன்னால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ அதே விமர்சனத்தைத்தான் இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் மீதும் நாம் வைத்தாகவேண்டும்.

மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளில் யோக்கியர்கள் அதிகம்தான். திராவிடக் கட்சிகளின் கவுன்சிலர்கள்கூட ஸ்கார்பியோ காரில் வலம் வரும்காலத்தில் வரதராஜன் அரசுப் பேருந்தில் பயணித்ததை நான் கண்டிருக்கிறேன். குடிசை வீட்டில் வசிக்கும் எம்.எல்.ஏ மார்க்சிஸ்ட் கட்சியில் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. இக்கட்சிகளின் மீது மக்களுக்குள்ள குறைந்தபட்ச மரியாதையும் இப்படியான ஆட்களால்தான் நீடிக்கிறது.  ஆயினும் இவை எல்லாம் பழங்கதையாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஜோதிபாசுவின் வாரிசு ஒரு தொழிலதிபர், ஈ.கே.நாயனார் வீட்டுத் திருமணத்தில் அவர் வீட்டுப் பெண்கள் கிலோ கணக்கில் நகை அணிந்துகொண்டு உலாவந்தார்கள், சுப்பராயன் சம்மந்தம் செய்திருப்பது திருப்பூரின் மாபெரும் ஏற்றுமதியாளரான K.P.R வீட்டில், மன்னார்குடி எம்.எல்.ஏ சிவபுண்ணியத்தின் சொத்துக்கணக்கு இப்போது கணிசமாகக் கூடியிருக்கிறது.

ஆகவே இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இக்கட்சிகளும் ஏனைய கட்சிகளுக்கு நூறு சதவிகிதம் வித்தியாசமில்லாததாகிவிடும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் அரசால் வேட்டையாடப்பட்டவர்கள் இந்தக் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். அந்த ரத்த சரித்திரத்தில் வளர்ந்த கட்சி என்பதை நினைவுபடுத்திக்கொள்ளக்கூட இனி அங்கு ஆளில்லாது போகலாம். அப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவிந்தசாமி மாதிரியான ஆட்கள்தான் உதாரண புருஷர்களாக இருப்பார்கள்.

காஞ்சி அர்ச்சகர் தேவநாதன்- கருவறைங்குறதை வேற மாதிரி புரிஞ்சுகிட்டாரோ ??

கடந்த சில நாட்களாக புலனாய்வு இதழ்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தன. ஒரு நடிகரின் அறுபதாம் கல்யாண செய்தியை பிரதான செய்தியாக போடுமளவுக்கு செய்திப் பஞ்சம் தலைவிரித்தாடியது. எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு அவதாரம் வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பத்திரிக்கைகளுக்கும் அதுபோன்ற தேவதூதர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைப்பார்கள். பிரேமானந்தா, சரவணபவன் ராஜகோபால், பத்மா நாராயணன் போன்ற ஆபத்பாந்தவர்கள் வரிசையில் இப்போது புதிதாக வந்திருப்பவர் காஞ்சிபுரம் மகசேச பெருமான் கோயில் அர்ச்சகர் தேவநாதன்.

அவர் அர்ச்சகராக இருக்கும் கோயில் கருவறையில் பெண்களுடன் உறவு கொண்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அந்த குற்றமும் அவரே எடுத்துக்கொண்ட வீடியோக்களால் தெரிய வந்திருக்கிறது. பகவானுக்கே பதினோரு மணி காட்சியை காட்டிய குற்றம் லேசுபட்டதா என்ன? அதுவும் இந்து மதத்தின் ஹெட் ஆஃபீசான காஞ்சியிலேயே.. அதனால் முன் ஜாமீன் பின் ஜாமீன் உட்பட எல்லா ஜாமீனையும் நிராகரித்து விட்டது நீதிமன்றம். முன் ஜாமீனை நிராகரிப்பதற்கான அடிப்படை காரணங்களை யாரேனும் கொஞ்சம் விளக்கினால் புண்ணியமாய் போகும். ஒரு வீட்டை இடித்தது முதல் அதன் உரிமையாளரை கடத்தி அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது என ஒரு தொழில்முறை மாபியா கூட்டமே பிச்சை வாங்கும் அளவுக்கு காரியம் செய்த முன்னாள் அமைச்சருக்கு சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது. அடுத்தவனின் உடலை புண்ணாக்கியவருக்கு கிடைத்த ஜாமீன் மக்களின் உள்ளத்தை புண்ணாக்கியவருக்கு கிடைக்காமல் போனது ஏனென்று தெரியவில்லை.

போலீசாரின் கடமையுணர்வோ இன்னும் ஒருபடி மேலே போய்விட்டது. என்னதான் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் சன்னிதி என்றாலும் ஒரு புரோகிதர் இந்த அளவுக்கா  உரிமை எடுத்துக்கொள்வது? பக்தனின் பேரின்பத்திற்கு வழிகாட்டும் இடம் ஒரு அர்ச்சகரின் சிற்றின்பங்கள் அரங்கேறும் இடமாக பயன்படுத்தப்பட்டதை காவல்துறையால் மன்னிக்க முடியவில்லை போலிருக்கிறது. சென்ற வாரம் வரை கோயிலுக்கு வந்த பெண்களுடன் கருவறையில் உறவு கொண்டது மட்டும்தான் வழக்கு, இப்போதோ இந்துக்கள் மனதைப் புண்படுத்திய வழக்கு மட்டுமில்லாமல் கற்பழிப்பு வழக்கு மிரட்டல் வழக்கு என பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கின்றன. எந்தப் போராட்டம் நடத்தப்பட்டாலும் தடியடி நடத்த தயங்காத காவல்துறை தேவநாதன் மீது தாக்குதல் நடத்த வந்த பெண்கள் மீது கனிவுடன் நடந்துகொண்டது. அவர்தம் மத உணர்வு அவர்களை மௌனமாக்கியிருக்கக்கூடும். தேவநாதன் செய்ததை விட பெரிய குற்றம் அவரது வீடியோக்களை வெளியே பரப்பியது. அந்தக் குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை.

இதுபோன்ற பாலியல் குற்றம் தொடர்பான செய்திகள்தான் பத்திரிக்கைகளுக்கு ஜாக்பாட். அவர்கள் பெரும்பாலான செய்திகளில் பாலியல் சாயம் பூசும் வாய்ப்பையே தேடுகிறார்கள். N.K.K.P ராஜா வழக்கில் அவரது இரண்டாம் மனைவியின் தொடர்பினால்தான் அவர் இப்படிக் கெட்டுப்போனார் என்றன புலனாய்வு ஏடுகள். நல்லவேளை அவர்  உமாவை ( அவர் இரண்டாவது மனைவி) பார்க்கும் வரை செரிலாக் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்று  சொல்லவில்லை. மக்களுக்கு அவசியமான செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் “அதிகமாக விற்பனையாகும்” செய்திகளே வெளியிடப்படுகிறன. அபிஷேக் பச்சன் திருமணத்திற்கு நூற்றுக்கணக்கான நிருபர்களை அனுப்பி இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் அத்திருமணச்செய்தியை கொண்டு சேர்த்தன நம் ஊடகங்கள். அதே கால கட்டத்தில் ஒரு விசாரணைக் கைதி ஐம்பது ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார் என்ற செய்தி வந்தது ( பீகாரில் என்று நினைக்கிறேன், உறுதியாக தெரியவில்லை).  எத்தனை ஊடகங்கள் அது குறித்து செய்தி வெளியிட்டன ?

கோயில்களில் நடக்கும் அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பணம் இல்லாதவனுக்கு எந்தக் கோயிலிலும் மரியாதை கிடையாது. கோதானம் தர அர்ச்சகர்களின் தரகர்கள் கொண்டு வருவது அடிமாடுகளைத்தான். புரோக்கர்கள் இல்லாத பெரிய கோயில்களே தமிழகத்தில் இல்லை. வேண்டுமானால் தஞ்சாவூரை சுற்றியுள்ள பரிகார தலங்களுக்கு போய்வந்தவர்களைக் கேட்டுப்பாருங்கள்.  கோயில் புரோகிதர்களால் செய்யப்படும் மற்ற குற்றங்களை ஒப்பிடுகையில் தேவநாதனின் செயல் பத்து பைசாவுக்கு பொறாது. ஆனால் இந்து முண்ணனியோ தேவநாதனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் செய்யச் சொல்லி மனு கொடுத்திருக்கிறது. குலோபல் வார்மிங்குக்கூட தேவநாதன் லீலைகள் காரணமாக இருக்குமோ எனும் ஆராய்ச்சியில் ராமகோபாலன் ஈடுபட்டிருப்பதாக கேள்வி.

மீண்டும் தேவநாதன் விவகாரத்திற்கு வரலாம். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்றபடியால் அவனுக்குத் தெரியாமல் தவறு செய்துவிட முடியாது என்றாகிறது. எனவே இறைவனைத்தவிர மற்ற யாருக்கும் தெரியாத ஒரு இடத்தை அவர் தனது மேற்படி காரியங்களுக்காக தெரிவு செய்திருக்கிறார் அவ்வளவுதான்.
(தவறு நடந்தால் அன்று மாலையே உரிய பரிகாரம் செய்துவிடுவேன் என்றும் ஒரு நல்லபிள்ளை வாக்கியத்தையும் அவர் சொல்லியிருக்கிறாராம் ). மக்கள் தொலைக்காட்சியில் காட்டியிருக்கும் காட்சிகளைப் பார்க்கையில் வீடியோக்கள் அந்தப்பெண்களின் அனுமதியுடனேயே எடுக்கப்பட்டிருக்கும் என்பது தெரிகிறது. கோயிலின் புனிதத்தை களங்கப்படுத்தினார் எனும் ஒரு குற்றச்சாட்டை மட்டும் விலக்கிப்பார்த்தால் மற்ற விஷயங்கள் ஊருக்கு ஊர் நடப்பவையே. மேலும் இறைவனின் ஏஜென்சிக்களில் பாலியல் குற்றங்கள் நடப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. வாடிகனில் ஒரு போப்பாண்டவர் பெண் ஊழியர் ஒருவருடன் அப்படியிப்படி இருக்கும்போது மாரடைப்பு வந்து இறந்து போனார் (அதுவும் நூறாண்டுகளுக்கு முன்பே ) . சங்கர மடத்து ஜெயேந்திர சரஸ்வதியின் மகா மட்டமான விதவை மறுவாழ்வு திட்டம் சந்திசிரித்ததும் நமக்கு மறந்திருக்காது.

ஒரு இடம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட முடியும் எனும் விதி இருந்தால் அது தவறாக பயன்படுத்தப்படவே வாய்ப்பு அதிகம். அடுத்தவன் உள்ளே வர மாட்டான் எனும் துணிச்சல் ஒருவனை தவறு செய்யத்தூண்டாமல் வேறு என்ன செய்யும்? வெளிப்படையான நிர்வாகம் லஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் என்றால் வெளிப்படையான பிரார்த்தனை முறைதானே இதுபோன்ற குற்றங்களை கட்டுப்படுத்தும் ? ரஜினி காந்தும் ஜே.கே. ரித்தீஷும் தத்தமது படங்களில் செய்வது ஒரேமாதிரி கோமாளித்தனங்கள்தான். பிறகு ஏன் ரித்தீஷின் பில்டப் காட்சிக்கு மட்டும் நம் மக்கள் சிரிக்கிறார்கள் ? அதுபோல குற்றம் செய்வதற்கான பாதுகாப்பான இடமாக கருவறை இருக்கிறது எனும் உண்மையை மறந்துவிட்டு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஒரு புரோகிதரை மட்டும் தண்டிப்பதால் ஒரு பிரயோஜனமும் கிடைக்கப்போவதில்லை. அர்ச்சகரின் சிடிக்கள் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக விற்பனையாகலாம் அவ்வளவுதான்.

இந்த கிரகச்சாரம் குறித்து கவலைப்படும் ஆன்மீக அன்பர்கள் கருவறையில் CCTV வைக்க வேதங்கள் அனுமதிக்குமா என்றெல்லாம் சிந்தித்து மெனக்கெட வேண்டியதில்லை. அதைவிட எளிமையான வழி ஒன்று இருக்கிறது. பேசாமல் கருவறைக்குப் போய்வரும் உரிமயையை எங்களுக்குக் கொடுங்கள். ஆயிரம் ஆண்டுகாலம் இறைவனின் ஷேமத்தைப் பார்த்துக்கொண்ட மக்களால் கருவறையில் ஷேம் ஷேம் நடக்காமல் பார்த்துக்கொள்வது ஒன்றும் பெரிய சிரமமில்லை. அரசாங்கமும் அர்ச்சகர்ரை தண்டித்து பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகவேண்டியிருக்காது.

எல்லா ராசிக்காரர்களுக்கும் பொதுவான பலன் ஒன்று உண்டு.

ஜாதகம் இல்லாமல் வாழும் சிறுபான்மையோரில் நானும் ஒருவன். இந்தவகை சிறுபான்மையோருக்கென உள்ள பல்வேறு சிறப்பு சலுகைகளை அனுபவித்தாலும் சிற்சில சிரமங்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு, எங்களுடன் சிலகாலம் பணியாற்றிய பழைய நண்பர் அழைத்திருந்தார். பேச்சினூடே எனது ஜாதகத்தை கேட்டார் ( அவரது உறவினர் மகளுக்கு பொருத்தம் பார்க்க). என்னிடம் அப்படியொன்று இல்லை என்ற உடன் ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல தன் வாழ்வின் அதியுயர் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு நடைபெற்ற பல திருமணங்களை கண்ணுற்ற போது கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பெண்ணை விட ஜாதகம் முக்கியம் என்பது தெரிந்தது. புகைப்படம் இல்லாவிட்டாலும் பெயரை பதிவு செய்துகொள்ளும் பல திருமண தகவல் மையங்கள் ஜாதகம் இல்லாதவர்களை பதிவு செய்து கொள்வதே இல்லை.  முன்பு குழந்தை பிறந்த உடன் மிட்டாய் வாங்கவும், மற்றவர்களுக்கு தகவல் சொல்லவும் ஓடிய அப்பாக்கள் இப்போது கம்ப்யூட்டர் ஜாதகம் வாங்கிய பின்புதான் மறுவேலை பார்க்கிறார்கள்.  குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு ஆலோசனை கேட்பவர்களும் ‘ச அல்லது சா’ இரண்டு எழுத்துக்களில் மட்டும் சந்தர்ப்பம் என பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீதைப் போல நிபந்தனை விதிக்கிறார்கள்.

இந்த கட்டங்கள் வரையப்பட்ட காகிதத்தை வைத்து நடத்தப்படும் அழிச்சாட்டியங்கள் ஏராளம். முப்பத்து மூன்று வயது வரை கல்யாணம் செய்யக்கூடாது என ஒருவருக்கு பலன் சொல்கிறார்கள். வீட்டு மாடி காலியாக இருக்கக்கூடாது உடனே மாடியில் ஒரு அறை கட்டு என இன்னொருவருக்கு பலன் சொல்கிறார்கள். தம்பதிகளுக்கு, ஏழாம் இடத்தில் கிரகங்கள் பொருந்திப் போகாவிட்டால் அவர்கள் தேனிலவு முடிந்ததும் நேராக கோர்ட்டுக்குத்தான் போவார்கள் என்கிறார் ஒரு சோதிடர். கிரக பலன்கள் சாதகமாக இல்லாததால் சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டில் இருப்பவரை நான் பார்த்திருக்கிறேன். சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மாதிரியான செய்திளுக்கு தேசீயப் பேரழிவு நடந்ததைப்போல பல பக்கங்களை ஒதுக்குகின்றன அச்சு ஊடகங்கள். பக்தர்களை இழுக்க துண்டுப் பிரசுரம் மூலம் சண்டையிடுகிறது திருநள்ளாறு கோயிலும் திருவாரூர் கோயிலும். அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு அனல்வாதம் புனல்வாதம் வரை போவார்கள் என எதிர்பார்க்கலாம்,( யார் தோற்றாலும் தண்டனை  என்னவோ பக்தனுக்குத்தான்). மிக்சி குக்கருக்கு சர்வீஸ் முகாம் நடத்துவதைப்போல பெயர்ச்சிகளுக்கும் வேங்கட சர்மா என்பவர் முகாம் நடத்தி தீய விளைவுகளை கட்டுப்படுத்துகிறார். ரிப்பேருக்கு தக்கபடி சர்வீஸ் சார்ஜும்  வேறுபடுகிறது.

முன்பு கைரேகை பார்பவர்கள் உங்கள் வீதியில் அலைவார்கள் அல்லது பிளாட்பார்மில் இருப்பார்கள். அவர்கள் கூலி ஐந்து பத்துடன் போய்விடும். இப்போது அதிலும் பணம் பிடுங்கிகள் வந்துவிடார்கள். அடிக்கடி கைரேகை பார்த்துக்கொள்ளும் எனது உறவினர் ஒருவர் ரேகை பார்ப்பதில் தற்போது நிபுணத்துவம் பெற்றுவிட்டார். கையின் பக்கவாட்டில் உள்ள கோடுகளை வைத்து ஒருவருக்கு எத்தனை மனைவி என சொல்லலாம் என்கிறார் அவர். கைகளின் கோடுகள் அதிகாரப்பூர்வ மனைவிகளை மட்டும்தான் குறிப்பிடுமா என்பதை விளக்குமளவுக்கு அவர் இன்னும் பாண்டித்யம் பெறவில்லை என்பதால் என்னால் அது தொடர்பான விளக்கம்  பெற முடியவில்லை.  கோவை வட்டாரத்தில் ஒருவர் கால் ரேகையை வைத்து எதிர்காலத்தை கணிக்கிறாராம். ஓசூரிலோ ஒரு சோதிடர் கைரேகையை கார்பன் பேப்பரில் பதிய வைத்து அதை பார்த்து பலன் சொல்கிறார். இருபத்துஏழு வயதில் உன் வாழ்வில் திருப்பம் வரும், ஈரோடு தாண்டினால் பெருந்துறை வரும் என எல்லாவற்றையும் சரியாக கணித்து சொல்கிறார் என்று அவரைப்பற்றி பரவசமாக குறிப்பிடுகிறார் திருப்பூரில் உள்ள ஒரு சிறு முதலாளி. நம் முகத்தை பார்த்தே பலன் சொல்கிறேன் என்று சொல்பவரை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக்கூடும்.

ரேகையும் ஜாதகமும் சரியாக இருந்தும் உங்களுக்கு பிரச்சினை இருப்பின் கோளாறு உங்கள் வீட்டில் இருக்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். பல நிறுவனங்களில் வாசலுக்கு எதிரே ஒரு பெரிய கண்ணாடியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அது எதற்கு என்றால், அங்கு வரும் கெட்ட சக்திகள் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துவிட்டு  ஏற்கனேவே நம்ம ஆள் ஒருத்தன் உள்ளே இருக்கான் என்று எண்ணி வெளியே போய்விடும் என்கிறார்கள்.  அதுசரி கண்ணாடியைப் பார்த்து இதேபோல ஏமாந்து நல்ல சக்திகள் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என நாம் கேட்டால், கண்ணாடிக்கும் ஏமாறாத கெட்ட சக்தி என்று நம்மை பற்றி முடிவு செய்துவிடுகிறார்கள். வெளிநாடு செல்ல விரும்புபவர்கள்  வடமேற்கு அறையில் படுத்தால்தான் அவர்கள் கனவு நிறைவேறுமாம், மாறாக திசை மாற்றிப் படுப்பீர்களேயானால் உங்கள் தெரு முக்கை கூட தாண்ட மாட்டீர்கள் என பயமுறுத்துகிறது வாஸ்து சாஸ்திரம். மேலும் உங்கள் வீட்டு மருமகன் மேற்கு மத்திய பகுதி அறையில் படுத்தால் நல்லது என்கிறது வாஸ்து, மருமகனுக்கு நல்லதா அல்லது மாமனாருக்கு நல்லதா என்பதுதான் தெரியவில்லை. CMDA அப்ரூவல் இருக்கிறதோ இல்லையோ வாஸ்து அப்ரூவ்டு என்பதை விளம்பரத்தில் குறிப்பிட மறப்பதில்லை கட்டுமான நிறுவனங்கள்.

இன்னும் நியூமராலஜி, நேமாலஜி, ஜெம்மாலஜி, ப்ரோனாலஜி என ஏகப்பட்ட ‘ஜி’க்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

பலன் பார்ப்பதன் அடுத்த நிலை பரிகாரம். எல்லா துன்பங்களுக்கும் பரிகாரம் வந்துவிட்டது இப்போது. துர்கையம்மனுக்கு நெய் விளக்கேற்றுவதில் தொடங்கி கைலாஷ்நாத் யாத்திரை வரை சகட்டுமேனிக்கு பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. கண்வலி காதுவலி உள்ளிட்ட பல வியாதிகளை குணப்படுத்த தனித்தனியே கோயில்கள் இருப்பதாக  தொடர் (கதை!) ஒன்றை வெளியிட்டது குங்குமம் வார இதழ். நான் பணியாற்றும் நிறுவனத்துடன் பணி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள தொழிற்சாலையொன்றில் வியாபார மேம்பாட்டிற்காக வாஸ்து மீன்கள் வளர்க்கப்பட்டன. ஒரு தீபாவளி விடுமுறையின்போது கவனிப்பாரின்றி அவை இறந்துபோயின. வியாபரத்தை காப்பாற்ற மீனைப் படைத்த வாஸ்து பகவான் மீனை கைவிட்டது துரதிருஷ்டமே (மீனின் விலை இருபதாயிரமாக்கும் ).மேலும்   பெயரை மாற்றினால் வாழ்வின் பல துன்பங்களை வராமல் செய்யலாமாம். முன்பே தெரிந்திருந்தால் மூன்று வயதிலேயே இறந்துபோன எங்கள் வீட்டு நாயின் பெயரை மாற்றி வைத்திருந்திருக்க்கலாம்.

எதிரில் இருப்பவர்கள் சொல்வதை கனிவுடன் கேட்பது, நம்பிக்கை அளிக்கும்படி பேசுவது என்பன போன்ற எளிமையான வழிகள் மூலம் ஜோதிடத்தை ஒரு பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். தொலைபேசி வழியே ஜோதிட ஆலோசனை வழங்கும் மும்பை நிறுவனமொன்று கூடுதலாக ஐந்நூறு ஜோதிடர்களை பணியமர்த்தப்போவதாக அறிவித்திருக்கிறது. ஈ எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத சாமானியர்கள் முதல் படுகொலைகளையே மூலதனமாகக் கொண்ட இலங்கை அதிபர் வரை எல்லோருமே ஜோதிடப் பித்தில் ஒன்றுபடுகிறார்கள். நல்ல விளக்கு ஏற்றுவது திருவிழாவுக்கு மட்டும் கோயிலுக்குப் போவது போன்ற பழக்கங்களைத் தாண்டி இப்போது அன்றாடப் பூஜைகளும்   ஆன்மீகப்பயணங்களும் பரவலாகியிருக்கின்றன. இது நிச்சயம் ஒரு கவலை கொள்ளத்தக்க பிரச்சினையே. ஏனெனில் இந்த முட்டாள்த்தனங்களுக்கு இரையாபவர்கள் பெரும்பாலானவர்கள் உழைப்பின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அல்ல. மாறாக தங்கள் உழைப்பின் பலன் வேறொரு சக்தியால் வந்தது என நம்பவைக்கப்பட்டவர்கள்.

கொஞ்சம் சொறி, கொஞ்சம் சிரங்கு ஆகியவை உடனடியாக குணப்படுத்தப்படவேண்டும் இல்லாவிட்டால் அவை பெரிதாகி மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும், அதுபோலவே உடனடியாக சரிசெய்யப்படவேண்டியதுதான் கொஞ்சமாக இருக்கும் பக்தியும்  ஜோதிட நம்பிக்கையும். ஏனெனில் வெற்றியை அடைவது உங்கள் உழைப்பாலும் தோல்வியை எதிர்கொள்வது உங்கள் சுற்றதவர்களின் அன்பிலும் மட்டும்தான் சாத்தியம்.  தவிர்க்க முடியாத பேருந்துப் பயணத்தில் விஜயகாந்த் படம் ஒளிபரப்பாவது போன்ற கடினமான சூழ்நிலைகளில் வாழ்வின் மீது அவநம்பிக்கை ஏற்படுவது இயற்கையே. அந்த மாதிரியான சந்தர்பங்களில் உங்களிடம் மட்டும் விதி விளையாடுவதாக எண்ணாதீர்கள். மாறாக உங்கள் துன்பத்தை பகிர்ந்துகொள்ள இன்னும் ஐம்பதுபேர் இருக்கிறார்கள் என தைரியப்படுத்திக்கொள்ளுங்கள்!!

பி.டி கத்திரிக்காய் – ஆபத்து விவசாயிக்கு மட்டுமல்ல.

இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ?? கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம்  செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அனுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங்க் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள், நமது கேனத்தனத்தினைப் பொருத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

இந்தியாவில்  மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய  இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக்கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்கப்ப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சனத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புகான நியாய ஆதரவு விலைகான அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குகூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயியிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது  காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) ) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும் மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

கருணாநிதியின் மௌன வலி – அய்யகோ… நாடகம் முடிந்தும் நடிப்பு தொடர்கிறதே.

இது நடந்திருக்கக்கூடாது ஆனாலும் நடந்துவிட்டது. நேற்று எங்கள் வீட்டு கேபிள் இணைப்பு பக்கத்துவீட்டு மொட்டை மாடியை சுத்தம் செய்த ஒரு நல்ல இதயம் படைத்தவரால் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கிடைத்த ஒரு வாய்ப்பையும் நானே வீணாக்கிவிட்டேன். எனக்குத்தெரிந்த அறிவைக்கொண்டு அந்த இணைப்பை சரி செய்து ஒருவேளை விதி வலியதோ என சந்தேகிக்கும் நிலைக்கு ஆளானேன். டிவியை போட்டதும் அது கருணாநிதி மௌனமாக அழுவதாக அறிவித்தது. அழுவது யாருக்குமே தெரியவில்லையே என்று கூடுதல் அழுகைவேறு. அடப்பாவமே இவர் அழுதால்கூட அது எல்லோருக்கும் தெரியவேண்டும் போலிருக்கிறது.

நண்பர் ஒருவர் கருணாநிதிக்கு குற்ற உணர்வு இன்னும் இருக்கலாம், அதனால்தான் அவர் அவ்வப்போது இலங்கை தொடர்பாக அறிக்கை விடுப்பதாக சொன்னார்.  இது எத்தனை ஆபத்தான கருத்து என்பதற்காகத்தான் இப்பதிவு. குற்ற உணர்வு என்பது சாதாரண மனிதன் ஒரு செயலை செய்யத் தவறியபோது வரும் உணர்வு. குற்றம் செய்துவிட்டு அதன் பின்னால் வருவது பய உணர்ச்சி. ஆனால் கருணாநிதிக்கு இருப்பது இரண்டும் அல்ல. பிரபாகரனுக்கு எதிரான கருத்துக்களைச்சொல்லி தான் எந்த அணியில் இருக்கிறேன் என்பதை அறிவித்திருக்கிறார்.ஆதாயம் இல்லாமல் ஆண்டி ஆற்றில் இறங்க மாட்டான் என்பதுபோல  மவுனமாக அழுதாலும் மண்டி போட்டு அழுதாலும் அதில் கலைஞரின் சுயநலம் கட்டாயம் இருக்கும்.

தமிழினத்தலைவர் திடீரென இப்படிப்பேசி விட்டாரே என யாரேனும் கவலைப்படுவீராயின் உங்களுக்கு சில விசயங்களை நினைவூட்டுவது அவசியம். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அவர் ( மட்டும்) அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக செய்தி வந்த போது அவர் என்ன சொன்னார் ? மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். அதே பேட்டியின் இறுதியில் இப்போது என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள் ( இலங்கை தொடர்பில்) என வினவியபோது நக்கலாக நாம் போய் டீ குடிக்கலாம் என்றார். ஒரு இன மக்களின் பேரழிவிற்கு பிறகு சுமுக நிலை நிலவுவதாக சொன்னார். இதன் பொருள் தான் (அல்லது தாம் ) விரும்பிய சூழல் வந்துவிட்டது என்பதுதான். எம்பிக்களின் பயணத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலளிக்கும் அறிக்கையொன்றில் நாங்கள் செலவு செய்து போய்வந்தோம். நீயும் முடிந்தால் போய் வா.. யார் தடுத்தது என்றார்.” இது எனது தனிப்பட்ட பயணம் ” என்பதுதான் இதன் வெளிப்படையான அர்த்தம் .

ஆக, அவ்வப்போது அவர் தனது ரத்தம் தோய்ந்த கைகளை நமக்கு காட்டியிருக்கிறார். சரியாக பார்க்க முடியாதவர்களுக்கான ஒரு சிறப்புக்காட்சிதான் சமீபத்தைய அறிக்கை. பிரபாகரனை குற்றம் சாட்டும் அறிக்கையை இப்போது வெளியிட என்ன அவசியம் வந்தது? உடனடிக் காரணம் இதுவாக இருக்கலாம், நவம்பர் 26 பிரபாகரனின் பிறந்த நாள்,நவ. 27 மாவீரர் நாள். இவ்விரு நாட்களும் பிரபாகரன் பற்றிய கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெறும்,இதுவரையும்கூட பிரபாகரனை சிலாகித்துப் பேசாத ஈழ ஆதரவு கூட்டங்கள்  தமிழகத்தில் மிகக்குறைவு.( இது தொடர்பாக தினமலரும் பல நாட்கள் அரசுக்கு சிக்னல் கொடுத்துப்பார்த்துவிட்டது, முஸ்லீம் தீவிரவாதம் என ஆள்காட்டிவேலை செய்தபோது கிடைத்த வெற்றி இந்த விசயத்தில் கிடைக்கவில்லை) . எப்படி பிரபாகரனை கொன்றுவிட்டால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என இலங்கை கருதி செயல் பட்டதோ அதேபோல அவர் மீதான பெரும்பான்மை தமிழக மக்களின் அபிமானத்தை சிதைப்பதன் மூலம் ஈழ ஆதரவு இயக்கங்களை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் கருணாநிதி.

நீண்ட கால திட்டமென்பது வேறு. கருணாநிதி கொஞ்சம் மானம் மரியாதையோடு வாழ்ந்தபோது செய்த சில காரியங்களால் வடக்கே அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர் என்ற ஒரு பிம்பத்தை தோற்றுவித்துவிட்டது ( ஒரு உதரணம் அமைதிப்படையை வரவேற்கப் போகாதது). இந்த பிம்பத்தை உடைத்து நானும் உங்க ஆள்தான் என சோனியா கும்பலிடம் சரணாகதியடைவதுதான் நீண்டகால திட்டம். இப்போதைய அறிக்கையின் விளைவுகளை ஆராய்ந்து அதை பின்னால் மாலன், சுப்பிரமணியம் சாமி வகையறாக்களின் பழைய கருத்துக்களை தன் பாணியில் வெளியிடுவார். சுருக்கமாக சொல்வதானால் இன்றைய சூழலில் கருணாநிதியின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டைவிட இந்திய அரசு ஆதரவு நிலைப்பாடு அதிக பலனளிக்கக்கூடியது. எனவே தனது பழைய நிலைப்பாட்டை தூரவீச முடிவெடுத்துவிட்டார், பழைய துணியைப்போட்டு பாத்திரம் வாங்குவதுபோல ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடைக்குப்போட்டு கொஞ்சம் பரிதாபம் கிடைக்குமா என ஆழம் பார்க்கிறார்.

புலிகள் வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன்படுத்தவில்லை என்கிறார். இந்தி எதிப்பு போராட்டம் தொடங்கி காவிரி, முல்லை பெரியாறு வரை  இவர் பயன்படுத்திய விவேகம்தான் இப்போது சிரிப்பாய் சிரிக்கிறது. இவர் எடுத்துவைத்த கருத்துக்களை புலிகள் அலட்சியப்படுத்திவிட்டதாக சொல்கிறார் , அதற்கென்ன செய்வது., நம் முன்னோர்கள்கூடத்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றார்கள். அதை இவர் லட்சியப்படுத்தியிருந்தால் தமிழ்நாட்டின் முக்கால்வாசி பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். முடிந்ததை எண்ணி நமக்கென்ன ஆகப்போகிறது ??

புலிகள் கடந்த தேர்தலை புறக்கணித்ததால்தான் அவர்கள் அழிந்தார்கள் என்கிறார். தேர்தல் புறக்கணிப்பு என்பது வெகுஜன மக்கள் பங்கேற்ற ஒரு ஜனநாயக நடவடிக்கை. அதையும் தவறு என்கிறார், ரணில் ஒரு யோக்கிய சிகாமணி போலவும் அவர் வந்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும் என்பதுபோலவும் பேசுகிறார். ரணிலோ புலிகளை முதலில் பலவீனப்படுத்தியது தான்தான் என எப்போதோ இன்றைய இலங்கை வெற்றிக்கு சொந்தம் கொண்டாடிவிட்டார். கருணாநிதிக்கு சண்முகநாதன் குறிப்புக்களை எடுத்துத்தந்த காலம் போய் இப்போது ராவே (RAW) எடுத்துத்தருகிறது போல. ஒரு தோல்விக்கு பிறகு எதைவேண்டுமாயினும் அதற்கு காரணமாக சொல்லமுடியும். சீனாவுடனான இந்தியாவின் போரில் நாம் அடைந்தது கேவலமான தோல்வி. அப்போது நாம் சரணடைந்திருக்கவேண்டும், அதுதான் விவேகம் என இவரது முதலாளிகளான காங்கிரசிடம் சொல்ல தயாரா இந்த ஒப்பாரி நாயகன்?

பிரபாகரனை விமர்சனம் செய்யலாமா கூடாதா என்பதல்ல எனது வாதம். ஒரு குற்றச்சாட்டை வைக்கும் தகுதி கருணாநிதிக்கு இருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. தம் வாரிசுகளுக்காக மொத்த மக்களின் உரிமைகளையும் பலியிடத் துணிந்த கருணாநிதி போரில் தன் குடும்பத்தோடு பலியான பிரபாகரனை விமர்சிக்க எந்த காலத்திலும் தகுதியானவர் அல்ல.

பிரபாகரனின் மரணத்தை முன்பே அறிந்து அவர் கொல்லப்பட்டால் தான் வருந்துவேன் என்று சொன்ன கருணாநிதியே, அழிவை கணிக்கத்தெரியாத பிரபாகரன் விவேகமில்லதவரென்றால், அவர் முடிவை அவதானித்துவிட்டு கமுக்கமாக இருந்த நீங்கள் யார் ? பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை போரஸ் மன்னனைப்போல நடத்து என இலங்கைக்கு ஆலோசனை சொன்னவரே.. பிரபாகரனின் பனிரெண்டு வயது மகன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானபோதும், அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தப்படுவதாக செய்திவரும்போதும் வாயை திறக்க மறுப்பதேன் ?? போரஸ் மன்னனின் பெற்றோர் மற்றும் மகனைப்பற்றி வரலாற்றில் குறிப்பு எதுவும் கிடைக்காததாலா அல்லது சோனியாவின் அனுமதி கிடைக்காததாலா ??

இன்னும் ஐந்நூறு வருடங்களுக்குள் தமிழ் மொழி அழிந்துவிடும் என கணித்திருக்கிறது யுனெஸ்கோ.. கலைஞர் இன்னும் ஐம்பது வருடம் இருந்தால் அவ்வளவு காலம் தமிழுக்கு தேவைப்படாது என நினைக்கிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??

Follow

Get every new post delivered to your Inbox.

Join 98 other followers