மன்மோகன் – இனியும் நீங்கள் யோக்கியர் என அழைக்கப்பட வேண்டுமானால்… உங்கள் பெயரையே யோக்கியன் என மாற்றிக்கொண்டால்தான் உண்டு.
நவம்பர் 7, 2011 3 மறுமொழிகள்
இந்தியாவில் நம்பப்படும் அனேக “உண்மைகள்” வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலானவை. பிராமணர்கள் அறிவாளிகள் என்பதில் தொடங்கி ஸ்தீர்லோலர்களை கடவுள் என வழிபடுவதுவரை (இதற்கு விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன்) நமது நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளில் பல ஏதோ ஒரு செவிவழிச்செய்தியினை சார்ந்து உருவானவை.
இப்படியான ஒரு மாயத்தோற்றம்தான் மன்மோகன் மீதான யோக்கியர் என்ற அடையாளமும். அவரை உத்தமர் எனும் யாருக்கும் அவர் எதனால் உத்தமர் என அழைக்கப்படுகிறார் என்று தெரியாது. ஏனெனில் அவர் அயோக்கியர்களால் உத்தமர் என சான்றளிக்கப்பட்டு ஏராளமான அப்பாவிகளாலும் அப்படியே நம்பப்படுபவர். ராகுல் காந்தி போன்ற தலைவர்களாகட்டும், கலாம் போன்ற அறிவுஜீவிகளாகட்டும் அல்லது ரஜினி போன்ற ஆன்மீக அரசியல் பீஸாகட்டும் எல்லோருமே அவர்களது தகுதிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பூதாகரமாக்கப்பட்ட வர்ணனைகளால் வளர்த்துவிடப்படுபவர்கள்தான். ஆனால் மன்மோகன் மட்டும் மற்ற யாவரிடமிருந்தும் முற்றிலும் வேறுபடுபவர். காரணம் மற்றவர்கள் போலன்றி அவர் குறித்தான புகழுரைகளுக்கு நேரெதிரான இயல்புடைவர்.
அவர் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டபோது அவர் மீது படித்தவர் அதனால் அவர் யோக்கியராக இருப்பார் எனும் பிம்பம் இருந்தது. இந்த அடிப்படையே தவறானது. இந்தியாவின் மாபெரும் கொள்ளையர்களான அம்பானி முதல் லாலு பிரசாத் வரை எல்லோரும் படித்தவர்கள். மக்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்த சஞ்சய் காந்தி முதல் பாமரர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையைக்கூட தர மறுக்கும் காவல்துறை கடைநிலை அதிகாரிகள் வரை எல்லோரும் படித்தவர்களே. படிப்பு எனும் தகுதியால் குற்றத்தை இன்னும் “சிறப்பாக” செய்யும் வழக்கம்தான் இப்போது இங்கு இருக்கிறது. ஆகவே பேஜரைப்போல இதுவும் வழக்கொழிந்துபோன ஒரு கருவியே. ஆனால் அந்த கருவி ஆரம்பகாலங்களில் அவருக்கு பேருதவி செய்தது என்பதை மறுப்பதற்கில்லை.
ஊழலுக்கும் இந்தியாவுக்குமான பந்தம் எந்த பிரதமர் வந்தாலும் மாறப்போவதில்லை. வெள்ளைக்காரன் காலம்தொட்டே அரசு என்பது மக்களை அச்சுறுத்தவும் அவர்களிடம் கொள்ளையிடவும் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் மன்மோகன் ஏனைய பிரதமர்களிடம் இருந்து மாறுபட்டவர். மற்றவர்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க அதிபரின் காலை நக்குவார்கள் என்றால் மன்மோகன் அமெரிக்க அதிபரின் காலை நக்குவதற்காகவே பதவிக்கு வந்தவர். மற்றவர்களுக்கு அது ஒரு கடமை என்றால் மன்மோகனுக்கு அது ஒரு வழிபாடு. அமெரிக்க அடிமைத்தனம் என்பது அவர் ஒருவருக்கு மட்டும் பிடித்தமான விடயமாக இருந்தால் நாம் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஒருவேளை அவர் ஒபாமா வீட்டு நாயை குளிப்பாட்டுவதையோ அல்லது மிஷலுக்கு பேன் பார்ப்பதையோதான் வாழ்வின் பெரும் பேறு என சொல்வாரானால்கூட அவர்மீது பரிதாபப்பட்டு விட்டுத்தொலைக்கலாம்.
அவர் தன் எஜமான விசுவாசத்தை ஒரு தேசத்தை விற்பதன் வாயிலாக காட்டுவதுதான் ஆபத்தாக இருக்கிறது. தமிழீழப்படுகொலைகள் குறித்து பிரிட்டன் பிரதமர் வரை கருத்து சொல்லியாயிற்று, இந்த கல்லுளிமங்கன் இன்னும் அதுகுறித்து மூச்சு காட்டக்கூட இல்லை. ஆனால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானபோது ஜி8 நாடுகளின் கூட்டத்தில் “அமெரிக்காவை காப்பாற்றவேண்டியது உலகத்தின் கடமை” என் சொல்லி உலகத்திடம் தன் எஜமானனுக்காக பிச்சை கேட்டார். ஈரானிடமிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டுவரும் திட்டம் அமெரிக்காவின் லேசான முறைப்புக்கு பிறகு ஒட்டுமொத்தமாக ஊற்றி மூடப்பட்டது. அதில் முனைப்பு காட்டிய மணி சங்கர் அய்யர் அந்த துறையில் இருந்தே தூக்கியெறியப்பட்டார். ஆய் போகும்போதுகூட அமெரிக்க நலனுக்காக சிந்திக்க இவரைப்போல ஒரு மனிதன் அமெரிக்காவிகூட பிறக்க மாட்டான். இவர் சிந்தனை, லட்சியம் யாவும் அமெரிக்க அரசின் நலன் குறித்தே இருப்பதால் ஏனைய அமெரிக்க அடிமைகளைவிட இவர் பேராபத்தானவர்.
சென்ற ஆட்சிகாலத்தின் துவக்கத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. நாள் கணக்கில் நீடித்த அப்போராட்டத்தில், ஊழியர் சங்க நிர்வாகிகளை சந்திக்கவே மறுத்தார் இந்த பொருளாதாரப் புலி. போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் கால்நடையாக டெல்லி சென்று ஏறத்தாழ மூன்றுவாரம் தலைநகர வீதிகளில் தங்கி காத்திருந்தார்கள், நோக்கம் ஒன்றுதான், இந்த தேசத்தின் பிரதமரை சந்தித்து முறையிடுவது. கடைசிவரை மன்மோகன் மனமிரங்கவில்லை.
சட்டீஸ்கரில் மூன்றரை லட்சம் “இந்திய” மக்கள் அகதி முகாம்களில் வசிக்கிறார்கள், பத்தாயிரம் பெண்கள் ராணுவத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், ஐந்நூறு தமிழக மீனவர்கள் இலங்கை அரச ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், ஒரு மனநோயாளி தீவிரவாதியாக “அப்கிரேடு” செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார், எந்த ஒரு விவகாரம் குறித்தும் கருத்து சொல்லக்கூட மன்மோகன் முன்வந்ததில்லை. அரிதினும் அரிதாக அவர் கொடுக்கும் பத்திரிக்கை பேட்டியொன்றில் இந்திய விவசாயிகள் நிலங்களை முதலாளிகளிடம் ஒப்படைத்து வாழ்வில் முன்னேறும் வழியை பார்க்க வேண்டும் என்றார். இந்திய மக்களின் நல்வாழ்வு குறித்த அவரது இலவச அறிவுரைகூட முதலாளிமார்களில் நலனை உள்ளடக்கியத்தாக இருக்கிறதென்றால், காசுக்கு செய்யும் வேலை எந்த லட்சணத்தில் இருக்கும்?
மன்மோகனின் தனிப்பட்ட சுபாவத்தை மதிப்பிடுவது சற்று சிரம்மானது. அவர் முக்கியமான விவகாரங்கள் யாவற்றிலும் ஒரு கபடத்தனமான மௌனத்தை மட்டுமே பதிலாக்குகிறார். ஆனால் அவரது நண்பர்களை வைத்து அவரது பர்சனாலிட்டியை தெரிந்துகொள்வது கொஞ்சம் எளிதானதே. மான்டெக் சிங் அலுவாலியா என ஒரு உயிர் நண்பன் அவருக்குண்டு. அவரைப்போலவே உலக அளவில் பொருளாதார தீவிரவாதம் செய்துவிட்டு இந்தியா வந்தவர். அவர் பேட்டியொன்றில் சொல்கிறார், எனக்கு ஏழ்மையைப்பற்றி அதிகம் தெரியாது என்று. எழுபத்தேழு சதம் மக்கள் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக பணத்தில் வாழ்வை நடத்தும் பரம ஏழை தேசத்தின் திட்டக்குழு உறுப்பினருக்கு ஏழ்மையைப் பற்றி அதிகம் தெரியாது என்பது எத்தனை அசிங்கமான சூழ்நிலை. நக்கத்தெரியாத நாய்க்கு தட்டு நிறைய பால் வைத்த மாதிரி இவரை எதற்கு திட்டக்கமிசனின் துனைத்தலைவராக மன்மோகன் நியமனம் செய்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பீடு செய்யவேண்டும் .
எப்படி நாளொன்றுக்கு முப்பத்து இரண்டு ரூபாயில் ஒருவர் எப்படி வாழ இயலும் எனும் கேள்விக்கு மான்டெக் சிங்கின் பதில் “உங்கள் அருகாமையில் மாதம் மூவாயிரம், நான்காயிரம் ரூபாயில் வாழ்க்கை நடத்தும் ஐந்து பேர் கொண்ட குடும்பம் எதையும் நீங்கள் பார்த்ததில்லையா?”. அவரது பதில் ஆமாம் இதுவும் சரிதானோ எனும் என்னத்தை உருவாக்கும். இதை நிதானமாக பரிசீலிக்கையில் மான்டெக்கின் திமிரையும் திசைதிருப்பலையும் நாம் உணரஇயலும். உதாரணத்துக்கு, அரசின் வறுமைக்கோட்டுவரம்பு 32 ரூபாயில் பாலுக்கு என ஒதுக்கும் தொகை இரண்டு அல்லது அதற்கும் கீழான தொகை என நினைவு. ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒரு மனிதன் நாளொன்றுக்கு 300 மி.லி பால் அருந்த வேண்டும் என மருத்துவ அளவீடுகள் சொல்கின்றன. கால் லிட்டர் பால் ஏழு ரூபாய்க்கு விற்கிறது. இந்த அளவீட்டை எப்படி புரிந்துகொள்வது., திட்டக்கமிஷன் ஒரு அடிமுட்டாள்களின் கூடாரம் என்றா? அல்லது திட்டக்கமிஷனின் வாழ்வதற்கான அளவீடுதானேயன்றி ஆரோக்கியமான வாழ்வு என்பதற்கான அளவீடு அல்ல என்றா? நான் பார்த்தவரையில் மான்டெக்கின் வார்த்தைகள் சொல்வது இதைத்தான் “மாதமொன்றுக்கு நாலாயிரம் சம்பாதிக்கும் குடும்பமெல்லாம் உயிரோடதானே இருக்கு.. அப்புறமென்ன?”
இந்தியாவில் ஐந்து சதவிகிதம் மக்கள் விவசாயம் செய்தால் போதும். அறுபது சதவிகிதம் மக்கள் அத்தொழிலை செய்வது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என சொல்லியிருக்கிறார் சிகாகோ வர்தகப்பள்ளியின் பொருளாதாரப் பேராசிரியர் ரகுராம் ராஜன். இதை இங்கே குறிப்பிட ஒரு காரணமிருக்கிறது, இவர்தான் மன்மோகனின் பொருளாதார ஆலோசகர். அப்படியானால் மீதமிருக்கும் 55 சதவிகிதம் மக்கள் எங்கே போவார்கள் என அவரிடம் நாம் கேட்க முடியாது. அவர் கவலை, பெருநிறுவனங்கள் இந்திய விவசாயத்தை கைப்பற்றும்போது ஐந்து சதவிகித மக்களுக்கு பிச்சை போடலாம் , அறுபது சதம் மக்களுக்கும் பிச்சைபோட்டால் அவர்கள் லாபம் என்னாவது என்பதுதான்.
மேலே சொல்லப்பட்ட இரண்டு நபர்களும் வெறும் உதாரணங்களே. மன்மோகனின் சுற்றம் எங்கும் இப்படிப்பட்ட மரண வியாபாரிகளும் மரண தரகர்களுமே வியாப்பித்திருக்கிறார்கள். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அநாவசியமான சுமைகள் என கருதி அவர்களை ஆராய்ச்சி செய்துபார்க்க அனுப்பியது ஹிட்லர் அரசு. இவர்கள்கூட அந்த ஆராய்ச்சி சாலையின் ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களே. அந்த குரூரமான சிந்தனை மட்டும் மன்மோகனுக்கு உரிமையானது. வறுமைக்கோட்டு வரம்பில் நிர்ணயத்தில்கூட நம் கவனம் மான்டெக் மீது மட்டுமே இருக்கிறது. தேளைவிட்டுவிட்டு கொடுக்கை மட்டும் குறை சொல்வது மாதிரி…
சில மாதங்களுக்கு முன்னால் செய்த பயணமொன்றில், கிருட்டிணகிரி பேருந்து நிலையத்தில் ஒரு மூதாட்டியை பார்த்தேன். பனைவெல்லம் விற்றுக்கொண்டிருந்த அவர் என் முன்னிருக்கைப் பயணியிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு வெல்லக்கட்டிகள் பதினைந்து ரூபாய் விலை. மூன்று- இருபது ரூபாய் என்பது அவர் இறங்கி வரத்தயாராயிருக்கும் விலை, பயணி இரண்டை கையில் வாங்கிக்கொண்டு, பத்து ரூபாய்னா எடுத்துக்கிறேன் என்றார். உடனே அந்த பெண்மணி பனைவெல்லத்தை பயணியிடமிருந்து பிடுங்கிக்கொண்டு “இந்த பொருளுக்கு உன்னால ஏழு ரூவாகூட தரமுடியாதா” என உரக்க கேட்டபடி நகர்ந்தார். ஒரு சாதாரண பெண்மணிக்கு தான் விற்கும் பொருள் குறைத்து மதிப்பிடப்படுவது கோபப்படுத்துகிறது. அப்படியானால், தன் கட்டுப்பாட்டில் உள்ள பொருளை அடிமாட்டுவிலையைவிட மட்டமான விலைக்கு விற்பனை செய்பவன் நிச்சயம் அதை திருடியவனாகத்தானே இருக்க முடியும்? ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நாம் சட்டரீதியாகவோ தொழில்நுட்ப ரீதியகவோ ஆராய்ந்து மன்மோகனது யோக்யதையை புரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த சாதாரண தெருவோர வியாபாரியுடன் ஒப்பிட்டாலே போதும். தேசத்தின் மாபெரும் செல்வங்கள் கொள்ளைபோவதை அமைதியாக அனுமதித்துவிட்டு, மாட்டிக்கொண்டபிறகு எனக்கு தெரியாமலே அவையெல்லாம் நடந்துவிட்டது என கண்ணீர் வடிப்பது திருடனைவிட கேவலமானவன் செய்யும் செயல்.
மன்மோகனின் பெயரை காப்பாற்றுவது, அவர் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இல்லை என்பதும் சொத்து சேர்த்த்தற்கான ஆதாரம் இல்லை என்பதும்தான்.துரதிருஷ்டவசமாக நாம் பெரிதும் அச்சமடையவேண்டிய செய்தியும் இதுதான். கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் வாழிடங்களில் இருந்து விரட்டுவதையும், திவாலாகப்போகும் அணுமின்சார கம்பெனிகளை காப்பாற்ற சொந்த நாட்டு மக்களுக்குத் தெரியாமல் ஒப்பந்தம் போட்டு ஏய்ப்பதையும், சர்வதேச விவகாரங்களில், சொந்த நிலைப்பாடு ஏதுமின்றி அமெரிக்காவின் பக்கவாத்தியமாக இந்தியாவை மாற்றியதையும் தன் சொந்த லாபத்திற்காக அவர் செய்யவில்லை என்றால் இது அவரது சுபாவம் என்றல்லவா பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது?? தேவைக்காக குற்றமிழைப்பதைவிட ஆபத்தானது குற்றத்தை ரசித்து செய்வதும் அதனை நியாயம் என நம்புவதும். அந்த வகையில் கார்பரேட் ஊழல்களை ஆதரிக்கும் மன்மோகனும் பேராபத்தானவரே.
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மன்மோகன் தூக்கியெறியப்பட்டு அந்த இடத்தில் ராகுல் காந்தி உட்கார வைக்கப்படுவார். ஆகவே அவரை விமர்சனம் செய்வது அனாவசியம் என கருத இயலாது. ஒரு அரசு பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச நெறிகள் பலவற்றை மிக சாதாரணமாக தூக்கியெறிந்துவிட்டு ஆட்சி செய்யும் கலைக்கு மன்மோகனின் ஆட்சி ஒரு மாடல். பெரும்பான்மை மக்களைப் பற்றி அக்கறை சிறிதும் இல்லாமல் பத்து ஆண்டுகள் ஆளமுடியும் என அவர் நிரூபணம் செய்திருக்கிறார். இனி வரப்போகும் எல்லா ஆட்சியாளர்களும் அவரது பாதையில்தான் பயணிப்பார்கள். ஆக மன்மோகனை தெரிந்துகொள்வது என்பது நம் சமகால வாழ்வியல் துன்பங்களுக்கும் எதிர்கால அவலங்களுக்குமான காரணங்களை புரிந்துகொள்ள உதவும் வழிகாட்டி.. ஒருவேளை நாம் மன்மோகனை சரியாக புரிந்துகொண்டிருந்தாலும் அவரை மட்டும் அதிகாரத்தில் இருந்து நீக்கிவிட்டால் போதும் என எண்ணினால் அது அவரை உத்தமர் என நம்புவதைவிட மோசமான நிலைப்பாடாகிவிடும்.



