காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம்

(நவம்பர் 30, 2018 அன்று வினவில் வெளியான கட்டுரை)

சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் ஒரு தோழரோடு உரையாடுகையில் அவர் குறிப்பிட்டார் “இது செத்துக்கொண்டிருக்கும் நகரம், இங்கு செட்டில் ஆவது குறித்து சிந்திக்காதீர்கள்”. அவை ஏதோ விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகள் அல்ல. பழைய தஞ்சாவூரை வேட்டையாட பல்வேறு பெருந்திட்டங்கள் காத்திருக்கின்றன.

நிலக்கரி, மீத்தேன், பாறை எரிவாயு, பெட்ரோல் என பல அகழ்வுத் தொழில்கள் முற்றுகையிடவிருக்கின்றன. மன்னார்குடி – முத்துப்பேட்டைக்கு இடையே உள்ள எங்கள் கிராமம் எப்போது வேண்டுமானாலும் நிலக்கரி அகழ்வுப் பணிகளுக்கு கைப்பற்றப்படலாம் (பத்திரப்பதிவின் போது அந்த எச்சரிக்கை தரப்படுகிறது). மீத்தேன், ஷேல் கேஸ், பெட்ரோல் வெயிட்டிங் லிஸ்ட் ஊர்கள் தனி.

தஞ்சை டெல்டா பன்னெடுங்காலமாக வளமான பூமிதான். ஆனால் அங்கிருந்த பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வறுமையில்தான் இருந்தார்கள். உழைப்பதைத்தவிர வேறெதையும் அறியாமல் வாழ விதிக்கப்பட்டவர்கள் அவர்கள். முப்போகம் விளையும் காவிரி வடிநிலத்தில்தான் என் அப்பாவும் மற்றவர்களும் மார்கழி மாதத்தின் பசியை வெறும் முருங்கைக்கீரையைத் தின்று சமாளித்திருக்கிறார்கள். என் ஒன்றுவிட்ட சகோதரர்களும் சகோதரிகளும் பாதி இடிந்த வீட்டில் பல வருடகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு சன்ன அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை எந்த உறவுக்காரர்கள் வீட்டிலும் சாப்பிட்டதாக நினைவில்லை. ஐ.ஆர்.20 அரிசியே அப்போது அரசு வேலையில் இருப்போர் வீடுகளில்தான் இருக்கும். அதிகம் தண்ணீர் கலக்காத காபி டீ முதல் அழுது வடியாத குண்டு பல்புகள் வரையான அல்பமான தேவைகள்கூட கடந்த சில ஆண்டுகளில்தான் சாத்தியமானது.

தஞ்சாவூரின் வளமும் அந்த மக்களின் உழைப்பும் எல்லா காலத்திலும் மிக சொற்பமானவர்களை மட்டுமே வசதியோடு வைத்திருந்தது. சமீபகாலத்தில் பரவலாக கிடைத்திருக்கும் மிகச்சொற்ப வசதிகளும்கூட வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆட்களால் கிடைத்ததுதான். இன்னமும் விவசாயத்தை நம்பி வாழும் எங்கள் உறவுக்காரர்கள் வீடுகளில் தரித்திரம் மட்டும்தான் சவுகர்யமாக இருக்கிறது. வளைகுடா வேலைகளும் திருப்பூர் வேலைகளும் இல்லாவிட்டால் தஞ்சையில் பட்டினிச் சாவுகள்கூட தினசரி செய்தியாக இருந்திருக்கும். நேர்மையாக சொன்னால் விவசாயம் தஞ்சை மக்களை காப்பாற்றவில்லை மாறாக மக்கள்தான் வெளியே வேலைக்குப் போய் விவசாயத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கஜா புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் தொலைக்காட்சிகளில் பேசிய விவசாயிகளில் பலரும் ஆயிரக்கணக்கில் செலவிட்டு உரம் போட்டதாக சொல்லித்தான் அழுதார்கள். அவ்வப்போது பசுமை விகடன் வாசிக்கும் மத்தியதர வர்க்கம் விவசாயம் ஒரு இலாபகரமான தொழில் என்பதாக கற்பனை செய்துகொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அடுத்த வெள்ளாமைக்கான கடனை இப்போதே பலர் வாங்கியிருப்பார்கள். தஞ்சாவூரில் இத்தனை குடிசைகள் இருக்கும் செய்தி தஞ்சையில் வசிக்கும் பல நகரவாசிகளுக்கே இப்போதுதான் தெரிந்திருக்கும். உங்கள் கிராமங்களில் இருந்து பாலை கொண்டுவருகிறோம் எனும் பழைய ஆரோக்யா பால் விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும், அதே கிராமங்கள்தான் இப்போது யாரேனும் தன்னார்வலர்கள் பால் கொண்டு வருகிறார்களா என காத்திருக்கிறார்கள்.

புயல் அபாயம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் எதற்கு தென்னை விவசாயம் என அதி புத்திசாலித்தனமான கேள்விகளையும் ஆங்காங்கே கேட்க நேர்கிறது. எதை விதைப்பது என்பதை விவசாயிகள் தெரிவு செய்யும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. பட்டுக்கோட்டையை தாண்டி காவிரித் தண்ணீர் பாய்வதெல்லாம் அதிசயமாக நடக்கும் சம்பவம். அதனை நம்பி நெல்லோ கரும்போ நடுவது தற்கொலை முயற்சி. தண்ணீர் இல்லாவிட்டாலும் பிழைத்துக்கொள்ளும் பயிர்களை நோக்கி மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பெரும்பான்மை மாற்றுப் பயிர்களை அரசுதான் பரிந்துரை செய்கிறது (காவிரி நீரை பெற்றுத்தர முடியாத கையாலாகாத்தனத்தை மறைக்க). பாமாயில் உற்பத்திக்காக எண்ணைப் பனை விளைவிக்கச்சொல்லி அரசு ஊக்குவித்தது. நம்பி பலரும் நட்டார்கள், பிறகு அம்முயற்சி அப்படியே கைவிடப்பட்டது. நட்டவர்கள் நட்டாற்றில் நின்றார்கள் (மரங்களை அப்புறப்படுத்தி பிறகு அதே வயலில் சிறு பயிர்களை நட நீங்கள் மீண்டும் கணிசமாக செலவிட வேண்டியிருக்கும், பிறகு ஓரளவு விளைச்சலைக் காண நீங்கள் இரண்டொரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்).

வெளியே வேலை பார்த்து எதற்கு அவர்கள் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்?

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது (மேலும் சில காரணிகளும் இருக்கலாம்). நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்பு முதல் காரணம். அதுதான் அவர்களை நிலத்தை சும்மா போட்டுவைக்க விடாமல் தடுக்கிறது. திருப்பூரில் குடியேறிய என் நண்பரின் மனைவி, வீட்டில் சில காய்கறிச் செடிகளை விளைவித்தார். கத்திரியில் பூச்சி அடித்துவிட்டது. உடனே பூச்சி மருந்து வாங்கி வரச்சொல்லி நண்பரை நச்சரித்தார். இந்த நாலு கத்திரியில் என்ன கிடைக்குமென்று இப்படி மெனக்கெடுகிறீர்கள் எனக் கேட்டேன். அவருக்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது, அவரால் தன் பயிர்கள் நாசமாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதன் பலன்களுக்கும் செலவுக்கும் ஒத்துப்போகுமா என்பதைக்கூட அவர் கணக்கிட முயலவில்லை. அவருக்கு அவர் செடிகள் வீணாகிவிடக்கூடாது அவ்வளவே. மழை பொய்த்து, ஆறு வறண்ட காலங்களில் லாரியில் தண்ணீர் வாங்கி நெல்லுக்கு பாய்ச்சிய விவசாயிகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வெறுமனே இலாப நட்டக் கணக்குப் பார்த்தால் முக்கால்வாசி விவசாயிகள் பயிர்தொழிலைவிட்டு என்றைக்கோ ஓடியிருக்க வேண்டும்.

இந்த பிணைப்பை ஓரளவுக்கு அர்த்தமுடையதாக்க பல விவசாயிகள் வெளிநாடுகளில் கடுமையாக உழைத்து, அந்தப் பணத்தை தென்னை போன்ற நீண்டகால பணப்பயிர்களில் முதலீடு செய்கிறார்கள். பத்து வருடங்கள் பெரிய வருவாய் இருக்காது என்றாலும்கூட வேலை செய்ய முடியாமல் ஓய்ந்துபோய் ஊருக்கு வரும்போது தம் வயலில் (தோப்பில்) கொஞ்சம் உழைத்து ஓரளவுவேனும் சம்பாதிக்கலாம் எனும் நம்பிக்கையில் அப்படி செய்தவர்கள் ஏராளம். பணப்பயிர்கள் முதலில் பயிரிடுவோருக்கு ஓரளவு இலாபம் கொடுக்கும். அதை நம்பி தென்னை பயிரிட்டவர்கள் ஏராளம். பாதுகாப்பற்ற எதிர்காலம், வங்கி முதலீட்டில் இலாபமின்மை மற்றும் பெரிய முதலீடுகளை செய்ய இயலாமை ஆகிய களச்சூழல் வெளியே வேலைக்குப் போன விவசாயிகளையும் வயலை நோக்கி தள்ளுகிறது.

தென்னையும் உத்திரவாதமான முதலீடல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னால் விலை வீழ்ச்சி மற்றும் வண்டு தாக்குதல் ஆகியவை அவ்விவசாயிகளை மரணத்தை நோக்கி விரட்டியது (பலர் எண்ணிக்கொண்டிருப்பதைப் போல தென்னையை நட்டுவிட்டு வானத்தைப் பார்த்து காயை எண்ண முடியாது. உரம் போட, மருந்து தெளிக்கவெல்லாம் வருடா வருடம் ஆயிரக்கணக்கில் அழ வேண்டும்). ஆகவே பெரும் பணம் சம்பாதிக்காத டெல்டாவில் வயல் உள்ள ஒரு குடிமகன் தமது ஓய்வுகால முதலீட்டை தம் நிலத்தில்தான் போட்டாகவேண்டும். அதுமட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல். சூனியமாகவிருக்கும் பல இலட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை கொஞ்சம் முன்கூட்டியே வர வைத்திருக்கிறது இப்புயல். வீடு கட்டுவது என்பது சாதாரண மனிதனின் வாழ்நாள் கனவு. இப்போது வீடிழந்த மக்கள் பலருக்கும் அது வாழ்நாள் கனவாகவே இருக்கப்போகிறது. இழந்த தோப்புக்களும் படகுகளும் அவர்களுக்கு கடைசியாக இருந்த மூலதனம். அதனை கஜா நசுக்கி வீசியிருக்கிறது. அவர்கள் எல்லோரும் தம் வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். ஆனால் தினசரி வாழ்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் செலவு மிக்கதாக இருக்கிறது. பத்து நாள் ஆகியும் இன்றுவரை உணவுக்கு கையேந்துகிறது டெல்டா.

இரக்கம் சில காலம் மட்டுமே வாழக்கூடிய உணர்வு. டெல்டாவின் தேவையில் ஓரிரு சதவிகிதத்தைகூட அதனால் பூர்த்தி செய்ய இயலாது. பழைய தஞ்சாவூர் மாவட்டம் ஜீவித்திருக்க தேவையானவற்றின் பட்டியல் மிக பிரம்மாண்டமானது.♦ விளை பொருளுக்கான நியாயமான விலை (அரசு நெல் கொள்முதல் மையங்கள் சாக்குப் பைகள் இல்லை எனும் காரணத்தால் நெல்லை வாங்க மறுக்கும் கதைகள்கூட இங்கே சாதாரணம்)

♦ உத்திரவாதமான தண்ணீர் பாசனம் (காவிரி நீரை பெறுவது மட்டும் பிரச்சினை அல்ல. பெங்களூர் முதல் திருச்சி – தஞ்சை வரையுள்ள பல பெரு நகரங்களின் சாக்கடை சங்கமிக்கும் இடம் காவிரி. திருப்பூர் ஈரோடு சாயக்கழிவுகளின் புகலிடமும் காவிரிதான்),

♦ சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரிக்கின்றன, அவற்றை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் (அனேக கிராமங்களில் மக்களை தங்கவைக்க போதுமான அவசரகால இடங்கள்கூட இல்லை)

♦ இனி அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும் புயல்களை எதிர்கொள்ளத்தக்க கான்கிரீட் வீடுகள், மக்களின் பெருமளவு பணத்தை விழுங்கும் கல்வியை இலவசமாக்குதல் (புயலால் பாதிக்கப்பட்ட பலரும் எப்படிப் பிள்ளையை படிக்க வைப்பேன் என்றே அழுதார்கள். கடந்த கால் நூற்றாண்டில் தஞ்சை பகுதியில் ஓரளவு வசதியான வாழ்வை பெற்றவர்கள் படித்து வேலைக்கு சென்றவர் மட்டும்தான். ஆகவே எப்படியாவது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் எனும் பெருவிருப்பம் மாவட்டமெங்கும் மக்களிடையே வியாபித்திருக்கிறது. கல்வியும் மருத்துவமும்தான் மக்களின் பெருமளவு சேமிப்பைத் தின்கின்றன)

♦ விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்திரவாதம் (அடுத்த சில மாதங்களுக்கு விவசாய வேலை என்பது இங்கே சாத்தியம் இல்லை).

♦ மக்கள் மீதும் சூழல் மீதும் கொஞ்சமும் இரக்கம் காட்டாத பெருந்திட்டங்களை நிராகரிக்கும் உரிமை.

இவையெல்லாம் நம்மில் பலருக்கு நகைப்புக்குரிய கோரிக்கையாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை முழுமையாக செய்யாவிட்டால் இந்த மண் சோமாலியாவைப்போல மாறுவதைத் தடுக்கவே முடியாது. மக்களை ஒருவேளை சோற்றுக்கு சாலையில் ஓடவிட்டதில் மேற்சொன்ன எல்லாவற்றுக்கும் ஓரளவு பங்கிருக்கிறது. அந்த மண்ணின் மீது அக்கறையிருப்பவர்கள் இவை எல்லாவற்றுக்காவும் பேசியாக வேண்டும். இல்லாவிட்டால் நாம் நிரந்தர நிவாரண முகாம்களை அமைத்து கொடையாளர்களை தேடி அலைய வேண்டியிருக்கும்.

நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

(வினவில் நவம்பர் 13 ல் வெளியான கட்டுரை)

டவுள் கையேந்தி நிற்கும் அவலம் கண்டதுண்டா நீங்கள்? அது தமிழ்நாட்டில் தினசரி காணக்கிடைக்கும் காட்சி. கடவுளுக்கும் மேலான எங்களை கடவுளாகவே மக்கள் கருதி வந்தார்கள். கோயில் ராஜாக்கள் வசம் இருந்தது. ராஜாக்களோ எங்கள் வசம் இருந்தார்கள். எங்கள் வீடுகள் வெள்ளம் அண்டாத மேடான நிலத்தில் இருந்தது. வயலில் கால் வைக்காமலேயே எங்கள் வெள்ளாமை வீடு வந்து சேர்ந்தது. ”சாப்பிடுறதுதான் தயிர் சாதம், மோதிப்பார்த்தா உயிர்சேதம்” என ஸ்டேட்டஸ் போடவேண்டிய நிலை எங்களுக்கு அன்று இல்லை. காரணம் ஊரில் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது.

ஹிந்து ராஜாக்கள் காலத்தில் வாழ்ந்தது போலவே முகலாயர்கள் காலத்திலும் சௌபாக்கியத்துக்கு குறைவின்றியே வாழ்ந்துவந்தோம். வெள்ளைக்காரன் காலத்திலும் அசௌகர்யம் என்று ஒன்று இல்லை. சாதி ஒழிப்பு, சூத்திரர்களுக்கு கல்வி போன்ற சில அனாச்சாரங்கள் அப்போது இருந்தன என்றாலும் அதிகாரம் எங்களிடம் இருந்தது. உலகமே பயந்த ஹிட்லருக்கு நாங்கள் பயப்படவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஜெர்மன் மொழி கற்ற வீர சமூகம் எங்களுடையது.

ஆனால் இன்று அவை பழங்கதை ஆகிவிட்டன. முதல்வரைக் காட்டிலும் அதிகாரம் கொண்ட தலைமைச் செயலாளர் எங்களவர். ஆனாலும் மக்களிடம் மரியாதை இல்லை. எல்லா பெரிய நிறுவனங்களின் தலைமைப் பீடங்களும் எங்கள் வசம்தான். ஆனாலும் எங்கள் குலக் கொழுந்துகளுக்கு மீடியா பெண்களை வேசி என அழைக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. மீடியா ஓனர்கள் எங்களை பாதகமலங்களில் வீழ்ந்துகிடக்கும் சூழல் இருந்தாலும் எங்கள் பிள்ளை பாண்டேவால்கூட எங்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை. வியாபாரத்துக்காக பா.ஜ.க.வை நோண்டி நோண்டி கேள்வி கேட்கவேண்டிய தலைவிதியல்லவா அவனுக்கும்?

ஆயிரம்தான் கூமுட்டையாக இருந்தாலும் சுப்ரமணியசாமியை கோமாளிபோல பார்ப்பது நியாயமா? குருமூர்த்தியும் எச்.ராஜாவும் தமது குலவழக்கப்படி ஒரு வதந்தியைக்கூட ட்விட்டர் வாயிலாக பரப்ப முடியாத அளவுக்கு மக்கள் அவர்களை அம்பலப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட கொடியவர்களின் கூடாரமாக இந்த மாநிலம் இருக்கிறது. மோடியையே அதிகாரம் செய்யவல்ல ஜாதி எங்களுடையது. ஆனாலும் ஷர்மா சாஸ்திரிகளால் ”நம்ம ஜாதி பிள்ளைகள் ஸ்கூல்ல மத்த சாதி கொழந்தைகளோட சாப்பாட்டுல கைவச்சு சாப்பிடக்கூடாது” ன்னு நேரடியாக சொல்ல முடியவில்லை.. அது சுகாதாரம் இல்ல, அதனால் பல விளைவுகள் ஏற்படும்னு மையமாக புலம்ப வேண்டியிருக்கு. எங்கள் தர்மத்தைக்கூட குசுவைப்போல நசுக்கி விடவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் சொல்லி புலம்பி ஸ்டேட்டசோ வீடியோவோ போட்டால் 28 லைக் வருவதற்கும் 750 ஹாஹா ஸ்மைலிகள் அசுர பாணங்களாக வந்து எங்கள் நெஞ்சைத் தைக்கிறதே…

கோட்சே.

எங்கள் பிள்ளை கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது. சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா? மஹாராஜாக்களை காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது. இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜாநிர்மலா சீதாராமன்… இந்த பெயர் வரிசையை படிக்கும்போது கெடா குமாரு, டுமீல்குப்பம் வவ்வாலு எனும் சினிமா டயலாக் எனக்கே நினைவு வந்து தொலைக்கிறது. பிறகு ஊர்ஜனம் மட்டும் சிரிக்காமல் இருக்குமா? இந்த எழவெடுத்த இன்டர்நெட் ஒருகாலத்தில் எங்கள் அக்ரஹார திண்ணை போல எத்தனை ரம்மியமாக இருந்தது. இப்போது பீஃப் கடைக்கு போவதுபோல நாங்கள் அங்கு ரகசியமாகத்தான் போக வேண்டியிருக்கிறது.

ஆசிட் அடிப்பது கஞ்சா கேஸ் போடுவது என பல வீர வரலாறு இருந்தாலும் எங்கள் குலமங்கை ஜெயாவை வைத்தே சங்கராச்சாரியை கைது செய்ய வைத்துவிட்டதே இந்த சூத்திர கும்பல். சரி நிம்மியை அடுத்த ஜெ.வாக மாற்றிவிட்டால் எல்லாம் ஷேமமாக நடக்கும் என நாங்கள் ஆறுதல்படும் வேளையில், அந்த தைரிய லட்சுமியை கண்டாலே தமிழக இளைஞர்கள் கூட்டம் ஓணானைக் கண்ட 80-ஸ் கிட்ஸாக மாறி விர்ச்சுவல் கல்லெடுத்து அடிக்கின்றன. போகட்டும் ஜனநாயக மேக்கப் போட்ட பத்ரியை தலைவராக்கலாம் என்றால் அவருக்கும் அதே ஓணான் டிரீட்மெண்ட் கிடைத்துவிடுமோ என அடிவயிறு கலங்குகிறது.

அதுமட்டும் இல்லாமல் இருக்கும் மிச்சம் மீதியெல்லாம் பொறுக்கியாகவும் கூமுட்டையாகவும் இருக்கிறது. இதில் இருக்கும் டெமாக்ரடிக் மூஞ்சியையும் காவு கொடுக்க பயமாயிருக்கிறது. மோடியின் ராஜகுரு குருமூர்த்தி அரும்பாடுபட்டு அறிமுகம் செய்த தீபா விளங்கவில்லை. ஓ.பி.எஸ்.சை வளர்க்கிறேன் என கிளம்பினார் அதனால் சசிகலா மீதிருந்த ஜனங்களின் கோபம் குறைந்து போனதுதான் மிச்சம். ரஜினியை உசுப்பினார், அன்றிலிருந்து அது வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட மெண்டல்போல உளறிவைக்கிறது. இதையெல்லாம் பார்த்த எங்கள் வீட்டு மாமியே, இந்த தரித்திரம் பிடித்தவன் மூஞ்சியில் முழிச்சிட்டு போனா பால் பாக்கெட்கூட கிடைக்கிறது இல்லை என புலம்புகிறாள்.

இத்தனை காலம் நாத்திகம் பேசி மாட்டுக்கறி தின்றவராயிற்றே எனும் நன்றியில்லாமல் பிராமண வீட்டுப் பிள்ளை கமலையும் கழுவி ஊற்றுகிறார்கள், அய்யங்கார் வீட்டு மருமகன் ரஜினியையும் பார்க்குமிடமெல்லாம் துப்புகிறார்கள். இவனுங்களை எப்படி கரெட்க் பண்றதுன்னே தெரியலையே என ஆர்யா போல புலம்பியே எங்கள் மாமாக்கள் பலர் உலக வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டார்கள். ஒரு காலத்தில் எங்கள் வீட்டு நாயாக இருந்த மக்களின் பிள்ளைகள் எதிரியின் வேட்டை நாயாக மாறி எங்களையே கடிக்க வருகின்றன. ஏதோ ஆதிக்க சாதிச்சங்கங்களும் கிருஷ்ணசாமி வகையறாக்களும் (பேரை மாத்தி வச்சுக்கோடாம்பி… அவா அவாளுக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கோல்யோ) எங்களை காலைக் கழுவி சேவகம் செய்வதால் எங்கள் மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஸ்தவ சூத்திரன் விஜய் படத்தை காலி செய்ய எங்கள் பிராமண தளபதி ராஜாவை அனுப்பினால் தமிழக அசுர கும்பல் அந்த மெர்சல் படத்தை வெறித்தனமாக ஓடவைக்கிறது. அதன் பிறகு கோடம்பாக்க டைரக்டர்கள் எல்லோரும் பா.ஜ.க.வை திட்டி காட்சி அமைப்பதற்கென்றே தனி டிஸ்கஷன் வைத்தார்கள் என கேள்விப்பட்டேன். ஏதோ வருமான வரித்துறை எங்கள் வசம் இருப்பதால் தப்பித்தோம். அடுத்த விஜய் படத்தை ஒழிக்க நாங்கள் ஜெயமோகன் எனும் சூத்திரனைத்தான் அனுப்ப வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் எங்கள் காலடியில் கிடந்தது சினிமாத்துறை. மணி சார், பாலச்சந்தர் சார் என பயபக்தியோடு ஒலித்த குரல்களை இன்று கேட்க முடியவில்லை. அரவிந்த் சாமி, மாதவன் என வெண்ணிற சாக்லேட் பாய்களை இன்று சீந்த நாதியில்லை. விஜய் சேதுபதி போன்ற கருப்பர் கூட்டமோ கால்ஷீட் இல்லாமல் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறது.

சினிமா மட்டுமா எங்களை விட்டு தொலைந்தது? கஷ்டப்பட்டு மந்திரம் ஓதி மஹாராஜாக்களுக்கு சோப்பு போட்டு சம்பாதித்த சதுர்வேதி மங்கலங்கள் எம்மிடம் இருந்தன. அவற்றை எல்லாம் நோகாமல் – உழைத்துப் பிழைத்த மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தர்மம் செய்தோம். இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள். ஏற்கனவே காதல் எனும் கருமத்தால் பல பெண்களை எங்கள் சமூகம் இழந்துகொண்டிருக்கிறது.

ஸ்கூல் வாத்தியார், தாசில்தார், பேங்க் மேனேஜர் என நாங்கள் கட்டியாண்ட துறைகள் எல்லாம் கையைவிட்டுப் போய்விட்டது. ஆடிட்டர், நீதிபதி, கவர்னர் என சில டிபார்ட்மெண்ட்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் அங்கேயும் சில கறுப்பு உருவங்கள் வந்து எங்களோடு ஈஷிக்கொண்டு நிற்கின்றன. மயிலாப்பூர் மாம்பலமாவது மிச்சமானதா என்றால் அதுவும் இல்லை. அயோத்தியா மண்டப சொற்பொழிவானாலும் தெற்கு மாடவீதி எஸ்.வி.சேகர் மீட்டிங் ஆனாலும் எங்கள் இனத்தில் இருந்து வெறும் கிழடு கட்டைகள்தான் வருகின்றன. சுகர் பேஷண்ட்டுக்களை வைத்து எங்கிருந்து இன்னொரு குருஷேத்ரப் போரை நடத்துவது? அப்படி போரை நடத்தினாலும் அதை முன்னின்று நடத்த வேண்டிய சின்ன சங்கராச்சாரி மல்லாக்கப் படுத்தால் எழவே மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது.

போகட்டும், இன்றைய தமிழகம் வேண்டுமானால் எங்களை நக்கல் செய்யலாம். ஆனாலும் எங்களை ஆண்டவன் அப்படி அம்போவென விட்டுவிடமாட்டான். இன்னமும் கோயில்கள் எங்கள் வசம்தான் இருக்கின்றன. அங்கேயெல்லாம் ஷாகா நடத்தி வேண்டிய அளவுக்கு முட்டாள்களையும் பொறுக்கிகளையும் ரவுடிகளையும் உருவாக்குவோம். எங்கள் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டன. மேற்கத்திய சாவர்க்கர் ட்ரம்ப் அவர்கள் அதிபராக இருக்கிறார். ஆகவே அங்கிருந்து எங்கள் ராஜாங்கத்தை நடத்துவோம். மோடி என்றில்லை யார் இந்தியாவின் பிரதமரானாலும் அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் காணாமல் போகும் அல்லது தனியாருக்கு கைமாற்றிப்போகும். இலவசக் கல்வி ஒழிக்கப்பட்டு நாடெங்கும் படிப்பறிவற்ற முட்டாள்கள் இருந்தால் வாட்சப் வீடியோ வழியே வந்து நாங்கள் ராமராஜ்யம் அமைப்போம். பக்தியும் முட்டாள்த்தனமும் எங்களைக் காப்பாற்றும். வாட்சப் ஃபார்வேர்டு தகவல்களை நம்பும் மிடில்கிளாஸ் உள்ளவரை பிராமணீயம் எந்த சவாலையும் தாங்கும்.

ஒரு ஏழை பிராமணனின் குரல், உண்மை ஹிந்து எனில் அதிகம் பகிரவும்.

ஜெய்ஹிந்த்.

மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது?

(வினவு தளத்திற்காக எழுதப்பட்டு அக்டோபர் 26, 2018 அன்று வெளியான கட்டுரை)

நேற்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அறையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ தொடர்பாக ஒரு விவாதம் ஓடிற்று.

“அந்தப் பொண்ணு ஒரு ஐட்டமா இருக்கும்” என ஆரூடம் சொல்கிறார் ஒருவர்.

“அது எப்படி குழந்தை பிறக்கும் வரை ஒரு குடும்பம் விட்டு வைக்கும்?” என ஐயமெழுப்புகிறார் இன்னொருவர்.

“இதெல்லாம் பிளான் பண்ணி பிளாக்மெயில் பண்ற குடும்பம் போலருக்கு” என்கிறது இன்னொரு குரல்.

“கூப்பிட்டது அமைச்சர்ங்கறதால போயிருப்பா” என்றொரு கருத்தும் வந்தது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அதில் அவர் தவறு என்ன இருக்கிறது எனும் சிந்தனையே அவர்களிடம் மேலோங்கி நின்றது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

நேற்று  நடிகை அமலா பால் தன்னிடம் இயக்குனர் சுசி.கணேசன் அநாகரீகமாக நடந்துகொண்டார் என குற்றம் சாட்டுகிறார். உடனே முகநூலில் இப்படி ஒரு எதிர்வினை வருகிறது “உன் புருசனோட ஒழுங்கா வாழ வக்கில்லை! நீ பத்தினின்னு நிரூபிச்சுட்டு அடுத்தவன் மேல கம்ப்ளெயிண்ட் பண்ணு.” என்பது பெரும்பான்மை தரப்பின் பொது விதியாக இருக்கிறது.

இதே கண்ணோட்டம்தான் சின்மயி விவகாரத்திலும் காணக்கிடைக்கின்றது. பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை, தாம்ப்ராஸ் நாராயணன் அய்யங்கார் தேவடியாள் என வர்ணித்ததைவிட கேவலமாக இருந்தது பாண்டேவின் கேள்விகள்.

பொதுவாக பாண்டேவை கழுவி ஊற்றுவதற்க்கு பேரார்வத்தோடு காத்திருக்கும் முகநூலில் இது விமர்சிக்கப்படவேயில்லை. சின்மயியின் முந்தைய நடவடிக்கைகள் வாயிலாக அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது எனும் வாதம் அத்தனை நியாயமானது அல்ல. காரணம் வைரமுத்துவின் வரலாறும் மெச்சத்தக்கது இல்லை.

நாம் எல்லா சமயங்களிலும் நம் வெறுப்பை ஒரே அளவில் வெளிப்படுத்துவதில்லை. இந்துத்துவ பொறுக்கிகள் வைரமுத்துவை இலக்கு வைத்து தாக்கியபோது நாம் அவரது வரலாற்றை ஆராயவில்லை. இன்னும் பெரிய உதாரணம் வேண்டுமானால், சசிகலா தினகரன் மீதான தமிழக மக்களின் வெறுப்பு எத்தகையது? ஆனாலும் அவர்களை பாஜக ஒழிக்க முனைந்த போது இந்த கும்பல் (சசிகலா) இப்படியாவது நாசமாகட்டும் என அனேகர் கருதவில்லை. மாறாக அதிலும் பாஜகவின் மீதான எதிர் நிலைப்பாடே வலுவாக இருந்தது. ஆக இங்கே நம்மை (அதாவது பெரும்பான்மை சமூக ஊடக கருத்தாளர்கள்) சின்மயிக்கு எதிராக நிறுத்தி வைரமுத்துவுக்கு மவுன ஆதரவை வழங்க வைக்கும் காரணி எது?

ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நமது பெரும்பாலான நடத்தைகளும் நடவடிக்கைகளும் தானியங்கி செயல்பாடுகள் (ஆட்டோமேட்டிக்). அதில் நமது சமூக கற்றல் பெருமளவு தாக்கம் செலுத்தும். கம்யூனிசம் மற்றும் பெரியாரிசத்தை ஏற்றுக்கொண்டவர்களிடத்திலும் பகுதியளவுக்கான ஆணாதிக்க மனோபாவம் இருக்கும். அதனை ஒப்புக்கொள்ளவும் பிறகு சீர்திருத்திக்கொள்ளவும் தயாராய் இருக்கிறோமா என்பதை வைத்தே ஒரு கம்யூனிஸ்ட்டையும் பெரியாரிஸ்ட்டையும் மதிப்பிட வேண்டும்.

சின்மயி விவகாரத்தில் பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை.

ஆகவே மீ டூ விவகாரத்தில், குறிப்பாக சின்மயி தொடர்பான நமது (சமூக வலைதளங்களில் இயங்கும் இடதுசாரி மற்றும் திராவிட சார்புடையவர்கள்) எதிர்வினைகளை இந்த கோணத்தில் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சின்மயி, கவிஞர் வைரமுத்துவோடு பணியாற்றிய தருணங்களில் நிகழ்ந்த பாலியல் தாக்குதல் குறித்து ஒரு ட்வீட் போடுகிறார். வழக்கமாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அது நிகழ்ந்திருக்க சாத்தியம் இருக்கிறதா என ஆராய்வோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை குழு நடனப் பெண் ஒருவர் அபிஷேக் பச்சன் தன்னை மணந்துகொண்டதாக குற்றம் சாட்டினார். அவர் விவரித்த சம்பவம் யதார்த்தத்துக்கு முற்றிலும் பொருந்தாததாக இருந்தது (பார்ட்டியில் சந்தித்தார், எனக்கு பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார் என சொன்னதாக நினைவு). அப்படியான ஒரு பிறழ் நடவடிக்கையாக சின்மயியின் குற்றச்சாட்டு இல்லை.

இது நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது. மேலும் சினிமாத்துறை மீதான பொதுவான அபிப்ராயம், இதெல்லாம் அங்கு சாதாரண நிகழ்வு என்பதுதான்.

ஏ.ஆர்.ரஹமானின் சகோதரி ரைஹானா வைரமுத்துவின் பாலியல் சீண்டல்கள் சினிமாத்துறையின் வெளிப்படையான ரகசியம் என்கிறார். வைரமுத்துவிடம் இதே வடிவத்திலான பாலியல் தாக்குதல்களை எதிர்கொண்டதாக ஒரு பெண் வெளிப்படையாக தன் பெயரைக் குறிப்பிட்டே குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த தொடர் கருத்துக்களை வைத்துப் பார்க்கையில் வைரமுத்து இதனை செய்திருக்க முகாந்திரம் இருக்கிறது என நாம் சந்தேகித்திருக்க வேண்டும். ஆனாலும் நாம் சின்மயி எனும் பாடகியிடம் குற்றம் கண்டுபிடிப்பது எனும் புள்ளியில் இருந்து நகரவில்லை.

எலைட் ஃபெமினிசம், பார்ப்பன பெண் ஆகிய காரணங்கள் மட்டுமே வைரமுத்துவை நிரபராதி என நம்ப போதுமானவையா? அல்லது நாம் வெறுக்கத்தக்க ஒரு வரலாற்றைக்கொண்ட பெண்மணிக்கு இப்படி ஒரு பாலியல் சீண்டல் நடந்திருந்தால்தான் என்ன எனும் பழியுணர்ச்சியா?

இதன் பலனாக நாம் இரண்டு வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம். ஒரு போலியான தெய்வீக இமேஜை உருவாக்கி வைத்துக்கொண்டு இந்த கர்னாடக சங்கீத கும்பல் ஆடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. பார்ப்பனீயத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் முக்கியமானது இந்த இந்த கர்னாடக சங்கீதம்.

பார்ப்பனரல்லாத சாதிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு பார்ப்பன குரு கிடைத்துவிட்டால் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது. பார்ப்பனர்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளமாக கருதுவதும் கர்னாடக சங்கீதத்தைத்தான். ஆகவே இந்த “குரு”க்கள் தொடும் எல்லைக்குள் சிறார்களும் இளையோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.

மீ டூ நகர்வுகளில் சின்மயியின் பாத்திரம் இந்த தெய்வீக இமேஜை உடைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம். சின்மயி மீதான வெறுப்பிலும் “நீ என்ன பத்தினியா” எனும் இந்தியாவின் பிரத்தியோக சிந்தனையின் விளைவாக நாம் அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். ஒரு குறைந்தபட்ச விளக்கம்கூட கொடுக்க அவசியமில்லாமல் அந்த பார்ப்பன கும்பல் தப்பித்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் அம்பலமான கதைகளை பேசுபொருளாக்கியிருந்தால் இன்னும் அதிகமான பெண்கள் அம்பலத்துக்கு வராத பல “குரு”க்களின் உண்மை முகத்தை தோலுரித்திருக்கக்கூடும். அவர்களிடம் சிக்குண்டிருப்பது பெரும்பாலும் பார்ப்பன குழந்தைகள்தான், அவர்களைக் காக்க வேண்டியதும் நம் பொறுப்பு இல்லையா?

பெரியாரது பெண்ணுரிமை செயல்பாடுகளின் முதல் பலனாளிகள் பார்ப்பன பெண்கள்தான். அதற்காக அவர் அச்செயலை நிறுத்திக்கொண்டாரா என்ன!

சின்மயியை மட்டும் இலக்கு வைக்கும் நமது பொது எதிர்வினையின் இன்னொரு கோணம்தான் என்னை பெரிதும் அச்சமூட்டுகிறது. சிறார்களுடன் பணியாற்றும் எந்த ஒரு ஆற்றுப்படுத்துனரிடமும் கேளுங்கள். அவர்களிடம் சில பாலியல் வன்முறை கதைகள் கிடைக்கும்.

மகளிடம் வல்லுறவு கொள்ளும் அப்பா அதனைக் கண்டும் கண்டிக்க முடியாத அம்மா, அப்பாவோடு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனும் மாணவி தினசரி அதே அப்பாவோடு பள்ளிக்கு வருகிறார், பாலுறவு என்றால் என்னவென்று அறிய இயலாத வயதில் அதற்கு அறிமுகமாகி பிறகு அதனை இயல்பானதாக கருதி ரசிக்கும் சிறுமிகள், பாலியல் வன்முறையை தமது தவறாக கருதி குற்ற உணர்வில் தன்னைத்தானே சபித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் என பட்டியலில் அடங்காத கேஸ் ஹிஸ்டரிகள் எங்கள் வட்டாரத்தில் கிடைக்கின்றன. பொது வெளியில் புழங்கும் முன்முடிவுகளும் எள்ளலும் இப்படியான குழந்தைகளிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிப்பதே இல்லை.

சின்மயிக்கும் நமக்கும் (சமூக ஊடக நண்பர்கள்) இருக்கும் தகராறு வெளியில் இருக்கும் பலருக்கும் தெரியாது. அப்படியான சூழலில் இத்தகைய விமர்சனங்களைக் படிக்கின்ற மற்றும் பாண்டே வகையறா (அந்த பிரஸ் மீட் நிருபர்களும்) ஆட்களின் வல்லுறவுக்கு நிகரான கேள்விகளும் இளையோர் மற்றும் மாணவர்களிடையே என்ன செய்தியை கொண்டுசெல்லும்?

இப்படி பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள் / மாணவர்கள் எண்ணிக்கை நாம் நினைத்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக அதிகம். இப்படியான சமூக எதிர்வினைகள் அவர்களை மேலும் மேலும் மனரீதியாக முடமாக்கலாம். அது பாலியல் குற்றவாளிகளை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கருவுற்றிருப்பதை பிரசவம் வரை அறியாத பெற்றோர்கள் இருப்பதை சமீபத்தில் வந்த செய்தியொன்று சுட்டிக்காட்டுகின்றது. ஆசிரியர்கள் பேஸ்புக் பொதுக்கருத்தினையே வெளிப்படுத்துகிறார்கள். இதன் அபாயகரமான பின்விளைவுகளை யார் எதிர்கொள்வது?

வயாக்ரா புழக்கத்துக்குப் பிறகு வசதியான/ செல்வாக்கான கிழவர்கள் இப்படியான சீண்டல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்கிறார் உளவியலாளரான நண்பர் ஒருவர் (ஆளை மடக்கினால் போதும் எழுச்சிக்கு வயாக்ரா இருக்கிறது எனும் நம்பிக்கையில்).

ஊடகவியலாளர் சுகிதா தனக்கு தரப்பட வேண்டிய நீதிமன்ற ஆணையொன்றைப் பெற ஓராண்டு காத்திருந்ததாக சொல்கிறார். தொலைந்துபோன தமது ஆவணங்களைப் பற்றி புகார் கொடுத்து சி.எஸ்.ஆர் பெற ஒரு வாரம் அலைவதாக பதிவிடுகிறார். பிரபலமான ஒரு ஊடவியலாளரின் கதியே இப்படி இருக்கிறது. காதல் ஜோடிகளை அடாவடியாக பிரித்து பெண்ணை அப்பாவோடு கட்டாயப்படுத்தி அனுப்புகின்ற நீதிமன்றங்கள் இங்கிருக்கின்றன. இப்படி மிகக்கொடூரமான அமைப்புக்களை வைத்திருக்கும் நாம் சமூக ஊடகங்களையும் வழமையான போலீஸ் ஸ்டேஷன் போல மாற்றி எதை சாதிக்கப்போகிறோம்?

மீ டூ தவறாக பயன்படுத்தப்படலாமா என கேட்டால் அதற்கு வாய்ப்பு இருக்கின்றதுதான். அப்படியான வாய்ப்புக்கள் எல்லா குற்றங்களிலும் இருக்கின்றன. அதற்காக புகார் கொடுக்கும் எல்லோரையும் குற்றவாளிகள் போல நடத்த முடியாது.

பாலியல் சீண்டல் செய்யும் ஆட்கள் அடிப்படையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் தம்மிலும் மிக பலவீனமான ஆட்களை தெரிவு செய்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை நேர்மையோடும் கரிசனத்தோடும் அனுகுவதன் வாயிலாக நாம் எதிர்காலத்தில் பல பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். ஒப்பீட்டளவில் அதன் எதிர்மறை விளைவுகள் குறைவாகவே இருக்கும்.

எனக்கும் சின்மயியை ஆதரிக்க வேண்டும் எனும் விருப்பம் இல்லை. ஆனால் சின்மயியை எதிர்க்கவேண்டும் எனும் அல்ப நோக்கத்திற்காக ஒரு பெரும் சமூக விரோத செயலை இலகுவாக கடந்துபோக இயலாது. மீ டூ போன்ற இயக்கங்களை இன்னும் செம்மைப்படுத்தவும் இன்னும் பரவலாக கொண்டு செல்லவும் நாம் முயற்சிக்கலாம்.

அதனை பகடி செய்யவோ அல்லது அவளுக்கு நல்லா வேணும் என சாபமிடவோ நான் தயாரில்லை. இவ்விவகாரத்தில் எப்படி எதிர்வினையாற்றுவது என குழப்பத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் நான் இதையே பரிந்துரைக்கிறேன்.

இணைய வணிகம் – மெய்நிகர் போதை

மெய்நிகர் உலகம் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களில் சமூக ஊடகங்களுக்கு

வில்லவன்
வில்லவன்

அடுத்து முக்கியமானது இணைய வணிகம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்ட பேரங்காடிகள் பல இப்போது கலையிழந்து நிற்கின்றன. அப்படியான புதிய பேரங்காடிகள் இப்போது அதே வேகத்தில் திறக்கப்படுவதில்லை. ஆன்லைன் மருந்துக்கடைகள் தங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பதாக மருந்துக்கடை உரிமையாளர்கள் புலம்புகிறார்கள். பிரதான வீதிகளில் மட்டுமல்ல உள்ளடங்கிய தெருக்களிலும் இடுப்புயர பைகளை சுமந்தபடி கொரியர் ஊழியர்கள் பயணிப்பதை அடிக்கடி காண முடிகிறது.

நான் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள இளைஞர்கள் திடீரென ஒரு மாலையில் பரபரப்பானார்கள். “”ஏய் ஃபலூடா 9 ரூபாய், சீக்கிரம் ஆர்டர் பண்ணு” என தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அப்போது உத்தேசமாக 10 பேரேனும் அலைபேசியை எடுக்க ஓடியிருப்பார்கள். பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அமேசான் டெலிவரி ஊழியர் அரைமணி நேரம் நின்று வரிசையாக பொருட்களை டெலிவரி கொடுத்தவண்ணமிருக்கிறார் (மருத்துவமனை ஊழியர்கள் அந்த முகவரியில் வாங்கிக்கொள்கிறார்கள்). அவர் பையில் இருப்பதில் பாதி அங்கேயே காலியாகிறது. அமேசான்-இந்தியாவின் பாதி வருவாய் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. கண்களால் நேரடியாக பார்த்தோ அல்லது அணிந்து பார்த்தோ வாங்க வேண்டிய ஆடைகளும் மூக்குக்கண்ணாடியும்கூட இணையத்தின் வழியே பெருமளவு விற்பனையாகின்றன. அழுகும் பொருட்களான காய்கறி, இறைச்சி வகைகளை விற்க பிக் பேஸ்கெட் நிறுவனம் இயங்குகிறது. சீன இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே கியர்பெஸ்ட் எனும் தளம் இருக்கிறது.

ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை.

சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் ஒரு ரூபாய்க்கு செருப்பு, ஸ்பூன் போன்ற பொருட்களை விற்பனை செய்தது (ஷிப்பிங் செலவு உட்பட). அதற்கு சில நாட்களுக்கு முன்னால் ஃபிலிப்கார்ட் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு கோல்டு மெம்பர்ஷிப்பை இலவசமாக கொடுத்தது (இதில் பொருள் அனுப்பும் செலவு இலவசம் மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். இதையொத்த சலுகையை நீங்கள் அமேசானில் பெற ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்). சில வட இந்திய நகரங்களில் இப்போது மளிகைப் பொருட்களை பாதி விலைக்கு விற்கிறது அமேசான் (பேண்ட்ரி எனும் பெயரில் மளிகைப் பொருட்களை விற்கிறது அமேசான், இது பெருநகரங்களில் மட்டும்). எல்லா நிறுவனங்களும் இப்படியான திடீர் சலுகைகளை கொடுக்கின்றன. ஏன்?

சில வகையான மொபைல் போன்கள் எப்போதும் கிடைக்காது. அவை ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் (ஃபிளாஷ் சேல்). அப்போதும் சில நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்துவிடும். ஜியாமி போன்கள் பெரும்பாலும் இப்படித்தான் விற்பனையாகின்றன. அந்த நிறுவனங்களால் இந்த ஃபோன்களை பெருமளவில் உற்பத்தி செய்து குவித்துவிட முடியும். எவ்வளவு விற்பனை ஆகும் என்பதையும் கணிப்பதும் சுலபம். இருப்பினும் ஏன் ஓரிரு நிமிடங்களில் விற்பனை முடிந்துபோகுமாறு திட்டமிடுகிறார்கள்?

இது வியாபாரம் மட்டும் இல்லை. அந்த நிறுவனங்கள் மக்களை தயார்ப்படுத்துகின்றன. பொருள் வாங்குவது என்பதாக இல்லாமல் அந்த செயலியில் மக்கள் எப்போதும் மேய்ந்துகொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தத் திடீர் சலுகைகள் தரப்படுகின்றன. திடீரென ஒரு சலுகை வரக்கூடும் எனும் எச்சரிக்கை உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் தொடர்ந்து அந்தத் தளங்களை பார்வையிட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஃபிளாஷ் சேல் என்பது அந்த பொருள் மீதான எதிர்பார்ப்பை உங்களிடம் உருவாக்குகிறது. அதில் பொருளை வாங்கிவிட்டால் லட்சம் பேரோடு போட்டியிட்டு வென்ற பரவசம் கிடைக்கிறது. அதில் பொருள் கிடைக்காவிட்டாலோ நீங்கள் தோற்றவராகிறீர்கள். ஆகவே அடுத்த முறை வென்றாக வேண்டும் எனும் முனைப்பை அந்தப் பொருள் உருவாக்குகிறது. மிகைப்படுத்தவில்லை, பல சமயங்களில் ஃபிளாஷ் சேல்களில் கிடைக்கும் பொருள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அந்தப் போட்டியில் கிடைக்கும் பரவசம் உங்களை தற்காலிகமாக மகிழ்வூட்டுகிறது. அதனால்தான் அந்த பரவசத்தை நுகர அடுத்த மாடல் ஃபோனின் ஃபிளாஷ் சேல் நடக்கையில் போனை மாற்றும் முடிவுக்கு பலர் செல்கிறார்கள். கிட்டத்தட்ட குடிகாரனுக்கு ஒப்பான நிலை இது.

ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர் ரெட்மி 5 ப்ரோ ஃபோன் ஒன்றை விளையாடுத்தனமாக ஆர்டர் செய்ய முற்பட்டார் (இது முதல் முறை). பிறகு வரிசையாக நான்கு ஃபிளாஷ் விற்பனைகளில் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில் அந்த போனை வாங்குவது என்பது ஒரு கவுரவப் பிரச்சினையானது. கடைசி முறை நண்பரிடம் ஏர்டெல் சிம்மை கடன் வாங்கி (அதுதான் அங்கே ஒழுங்காக சிக்னல் கிடைக்குமாம்), கிரெடிட் கார்டு தகவல்களை முன்கூட்டியே செயலியில் உள்ளிட்டு காத்திருந்து அந்த போனை வாங்கியிருக்கிறார்.

அவர் போனை அதிகம் பாவிப்பவர் அல்ல. அவரது வாட்சப் பயன்பாடுகூட மிகவும் குறைவானதே. ஆனால் அந்த போனை வாங்கியதன் மூலம் அவர் மனம் ”ஆன்லைனில் பொருள் வாங்குவது பரவசமூட்டக்கூடியது. அதில் நீ ஒரு வீரனைப்போல உணரலாம்” என விளங்கிக்கொண்டிருக்கும். ஆகவே அடுத்த முறை அவருக்கு மனச்சோர்வு உண்டாகும்போதெல்லாம் அவர் ஆன்லைன் வணிக செயலிகளை மேய்வார். காரணம் அது தரும் பரவசம் மனச்சோர்வை விலக்கும் எனும் நம்பிக்கை அவருக்குள் செலுத்தப்பட்டுவிட்டது. சூதாட்டக்காரர்களை செலுத்துவது இத்தகைய அடிமைத்தனம்தான்.

இப்படியான ஒரு வாய்ப்பு இருப்பதால்தான் நிறுவனங்கள் பெரும் மூலதனத்தை ஆன்லைன் வணிகத்தில் கொட்டுகின்றன. அமேசான்தான் இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிக நிறுவனம்; அதன் முதலாளிதான் இன்று உலகின் பெரும் பணக்காரர். இந்த ஒரு நிறுவனம்தான் அமெரிக்காவின் 40% நுகர்பொருட்களை விற்கிறது. அமெரிக்காவில் இதுவரை சந்தையை கட்டுப்படுத்தி வந்த வால்மார்ட் தமது விற்பனை உத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறது (வால்மார்ட் நடத்தியது ஒரு ரவுடி ராஜாங்கம், அவர்கள் கேட்ட விலைக்கு கொடுக்காவிட்டால் அந்த பொருளை சந்தையில் இருந்து ஒழிக்க வால்மார்ட்டால் முடியும். காரணம் சில்லறைவணிகம் பெருமளவு அவர்கள் வசம் இருந்தது).

அமேசான் இந்தியாவின் பெரிய போட்டியாளர் ஃபிலிப்கார்ட்டை இப்போது கையகப்படுத்தியிருப்பது வால்மார்ட் (ஃபிலிப்கார்ட் நிறுவனமானது ஈபே, மிந்த்ரா உள்ளிட்ட மேலும் சில இணையதள கடைகளை ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிறது). இது அனேகமாக அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வால்மார்ட் செய்த நடவடிக்கையாக இருக்கலாம். ஆன்லைன் வணிகத்தின் பெரும் சந்தையான இந்தியாவில் நுழையும் முயற்சியாக இருக்கலாம். அல்லது சந்தையில் நீடித்திருக்க ஆன்லைன் வணிகம் தவிர்க்க முடியாதது எனும் அனுமானமாக இருக்கலாம்.

இ காமர்ஸ் உலகின் இன்னொரு ராட்சசன் அலிபாபா இந்தியாவின் பேடிஎம் நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. இப்போது வாரன் பஃபட் நிறுவனம் அதில் கூடுதலாக முதலீடு செய்திருக்கிறது. ஆக இந்தியாவின் மிகப்பெரிய மூன்று ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகள்தான். டாடா நிறுவனம் டாடா கிளிக் எனும் ஆன்லைன் நிறுவனத்தை நடத்துகிறது. ஸ்னாப்டீல் போன்ற பல கடைகளும் சந்தையில் போராடிக்கொண்டிருக்கின்றன. அவை இந்த மூன்று பகாசுரக் கம்பெனிகளிடம் தோற்கலாம் அல்லது கடையை அவர்களிடமே விற்றுவிட்டு கிளம்பலாம்.

எல்லோரும் இருக்கும்போது இந்தியாவின் ஓனர் அம்பானி மட்டும் சும்மாயிருப்பாரா? அவர் பங்கிற்கு ஏ ஜியோ எனும் செயலி வழி இணைய ஃபேஷன் கடையை நடத்துகிறார். ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் எனும் பெயரில் 400க்கும் மேலான ஆயத்த ஆடைக் கடைகளை முகேஷ் அம்பானி நிறுவனம் நடத்துகிறது. அதே பெயரில் இணைய வழி வியாபாரமும் நடக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு பிரிவு ஜவுளித்துறைதான். அதனை சந்தியில் நிறுத்தும் வேலையை அம்பானி செய்யும் வாய்ப்பு தெளிவாகத் தெரிகிறது. காரணம் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஆடைகள் பெரும்பாலும் மேட் இன் பங்களாதேஷ். ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதி சந்தையை வங்காள தேசம் பெருமளவு கைப்பற்றிவிட்டது. இப்போது திருப்பூரை கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருப்பது உள்ளூர் சந்தைதான். அதையும் வாரி வாயில் போட களமாடுகிறார் அம்பானி.

சந்தையை ஆக்கிரமிக்கும் இந்தப் போட்டி ஒரு போரைப்போல நடந்துகொண்டிருக்கிறது. அமேசான் தமது கிரேட் இண்டியன் சேல் எனும் பெருவிற்பனை விழாவை இந்த மாதம் நடத்துகிறது. அதே நாட்களில் ஃபிலிப்கார்ட் பிக் பில்லியன் டே எனும் விற்பனை விழாவை நடத்துகிறது. பேடிஎம் தன் பங்குக்கு கோல்டுபேக் ஷாப்பிங் ஃபெஸ்டிவலை நடத்தவிருக்கிறது. மற்ற அல்லு சில்லுகளும் தன் பங்கிற்கு ஏதேனும் நடத்தலாம். இதற்காக கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் அடிமைகளின் தீபாவளி இந்த மாதம் பதினைந்தாம் தேதியே முடிந்துவிடும். அந்த அளவுக்கு தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன.

2015, 16 ஆம் ஆண்டுகளில் பிக் பில்லியன் டே விற்பனையின்போது ஃபிலிப்கார்ட்டின் சர்வர்கள் முடங்கின. அந்த அளவுக்கு இணையக்கூட்டம் அந்த தளத்தை மொய்த்தது. அதே ஆண்டுகளில் நடந்த விற்பனைத் திருவிழாக்களில் அமேசானின் டெலிவரி பன்மடங்கானது. இருசக்கர வண்டிகளில் டெலிவரி ஆன தெருக்களில் எல்லாம் டாடா ஏஸ், டெம்போக்களில் டெலிவரி ஆனதை பார்த்திருக்கிறேன் (இரண்டாம் நிலை நகரங்களில்). ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி திறம்பட செய்வது என ஆலோசனை வழங்கும் செயலிகள்கூட வந்தாயிற்று. பேடிஎம் நிறுவனம் இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே வேர்ல்டு ஸ்டோர் எனும் பிரத்தியோக பகுதியை தமது செயலியில் வைத்திருக்கிறது. அதில் தோடு, வளையல், பொம்மை என சகலமும் கிடைக்கின்றது. ஃபேன்சி ஸ்டோர் முதல் பிளாட்பாரக்கடை வரை எங்கும் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே சீன சந்தையில் நீங்கள் பொருள் வாங்க இயலும். பிலிப்கார்ட் தமது கிட்டங்கிகளை முழுமையாக ரோபோக்கள் மூலம் கையாள நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன் மூலம் 2 மணி நேர டெலிவரிகூட சாத்தியப்படலாம். அமேசான் ஏற்கனவே இதனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

இந்தப் போட்டியினால் நமக்கு எல்லாமே சல்லிசாக கிடைக்கிறது என நம்பிவிட வேண்டாம். விலையில் பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன. தி.நகர் தெருக்கடைகளில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் மொபைல் கேஸ் இந்த தளங்களில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சாதாரண மருந்துக் கடைகளில் 170 ரூபாய்க்கு விற்பனையாகும் செரிலாக் (குழந்தைகள் உணவு) அமேசானில் 286 ரூபாய், அதில் அதன் உண்மையான விலை 499 என பொய்யாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அமேசானின் தள்ளுபடி விலையைக் காட்டிலும் உள்ளூர் விலை 100 ரூபாய் குறைவு.

பேடிஎம் ஒரு சீன தயாரிப்பு கைக்கடிகாரத்துக்கு 100% கேஷ்பேக் என அறிவிக்கிறது (கேஷ்பேக் என்பது பொருளுக்கு நீங்கள் கொடுத்த பணம் சில நாளில் உங்கள் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கான பொருட்களை பிறகு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்). ஆனால் அதன் விலையில் இருக்கிறது பித்தலாட்டம். அந்த பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய். ஆக 100 ரூபாய் கடிகாரத்தை 3300 ரூபாய் கொடுத்து வாங்கினால் பேடிஎம் உங்களுக்கு 3300 ரூபாயை திருப்பித்தரும் . அதுவும் பணமாக அல்ல, அவர்களிடமே பொருள் வாங்கி அந்த பணத்தை கழிக்க வேண்டும். (இது அப்பட்டமான ஏமாற்றுவேலை என்பதை சராசரி அறிவுடைய எவரும் கண்டுபிடிக்கலாம். ஆனால் அந்த கடிகாரம் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்கிறது.).

இதன் சேதாரங்கள் மூன்று இடங்களில் வெளிப்படலாம்.

முதலில் இந்த ஷாப்பிங் மனோபாவம் நமது நடத்தையில் பாரிய மாற்றங்களை உருவாக்குகிறது. ஒரு தேவை உருவாகி அதற்காக நாம் ஒரு பொருளை வாங்குவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இப்போது ஷாப்பிங் தளங்கள் பொருளைக் காட்டி, உணர்வுகளைத் தூண்டி தேவையை வலிந்துத் திணிக்கின்றன. முதலில் ஒரு பரவச உணர்வுக்கு ஆட்பட்டு பிறகு அது பதட்டக்குறைப்பு செயலாக சுருங்குகிறது (கிட்டத்தட்ட சாராயத்தைப்போல). அதாவது ஷாப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் எனும் நிலைமாறி ஷாப்பிங் செய்யாவிட்டால் கைநடுக்கும் எனும் நிலைக்கு செல்லலாம். வெறுமையாக உணரும்போது ஷாப்பிங் தளங்களை மேயும் வேலையை பலரும் செய்வதை காணமுடிகிறது. மொபைல் அடிமைத்தனத்தைப்போல ஷாப்பிங் அடிமைகள் (அடிக்ட்) பரவலாக உருவாகிறார்கள்.  குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.

பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய்.

இரண்டாவதாக இது நம் நாட்டில் இருக்கும் சிறுவணிக கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும். இணையத்தில் இல்லாத பொருளே இல்லை எனும்போது, எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போது, பணம் செலுத்தும் வழிகள் எளிமையாக இருக்கும்போது மக்கள் அதன் பக்கம் திரும்புவது நடந்தே தீரும். அவை இறுதியில் சாதாரண சிறு வியாபாரிகளை பாதிக்கும். மேலும் இந்த சப்ளை செயின் அளிக்கும் வேலைவாய்ப்பு முற்றிலும் நிரந்தரமில்லாதது. மூட்டை துக்கி முதுகுவலி வந்த பின்னால் அந்த டெலிவரி ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை. அமேசானிலேயே விஷம் வாங்கிக்குடித்து சாகவேண்டியதுதான். மேலும் தேவையற்ற பொருட்களுக்கு செலவிடும் மக்கள் தேவையானவற்றுக்கு செலவைக் குறைப்பார்கள். அதுவும் மறைமுகமாக இந்தியாவின் வணிக கட்டமைப்பைத்தான் சிதைக்கும்.

இறுதியாக இந்த ஷாப்பிங் கலாச்சாரம் சேர்க்கும் குப்பைகள் ஒரு பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. வரும் ஜனவரி முதல் பாலித்தீன் மற்றும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது (பைகள், டீ கோப்பைகள் போன்றவை). கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இப்போதே தடை வந்தாயிற்று. ரோட்டுக்கடை போடுபவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர் அமேசானுக்கு அது பொருந்தாது. பொருட்களை சேதமாகாமல் அனுப்ப உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் உறைகளும் பபுள் பேக்கிங் தாள்களும் தெர்மாகூல் அட்டைகளும் பெரும் சூழல் அபாயங்கள். மேலும் அளவுக்கு மீறி நுகரப்படும் தரமற்ற (மலிவான) சீன பொருட்கள் இன்னொரு சூழல் அபாயம். அவை வெகுசீக்கிரமே குப்பைக்குப் போகும். இப்போது சிறு நகரங்களில்கூட குப்பை கொட்ட இடமில்லை. இவற்றை கையாளவும் கட்டுப்படுத்தவும் எந்த திட்டமும் நம்மிடம் இல்லை.

நாம் இவை குறித்து கவலைப்பட ஆரம்பிக்கும்போது சிக்கல் கைமீறிப்போயிருக்கும். என்ன செய்யலாம்?

 

குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பது துவங்கி அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் எல்லாமே கிரிமினல் கன்ஸ்பைரசி பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. அவரது ஒப்பனைகளே அவர் தரத்தைக் காட்டுவதாக சொல்கிறார் ஒருவர். ’சும்மா இருந்தவளுக்கு வண்டி வாங்கிக் கொடுத்த ஊட்டுக்காரனை சொல்லணும்’ என்கிறார் இன்னொருவர். பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது. ஒரு தாய் தமது இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் எனும் செய்தி சீரணிக்க இயலாததாக இருந்தாலும் எனக்கு அதில் எந்தக் கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நமது மிகை எதிர்வினையின் மீது கொஞ்சம் சலிப்பும் பயமும் மேலிடுகிறது.

மனிதகுல வரலாற்றில் திருமணத்துக்கு வெளியேயான காதலும் பாலுறவும் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. ”கணவனே கண்கண்ட தெய்வம்” போன்ற அறிவுரைகள் ”விட்டுட்டு போயிடாதடீ” எனும் மன்றாடலாகவும் இருந்திருக்கக்கூடும். சில சமூகங்களில் மாதவிலக்கின்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே தனி குடிசையில் அமர வேண்டும் என்பது கட்டாயம். அது அவர்களது மாதவிலக்கை மற்றவர்கள் கண்காணிக்கும் ஒரு ஏற்பாடு. விதவைக்கு மொட்டையடிப்பதும், வெள்ளை சீலை உடுத்துவதும் அவர்களை தனித்து அடையாளப்படுத்தத்தான். அழகை குலைத்து வீட்டைவிட்டு ஓடாமல் காப்பாற்ற அல்லது ஓடினால் எளிதாக கண்டுபிடிக்கவும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம். அரசர்கள் போருக்கு செல்கையில் ராணிகளுக்கு பூட்டு போட்ட இரும்பு உள்ளாடை அணிவித்த கதைகள் உண்டு. சுரங்கம் தோண்டி இரகசியக் காதலரை சந்தித்த ராணி வடநாட்டில் இருந்திருக்கிறார். கள்ளக்காதல் எனும் பொருள்கொண்ட வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லை, அங்கே அதனை எக்ஸ்ட்ரா மெரைட்டல் அஃபேர் எனும் அதிர்ச்சியூட்டாத வார்த்தையால்தான் குறிப்பிடுகிறார்கள்.

குன்றத்தூர் அபிராமி, அவரது  குழந்தைகள்.

அம்மாவோ அப்பாவோ பிள்ளைகளைக் கொன்றுவிடும் செய்தியும் நமக்கு புதிதல்ல. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைகளுக்குப் பிறகு அவை வாரம் இரு முறையேனும் கேள்விப்படும் செய்தியாகிவிட்டது. வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வோர், மனைவியோடு சண்டைபோட்டு அந்த ஆத்திரத்தில் பிள்ளைகளைக் கொன்ற அப்பாக்கள், காதலுக்கு இடையூறாக உள்ள குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்கள் அல்லது கணவனையோ மனைவியையோ கொன்றவர்கள் என எல்லா வகைமாதிரி குடும்பத்துக்குள்ளேயான கொலைகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் ரியல் எஸ்டேட் கொலைகள்தான் அதிகம் நடக்கும். இப்போது உறவுகளுக்குள் நடக்கும் கொலைகள் அந்த இடத்தை பிடித்துவிட்டன.

பிறகு ஏன் அபிராமி பற்றிய செய்தி பற்றியெரியும் பிரச்சினையானது?

அதன் பின்னிருக்கும் முக்கியமான காரணி, அபிராமியின் செயலில் உள்ள சுவாரஸ்யம். வெகுமக்கள் மனதில் இருக்கும் கலாச்சார நீதிபதியை அச்செய்தி உசுப்புகிறது. வறுமையில் பிள்ளைகளை கொன்றவள் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை. உங்கள் மன நீதிபதியால் அதற்கு ஒரு எளிய தீர்ப்பு சொல்ல முடியாது (அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள முடியாதில்லையா?) சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் தன்னை தேவையின்றி சந்தேகிப்பது பற்றி தோழி ஒருவர் சங்கடப்பட்டுக் கொண்டார். அவர் கணவர் இவரது சம்பளத்தை பெரிதும் நம்பியிருப்பவர்.

”சந்தேகப்பட்டு என்ன செய்கிறார்?” என்று கேட்டேன். ”அடிக்கவோ திட்டவோ மாட்டாரு. ஆனா யாருக்கோ சொல்ற மாதிரி பேஸ்புக்ல எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. மத்த பொம்பளைங்கள திட்டுறமாதிரி என்னை குத்திக்காட்டுவார்” என்றார். (அவரது ஆடைத்தெரிவு ஏனைய ஊழியர்களுடன் சிரித்து பேசுவது மாதிரியான செயல்களை – “தேவடியாளுங்க அடுத்தவங்களை பார்க்க வைக்குற மாதிரி மேக்கப் போடுவாங்க, வேலைக்கு போற பொம்பளைங்க ஏன் அப்படி போகனும்?” இது அவரது வசனங்களின் ஒரு சாம்பிள்).

இந்த வகை வாட்சப்தாசர்கள், சமூகம் சமீபத்தில்தான் கெட்டழிந்துவிட்டது எனத் தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமது கருத்து சரி என நிரூபிக்கும் ஆதாரம் தேவைப்படுகிறது. அபிராமி செய்தி அவர்களது தீர்மானங்களை உரத்து சொல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது.

மேலும் நமக்கு தினசரி வாழ்வில் சுவாரஸ்யம் மிக்க பொழுதுபோக்குகள் குறைவாக இருக்கின்றன. ஒரு காலத்தில் டி.வி. சீரியல்கள் அதனை நிறைவேற்றின. அதில் கள்ளக்காதல், கொலை, கடத்தல் என எல்லாமே வந்தன (சித்தி தொடர் உச்சத்தில் இருந்த போது சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாக குறைந்திருக்கும்). பிறகு நெடுந்தொடர்கள் போரடிக்க ஆரம்பித்த வேளையில் சொல்வதெல்லாம் உண்மை வகையறா நிஜவாழ்வு கள்ளக்காதல், கொலை போன்றவை அவ்விடத்தை ஆக்கிரமித்தன. சும்மா கதை சொல்வது எத்தனை நாள் தாங்கும்? அடுத்து 10 பேரை ஒன்றாக அடைத்து அவர்களது பலவீனங்கள், சண்டைகளை ஒளிபரப்பி வாழ்வை சுவை மிக்கதாக்கினார்கள். ஆனால் அந்த பிக்பாஸும் இப்போது சலிப்புதட்டுவதாக தகவல்.

ஊடகங்களுக்கோ முக்கியமான அரசியல் சமூக பிரச்சினைகள் பொதுவிவாதமாகாமல் தடுக்க வேண்டிய நிர்பந்தம். ரஃபேல் ஊழலையும் பெட்ரோல் விலையேற்றத்தையும் பெரிதாக்கக்கூடாது. ஆனால் தொழில் ஓடியாக வேண்டும். ஆகவே அபிராமியின் செய்தி அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. அதில் பொருந்தாக்காதல் எனும் கிளுகிளுப்பு இருக்கிறது.

நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் நம்மை பாலியல் ரீதியாக கிளர்ச்சியூட்டும்படி வடிவமைக்கப்பட்டவையே. இளைஞர்கள்/ மாணவர்கள் பலர் முதலில் சன்னி லியோனி போன்றோரது ஆபாச வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து அடுத்தகட்டமாக திருட்டுத்தனமான ஸ்கேண்டல் வீடியோக்களையே அதிகம் நாடுகிறார்கள். அது பாலியல் நாட்டத்தில் ஒரு திரில்லை கூடுதலாக சேர்க்கிறது. அதுதான் அபிராமி பற்றிய செய்திகளை பெரிதாக விற்பனையாகவல்ல சரக்காக மாற்றுகிறது. இந்த திரில்தான் திருமணத்துக்கு வெளியேயான காதலின் உடலுறவு நேரத்தை நீட்டிக்கிறது எனவும் அதுவே அந்த உறவின் மீது கூடுதல் போதையேற்படுத்துகிறது என ஒரு உளவியல் பார்வை இருக்கிறது.

காதல் வயப்படுதல் என்பது ஒரு மிதமான கோகைன் அடிமைத்தனத்துக்கு நிகரானது (குறிப்பு : மூளை பாகமான அமிக்டலாவுக்கு நல்ல – மீடியமான – கள்ளக் காதல் என்றெல்லாம் வகைப்படுத்தத் தெரியாது). கிளுகிளுப்பு, திரில், கடைசியில் ஒரு கலாச்சார பாடம் என பெருந்தொகையான மக்களை வசீகரிக்கும் அம்சங்கள் பல இருப்பதால் அபிராமி பாணி செய்திகள் என்பது காட்சி ஊடகங்களுக்கு ஒரு ஜாக்பாட். அதனால்தான் பல கோணங்களில் தக்க பிண்ணனி இசையோடு அச்செய்தியை இறக்குகிறார்கள்.

ஊடகங்களின் ‘எக்ஸ்ரே’ ரிப்போட்டுகள்.

ஆகவே இத்தகைய செய்திகளுக்கு அதிகம் அதிர்ச்சியடைந்து ஆற்றலை வீணாக்காதீர்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். இது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும் என கருதினால், அதற்கான வேறு நியாமான காரணிகள் இருக்கின்றன.

சமூகம் முழுக்க மனிதர்கள் கடுமையான பதற்றத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உணவு, காதல் – காமம் மற்றும் பதட்டம் (ஸ்ட்ரெஸ்) ஆகியவை நமது நடத்தை மற்றும் முடிவுகளின்மீது பெரும் செல்வாக்கு செலுத்தவல்லவை. பெரும்பான்மை குடும்பங்கள் போதுமான அளவு நேர்மறையான சமூகத் தொடர்புகள் அற்றதாக இருக்கின்றன (நமது சமூக ஊடக அடிமைத்தனத்துக்கு அதுவும் ஒரு காரணம்). அரசியல் காரணங்களால் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. நவீனத்தை வலியுறுத்தும் விளம்பரங்கள் பழைய கலாச்சாரமே சிறந்தது எனும் வாட்சப் அறிவுரைகள் என முற்றிலும் வேறான இருதுருவ குழப்பங்கள் நம்மை அலைகழிக்கின்றன. இவை எல்லாமே நம் எல்லோரது இயல்பையும் கடுமையாக சிதைக்கின்றன.

தாங்க இயலாத ஆத்திரத்தில் அல்லது மன அழுத்தத்தில் தமது பிள்ளைகளை கடுமையாக அடித்துவிடுவதாக பல அம்மாக்கள் எங்களிடம் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெல்ட்டால் மகனை / மகளை அடிக்கும் அம்மா, மகனை சுடுதண்ணீரில் தள்ளிவிட முயன்ற அம்மா, நான்கு வயது மகளை சுவற்றில் தள்ளிவிட்டு பிறகு அதற்காக அழுத அம்மா என ஏராளமான உதாரணங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் யாரும் கொடுமைக்காரி அம்மாக்கள் இல்லை. அது அவர்களை நெருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளின் ஒரு விளைவு. அதனை வெறுமனே அப்பெண்களின் நடத்தைப் பிரச்சினை என கருதினால் நம்மால் ஒரு குழந்தையைக்கூட அடி வாங்குவதில் இருந்து காப்பாற்ற முடியாது.

திடீரென எழுச்சி பெறும் பக்தி, அதீத சோதிட நம்பிக்கை, தற்கொலைகள், மனநல பிரச்சினைகள் என எழுதி மாளாத அளவுக்கு பிரச்சினைகள் இதனால் உருவாகின்றன. உறவுச்சிக்கல்கள் அந்தப் பட்டியலில் கடைசியாக வரும். ஆனால் அதன் நியூஸ் வேல்யூ ஏனையவற்றைவிட மிக அதிகம் (மனநலம் சார் தேடல்கள் கூகுளில் அதிகம் இருப்பதாக கேள்வி ஆனால் அதன் செய்தி முக்கியத்துவம் குறைவு). ஆகவே அத்தகைய செய்திகள் விரைவாகவும் முழு வீச்சோடும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வெறும் கலாச்சார மதிப்பீடுகளைக்கொண்டு பார்ப்பதால் எந்த பலனும் வரப்போவதில்லை.

மேற்கத்திய கலாச்சாரம் நம்மை கெடுத்துவிட்டது என்பது பச்சை அயோக்கியத்தனம்.  புதிய தொழில்நுட்பங்கள் பொருந்தாக் காதலுக்கு கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கிறது என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம். ஒருகாலத்தில் இருந்ததாக நம்பிக்கொண்டிருக்கிற ஒழுக்கமான கலாச்சாரம் இங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பெண்களை ஜாக்கெட்கூட அணியவிடாத கலாச்சாரம் இங்கே இருந்தது. லட்சக்கணக்கான விதவைகளை அனாதையாக காசியில் விட்டுவிட்டு வந்து  கூச்சமில்லாமல் வீட்டில் வம்சவிருத்தி செய்த கலாச்சாரம் இங்கிருந்தது. கணவன் செத்தால் மனைவிக்கு கஞ்சா கொடுத்து நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இங்கிருந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் சோ கால்டு கள்ளக்காதல் எல்லாம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவதற்கான செய்தியே அல்ல.

கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு. யார் கண்டது, அந்த செயல்பாடுகள் கலாச்சார காவலர்களின் கடைசி சமரசமான ஸீரோ கேஷுவாலிட்டி எனும் நிலையை கள்ளக்காதல்களிலும் கொண்டுவரக்கூடும்.

சோஃபியா : கொண்டாடத்தக்க சீற்றம் !

(வினவு தளத்திற்கு எழுதப்பட்டு செப்டம்பர் 7, 2018 அன்று வெளியான கட்டுரை)

சென்னையில் தன் குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய அபிராமி செய்திகளால் எல்லா ஊடகங்களும் மக்கள் மனங்களும் நிறைந்திருந்த வேளையில், மாணவி ஒருவர் ஒற்றை கோஷத்தின் மூலம் அவர்கள் கவனத்தை திருப்பியிருக்கிறார். அது வெறுமனே ஒற்றை வாசகமாக இருக்கலாம். மிகை ஆர்வம் காரணமாக வெளிப்பட்ட எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் சோஃபியாவிமானத்தில் ஏறுகையில் எடுத்த ஒரு தீர்மானமும் அதனையடுத்து எடுத்த சிறு முயற்சியும் தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமானவை. அது வெறும் ஒற்றை கோஷம் என்றால் பா.ஜ.க. இத்தனை பதற அவசியமில்லை.

முதலில் சோஃபியாவின் விமான முழக்கத்துக்கு பா.ஜ.க. கூடாரத்தின் எதிர்வினைகளை கவனியுங்கள் (இந்துத்துவாவுக்கு தாலிகட்டினாலும் ஒரிஜினல் கள்ளக் கணவர்களாகவே வாழும் ”நடுநிலை” பார்ப்பனர்கள் உட்பட). விமான நிலைய வளாகத்தில் தாவித் தாவி குதிக்கிறார் தமிழிசை. அவரை தடுக்க அங்கிருந்த பெண் போலீஸ்காரர் ஒரு கபடியாட்டமே நடத்த வேண்டியிருந்தது. “சோஃபியா இடத்தில் என் மகளை வைத்து பார்க்கிறேன் ஆகவே அவரது எதிர்காலம் பாதிக்கப்படுமே என கவலையாக இருக்கிறது” என ரங்காராவ் பிட்டை போடுகிறார் தினமலர் வெங்கடேஷ். அவர் ஏன் மாணவி வளர்மதியை மகளாக நினைக்கவில்லை, சோஃபியாவை ஏன் மகளாக நினைக்க முடிகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம்.

பொன்.ராதா, தமிழிசை உள்ளிட்ட பல பா.ஜ.க. தலைகள் கோஷமிட்ட பெண்ணுக்கு பின்னணியில் ஏதோ ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் அலறுகிறார்கள். பா.ஜ.க. பாதநக்கி கருத்தாளர்களும் அதனை அப்படியே வழிமொழிகிறார்கள். ஆனால் அனைவரும் கோபத்தையும் பதற்றத்தையும் அடக்கிக்கொண்டு தடுப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பது இங்கே பெரிதும் கவனிக்கத்தக்கது. பா.ஜ.க. பேச்சாளர்கள் ”நாங்கள் வெறும் புகார் மட்டும்தான் கொடுத்தோம். அவரை ஜெயிலில் தள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, அந்த உரிமைகூட எங்களுக்கு இல்லையா” என்றுதான் புலம்பினார்கள்.

வழக்கமாக தமிழிசைக்காக தமிழக பா.ஜ.க.வின் பார்ப்பன லாபி எந்த வேலையையும் செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் தமிழிசையை வேலை மெனக்கெட்டு ஆதரிக்கிறார்கள். நேரடி மற்றும் மறைமுக பா.ஜ.க. கருத்தாளர்கள் எல்லோரும் அவர் வெறுமனே மாணவியல்ல அவருக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் சொல்லி சோஃபியா ஒரு சாமனிய பெண் அல்ல என நிரூபிக்க முற்படுகிறார்கள். பிறரை அவமானப்படுத்துவதையே வழக்கமாகக்கொண்ட பா.ஜ.க. இவ்விவகாரத்தில் சோஃபியாவை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருகிறது.

மறுபுறம் செய்தி கேள்விப்பட்ட சமூக வலைதளவாசிகள் பேரார்வத்தோடும் ஒருவிதமான பரவசத்தோடும் அவரை ஆதரித்து பதிவிடுகிறார்கள். இத்தளங்களில் இயங்காத சாமானிய மக்களும் இதே உணர்வோடுதான் இருந்தார்கள். சோஃபியாவை ஆதரிக்கும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக எனும் ஹேஷ்டேக் ஒரு அலையைப்போல பரவிற்று. ஏன் சாதாரண நிகழ்வுவொன்று ஒருபுறம் பெரும் பதற்றத்தையும் மறுபுறம் பரவசத்தையும் உருவாக்குகிறது?

காரணம் அந்தப்பெண் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பொருளாதாரப் பிண்ணனி. பா.ஜ.க.வின் கோர முகம் தெரிந்தும் அதனை அலட்சியப்படுத்தி, பா.ஜ.க.வை ஆதரித்து பார்ப்பனக் கும்பலோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அதனை பயன்படுத்திய மிடில் கிளாசில் இருந்து அவர் வந்திருக்கிறார். அதிகம் படித்தவனுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது. நீ படி, அதிகம் பொருளீட்டு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்பதே அனேக மெத்தப்படித்தோரின் வாழ்நாள் அறிவுரை. அந்த அறிவுரையை சோஃபியா துணிவோடு புறந்தள்ளியிருக்கிறார். போராட்டங்களை இடையூறு என்பதாகவும் உரத்த குரலை அநாகரீகம் என்பதாகவும் கருதும் ஒரு வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஒரு சிறு பெண் எட்டி உதைத்துவிட்டார்.

தங்களது கவசமாக இருந்த ஒரு வர்க்கத்தில் இருந்து வந்த பெண் அவர்களுக்கான விதிகளை எல்லாம் உடைத்துவிட்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதை பார்க்கையில் தமிழிசைக்கு பயம் மேலிடுகிறது. என்ன நடந்தாலும் சாணி மாதிரி கிடக்கும் மிடில்கிளாசிடம் இருந்து வெளிப்படையான எதிர்குரல் எழுவதென்பது பா.ஜ.க. கூடாரத்தை பெரிதும் கலவரப்படுத்தவல்லது. அதனை ஆரம்பத்திலேயே நசுக்கிவிடத் துடித்ததன் விளைவே தமிழிசையின் அந்த விமான நிலைய குறளிவித்தை. எல்லாவற்றையும் பொறுக்கித்தனமாகவே கையாளும் பா.ஜ.க.வின் தலைவர் என்பதால் இதையும் அப்படியே கையாள முற்பட்டார் தமிழிசை. அதனால்தான் அவர் வெறுமனே புகார் சொல்லாமல் தன் ஆட்களை விட்டு சோஃபியாவையும் அவர் குடும்பத்தையும் மிரட்ட வைத்தார் (அவர் மிரட்டு என உத்தரவிடத்தேவையில்லை, என்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என சொன்னாலே போதுமானது).

ஆனால், ஆரம்பத்திலேயே பாடம் கற்பித்துவிடவேண்டும் எனும் அவரது ஆத்திரம் எதிர்மறையாக வேலை செய்துவிட்டது. தலித், பெண், கிருஸ்துவர், வெளிநாட்டில் படிக்கிறார் என்பதாக பா.ஜ.க.வால் மிக இலகுவாக அவமானப்படுத்த முடிகிற எல்லா தகுதியும் சோஃபியாவுக்கு இருந்தது. ஆனால் மக்கள் யாரெல்லாம் களத்துக்கு வரவேண்டும் என விரும்பினார்களோ அங்கிருந்து ஒரு சிறு பெண் துணிந்து வரவும் கொண்டாடித் தீர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பா.ஜ.க.வின் வழக்கமான அஸ்திரங்கள் பயனற்றுப்போயின. மிக அரிதான நிகழ்வாக பா.ஜ.க. தடுப்பாட்டம் ஆடும் நிர்ப்பந்தம் வந்தது.

பா.ஜ.க.வை சங்கடப்படுத்தாமல் ஷோவை ஓட்டிவிடவேண்டும் எனும் ஊடகங்களின் வேண்டுதலை குழந்தைகளை கொன்ற அன்னை அபிராமியால்கூட காக்க இயலவில்லை. ஆனாலும் பாசிச பா.ஜ.க. ஒழிக எனும் கோஷம் முன்னுக்கு வராமல் தடுத்து சோஃபியா செய்தது சரியா என்பதாக விவாதித்து தமது எஜமானர்களை அவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். எந்த டி.வி.யும் தமிழிசை ஏன் புகார் மட்டும் கொடுத்துவிட்டு போகாமல் தன் கட்சி ஆட்களை அழைத்து ரகளை செய்தார் எனும் கோணத்தை விவாதிக்கவே இல்லை.

பா.ஜ.க.வின் டிப்ளமேட்டிக் அணிகள், டிப்ளமேட்டிக் ரவுடி அணிகள் மற்றும் பியூர் ரவுடி-பொறுக்கி அணிகள் எல்லாமே இம்முறை அடக்கி வாசித்தன. பார்ப்பன நற்செய்தியாளர்கள் சேதாரத்தை அனுமானித்து ”ஏர்கிராஃப்ட் ரூல்சை மீறிப் பேஷறது தப்பு” என ஆரம்பித்து ”பொண்ணோட எதிர்காலம்ன்னு ஒன்னு இருக்குல்ல..” என முடித்தார்கள், அதன் பொருள் மற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரும் இப்படி கோஷம் போட்டுவிட வேண்டாம் என்பதே. பொன்ரா வகையறா சோஃபியாவுக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொல்லி  அவர் உங்கள் ஆள் அல்ல என மக்களுக்கு பாடம் எடுத்தார்கள். மக்கள் தமது கோபத்தை அடுத்த வருடம் தேர்தலில் காட்டினால் போதும் என ஆலோசனை சொன்னார் ஒரு நடுநிலை. ”உங்க தலைவருக்கு இது நடந்தா நீங்க சும்மாயிருப்பேளா” என சிலர் முறையிட்டார்கள் (சம்பவத்தில் ஒரு முக்கிய திருப்பமாக தி.க. ஓவியாவும் இதை சொன்னார். வரலாற்றில் முதல் முறையாக பா.ஜ.க. நாராயணன் ஓவியாவின் கருத்துக்களை குறிப்பிட்டு வழிமொழிந்தார்) ஆனால் ஒருவர்கூட பா.ஜ.க. பாசிஸ்ட் கட்சி இல்லை என்றோ பாசிச ஆட்சி இல்லை என்றோ சொல்லவில்லை.

சோஃபியாவின் குரலுக்கான எதிர்வினைகளையும் பரிசீலிக்கையில் அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது விளங்கும். மக்கள் இத்தகைய குரல் ஒன்றுக்காக காத்திருந்திருக்கிறார்கள் என்பதும் பா.ஜ.க. கூடாரம் இத்தகைய குரலைக் கண்டு அஞ்சுகிறது என்பதும் உற்சாகமூட்டக்கூடிய செய்திகள். சோஃபியாவை ஆதரிப்பதன் மூலம் அவரது உணர்வுகளை பரவலாக்குவதன் மூலம் நாம் பெருந்தொகையான மத்தியதர மக்களிடையே உள்ள தயக்கத்தை உடைக்க முடியும். உண்மையில் பா.ஜ.க.வின் பொருளாதார நடவடிக்கைகள் கொடூரமாகச் சிதைத்திருப்பது மிடில்கிளாஸ் மக்களின் எதிர்காலத்தைத்தான் (ஏழைகளுக்கு அப்படி ஒன்று இருந்ததில்லை). நிகழ்காலத்தை செலவு மிக்கதாக்கி சேமிப்பை அர்த்தமற்றதாக்கியதுதான் பா.ஜ.க. மிடில் கிளாஸ் விசுவாசத்துக்கு கொடுத்த பரிசு. இன்று அவர்களை பிடித்து நிறுத்தியிருப்பது அந்த விசுவாசம் அல்ல, பா.ஜ.க.வை செருப்பால் அடிப்பதில் இருக்கும் தயக்கம்.

இதுவரை நடுத்தர வர்க்க மக்களுக்கு போதிக்கப்பட்ட உதாரண மனிதர்களின் இலட்சணமான “நல்லா படி, ஃபாரின் போ, சம்பாதி” என்பதை கிட்டத்தட்ட அடைந்துவிட்டவர் சோஃபியா. அப்படியான உதாரண மிடில் கிளாஸ் மகளை சமூக அக்கறைக்கான மாடலாக நாம் காட்டவேண்டும். அவர் கோஷம் மட்டுமல்ல, மன்னிப்பு கேட்க மறுத்த துணிவு மற்றும் அவரது கருத்தியல் பங்களிப்பு (அவர் எழுத்துக்கள்) ஆகிய எல்லாவற்றையும் நாம் பெருமிதத்தோடு வரவேற்போம். எது எதிரியை அச்சுறுத்துகிறதோ அதனை கொண்டாடுவோம். இன்னும் ஆயிரமாயிரம் சோஃபியாக்களின் தயக்கத்தை அது உடைக்கட்டும்.

ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

மீபத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் ஒன்றில் பேச நேர்ந்தது. அதன் உள்ளடக்கம் ஒன்றும் தனிச் சிறப்பானதல்ல, ஓரிரு நிமிட இணைய உலாவலில் கிடைக்கும் ஆலோசனைகளை மட்டுமே கொடுத்தோம். அவற்றை எளிமையாகவும் பயன்பாட்டுக்கு உகந்த வகையிலும் தரவேண்டும் என்பதால் அந்த உரைகளை ஆங்கிலத்தில் மட்டுமே தர முடியாது என வாதிட்டு அதனை ஆற்றுப்படுத்துனர் தரப்பின் சார்பாக செயல்படுத்தி விட்டோம்.

“மத்தவங்க எல்லாம் நெறைய சொன்னாங்க (ஆங்கிலத்தில்), அதை கேட்டுட்டு போய் நம்ம பிள்ளைக்கு சொல்ல முடியலையேன்னு கஷ்டமா இருந்தது. நீங்க தமிழ்ல பேசினதுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தோம்”

நிகழ்ச்சி முடிந்து நீண்ட நேரம் பல பெற்றோர்களை சந்திக்க வேண்டியிருந்தது. சற்றேறக்குறைய 45 நிமிடங்களுக்கு ஒரு தம்பதி மட்டும் காத்திருந்தார்கள். வழமையாக அப்படி காத்திருப்பவர்கள் சற்றே பெரிய பிரச்சினையை விவாதிக்க வைத்திருப்பார்கள் என்பது எங்கள் அனுமானம். ஆனால் அவர்களை சந்தித்தபோது அந்த ஊகம் அடிப்படையற்றதாகிவிட்டது. அவர்கள் சொன்னது இதைத்தான் “மத்தவங்க எல்லாம் நெறைய சொன்னாங்க (ஆங்கிலத்தில்), அதை கேட்டுட்டு போய் நம்ம பிள்ளைக்கு சொல்ல முடியலையேன்னு கஷ்டமா இருந்தது. நீங்க தமிழ்ல பேசினதுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தோம்”.

ஆங்கில மொழி
ஆங்கில மொழியில் நடத்தபடும் பாடங்கள் புரிகிறதா இல்லையா என்பதைவிட பிள்ளைகள் ஆங்கிலத்துல நாலு வார்த்தைகள் பேசினாலே கெளரவம் என நினைக்கும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம்

சில மாதங்களுக்கு முன்னால் பதட்டநோய் அறிகுறியோடு 14 வயது மாணவர் ஒருவர் வந்தார். காலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் அவர் அன்றாடப் பணிகள் இரவு 8.30 வரை நீள்கிறது. காலை விளையாட்டுப் பயிற்சி, மாலை இரண்டு டியூஷன்கள். எதற்காக இரண்டு டியூஷன் என்று கேட்டேன். ஒன்றில் வீட்டுப் பாடங்களை முடிப்பேன் இரண்டாவது டியூஷனில் கணக்கையும் அறிவியலையும் ”தமிழில்” சொல்லிக் கொடுப்பார்கள் என்றார். அதாவது ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளியில் பெரும் பணம் கட்டி படிக்கும் மாணவர் அந்த பாடங்களை புரிந்து கொள்ள தமிழில் விளக்கும் டியூஷனுக்கு கூடுதலாக செலவளிக்கிறார்.

ஒரு உபரித் தகவல், சென்னையில் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தும் ஆசிரியருக்கு ஒருமணிநேர ஊதியம் 500 ரூபாய். அந்த வேலைக்கு வருடத்துக்கு 60 ஆயிரம் என ஒரே பேக்கேஜ் வாங்கும் ஆசிரியர்கள் உண்டு.

அதாவது ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளியில் பெரும் பணம் கட்டி படிக்கும் மாணவர் அந்த பாடங்களை புரிந்து கொள்ள தமிழில் விளக்கும் டியூஷனுக்கு கூடுதலாக செலவளிக்கிறார்.

ஆற்றுப்படுத்துனர்கள் மற்றும் உளவியல்சார் வேலைகளில் இருப்போருக்கான பயிலரங்கங்களில் அடிக்கடி பங்கேற்க வேண்டியிருக்கும். அங்கெல்லாம் கூட ஆங்கில உரைகளின் போது ஒரு கடுமையான இறுக்கத்தை காண இயலும். அதையே தமிழில் நடத்துகையில் பார்வையாளர்களது பங்கேற்பு பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். அப்படியான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் எல்லோரும் தமிழ் வழியில் கற்றவர்கள் அல்ல. பல தருணங்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் ஆங்கில வழியில் படித்தவர்களாகவே இருப்பார்கள்.

அனுபவ ரீதியாக மதிப்பிடுகையில், வீட்டு உரையாடலை ஆங்கிலத்தில் நடத்தும் நபர்கள் மற்றும் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மட்டுமே ஆங்கில உரைகளின் போதும் பாடங்களின் போதும் சிரமமில்லாமல் கவனிக்கிறார்கள் (பல உயர் மத்தியதர வர்க்க வீடுகளில் பேச்சு மொழி ஆங்கிலமாக இருக்கிறது). பெருநகரங்களில் கூட இந்தப் பிரிவு மக்கள் அதிகபட்சம் 10% விழுக்காட்டுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களது அடியொற்றியே பெரும்பாலான கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன.

ஆங்கிலத்தின் மீதான பிடிவாதமான மோகம் (அப்சஷன்) ஒரு மதத்தைப் போல நம்மை பீடித்திருக்கிறது. அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையில்தான் பெரும்பான்மை பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

“ஒன்பது வருசமா அங்க படிக்கிறான், இன்னும் ஒழுங்கா இங்கிலீஷ் பேச வரல. இந்த வருசம் ஸ்கூலை மாத்திரலாம்னு இருக்கேன்” என சலித்துக் கொண்டார் ஒரு நண்பர். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பது உபரித் தகவல்.

இந்த ஆங்கில பக்தி எப்படியெல்லாம் அறிவுத் திறனை சிதைக்கிறது?

ஆங்கில வழிக்கல்வி
ஆங்கில வழிக்கல்வி நம் பிஞ்சுகளின் அறிவை வளர்க்குமா ? சிதைக்குமா?

 

 

 

 

 

 

 

முதலில் அது வகுப்பறையை உயிரோட்டமற்ற இடமாக மாற்றுகிறது. கற்பித்தல் என்பது தெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்லும் பணி. ஒரு ஆசிரியர் தனக்கு தரப்பட்ட பாடத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கினாலே போதும். மற்றவற்றை ஒரு மாணவனே கூட தேடிக் கண்டடைய எல்லா வாய்ப்புக்களும் இன்று கிடைக்கின்றது. அந்த ஆர்வத்தை உருவாக்க எளிமையான மொழிநடையும், உதாரணங்களும் கூடவே துடிப்பான உரையாடல்களும் தேவை. இந்த மூன்றையும் சிதைப்பது ஆங்கிலத்தில் பேசவேண்டும் எனும் கட்டாய சூழல் (அது தமிழில் பேசும்போதும் நிகழலாம் என்றாலும் கட்டாய ஆங்கிலம் அதனை மூர்க்கமாக செய்கிறது).

மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம் நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள். மாணவர்கள்  எளிதில் கவனம் சிதறும் இயல்பு கொண்டவர்கள் என்பதால் அவர்கள் குறும்பு செய்யவோ அல்லது வேறு யோசனைக்கு செல்லவோ நேர்கிறது. இது அதிகரிக்கையில் ஆசிரியர் ஆர்வமிழக்கிறார். என் பார்வையில் இதுவே பள்ளி ஒழுங்கீனத்தின் (பாடத்தை கவனிக்காதிருப்பது, வகுப்பு நேரத்தில் சேட்டைகள் செய்வது உள்ளிட்ட) ஆரம்ப காரணி. மேலும் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப்பதால் ஆசிரியர் தமது அறிவின் பரப்பை ஆங்கில மொழித்திறன் எனும் குறுகிய எல்லைக்குள் அடக்க வேண்டியிருக்கிறது. இதனால் உதாரணங்களை அவர் தவிர்க்க நேரலாம். எதிர்திசையில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க இயலாமல் போகிறது.

மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம் நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள்.

பல சமயங்களில் பாடத்தில் சந்தேகம் என்பது முழு பாடத்தையுமே மீண்டும் கேட்பதாக இருப்பதை பார்த்திருக்கிறேன்.

ஆண்டு விழாக்களில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பது பாட்டு, நடனம் மற்றும் மைம் போன்ற உரையாடல் அவசியமற்ற நிகழ்ச்சிகளில் மட்டும்தான். காரணம் ஆங்கில உரையாடல்கள் தேவைப்படும் நாடகங்கள் அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது (எலைட் பள்ளிகளையும் சேர்த்தே சொல்கிறேன்). இன்னுமொரு காரணி அவர்களை நாம் சிந்திக்க விடுவதில்லை, ஆகவே (நடனம் போன்ற) பயிற்சி மட்டுமே தேவைப்படும் பிற வாய்ப்புக்களை மட்டும் தெரிவு செய்கிறார்கள்.

ஜி.ஹெச்.க்யூ, இ.பி.க்யூ போன்ற உளவியல் சார் மதிப்பீட்டுக்கான கேள்வித் தாள்களை நிரப்ப அனேகமாக எல்லா மாணவர்களும் தடுமாறுகிறார்கள் (இதிலும் எலைட் பள்ளி மாணவர்கள் அடக்கம்). ஆங்கில ஞானத்தை நோக்கி தவமிருக்கும் பெற்றோரும் பள்ளிகளும் வளர்க்கும் பிள்ளைகளின் நிலை இது.

ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனும் கட்டாயம் உள்ள பள்ளிகளில் நாம் கேட்கும் வார்த்தைகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஹேய் கம்டா, கோடா, கிவ்டா ஆகியவை சில உதாரணங்கள். ஒருமுறை மாணவர் ஒருவர் ’’ஹி இஸ் கிண்டலிங் மீ’’ என சக மாணவர் மீது குற்றம் சாட்டினார்.

தனியார் பள்ளிகளில் ஒரு சர்வே நடத்திப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிரமமாக இருக்கிறது என்பார்கள். எந்த மொழியில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதே மொழியை  ஒரு பாடமாகக் கற்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்த முரண்பாடு நமது கல்வியமைப்பின் பெரும் தோல்வி!

கணக்கும் ஆங்கிலமும் சிரமமாக இருக்கிறது என்று சொல்லும் மாணவர்களைத்தான் இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறோம். இப்போது தனியார் பள்ளிகளில் ஒரு சர்வே நடத்திப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிரமமாக இருக்கிறது என்பார்கள். எந்த மொழியில் தங்களுக்கு பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதே மொழியை  ஒரு பாடமாகக் கற்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்த முரண்பாடு நமது கல்வியமைப்பின் பெரும் தோல்வியின் சிறிய அறிகுறி.தமிழ் எளிதாக இருக்கிறது என்று சொன்ன ஒரேயொரு மாணவரைத்தான் கடந்த ஓராண்டில் சந்தித்திருக்கிறேன். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் மாணவர்

தமிழ் வழிக்கல்வி
பொதுவாக செய்திகள் வாசிப்பதிலும் ஆங்கிலமே அறிவு என்கின்றனர்.

 

 

 

 

 

 

 

இங்கே வழக்கமான கற்றல் நடைமுறை என்பது கேள்விகளையும், அதற்கான பதில்களையும் மனப்பாடம் செய்ய வைத்து இந்த கேள்விக்கு இந்த பதில் எழுத வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் மாணவர்களை தேர்வுக்கு தயாரிக்க இந்த வழிமுறையே எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. அது 12-ம் வகுப்புவரை தொடர்கிறது. எதற்காக ஒன்றாம் வகுப்பிலேயே வாக்கியங்களை எழுதும்படியான பாடத்திட்டத்தை நம் நாட்டில் வைத்திருக்கிறோம் என்பது புரியவில்லை. அதைக்கூட ஒரு ஆசிரியரால் சமாளிக்க முடியும். ஆனால் அதோடு சேர்த்து மாணவனுக்கு பரிச்சயமில்லாத ஒரு மொழியையும் அவர் கற்றுத்தர வேண்டியிருப்பதால் அவர்களுக்கு இதைத்தவிர வேறு வாய்ப்பில்லை.

சர்வதேச பாடத்திட்டத்தில் பெரும்பாலும் மனப்பாடம் செய்து பதில் எழுத இயலாது, பதிலை நீங்கள் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் இருந்து படித்து அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே அதில் பயிலும் தன் மகனுக்கு பதிலை கண்டுபிடித்து – எழுதித்தந்து – பிறகு சொல்லிக் கொடுக்க தனி ஆசிரியரை நியமித்திருக்கிறார் ஒரு தொழிலதிபர்

ஏன் அரசுப் பாடத்திட்டத்துக்கு தனியார் பதிப்பக புத்தகங்களை வாங்குகிறீர்கள்? என்று ஒரு பள்ளி ஒருங்கிணைப்பாளரை கேட்டேன். அரசு புத்தகங்களை வாங்கினா “இதை படிக்கனும்னா நாங்க கவர்மெண்ட் ஸ்கூல்லயே பையனை சேர்த்துருவோமே” ,ன்னு பெற்றோர்கள் குறைபட்டுக்குறாங்க என்கிறார் அவர். இந்த காரணத்துக்காவே கூடுதல் பாடங்கள் தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஹிந்தி அதில் முக்கியமானது. சென்ற ஆண்டுக்கான எங்கள் ஆய்வறிக்கையில் ஆற்றுப்படுத்துனர் சேவையை 35% எட்டாம் வகுப்பு மாணவர்கள் நாடியிருக்கிறார்கள்.

அடுத்த பெரும் எண்ணிக்கை ஏழாம் வகுப்பினர். இந்த எண்ணிக்கை ஒன்பதாம் வகுப்பில் 7.3% சதவிகிதமாக வீழ்கிறது, காரணம் ஹிந்தியும் கணினி அறிவியலும் 9, 10 வகுப்புக்களுக்கு கிடையாது. 10 மற்றும் 11-ம் வகுப்புக்களில் ஆற்றுப்படுத்துனரை நாடுவோர் எண்ணிக்கை மீண்டும் 22% ஆக உயர்கிறது- காரணம் பொதுத்தேர்வு அழுத்தம் மற்றும் பதின்பருவ குழப்பங்கள். ஆக பாடச்சுமையானது அவர்களது மனநலத்தில் தாக்கம் செலுத்துவது கண்கூடாக தெரிகிறது.  இது 2000 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியின் தரவு, பொதுவான சூழல் இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகமான சிக்கலுடையதாக இருக்கலாம்.

அல்லேலூயா கும்பல்கள் இயேசு வருவார் என வெறித்தனமாக நம்புவதைப் போல நாமும் ஆங்கில வழியில் படிப்பையே ஒரே மீட்பராக கருதும்படிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த முரட்டு நம்பிக்கைக்காக நாம் மிகப்பெரிய விலையை கொடுத்துக்  கொண்டிருக்கிறோம்.

அரசுப்பள்ளிகளில் இருக்கும் ஆங்கிலவழி வகுப்புக்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது தெரியவில்லை. அல்லேலூயா கும்பல்கள் இயேசு வருவார் என வெறித்தனமாக நம்புவதைப் போல நாமும் ஆங்கில வழியில் படிப்பையே ஒரே மீட்பராக கருதும்படிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த முரட்டு நம்பிக்கைக்காக நாம் மிகப்பெரிய விலையை கொடுத்துக்  கொண்டிருக்கிறோம். அதில் பல ஒருக்காலும் மீளப்பெற இயலாதவை.

ஆங்கில வழியின் மூலம் நாம் பெருந்தொகையான மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நாம் வெவ்வேறு வழிகளில் தண்டிக்கிறோம். ஓரளவு கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் தமிழை சிறப்பாக கற்பதை எங்கள் தரவுகளில் இருந்து அறிய முடிகிறது. காரணம் அதில் சொற்களை சேர்த்து வார்த்தையை உருவாக்குவது எளிது. தமிழில் அறிவு என்பதை அ -றி -வு என கோர்த்து எழுதுவது எளிது. ஆனால் ஆங்கிலத்தில் knowledge என எழுத்துக்களின் தொகுப்பை நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். தமிழில் அப்படியல்ல, நீங்கள் கேட்பதை அப்படியே எழுத்தாக்க முடியும். கற்பதற்க்கு எளிய மொழியை புறந்தள்ளுவதன் மூலம் நாம் (பெரும்பாலான) மாணவர்களின் கற்றலை இரட்டை சுமையாக்குகிறோம்.

ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் அதி அத்தியாவசியம் என நீங்கள் நம்பினாலும்கூட அதனை நாளுக்கு ஒரு மணிநேர பயிற்சியின் மூலம் சிறப்பாக செய்ய வைக்க இயலும். ”கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை” என்பது ராணுவ முகாம்களில் சொல்லப்படும் வாக்கியம். அதனை நாம் கல்வியில் செயல்படுத்துகிறோம். அதனால் பள்ளிக்கூடங்கள் போர்க்களங்களாக மாறியிருக்கிறது.

பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?

(வினவு தளத்திற்காக எழுதப்பட்டு ஜூலை 26, 2018 அன்று வெளியான கட்டுரை)

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குதான் ஜூலை 18-ம் நாளின் பிரதான செய்தி. சமூக ஊடகங்களில் கோபமும் பயமும் வழிந்தோடுகிறது. வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அடித்து வெளுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வாதாட முடியாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது (இது ஒரு குழந்தைத்தனமான நாடகம்). பாலியல் குற்றங்கள் மீதான இந்த திடீர் உணர்வெழுச்சி பல தருணங்களில் உருப்படியான பலன்களைக் கொடுப்பதில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோமே தவிர ஒரு சிக்கலின் காரணிகள் மற்றும் அதன் தீவிரத்தன்மை பற்றியும் அக்கறையின்றி இருக்கின்றோம்.

  • இந்த பாதகத்தை செய்தவனின் குறியை அறுப்போம், விசாரணை ஏதுமின்றி என்கவுண்டர் செய்யலாம் என்பதாக பலர் கொந்தளிக்கிறார்கள்.
  • பெண் குழந்தைகளுக்கு ’குட் டச், பேட் டச் ‘ கற்றுக்கொடுங்கள் என்கிறார்கள் சிலர்.
  • ஆண் குழந்தைகளை ஒழுங்காக வளருங்கள், பெண் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் என எழுதுகிறார் ஒருவர்.

ஏராளமான உளவியல் கண்ணோட்டங்கள் சுற்றுக்கு விடப்பட்டு, அவை சலிக்க சலிக்க விவாதிக்கப்பட்டாயிற்று (ஆனால், அவை எல்லாம் ஒரு நாள் மட்டுமே நீடித்தன). எனவே இந்த செய்தியை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு இதோடு தொடர்புடைய வேறொரு (கவனிக்கப்படாத) செய்தியை விவாதிக்கலாம்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் 150 பேரிடம் எடுக்கப்பட்ட தரவுகளின் படி அவர்களில் மூவரைத் தவிர ஏனையோர் யூடியூப் செயலியை பாவிக்கிறார்கள். அவர்களில் பலர் எதேச்சையாக பெரியவர்களுக்கான (18+) வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள் என்பதை தனிப்பட்ட உரையாடல்கள் மூலம் அறிய முடிகிறது (பள்ளி ஆற்றுப்படுத்துனர்களின் பணியிட தரவுகள் மூலம் பெறப்பட்ட செய்தி, மேலதிக தகவல்கள் தருவதற்கில்லை).

செல்பேசிகளில் யூடியூப் செயலியை நீக்கிவிட்டு யூடியூப் கிட்ஸ் செயலியை மட்டுமே நிறுவுமாறு நாங்கள் பெற்றோரை இப்போது வலியுறுத்துகிறோம்.

எட்டாம் வகுப்பில் காதல் எனும் வார்த்தை மிக சகஜமாக புழங்குகிறது. வகுப்பறையில் மாணவர்களிடையேயான முக்கியமான பேசுபொருளாக அது இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனக்கென ஒரு காதலரையோ அல்லது காதலியையோ (எதிர் தரப்பு ஏற்றுக்கொள்ளாமல் வெறும் விருப்பமாக கொண்டிருப்போர் உட்பட) கொண்டிருக்கிறார்கள். இதற்கான எச்சரிக்கைகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தரப்படுவது பள்ளிகளில் சகஜமாக இருக்கிறது.

இருபாலரும் பயிலும் பள்ளிகளில் 7 – 10-ம் வகுப்புக்களில் மாணவிகள் விகிதம் ஆரம்பப்பள்ளி எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் எப்போதுமே குறைவாக இருக்கும். பெண் பிள்ளைகளை 5ஆம் வகுப்போடு பெண்கள் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றிவிடுகிறார்கள். அதற்கு பள்ளிகளில் உள்ள காதல் பிரச்சினை மீதான அச்சமும் ஒரு காரணம்

பாலியல் குற்றங்கள்
ஒரு பதின்மூன்று வயது மாணவி, 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருக்கிறாள். அதை விட மோசமான விசயம் என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார்

பதின்மூன்று வயது மாணவி ஒருவரது டைரியை வாசித்தபோது, அதில் 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஒன்று வகுப்பறையில், இன்னொன்று அவரது நெருங்கிய உறவுக்காரரால் நடந்திருக்கிறது. சம்பவங்களைவிட மோசமான செய்தி என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண டிராஃபிக் விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார். (மாணவி வேறொரு பிரச்சினைக்காக ஆற்றுப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். டைரி அவரது ஒப்புதலோடு பெறப்பட்டது – சமயங்களில் கவுன்சிலிங் செயல்பாடுகளுக்கு டைரி உதவிகரமாக இருக்கும்)

இவை இருபாலரும் பயிலும் பள்ளிகளுக்கான பிரச்சினை மட்டும் என்று சமாதானமடைய வேண்டாம். ஆண்கள் பள்ளிகளில் ஹோமோ செக்ஷுவாலிட்டி ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை. பெண்கள் பள்ளியொன்றில் “ஃபிகர்” என்றொரு நடைமுறை இருக்கிறது. கீழ் வகுப்பு (6, 7 & 8) மாணவிகள் மேல் வகுப்பு மாணவிகளில் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து நீ எனது “ஃபிகராக” இருப்பாயா என கேட்பார். அவர் ஒப்புக்கொண்டால் இருவரும் முத்தமிட்டுக்கொண்டு பிரத்தியேக நண்பர்களாக தொடர்வார்கள் (இதில் அச்சமடைய ஒன்றுமில்லை. இது ஒரு வட்டாரத்தில் இருக்கும் கலாச்சார நடைமுறை என கருத எல்லா நியாயமும் இருக்கிறது. சாமியாடுவது, அன்னியபாஷை பேசுவது போன்ற ஆன்மீக கலாச்சாரங்களைப் போல).

ஹோமோ செக்‌ஷுவாலிட்டி ராணுவம் மற்றும் கப்பல் பணிகளில் சகஜம். அவர்களில் பலர் ”இயல்பு” வாழ்க்கைக்கு வந்த பிறகு அப்பழக்கத்தை தொடர்வதில்லை. இது பாலியல் நாட்டத்துக்கான வடிகாலாகவும் ஒருவரால் பயன்படுத்தப்படலாம்

இவை எல்லாம் உங்களை அச்சுறுத்துவதற்காக சொல்லப்படுபவை அல்ல. உங்கள் பார்வை எல்லைக்கு வெளியே உள்ள சிறார்கள் உலகத்தில் பாலுறவு பற்றிய அவர்களது ஆர்வமும், பல வெரைட்டிகளில் கிடைக்கும் போர்ன் வீடியோக்களும் பெருமளவு பாதகங்களை செய்துகொண்டிருக்கின்றன. பதின்பருவத்தின் துவக்கத்தில் பாலியல் ஆர்வம் என்பது மிக இயல்பானது. ஆனால் இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியும் குறைவான விளையாட்டு வாய்ப்புக்களும் அவர்களது இயல்பான பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

விளையாட்டில் ஈடுபடவும் ஏனைய பொது விசயங்களை பேசவும் நேரம் இருக்கையில் அவர்களுடைய பாலியல் நாட்டம் மட்டுப்பட வாய்ப்புண்டு. அவை இல்லாதபோது உள்ளார்ந்த விருப்பமான பாலுறவு ஆர்வமும் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் போர்ன் வீடியோக்களும் மாணவர்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன.

எல்லா மாணவர்களும் போர்ன் வீடியோ அடிமையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஆனால் வகுப்பறைகளில் பாலுறவு என்பது பேசுபொருளாகும்போது போர்ன் வீடியோ ஆர்வம் மற்றவர்களுக்கு பரவுகிறது. சுய இன்பம் மற்றும் ஆபாசப்படம் பார்க்கும் நாட்டம் ஆகியவற்றின் மீதான குற்ற உணர்வு கொண்ட பல மாணவர்களை பள்ளி ஆற்றுப்படுத்துனர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

சமூக வலைதளங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் எந்தவித அச்சமோ தயக்கமோ இல்லாமல் தங்கள் காதலை பகிரங்கப்படுத்துகிறார்கள். நெருக்கமானவர்களுக்கு மட்டுமேயான செய்தி எது எல்லோருக்கும் பகிரங்கப்படுத்த வேண்டிய செய்தி எது என்பதை பிரித்துப் பார்க்க அவர்களுக்கு தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் ஒரு பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆற்றுப்படுத்துனர்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றன.

இவை வெறுமனே நகர்ப்புறப் பள்ளிகளில் மட்டும் இருக்கும் பிரச்சினை என கருதவேண்டாம். கிராமப்பகுதி பள்ளிகளிலும் இதனையொத்த பிரச்சினைகள் இருக்கின்றன (இதில் முழுமையான தரவுகள் தரும் ஆட்கள் என் தொடர்பு வட்டத்தில் இல்லை). பாடம் நடத்தும்போது தமது அவயங்கள் குறித்து அசிங்கமாக மாணவர்கள் கிண்டலடிக்கிறார்கள் என்றார் ஒரு பெண் ஆசிரியர், அவர் குறிப்பிட்டது ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலரைப்பற்றி என்பது அவரது குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை உணர்த்தும்.

பாலியல் குற்றங்கள்
பல்வேறு திரைப்படங்களிலும் பெண் ஆசிரியர்கள் ஆபாசப் பண்டமாகவே காட்டப்படுகிறார்கள்.

சிதறலாக கிடைக்கும் இப்படியான பல்வேறு தரவுகளை ஒருங்கிணைத்து பார்க்கையில் அவை பெரிதும் கவலையுற வைக்கிறது. இவற்றை கையாள்வது என்பது ஆசிரியர் மற்றும் ஆற்றுப்படுத்துனரின் சக்திக்கு அப்பாற்பட்டவை என்றாலும் கவலைக்குரிய விடயம் அதுவல்ல.

பள்ளிகளில் இருக்கும் இத்தகைய பிரச்சினை குறித்த எந்த தரவுகளும் நம்மிடம் இல்லை (ஒருகோடி பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்).

அப்படியான தரவுகளை திரட்டுவதற்கான எந்த அமைப்பும் வழிகாட்டும் நெறிமுறைகளும் நம்மிடம் இல்லை. பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனர்கள் இருக்க வேண்டும் எனும் உயர்நீதிமன்ற உத்தரவு பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறது.

மாணவர்கள் பேசவும் செயல்படவும் மிகக் குறைவான வாய்ப்புக்களே அவர்கள் வசம் இருக்கின்றன. அதிலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் உழல வேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண அரட்டைக்குரிய நேரமும் விசயங்களும் குறைவாக இருப்பதால் கிடைக்கும் அவகாசங்களில் அவர்களுக்கான பேசுபொருளாக சினிமாவும் காதலும் செக்ஸுமே இருக்கின்றது (இருபாலரிலும்).  எண்ணிக்கையிலோ அல்லது சதவிகிதத்திலோ சொல்ல இயலாது. ஆனால் குறிப்பிடத்தக்க அளவிலான மாணவர்களுக்கு இது பொருந்தும். இவர்களில் சிலரை எளிதாக பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ளவும், பாலியல் குற்றங்களுக்கு கூட்டு சேர்த்துக்கொள்ளவும் முடியும்.

பாலியல்சார் நடத்தை சிக்கல்களை கொண்டிருக்கின்ற அல்லது பள்ளியில் காதல்வயப்படுகின்ற மாணவர்களை பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் முரட்டுத்தனமாக கையாள்கிறார்கள் (பள்ளியை மாற்றுவது மற்றும் கடும் தண்டனைகள் கொடுப்பது). இவ்வகையாக சிக்கல்களை கையாள்வது குறித்த தேர்ச்சி, கல்வித்துறையின் அதிகார அடுக்கில் அனேகமாக எங்கேயும் இல்லை.

இத்தகைய விவகாரங்களில், மூடி மறைக்கும் வேலையையே பள்ளிகளும் பெற்றோர்களும் செய்ய முற்படுகிறார்கள்.

பாலியல் குற்றங்கள்
குழந்தைகளை பாதிக்கின்ற விசயங்கள் மிக இயல்பாக நடந்தேறுகின்ற நாட்டில் “குட் டச், பேட் டச்” சொல்லித் தருவது மட்டும் பிரச்சினையை தீர்த்துவிடப் போதுமானதா ?

இன்னும் பத்தாண்டுகளில் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை செலுத்தப்போகிற இன்றைய மாணவர்கள் மீது நாம் கொஞ்சமும் அக்கறையற்று இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு துலக்கமான உதாரணம். இதில் மேற்குறிப்பிட்ட சில தடங்கல்கள் நிலைமையை இன்னும் சிக்கலாக்குகின்றன. இவற்றால் நாம் இத்தகைய சிக்கல்களை முன்கூட்டியே தடுக்கவும் வந்த பின்பு சரிசெய்யவும் உள்ள சாத்தியங்களை இழக்கின்றோம். இதன் பின்விளைவுகளை நம்மால் அனுமானிக்கக்கூட முடியாது என்பதே நிதர்சனம்.

ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்கு அதீதமாக கொந்தளித்து பிறகு களைத்துப்போய் அடுத்த அதிர்ச்சிவரை காத்திருப்பதே நமது செயல்பாடாக இருக்கிறது. இந்த இயல்பினால் பல சிக்கல்களை நம்மால் அடையாளம் காண முடியாமல் போகிறது (குறிப்பாக மாணவர் தொடர்பான விவகாரங்களில்). இதற்கு தீர்வு சொல்வது கட்டுரையின் நோக்கம் அல்ல, அது ஒரு சாமானியனால் ஆகும் காரியமும் அல்ல. ஆனால் இங்கே குறிப்பிட விரும்புகிற செய்தி, ஒரு மாணவியின் துயரத்துக்கு இவ்வளவு தூரம் ஆவேசம் கொள்கிற நம் நாட்டில்தான் பெருந்தொகையான மாணவர்களை பாதிக்கின்ற விசயங்கள் மிக இயல்பாக நடந்தேறுகின்றன. இதற்கான பரிந்துரைகள் தருமளவுக்கு எனக்கு ஞானமில்லை, ஆனால் நாம் இத்தகைய சிக்கல்களை சரிசெய்வதற்கான காலத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என எச்சரிக்கும் அளவுக்கு அனுபவம் இருக்கிறது. பதிவின் நோக்கமும் அதுதான்.

FIR போட வேண்டியது பாயம்மா மீதா ? விஜய் டி.வி நீயா நானா மீதா ?

(வினவு தளத்திற்கு எழுதப்பட்ட கட்டுரை, ஜூன் 19, 2018 அன்று வெளியானது)

மீபத்தில் நீயா நானா விவாத காட்சி நறுக்கொன்று முகநூலில் அதிகமாக பகிரப்படுகிறது. அதில் பேசும் பர்தா அணிந்த பெண் ஒருவர் பெரும் வசவுக்கு ஆளாகிறார் (முதியோர்களை காப்பகங்களுக்கு அனுப்புவது சரிதான் என கடுமையாக வாதிடுகிறார் அவர், அதில் தமது மாமியாரைப் பற்றியும் அதிகம் குற்றம் சொல்கிறார்). அந்த விவாதத்தை நான் முழுமையாக பார்க்கவில்லை, பார்க்கவும் விரும்பவில்லை.

நீயா நானா விவாதங்கள் பெருமளவு பேசுவோரை உசுப்பேற்றி அதன் மூலம் அவர்களை விவாதத்தில் முரட்டுத்தனமாக பேசவைத்து நடத்தப்படும் வியாபாரம். அங்கே மாமியார்-மருமகள், கணவன் – மனைவி போன்ற ஆபத்தில்லாத (பங்கேற்பாளருக்கு அல்ல, விஜய் டிவிக்கு ஆபத்தில்லாத என்று பொருள்) மற்றும் எளிதில் விற்பனையாகவல்ல தலைப்புக்களே விவாதிக்க தேர்வு செய்யப்படும். ஆகவே அந்த நிகழ்ச்சி குறித்து விவாதிப்பது அனாவசியம். ஆனால் அந்த பெண்மணி குறித்த எதிர்வினைகள், வசவுகள் ஆகியவை சில கண்ணோட்ட அபாயங்களை அறியத் தருகின்றன.

மாமியார் சாப்பாட்டுக்கு கணக்கு பார்க்கிறார் எனும் குற்றச்சாட்டை வைத்து அவர் கொடூரமானவராக சித்தரிக்கப்படுகிறார். நான் ஒன்னும் சும்மா முதியோர் இல்லத்துக்கு அனுப்பல, காசு கொடுத்துத்தான் தங்க வைக்கிறேன் என்பது அவர் வாதமாக இருக்கிறது. போகட்டும் சாப்பாட்டுக்கு கணக்கு பார்க்கும் மருமகள் எல்லாம் கொடுமைக்காரி என்றால் நாம் சரிபாதி பெண்களை அந்த பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்கும். அதில் நமக்கு நெருக்கமான பலரும் இருக்கக்கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை தேவயானிக்கும் அவரது மாமியாருக்கும் நடந்த சண்டை பத்திரிகைகளில் வெளியானது. கிராமத்துப் பெண்மணியான அந்த மாமியாரின் பேட்டி ஒன்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதில் அவர் தேவயானியின் தம்பியை பற்றி இப்படி குறை சொன்னார் “சட்டி சோறு திம்பான் சார், செய்யிற சாப்பாட்டை டப்பா டப்பாவா போட்டு அவங்க வீட்டுக்கு அனுப்புவா”. இந்த மாமியாரை எப்படி விளங்கிக் கொள்வீர்கள்? சோத்துக்கு கணக்கு பார்க்கும் கொடுமைக்காரி என்றா?!. அது அவரது அறியாமையின் வெளிப்பாடு. ஆனால் அதே வசனம் ஒரு மருமகள் வாயிலிருந்து வரும்போது நமக்குள் இருக்கும் நீதிபதி விழித்துக்கொள்கிறான்.

அதே விவாதத்தில் அந்த பாயம்மா வேறு சில பிரச்சினைகளை சொல்கிறார். பணத்தை இரண்டாம் பட்சமாக பார்க்க முடியாது, அப்படி பார்த்தால் கடன்காரன் அவமானப்படுத்துவதை சகித்துக் கொள்ள நேரிடும் என்கிறார். இதில் மிகைப்படுத்தல் இருக்கலாம். ஆனால் முதியோரை பராமரிப்பதில் பொருளாதாரக் காரணிகள் பெரும் இடைஞ்சலாக இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது குறித்து நம் சிந்தனை போகாமல் சிக்கிய நபரை வில்லியாக்கி நாம் நமது ஆத்திரத்துக்கு வடிகால் தேடுகிறோம் இல்லையா?? அதுதான் பெரிதும் கவலையுற வைக்கிறது. பத்து நிமிட ”செறிவூட்டப்பட்ட” பேச்சைப் பார்த்து நம்மால் ஒரு பெண்மணியை ”கொடுமைக்காரி” என தீர்மானித்து அவருக்கு நரகம்தான் கிடைக்கும் என சபிக்க இயலுமானால், “வெறுமனே விளம்பரத்தையும் மேடைப் பேச்சையும் நம்பி, மோடி போன்ற ஒரு ஆளை சூப்பர்மேன் என நம்பவும் முடியும்”. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பைக்குள் 10 ரூபாய் வர இயலுமானால் அதே வழியில் 100 ரூபாய் போகவும் முடியும் இல்லையா?

இந்த ஒரு நபர் குறித்த நமது எதிர்வினைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இந்திய சமூக அமைப்பில் முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேர்மையாக பார்ப்போம்.

முதல் பெரும் பிரச்சினை நாம் வாழ்வதற்கான பரப்பு (வீட்டின் அளவு) பெருமளவு சுருங்கி விட்டிருக்கிறது. வழக்கமாக கிராமங்களில் முதியவர்கள் கூடுவதற்கு என தனியே இடமிருந்தது. சிறு நகரங்களிலும் அப்படியொரு வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. நடுத்தர வர்கத்தின் வீடுகளில் அவர்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு இடமிருந்தது. இப்போது வீடுகளின் பரப்பு சுருங்கி பொருட்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே இருக்கும் சிறிய பரப்பை எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் தேவையிருப்பதால் அதில் பெரியவர்கள் முன்னுரிமையை இழக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய தேவையற்ற வீடுகளில் பிரச்சினை குறைவாக இருக்கிறது (ஒப்பீட்டளவில்). ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகாது என பல ஆண்டுகளாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இந்த சுமுக சூழலுக்கு பெரிய காரணங்கள் அவசியமில்லை, ஒருவரை விட்டு ஒருவர் விலகியிருக்க தேவையான அளவுக்கு அவர்கள் வீடுகளில் இடமிருக்கிறது. எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர் வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விடுவார். காரணம் 4,5 பேருக்கு மேல் வசதியாக உட்கார இடமில்லாத வீடு அது.

முதியோர் இல்லம் (மாதிரிப் படம்)

அடுத்து எல்லாவற்றுக்கும் தேவைப்படும் பணம். பிள்ளைகள் கல்வி, வீடு, எதிர்கால சேமிப்பு, நிகழ்கால தேவைகள் என எல்லாமே முரட்டு செலவீனங்களாக இருக்கின்றன. அந்த முன்னுரிமையிலும் பெரியவர்கள்தான் அடிபட்டுப் போகிறார்கள். அறுபத்தைந்து வயதான ஓய்வுபெற்ற விரிவுரையாளர் ஒருவர் இப்போது ஆற்றுப்படுத்துனராக பகுதிநேர வேலை செய்கிறார். அவரது பகுதிநேர சம்பளம் முழுதும் தம்பதிகளின் மருந்து செலவுக்கே போதாது. இவரும் முடங்கினால் அந்த சுமையை அவரது மகள் சுமக்க வேண்டும். ஆனால் அவரது பொருளாதாரம் அதை தாங்குமளவுக்கு இல்லை. இவ்வாறான கதைகள் வேறு வேறு வடிவில் பல வீடுகளில் கிடைக்கக்கூடும்.

இருக்கும் முதியவர்களின் ஓய்வுகால செலவுகளைப்போலவே தமது ஓய்வுகாலத்துக்கு என்று சேமிக்க வேண்டிய நெருக்கடியும் மக்களை வதைக்கின்றது. ஓய்வூதியம் இல்லாத ஒருவர் தமது ஓய்வுகாலத்தில் மாதம் ரூ. 30,000 வட்டியாகப் பெற வேண்டுமானால் 50 லட்சத்துக்கு குறையாமல் சேமித்திருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு, அவர்கள் கல்வி ஆகியவை இன்னுமொரு பெரும் செலவு. நீங்கள் பாவிக்கும் சாலை, பயன்படுத்தும் தண்ணீர் என எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. வாகனமும் செல்போனும் இல்லாமல் அன்றாட வாழ்வே சாத்தியமில்லாமல் போய்விட்டது. உங்கள் வருவாயை பிய்த்துத் தின்ன ஏராளமான செலவீனங்கள் காத்திருக்கையில் முதியவர்களை கருணையோடு அணுக அசாத்தியமான இரக்க குணம் வேண்டும். ஆனால் தாராளமயம் யார் மீதும் இரக்கம் கொள்ளாதே, உடனிருப்பவனை உதறிவிட்டு ஓடு, முன்னிருப்பவனை மிதித்துவிட்டு ஓடு என கற்பிக்கிறது. சாப்பாட்டுக்குகூட கணக்கு பார்க்கும் அல்பத்தனம் தாராளமயத்துக்குப் பிறகுதான் அதிகரித்திருக்கிறது.

தாரளமயம் தனியார்மயம் ஆகியவை  மனித மாண்புகளை இரண்டாம்பட்சமாக்கி விட்டன. அது கற்பித்திருக்கும் முதலீட்டு மனோபாவம் எல்லாவற்றிடம் இருந்தும் ஒரு பொருளாதார பலனை எதிர்நோக்கும் இயல்பை மக்களிடம் திணித்திருக்கிறது. மூத்த குடிமக்களின் ஆகப்பெரும் சாபம் இந்த இயல்புதான். அதுவே அவர்களை தேவையற்ற சுமையாக கருத வைக்கிறது. ”எங்கப்பா ஒழுங்கா பணம் சேர்த்து வச்சிருந்தா நான் இப்படி கஷ்டப்பட்டிருப்பேனா” எனும் புலம்பல்களை பல வீடுகளில் சாதாரணமாக கேட்க முடியும். பிள்ளைகளின் படிப்புக்கு கொட்டப்படும் பணத்தை எதிர்காலத்துக்கான முதலீடாக விளம்பரங்கள் காட்டுகின்றன. ஆனால் முதியோரின் ஓய்வுகால தேவைகள் பற்றிய விளம்பரங்களில் அது பிள்ளைகளின் கடமை என்பதாக இருக்கவே இருக்காது. நீ சேர்த்துவைத்தால்தான் உன் ஓய்வுகாலம் மரியாதையாக இருக்கும் என்பதாவே இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

மேற்சொன்ன காரணிகளில் எதுவுமே தனிப்பட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் இல்லாதவை. முதியோர் நல்வாழ்வை சிதைக்கும் இன்னும் பல காரணங்களை பட்டியலிட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை தனிப்பட்ட நபர்களின் இயல்பின் காரணமாக உருவாகியிருக்காது. வேறு சில சாத்தியங்களை பரிசீலிக்கலாம்,

ஒருவேளை கல்வி என்பது முற்றிலும் அரசின் பொறுப்பாக இருந்திருந்தால்??

பெரும்பான்மை மத்தியதர வர்க்கம் தங்கள் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிக்க முடியும். அது சாத்தியப்பட்டால் முதியோருக்கு செலவிடுவதில் அவர்களுக்கு தயக்கம் குறையக்கூடும்.

ஒருவேளை ரியல் எஸ்டேட் தொழில் ஒரு கருப்புப்பண சொர்க்கமாக இருந்திராவிட்டால்?

நகர்ப்புற வீட்டு விலைகள் கட்டுப்படியாகும் அளவில் இருந்திருக்கும். முதியோர் பயன்பாட்டுக்கென தனிப்பட்ட இடத்தையும் கணக்கில் கொண்டு வீடுவாங்கும் சாத்தியம் மக்களுக்கு கிடைத்திருக்கும். மேலும் பொதுப்பயன்பாட்டுக்கென (பூங்கா போன்ற) உள்ள இடங்கள் அதிகம் திருடப்பட்டிருக்காது. அவற்றையும் முதியவர்கள் பயன்படுத்திக்கொள்ள சாத்தியம் இருந்திருக்கும்.

ஒருவேளை விவசாயத்தை லாபகரமான தொழிலாக வைத்திருக்க அரசு முயற்சி செய்திருந்தால்?

கோடிக்கணக்கான மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி அகதிகளாக ஓடிவர அவசியம் இருந்திருக்காது. வயதானவர்கள் ஓரளவு மன நிம்மதியோடும் சுயசார்போடும் தம் வாழ்நாளை கடத்த இயலும்.

ஒருவேளை முதியோர் மருத்துவத்தை அரசு தன் பொறுப்பில் வைத்திருந்து அதனை எளிதில் கிடைக்கும்படி செய்திருந்தால்?

வசதியற்ற குடும்பங்கள் தம் பெற்றோரை பார்த்துக்கொள்வதில் தயக்கம் காட்ட அவசியம் இருந்திருக்காது.

ஒருவேளை ஓய்வுகால சேமிப்புக்கு நியாயமான வட்டி கிடைக்கும் என்றால்?

ஒரு குறிப்பிட்ட அளவான முதியோர்களாவது யாரையும் சாராமல் வழ்ந்திருக்க முடியும்.

இப்படி ஏராளமான “ஒருவேளை” கேள்விகளை அடுக்க இயலும். அவை எல்லாமே அரசு எனும் கட்டமைப்பை நம்பியிருப்பவை. அந்த கட்டமைப்பு ஒரு வட்டிக் கடைக்காரனைப்போல மாறியிருக்கிறது. மனித உயிர்களை மதிக்க விரும்பாத கிரிமினலைப்போல நடந்து கொள்கிறது. இந்த சூழலில் வாழும் மனிதர்கள் தாங்களும் அரசின் அந்த இயல்பை தன்னியல்பாகவோ அல்லது வேறுவழியின்றியோ ஏற்றுக்கொள்ள தலைப்படுகிறார்கள். அத்தகைய மக்கள் கூட்டத்திடம் தனிமனித நல்லியல்புகளை பிரசங்கம் செய்வதும் வலியுறுத்துவதும் கூட ஒரு மோசடிதான். எது எப்படிப் போனாலும் ஆண்டவனை தொழு, நீ செத்தால் சொர்க்கம் உறுதி எனும் மதங்களின் வாதத்துக்கு நிகரானது இது.

ஆனாலும் அந்த ”பாயம்மா” பேசியது தவறில்லையா என கேட்கிறீர்களா?

பாயம்மா மீது எஃப்.ஐ.ஆர் எழுதும் முன்னால் நாம் நீயா நானா நிகழ்ச்சியின் வடிவத்தை விளங்கிக்கொள்வது அவசியம். அது ஒரு கருத்தாடல் களம் அல்ல, சற்றே வித்தியாசமான பேச்சுப் போட்டி அது. அங்கே உங்கள் வாதம் வென்றாக வேண்டும் எனும் விதிதான் வலியுறுத்தப்படும். அவர்கள் உங்கள் உணர்வுகளை தூண்டவல்ல பிரச்சினைகளையே தெரிவுசெய்வார்கள். அப்படி தூண்டிவிட்டு அதனை லாவகமாக எடிட் செய்வதில் நீண்ட அனுபவம் கொண்டது நீயா நானா குழு.

நாம் காணும் 1 மணிநேர காட்சிகள் என்பவை 5 முதல் 6 மணிநேரம்வரை படம் பிடிக்கப்பட்டதன் “தேர்ந்தெடுக்கப்பட்ட” வடிவம். சமயத்தில் நீங்கள் விரும்பாத தரப்பில் கூட உட்காரவைக்கப்படலாம் (டி.வி சான்ஸ், நீங்கள் இழக்க விரும்ப மாட்டீர்கள்). ஆகவே நீங்கள் கேட்ட பாயம்மாவின் குரல் அவரே மிகைப்படுத்திக் கொண்டதாக இருக்கலாம். அல்லது பாயம்மாவை கரித்துக் கொட்டிய எதிர்தரப்பு பெண்மணிகள் இயல்பில் பாயம்மாவை விட கொடுமையான மருமகளாக இருக்கலாம். ஆகவே 10 நிமிட காட்சியை வைத்து ஒருவரை சபிக்க முற்படுவது நமது அரைவேக்காட்டு சிந்தனையின் வெளிப்பாடு.

இன்னொரு அம்சம், அந்த பெண்மணி ஒரு சமூக அமைப்பின் விளைவு, அவரை கிரிமினலாக கருதுவது சரியான முடிவல்ல. அதனை தீர்மானிக்க வேண்டியது அவரது மாமியார் உள்ளிட்ட அவரது குடும்பம்தான். ஒருவேளை அந்த மாமியார் முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருப்பாரேயானால் (மருமகளிடம் இருப்பதைவிட) அதில் நாம் கருத்து சொல்ல ஏதுமில்லை.

உங்கள் குழந்தைகளின் மீது முதலீடு செய்யத் தூண்டும் அதே நிதி நிறுவனங்கள், உங்கள் முதுமைக்கு தனியாக முதலீடு செய்யவும் கோருகின்றன.

நாம் எல்லா செய்திகளையும் ஆராய்ந்து எதிர்வினையாற்றுவதில்லை. நம்பகமான நபர்களையும் ஊடகங்களையும் தெரிவு செய்கிறோம். அவர்கள் சொல்வதை ஆராயாமல் ஏற்றுக்கொள்கிறோம். நீயா நானா நிகழ்ச்சியை நல்ல கருத்தாடல் களம் என நாம் நம்புகிறோம் அதனாலேயே அதில் பேசியதை வைத்து நம்மால் ஒருவரை எளிதில் “லேபிள்” செய்ய முடிகிறது.

மேலும் நாம் சரியான தீர்வுக்கு மெனக்கெடுவதில்லை. எளிமையான தீர்வுகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். சரியான தீர்வு என்பது நமது அறிவு உழைப்பு மற்றும் நேரத்தை கேட்கும். உடனடி தீர்வுகள் தேவைப்படும்போது கையில் சிக்கும் ஆட்களை அடித்துவிட்டு ஆறுதல் பட்டுக் கொள்வதைத்தவிர வேறு சாத்தியம் இல்லை.

தர்க்க அறிவை பயன்படுத்தாமல் இப்படி முடிவெடுப்பது என்பது மனிதர்களின் இயல்பான பலவீனமாக இருக்கலாம். ஆனால் அது (அரசு உள்ளிட்ட) மக்கள் விரோத சக்திகளின் ஆயுதமாக இப்போது மாறியிருக்கிறது. நக்சலைட் மற்றும் தீவிரவாத பூச்சாண்டி காட்டி அரசு தம் அழிவுப் பணிகளை செய்கிறது. விஜய் டிவி அந்த பாயம்மாவை வில்லியாக்கி லாபம் பார்ப்பது போல சங்கப்பரிவார அமைப்புகள் முஸ்லீம்கள் எல்லோரையும் வில்லனாக காட்டி லாபம் பார்க்கின்றன.

குழந்தைகளை கடத்துகிறார்கள் என வாட்சப்பில் வதந்தி பரப்பி சுலபமாக பலரை கொல்ல முடியும் சூழல்தான் நம் நாட்டில் இருக்கிறது. ஒரு ஹீரோ வந்தால் சரியாகும்; ஒரு வில்லனை அழித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதெல்லாம் மொக்கை சினிமாத்தனமான நம்பிக்கைகள். தனி மனிதன் திருந்தினால் மாற்றம் வரும் என்பதெல்லாம் சாமியார்கள் மற்றும் என்.ஜி.ஓக்களின் வியாபார ஃபார்முலா.

நீங்கள் அந்த பாயம்மாவை மட்டும் வில்லியாக கருதினால், சங்.பரிவார் மற்றும் வாட்சப் வதந்தி கோஷ்டிக்கு பலியாகும் வாய்ப்பு உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. ஆகவே வெறுமனே சில காட்சிகளை வைத்து உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றுவதை தவிர்த்து, பிரச்சினைகளை சமூக அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கவும் விவாதிக்கவும் பழகுவோம். இன்றிருக்கும் நெருக்கடியான அரசியல் சூழலில் அதனை உயர்ந்த மானுடப் பண்பு என்றெல்லாம் வரையறுக்க முடியாது… இப்போது அது ஒரு பிழைத்திருப்பதற்கான உத்தி (survival technique).

தூத்துக்குடி படுகொலைகள் : சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா?

(வினவு தளத்திற்காக எழுதப்பட்டு ஜூன் 18 ல் வெளியான கட்டுரை)

மகால தமிழக வரலாற்றின் மிக மோசமான அத்தியாயம் வேதாந்தாவுக்காக எடப்பாடி பழனிசாமி அரசு நடத்திய படுகொலைகள்தான். ஒரு சாதாரண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை அனேகமாக மாநிலத்தில் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.

மோடியும் எடப்பாடியும் நீங்கள் நம்பவே விரும்பாத காரியங்களை மட்டுமே செய்வார்கள் என்பதால் அந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதுகுறித்த ஏராளமான விவாதங்களும் போராட்டங்களும் நடந்து இப்போது தமிழகம் அடுத்த பிரச்சினையை நோக்கி நகர்த்தப்பட்டுவிட்டது.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

நடந்த விவாதங்களை கவனிக்கையில் ஒரு பொதுத்தன்மையை காண முடிகிறது. போலீஸ் வெறும் ஏவல் நாய் மட்டுமே, நாம் உத்தரவிட்டவர்களை கண்டிப்போம் என்பதாக பலரும் கருத்திடுகிறார்கள்.

போலீஸ் தரப்பில் இருந்து அனாமதேய பொழிப்புரைகளும் ஊடக தரப்பில் இருந்து சில அய்யோ பாவம் பாணி கட்டுரைகளும் வெளியாகின்றன. அவை போலீஸ் வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்பதாக இருகின்றன.

எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து புரிந்துகொள்ள முற்படும்போது, நாம் தமிழ்நாடு போலீசின் கொடூர முகத்தை மிகவும் நீர்த்துபோன வடிவில் புரிந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம் என்பது புலனாகிறது. ஏவல் நாய்கள் என கடும் சொல்லால் அவர்களை அழைப்பதே வேறு வடிவிலான அய்யோ பாவம் பாணி விமர்சனம்தான்.

தூத்துக்குடி படுகொலையின் தீவிரத்தன்மையை உணர்ந்தவர்களால் அது வெறுமனே உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிகழ்த்தப்பட்ட கொலைகள் அல்ல என்பது புரியும். செத்தவர்கள் அருகாமையில் இருந்து சுடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிகிறது. ஒரு 16 வயது சிறுமியும் அவ்வாறே கொல்லப்பட்டிருப்பார்.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

காவல் வண்டியின் மீதேறி சுடும் காட்சியின் உரையாடலை கவனியுங்கள், துப்பாக்கிய நீட்டிப் பிடித்திருக்கும் போலீசின் முகபாவத்தை கவனியுங்கள், இறந்து கிடக்கும் இளைஞன் மீது காலால் எட்டி உதைத்து “நடிக்காதடா” என மிரட்டும் போலீசின் எதிர்வினையை கவனியுங்கள்.. இவற்றில் ஏதேனும் ஒரேயொரு உணர்வோடு உங்களால் ஒரு நாயையேனும் கொல்ல இயலுமா?

இவைதான் சாதாரண மனிதனையும் போலீஸ்காரனையும் வேறுபடுத்தும் புள்ளி. ஒரு கொலையை தொழில்முறை கிரிமினல் செய்வதையும் அல்லது ஒரு சித்தாந்த வெறியூட்டப்பட்ட மதத்தீவிரவாதி செய்வதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அவர்கள் அந்தக் கொலை குறித்து குற்ற உணர்வு கொள்ளாதிருக்க பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள்.

அல்லது இயல்பிலேயே குற்ற உணர்வற்ற ஆண்ட்டி- சோஷியல் சைக்கோபாத்கள் அப்படி செய்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் இந்த இயல்பு எப்படி சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஆட்களிடம் இருக்க முடியும்?

மிக இயல்பாகவும் தொழில் நேர்த்தியோடும் நிராயுதபாணிகளாக ஓடும் மக்களைப் பார்த்து சுட்டுத்தள்ள முடிகிற கும்பலை நம்மிடம் அய்யோ பாவம் என அறிமுகப்படுத்துகின்றன ஊடகங்கள். விமர்சனம் ஏதும் இன்றி நாம் அதனை ஏற்றுக்கொள்கிறோம். பொது சமூகம் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

உங்களால் தவிர்க்க இயலாத மனிதர்கள், உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயத்தை பெற்றுத்தரும் பொறுப்பில் உள்ள மனிதர்கள் “சிலரைக் கொன்றால்” பிரச்சினையை முடித்துவிடலாம் எனும் தீர்வை தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வசம் துப்பாக்கிகள் இருக்கின்றன.

இறந்து கிடக்கும் இளைஞன் மீது காலால் எட்டி உதைத்து “நடிக்காதடா” என மிரட்டும் போலீசின் எதிர்வினையை கவனியுங்கள்..

அவர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டாலும் கைது செய்ய இயலாத அளவுக்கு அரசு அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறது (விழுப்புரம் இருளர் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டதற்கு அரசு என்ன செய்த்து என யோசித்துப்பாருங்கள்). இதைவிட மோசமான வாழ்க்கைச் சூழல் அனேகமாக நாஜி அரசிடம் வாழ்ந்த யூதர்களுக்கு வேண்டுமானால் இருந்திருக்கலாம்.

போலீஸ் தரப்பு வாதங்களை பார்க்கையில் மேற்சொன்ன கருத்து ஊர்ஜிதமாகிறது. ரப்பர் குண்டு இல்லை அதனால் நிஜ தோட்டாக்களால் சுட்டோம் என்கிறார் ஒரு அதிகாரி. போராட்டத்தின் காரணம் நல்லதா கெட்டதா என பார்ப்பது போலீசின் வேலையல்ல என்கிறார் டிவி விவாதமொன்றில் கருணாநிதி எனும் முன்னால் போலீஸ் அதிகாரி.

ஒரு போலீஸ்காரரின் பெயரில்லாத வாட்சப் உரை ஒன்று எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நாங்களே அடிமை வாழ்வு வாழுறோம் என அங்கலாய்க்கிறது. ஒரு பெண் போலீசின் வாட்சப் பேச்சு (இந்து தமிழில் செய்தியாக வந்திருக்கிறது) எங்களுக்கு வேலை பர்க்கும் இடத்தில் கக்கூஸ் இல்ல, வெய்யில்ல நிக்கிறோம், 24 மணிநேரம் வேலை பார்க்குறோம் ஆனாலும் மக்கள்கிட்ட எங்களுக்கு மரியாதை இல்லை என நீள்கிறது. தங்கள் கைகளால் 13 பேரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது எனும் குற்ற உணர்வோ அல்லது துயரமோ எந்த போலீசின் பேச்சிலும் வெளிப்படவில்லை.

ஏராளமான அரசு ஊழியர்கள் கால நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள். பலருக்கு மக்களிடம் மரியாதை இல்லை, சாமானிய மக்கள் பலருக்கு வாழ்நாள் முழுக்கவே சரியான வசிப்பிடமும் கழிவறையும் வாய்ப்பதில்லை. இவர்கள் யாரும் யாரையும் கொன்றுவிட்டு அதற்கு என் வேலைச்சுமையும் மரியாதையின்மையும் காரணம் என எகத்தாளம் பேசுவதில்லை. கஷ்டங்கள் கூடினால் அதிகபட்சமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உயரதிகாரி வீட்டில் கக்கூஸ் கழுவும்போது வராத ஆத்திரம், அடிப்படை வசதியில்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படும்போது வராத ஆத்திரம், மாலை வரப்போகும் அமைச்சருக்காக காலை முதல் வெயிலில் நிற்கச்சொல்லும்போது வராத ஆத்திரம் எல்லாம் உயிருக்கு அஞ்சி ஒடும் மனிதர்கள் மீதும் எதிர்த்து கேட்கும் ஒரு சிறுமி மீதும் வருகின்றது என்றால்… அதன் பெயர் துணிச்சலோ மன அழுத்தமோ அல்ல. உச்சகட்ட சைக்கோத்தனம். குற்ற உணர்வின்மை என்பது கிளினிக்கல் சைக்கோபாத்களின் பெரிய அதிமுக்கிய அறிகுறி.

ஒருபுறம் எந்த நியாயத்துக்கும் கட்டுப்படாமல் யாரையும் ஒடுக்கக்கூடிய கேட்பாரற்ற அதிகாரம், மறுபுறம் தமது அடிப்படை உரிமைகளைக்கூட கேட்க இயலாத நாயினும் கீழான அடிமைத்தனம் இந்த இருதுருவ இயல்பு போலீசை மட்டுமல்ல யாரையும் அபாயகரமானவர்களாக மாற்றிவிடும்.

உயரதிகாரி வீட்டில் கக்கூஸ் கழுவும்போது வராத ஆத்திரம், உயிருக்கு அஞ்சி ஒடும் மனிதர்கள் மீதும் எதிர்த்து கேட்கும் ஒரு சிறுமி மீதும் வருகின்றது என்றால்… அதன் பெயர் உச்சகட்ட சைக்கோத்தனம்.

விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சிறுதொழில் முதலாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டியதற்கான காரணங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. மிடில் கிளாசின் தாலியை அறுக்காமல் அரசாங்கம் நகர இயலாது எனும் அளவுக்கு பொருளாதாரம் பல்லிளிக்கின்றது. யார் வம்புக்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாய் வாழ்ந்துவிடலாம் எனும் நடுத்தர வர்க நம்பிக்கை காலாவதியாகிவிட்டது.

போராடாமல் வாழ முடியாது எனும் நிலைமைக்கு மக்கள் வந்திருக்கும் வேளையில் நாலு பேரை போட்டாத்தான் போராட்டம் அடங்கும் எனும் முடிவுக்கு அரசு வந்திருக்கிறது என்பதை தூத்துக்குடி சம்பவம் உணர்த்துகிறது. போலீஸ் எட்டி உதைக்கும் சாத்தியமுள்ள சாலையில் நாம் பயணிக்கிறோம், கேமராவுக்கு முன்பே குறிபார்த்து நிதானமாக சுட்டுத்தள்ளும் சுதந்திரம் கொண்ட காவலர்களின் வசம் நம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை எனும் கேள்விக்கு பதில் சொல்லக்கூட அவசியமற்றவர்களாக காவல் அதிகாரிகள் வாழ்கிறார்கள். காவல்துறை உயரதிகாரி மகளை கேள்வி கேட்டு அதை வீடியோ எடுத்த பாவத்துக்காக கை உடைக்கப்பட்டு நிற்கிறார் ஒரு போலீஸ்காரர், அதை (நக்கீரன் தவிர) செய்தியாக்க விரும்பாத ஊடகங்கள் வழியேதான் நீங்கள் நீதி கேட்டாக வேண்டும்.

வேறு வழியே இல்லை, போலீசின் கேட்பாரற்ற அதிகாரம் குறித்தும், அவர்களின் சிந்தனையில் ஊறிப்போயிருக்கும் சாதாரண மக்கள் மீதான வெறுப்பு, தன்னியல்பாக வெளிப்படும் பணக்கார மற்றும் உயர்சாதி விசுவாசம் ஆகியவை குறித்து பொது சமூகம் மிகத் தீவிரமாக விவாதித்தாக வேண்டும். அவர்களை மகிமைப்படுத்தும் எல்லா செய்திகள் மீதும் நமது விமர்சனங்கள் எழ வேண்டும்.

லாக்கப் கொலைகள் ஏன் பணக்காரர்களுக்கு நிகழ்வதில்லை, எச்.ராஜா எவ்வளவு மோசமாகப் பேசினாலும் ஏன் வழக்கு பாய்வதில்லை, சிறுமியின் வாயில் சுடும் அளவுக்கு கோபக்காரர்கள் ஏன் வினாயகர் ஊர்வலத்தில் மன்றாடி நிற்கும் சாந்த சொரூபிகளாக இருக்கிறார்கள் என்பதாக நாம் கேட்க நூற்றுக்கணக்கான கேள்விகள் இருக்கின்றன.

அவை பரவலாக கேட்கப்படாததால் போலீஸ் இன்னும் தீவிரமாக லத்திக் கம்புகளையும் துப்பாக்கிகளையும் காதலிக்கத் துவங்குகிறது. அவை ஒருபோதும் மக்களைக் காக்க பயன்பட்டதில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

%d bloggers like this: