தூத்துக்குடி படுகொலைகள் : சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா?

(வினவு தளத்திற்காக எழுதப்பட்டு ஜூன் 18 ல் வெளியான கட்டுரை)

மகால தமிழக வரலாற்றின் மிக மோசமான அத்தியாயம் வேதாந்தாவுக்காக எடப்பாடி பழனிசாமி அரசு நடத்திய படுகொலைகள்தான். ஒரு சாதாரண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை அனேகமாக மாநிலத்தில் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.

மோடியும் எடப்பாடியும் நீங்கள் நம்பவே விரும்பாத காரியங்களை மட்டுமே செய்வார்கள் என்பதால் அந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதுகுறித்த ஏராளமான விவாதங்களும் போராட்டங்களும் நடந்து இப்போது தமிழகம் அடுத்த பிரச்சினையை நோக்கி நகர்த்தப்பட்டுவிட்டது.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

நடந்த விவாதங்களை கவனிக்கையில் ஒரு பொதுத்தன்மையை காண முடிகிறது. போலீஸ் வெறும் ஏவல் நாய் மட்டுமே, நாம் உத்தரவிட்டவர்களை கண்டிப்போம் என்பதாக பலரும் கருத்திடுகிறார்கள்.

போலீஸ் தரப்பில் இருந்து அனாமதேய பொழிப்புரைகளும் ஊடக தரப்பில் இருந்து சில அய்யோ பாவம் பாணி கட்டுரைகளும் வெளியாகின்றன. அவை போலீஸ் வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்பதாக இருகின்றன.

எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து புரிந்துகொள்ள முற்படும்போது, நாம் தமிழ்நாடு போலீசின் கொடூர முகத்தை மிகவும் நீர்த்துபோன வடிவில் புரிந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம் என்பது புலனாகிறது. ஏவல் நாய்கள் என கடும் சொல்லால் அவர்களை அழைப்பதே வேறு வடிவிலான அய்யோ பாவம் பாணி விமர்சனம்தான்.

தூத்துக்குடி படுகொலையின் தீவிரத்தன்மையை உணர்ந்தவர்களால் அது வெறுமனே உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிகழ்த்தப்பட்ட கொலைகள் அல்ல என்பது புரியும். செத்தவர்கள் அருகாமையில் இருந்து சுடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிகிறது. ஒரு 16 வயது சிறுமியும் அவ்வாறே கொல்லப்பட்டிருப்பார்.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

காவல் வண்டியின் மீதேறி சுடும் காட்சியின் உரையாடலை கவனியுங்கள், துப்பாக்கிய நீட்டிப் பிடித்திருக்கும் போலீசின் முகபாவத்தை கவனியுங்கள், இறந்து கிடக்கும் இளைஞன் மீது காலால் எட்டி உதைத்து “நடிக்காதடா” என மிரட்டும் போலீசின் எதிர்வினையை கவனியுங்கள்.. இவற்றில் ஏதேனும் ஒரேயொரு உணர்வோடு உங்களால் ஒரு நாயையேனும் கொல்ல இயலுமா?

இவைதான் சாதாரண மனிதனையும் போலீஸ்காரனையும் வேறுபடுத்தும் புள்ளி. ஒரு கொலையை தொழில்முறை கிரிமினல் செய்வதையும் அல்லது ஒரு சித்தாந்த வெறியூட்டப்பட்ட மதத்தீவிரவாதி செய்வதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அவர்கள் அந்தக் கொலை குறித்து குற்ற உணர்வு கொள்ளாதிருக்க பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள்.

அல்லது இயல்பிலேயே குற்ற உணர்வற்ற ஆண்ட்டி- சோஷியல் சைக்கோபாத்கள் அப்படி செய்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் இந்த இயல்பு எப்படி சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஆட்களிடம் இருக்க முடியும்?

மிக இயல்பாகவும் தொழில் நேர்த்தியோடும் நிராயுதபாணிகளாக ஓடும் மக்களைப் பார்த்து சுட்டுத்தள்ள முடிகிற கும்பலை நம்மிடம் அய்யோ பாவம் என அறிமுகப்படுத்துகின்றன ஊடகங்கள். விமர்சனம் ஏதும் இன்றி நாம் அதனை ஏற்றுக்கொள்கிறோம். பொது சமூகம் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

உங்களால் தவிர்க்க இயலாத மனிதர்கள், உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயத்தை பெற்றுத்தரும் பொறுப்பில் உள்ள மனிதர்கள் “சிலரைக் கொன்றால்” பிரச்சினையை முடித்துவிடலாம் எனும் தீர்வை தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வசம் துப்பாக்கிகள் இருக்கின்றன.

இறந்து கிடக்கும் இளைஞன் மீது காலால் எட்டி உதைத்து “நடிக்காதடா” என மிரட்டும் போலீசின் எதிர்வினையை கவனியுங்கள்..

அவர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டாலும் கைது செய்ய இயலாத அளவுக்கு அரசு அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறது (விழுப்புரம் இருளர் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டதற்கு அரசு என்ன செய்த்து என யோசித்துப்பாருங்கள்). இதைவிட மோசமான வாழ்க்கைச் சூழல் அனேகமாக நாஜி அரசிடம் வாழ்ந்த யூதர்களுக்கு வேண்டுமானால் இருந்திருக்கலாம்.

போலீஸ் தரப்பு வாதங்களை பார்க்கையில் மேற்சொன்ன கருத்து ஊர்ஜிதமாகிறது. ரப்பர் குண்டு இல்லை அதனால் நிஜ தோட்டாக்களால் சுட்டோம் என்கிறார் ஒரு அதிகாரி. போராட்டத்தின் காரணம் நல்லதா கெட்டதா என பார்ப்பது போலீசின் வேலையல்ல என்கிறார் டிவி விவாதமொன்றில் கருணாநிதி எனும் முன்னால் போலீஸ் அதிகாரி.

ஒரு போலீஸ்காரரின் பெயரில்லாத வாட்சப் உரை ஒன்று எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நாங்களே அடிமை வாழ்வு வாழுறோம் என அங்கலாய்க்கிறது. ஒரு பெண் போலீசின் வாட்சப் பேச்சு (இந்து தமிழில் செய்தியாக வந்திருக்கிறது) எங்களுக்கு வேலை பர்க்கும் இடத்தில் கக்கூஸ் இல்ல, வெய்யில்ல நிக்கிறோம், 24 மணிநேரம் வேலை பார்க்குறோம் ஆனாலும் மக்கள்கிட்ட எங்களுக்கு மரியாதை இல்லை என நீள்கிறது. தங்கள் கைகளால் 13 பேரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது எனும் குற்ற உணர்வோ அல்லது துயரமோ எந்த போலீசின் பேச்சிலும் வெளிப்படவில்லை.

ஏராளமான அரசு ஊழியர்கள் கால நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள். பலருக்கு மக்களிடம் மரியாதை இல்லை, சாமானிய மக்கள் பலருக்கு வாழ்நாள் முழுக்கவே சரியான வசிப்பிடமும் கழிவறையும் வாய்ப்பதில்லை. இவர்கள் யாரும் யாரையும் கொன்றுவிட்டு அதற்கு என் வேலைச்சுமையும் மரியாதையின்மையும் காரணம் என எகத்தாளம் பேசுவதில்லை. கஷ்டங்கள் கூடினால் அதிகபட்சமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உயரதிகாரி வீட்டில் கக்கூஸ் கழுவும்போது வராத ஆத்திரம், அடிப்படை வசதியில்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படும்போது வராத ஆத்திரம், மாலை வரப்போகும் அமைச்சருக்காக காலை முதல் வெயிலில் நிற்கச்சொல்லும்போது வராத ஆத்திரம் எல்லாம் உயிருக்கு அஞ்சி ஒடும் மனிதர்கள் மீதும் எதிர்த்து கேட்கும் ஒரு சிறுமி மீதும் வருகின்றது என்றால்… அதன் பெயர் துணிச்சலோ மன அழுத்தமோ அல்ல. உச்சகட்ட சைக்கோத்தனம். குற்ற உணர்வின்மை என்பது கிளினிக்கல் சைக்கோபாத்களின் பெரிய அதிமுக்கிய அறிகுறி.

ஒருபுறம் எந்த நியாயத்துக்கும் கட்டுப்படாமல் யாரையும் ஒடுக்கக்கூடிய கேட்பாரற்ற அதிகாரம், மறுபுறம் தமது அடிப்படை உரிமைகளைக்கூட கேட்க இயலாத நாயினும் கீழான அடிமைத்தனம் இந்த இருதுருவ இயல்பு போலீசை மட்டுமல்ல யாரையும் அபாயகரமானவர்களாக மாற்றிவிடும்.

உயரதிகாரி வீட்டில் கக்கூஸ் கழுவும்போது வராத ஆத்திரம், உயிருக்கு அஞ்சி ஒடும் மனிதர்கள் மீதும் எதிர்த்து கேட்கும் ஒரு சிறுமி மீதும் வருகின்றது என்றால்… அதன் பெயர் உச்சகட்ட சைக்கோத்தனம்.

விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சிறுதொழில் முதலாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டியதற்கான காரணங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. மிடில் கிளாசின் தாலியை அறுக்காமல் அரசாங்கம் நகர இயலாது எனும் அளவுக்கு பொருளாதாரம் பல்லிளிக்கின்றது. யார் வம்புக்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாய் வாழ்ந்துவிடலாம் எனும் நடுத்தர வர்க நம்பிக்கை காலாவதியாகிவிட்டது.

போராடாமல் வாழ முடியாது எனும் நிலைமைக்கு மக்கள் வந்திருக்கும் வேளையில் நாலு பேரை போட்டாத்தான் போராட்டம் அடங்கும் எனும் முடிவுக்கு அரசு வந்திருக்கிறது என்பதை தூத்துக்குடி சம்பவம் உணர்த்துகிறது. போலீஸ் எட்டி உதைக்கும் சாத்தியமுள்ள சாலையில் நாம் பயணிக்கிறோம், கேமராவுக்கு முன்பே குறிபார்த்து நிதானமாக சுட்டுத்தள்ளும் சுதந்திரம் கொண்ட காவலர்களின் வசம் நம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை எனும் கேள்விக்கு பதில் சொல்லக்கூட அவசியமற்றவர்களாக காவல் அதிகாரிகள் வாழ்கிறார்கள். காவல்துறை உயரதிகாரி மகளை கேள்வி கேட்டு அதை வீடியோ எடுத்த பாவத்துக்காக கை உடைக்கப்பட்டு நிற்கிறார் ஒரு போலீஸ்காரர், அதை (நக்கீரன் தவிர) செய்தியாக்க விரும்பாத ஊடகங்கள் வழியேதான் நீங்கள் நீதி கேட்டாக வேண்டும்.

வேறு வழியே இல்லை, போலீசின் கேட்பாரற்ற அதிகாரம் குறித்தும், அவர்களின் சிந்தனையில் ஊறிப்போயிருக்கும் சாதாரண மக்கள் மீதான வெறுப்பு, தன்னியல்பாக வெளிப்படும் பணக்கார மற்றும் உயர்சாதி விசுவாசம் ஆகியவை குறித்து பொது சமூகம் மிகத் தீவிரமாக விவாதித்தாக வேண்டும். அவர்களை மகிமைப்படுத்தும் எல்லா செய்திகள் மீதும் நமது விமர்சனங்கள் எழ வேண்டும்.

லாக்கப் கொலைகள் ஏன் பணக்காரர்களுக்கு நிகழ்வதில்லை, எச்.ராஜா எவ்வளவு மோசமாகப் பேசினாலும் ஏன் வழக்கு பாய்வதில்லை, சிறுமியின் வாயில் சுடும் அளவுக்கு கோபக்காரர்கள் ஏன் வினாயகர் ஊர்வலத்தில் மன்றாடி நிற்கும் சாந்த சொரூபிகளாக இருக்கிறார்கள் என்பதாக நாம் கேட்க நூற்றுக்கணக்கான கேள்விகள் இருக்கின்றன.

அவை பரவலாக கேட்கப்படாததால் போலீஸ் இன்னும் தீவிரமாக லத்திக் கம்புகளையும் துப்பாக்கிகளையும் காதலிக்கத் துவங்குகிறது. அவை ஒருபோதும் மக்களைக் காக்க பயன்பட்டதில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

நிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.

தமிழகத்தின் பல வாழ்வியல் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளி கடந்த இரு நாட்களாக முக்கிய பேசுபொருளாகி இருப்பவர் நிர்மலா தேவி. இதனை திசை திருப்பல் என கருத இயலாது அல்லது அப்படி கருத அவசியம் இல்லை. தமிழகத்தின் வாழ்வாதாரங்களில் கல்வியும் உண்டு. அதுவும் சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கவர்னர்களின் ஆதிக்கத்துக்குப் பிறகு அது மரணப்படுக்கைக்கு சென்றுவிட்டது எனலாம். ஒரு கொலைமுயற்சி வழக்கு குற்றவாளி மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராகியிருக்கிறார். ஒரு முன்னாள் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். துணைவேந்தர் பதவியின் விலை 50 கோடியை கடந்திருக்கிறது (நான்காண்டுக்கு முன்னால் அதன் விலை 14 கோடியாக இருந்தது).

மிகை முதலீடு, மிகை அதிகாரம், மிகை வருமானம் இவையெல்லாம் என்ன செய்யும்? அது நிர்மலாதேவி போன்ற புரோக்கர்களை உருவாக்கும், கவர்னர் “லெவல்” அதிகாரிகளின் பாலியல் அரிப்பை கண்டுணர்ந்து ஆள் சப்ளை செய்ய வைக்கும். ரோகித் வெமுலா, அனிதா போன்ற எளியவர்களை எந்த தயக்கமும் இல்லாமல் மரணத்தை நோக்கி துரத்தும். ஒரே இடத்தில் குவியும் பணத்தின் ஆதி குணமும் ஆதார குணமும் அதுதான்.

துணை பேராசிரியர் நிர்மலாதேவியின் அந்த நீண்ட உரையாடலை கேளுங்கள்…

அவர் இதனை புதிதாக செய்யவில்லை. தனது நீண்ட அனுபவத்தையும் அதிகாரத்தையும் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். கவர்னர் மட்டத்து செல்வாக்கை உதாரணம் சொல்கிறார்.

இந்த “ஆப்பர்ச்சூனிட்டி” பற்றி தரகு ஆசிரியர் நிம்மி முன்பே பலமுறை மாணவிகளிடம் பேசியிருக்க வேண்டும். மாணவிகள் தமது பதிலை தயாராக வைத்திருப்பதில் இருந்தே இது புரிகிறது.

மாணவிகள் யாராவது பெற்றோருக்கு தெரிந்து இதனை செய்தாலும் பரவாயில்லை என்கிறார்.

நான் உங்களை மூன்றாம் ஆண்டு வரை பிரச்சினை இல்லாமல் படிப்பை முடித்துவிட்டு போகவைக்கவே விரும்பினேன், இப்போது ஒரு முக்கியமான அவசர தேவை வந்துவிட்டது என்கிறார். இது ஒரு மென்மையான மிரட்டல் அல்லது பழைய மிரட்டலில் தொடர்ச்சி.

பணம், மதிபெண், பாதுகாப்பு, எதிர்கால வசதிகள் என சகல வாக்குறுதிகளையும் அள்ளி இறைக்கிறார். பல்கலைக் கழக வேலைக்கு வந்திருக்கும்போது இதனை அவசரமாக பேசுகிறார். அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தேவைப்பட்டிருக்கிறார்கள். அதுவும் அவசரமாக. அதுவே அவரை தொலைபேசியில் அழைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க வைத்திருக்கிறது. (மாணவிகள் கல்லூரியில் புகார் சொன்னது 16 மார்ச்)

அவர் தொழில் நேர்த்தியில்லாமல் குற்றம் செய்திருக்கிறார் எனவும் அவரும் ஒரு விக்டிம் (பாதிக்கப்பட்டட்டவர்) என்றும் சிலர் சொல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் இது அத்தனை சரியான வாதமல்ல. அவர் தன் தொழில் திறமை மீதான அதீத நம்பிக்கையிலும் இப்படி செய்திருக்கலாம்.

மேலும் தான் மாட்டினாலும் சட்டபூர்வமாக சிக்கிக்கொள்ளாத அளவுக்கு கவனமாக வார்த்தைகளை கையாண்டிருக்கிறார். சில ”விஷ்ஷயங்கள்ள்ள்” “உங்களுக்கே புரியும்” போன்ற பாதுகாப்பான வார்த்தைகளை மட்டுமே அவர் சொல்கிறார். //அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது அவர் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகள் 370 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்) மற்றும் 511 (குற்ற முயற்சி). ஆகவே அவர் தண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை, கொஞ்ச நாளில் வெளியே வந்து சிறந்த கல்வியாளராக பணியை தொடரலாம்.//

மாணவிகள் திரும்பத் திரும்ப மறுத்தும் அவர் அவர் விடாப்பிடியாக பேசுகிறார். தன் சர்வீசில்  எதுவும் மிஸ் ஆனதில்லையே எனும் ஆதங்கமும் எப்படியாவது சிலரை அனுப்பியாகவேண்டும் எனும் அலுவலக டார்கெட்டும் அவரை விரட்டியிருக்கக்கூடும்.

அக்கவுண்ட் ஆரம்பித்து தருகிறேன், எதிர்பார்க்காத அளவு பணம் தருகிறோம், பகுதி நேரமாக படித்துக்கொண்டு வேலை பார்ப்பதுபோல ஏற்பாட்டை செய்து சம்பளமாக பணத்தை தருகிறோம் என வாக்களிக்கிறார். பி.எச்.டி வரை சிரமமின்றி முடிக்கலாம் என்கிறார். ஆக அவருக்கு நீண்ட காலத்துக்கு பெண்கள் தேவைப்படுகிறார்கள் அதாவது அவரது உயர்மட்ட அதிகாரிகளுக்கு அது ஒரு தொடர் தேவையாக இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக நிர்மலாதேவி முந்தாநாள் கொடுத்த பேட்டியில் வெளிப்படும் செய்தி ரொம்ப முக்கியமானது. நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை எனும் பரிபூரண நம்பிக்கை இல்லாமல் அப்படியான உடல்மொழி வெளிப்பட வாய்ப்பேயில்லை.

இவை எல்லாம் உணர்த்துவது இது ஒரு பலம்மிக்க, பயப்பட அவசியமற்ற நெட்வொர்க் மற்றும் பல்கலைக் கழகங்களில் மிக சாதாரணமாக நடக்கும் நிகழ்வு என்பதைத்தான். இந்த பேராசிரியை நிச்சயம் தண்டிக்கப்படப் போவதில்லை. நிர்மலாதேவி என்பவர் பல்கலைக் கழக முறைகேடுகள் எனும் சங்கிலியின் ஒரு கண்ணி. அது அறுந்துபோக அதிகாரவர்கம் அனுமதிக்காது.  மேலும் கல்வி மாஃபியாக்கள் செல்வாக்கு இல்லாத மீடியாவோ அரசியல் கட்சியோ இங்கு கிடையாது (ஸ்டாலின் உட்பட எல்லா கட்சி தலைவர்களும் சூரப்பா விவகாரத்தில் அறிக்கை விட்டதோடு அமைதி காப்பதை கவனியுங்கள்).

அதிகப் பணம் = அதிக அதிகாரம். அதிக அதிகாரம் = இன்னும் அதிகப் பணம், இதுதான் இங்கே பார்முலா. குடிகாரனுக்கு சாராயம், பொறுக்கிகளுக்கு பெண் என எதைக்கொடுத்தாவது பணத்தையும் அதிகாரத்தையும் கைப்பற்ற போட்டி நடக்கும் நாட்டில் கல்வித்துறை மட்டும் புனிதப் பசுவாக இருக்க முடியாது. பீயை அகற்றாமல் ஈயை விரட்டி பிரயோஜனம் இல்லை. பணம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நாட்டில், அதிகாரம் மேலிருந்து கீழாக மட்டுமே செலுத்தப்படும் நாட்டில் நிர்மலா தேவி போன்ற தரகர்களும் அவரால் சீரழிக்கப்படும் பெண்களும் உருவாவதை தடுக்க இயலாது.

இப்போதுவரை வெளியான செய்திகளின் வடிவத்தை கவனியுங்கள். பெண்களுக்கு ஆசை வார்த்தை காட்டிய பேராசிரியர் கைது, மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் கைது என்பதாகவே எல்லா ஊடகங்களும் செய்தியை வடிவமைக்கின்றன. இதன் விவாதம் மாணவிகள் – புரோக்கர் பேராசிரியை என்பதோடு முடிந்து போகிறது.

ஆனால் யதார்த்தம் என்ன? கவர்னர் “லெவல்” அதிகாரிகளின் தேவைதான் நிர்மலாவை புரோக்கராக்குகிறது. அந்த மாணவிகளின் தன்மானம் கல்வித்துறையின் பெரும் அநாகரீகத்தை சந்திக்கு இழுத்து வந்திருக்கிறது. இங்கே செய்திகள் வழங்கப்படும் விதம் மாணவிகளின் தீரத்தை புதைப்பதாகவும் நிர்மலாவின் முதலாளிகளுடைய குற்றத்தை வெகுமக்கள் கவனத்தில் இருந்து விலக்கச் செய்வதாகவும் இருக்கிறது வெளியாகும் எல்லா செய்திகளிலும் நம் கோபத்தை கூர்மழுங்கச்செய்யும் ஒரு உளவியல் நுட்பம் இருக்கிறது. அனேகமாக நக்கீரன் தவிர வேறெந்த ஊடகமும் இதில் இருக்கும் பெரிய கைகளை தேடிப்போகாது என உறுதியாக சொல்லலாம்.

இந்த நிர்மலா பாணி ஊடகப் பார்வைக்கு பலியாக வேண்டாம். உயரதிகாரிகளுக்கு புரோக்கர் வேலை பார்த்த நிர்மலா தேவி என்றும் மாணவிகள் துணிச்சலால் சிக்கிய அதிகார-விபச்சார புரோக்கர் நிர்மலா தேவி என்றுமே புரிந்துகொள்ள முயலுவோம். அப்படியே எழுதுவோம். அப்படி எழுதும்படியே மற்றவர்களையும் வலியுறுத்துவோம்.

இறுதியாக,

கல்வித்துறை சீரழிவு என்பது காவிரியை இழப்பதற்கு ஒப்பானது. அதன் காரணங்களும் விளைவுகளும் பிரம்மாண்டமானவை. கவர்னர் – நிம்மி விவகாரத்தை ஒற்றை சம்பவமாக பார்ப்பது நாம் நமது மாநிலத்துக்கு இழைக்கும் அநீதி. இதற்கான பெரும் போராட்டங்களையும் நாம் முன்னெடுத்தாக வேண்டும். ஏன் என்று கேட்பவர்களிடம் சொல்லுங்கள் “நம் குழந்தைகளும் அவர்களிடம்தான் படித்தாக வேண்டும்”.

நாம் கண்டுகொள்ள மறுக்கும் சந்தைப்பொருளாதாரத்தின் கொடுங்கரங்கள் இறுதியாக நம் பிள்ளைகளைத்தான் பலி கேட்கும். கல்வித்துறை உயர்மட்ட புரோக்கர் நிர்மலா விவகாரம் அதற்கான சிறு சாம்பிள்.

பாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்போட்ட பிறகு அதனை ரீ சைக்கிளிங் செய்யும் வேலையை மார்க்சிஸ்ட் கையில் எடுத்திருக்கிறது. மா.கம்யூ வாசுகி மற்றும் குழுவினரின் பாலேஸ்வரம் கருணை இல்லம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை இன்றைய தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது. நல்லது, என்.ஜி.ஓக்கள் மற்றும் மத நிறுவனங்களால் நடத்தப்படும் சேவை மையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அதன் நோக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அதனை வாசுகி மற்றும் குழுவினர் செய்திருக்கும் விதம் ஒரு எலைட் என்.ஜி.ஓ பாணியில் இருக்கிறது என்பதுதான் கவலையுற வைக்கிறது. ஒருவேளை பத்ரி சேஷாத்ரி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அவர் இந்த அறிக்கை கொடுத்திருந்தால் அதுவே இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.

முதல் குற்றச்சாட்டு, மனித எலும்பு விற்பனை.

மனித எலும்புக்கூடு விற்பனையும் மனித எலும்பு விற்பனையும் (மருந்து செய்யவாம்) நடக்கிறதா என குற்றச்சாட்டும் வகையிலான கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசுகி. சும்மா கேட்டுவிட்டு கிளம்ப நீங்கள் என்ன எச்.ராஜாவா? மனித எலும்புக்கு என்ன சந்தை இருக்கிறது, அதனை எப்படி ஏற்றுமதி செய்ய முடியும், அதனை செய்ய ஏனைய அரசு நிறுவனங்கள் உதவி வேண்டுமே எனும் கேள்விகளோ தரவுகளோ இல்லை. ஆர்.எஸ்.எஸ் வாட்சப் தகவல்போல வாய்க்கு வந்ததை எழுதுவதற்கு உண்மை அறியும் அறிக்கை என பெயர் சூட்டமுடியாது. ஒருவேளை மனித எலும்புகளுக்கு பெரும் சந்தை இருப்பது நிஜம் என்றால் இந்தியாவில் பிணம் எரிப்பது தடை செய்யப்பட்டு சுடுகாடுகள் அத்தனையும் அதானிக்கு தானமளிக்கப்பட்டிருக்கும். ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான அடிப்படைகளை விளக்க வேண்டாமா? பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனும் ஒற்றை வாட்சப் வதந்தியால் 6 மாதங்களுக்கு முன்பிருந்து இப்போதுவரைக்கும் அவற்றை செலவு செய்ய முடியவில்லை (சென்னைக்கு வெளியே). இந்த ஜமாவில் வாசுகி வகையறாக்களும் அய்க்கியமானால் எங்குபோய் முட்டிக்கொள்வது?

இரண்டாம் குற்றச்சாட்டு, கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்படும் முதியவர்கள்.

இதில் நிச்சயம் உண்மையிருக்கும்தான். ஆனால் அதனை அப்படியே விளங்கிக்கொள வேண்டுமா என்பதுதான் கேள்வி. வீட்டில் கோபித்துக்கொண்டுவரும் முதியவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருவார்கள். ஆனால் அதன் சூழல் அவர்களை இன்னும் சங்கடப்படுத்தும் ஆகவே பலர் வீடு திரும்ப விரும்பலாம். இன்னும் சில முதியவர்கள் வீட்டு நபர்களாலேயே துரத்தப்பட்டவர்கள். அவர்களும் வீடு திரும்ப விரும்பலாம். அவர்களை திருப்பி அனுப்புவதில் ஏன் நிர்வாகம் அலட்சியம் காட்டியது எனும் கேள்வி நியாயம்போல தோன்றலாம். ஆனால் அவர்கள் வீட்டை கண்டறிவதும் பிள்ளைகளிடம் அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. கைவிடப்பட்ட சிறார்களையே உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இதில் முதியவர்களை எப்படி வீட்டில் சேர்ப்பது? பெரும்பாலான முதியவர்களை அரசு அமைப்புக்களே அனுப்பியிருக்கின்றன. அவர்கள் போக விரும்பி வெளியேறினாலும் எங்கே போக இயலும்? அப்படி போய் வேறு ஏதேனும் நடந்தால் அப்போதும் வேறொரு வாசுகி வந்து ”ஏன் பாதுகாப்பில்லாமல் போக விட்டீர்கள்” என கேள்வியெழுப்பக்கூடும். போக விரும்பும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதற்கான தேவை என எதை வாசுகி குழு கருதுகிறது?

இந்தியாவில் பணம் இல்லாத முதியவர்கள் நாயினும் கீழாகவே நடத்தப்படுகிறார்கள். அரசும் ஏனைய நிறுவனங்களும் முதியவர்களை தேவையற்ற சுமையாகவே கருதுகின்றன. முதியவர்களால் சம்பாதிக்க இயலாது, அவர்களுக்கு மருத்துவச்செலவு அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகம். ரயில் நிலையம், பஸ் நிலையம் ஏனைய அரசு அலுவலகங்கள் என எங்குமே முதியோருக்கென சிறப்பு வசதிகள் இருக்காது. ஏற்கனவே சம்பாதித்து சேமித்த முதியவர்களுக்கு வட்டியை குறைத்து வயிற்றில் அடித்துவிட்டன வங்கிகள். ஆக அவர்களுக்கு இனி இருக்கும் வாய்ப்பு அடுத்தவரை அண்டி வாழ்வது அல்லது சாவுக்கு காத்திருப்பது. காசில்லன்னா சாவு நாயே என்பது எழுதப்படாத விதியாக உள்ள நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுவதும், அவர்களுக்கான (லாப நோக்கிலான) கருணை இல்லங்கள் உருவாவதும் அவைகள் தரமற்று இருப்பதும் நிகழ்ந்தே தீரும்.

நாம் இவற்றை வழக்கமாக பேசுவதில்லை. குறந்தபட்சம் பாலேஸ்வரம் சம்பவத்துக்கு பிறகாவது இதனை விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வாசுகி அண்ட் கோ இதனை பாலேஸ்வரம் கருணை இல்லம் எனும் வளாகத்துக்குள்ளேயே செட்டில் செய்ய முனைவது ஒரு நாசூக்கான அராஜகம்.

அடுத்த குற்றச்சாட்டு, சுகாதாரமற்ற தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது.

இது நிச்சயம் உறுதியான குற்றச்சாட்டுதான். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்காக யாரையேனும் தண்டிக்க விரும்பினால் நாம் நமது அரசை நடத்துவோரைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். அரசு மருத்துவமனை பொது வார்டுகளை பார்த்திருக்கிறீர்களா? அங்கே தொற்று நோய் வந்தவர்களும் தொற்றா நோய் வந்தவர்களும் ஒன்றாக கொட்டப்பட்டிருப்பார்கள். செத்துக்கிடக்கும் நோயாளியோடு பல மணிநேரங்களை ஏனைய நோயாளிகள் இருக்க வேண்டும். குளியல் மக் கொண்டுதான் சிறுநீரை நோயாளிகள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புதிய நோயாளிகள் காலியாகப்போகும் படுக்கைக்கு அருகே காத்திருப்பார்கள். அனத்தலும், கசகசப்பும் நாற்றமுமே அங்கே நிரந்தரமாக குடிகொண்டிருப்பவை. செத்தால் தேவலாம் என நோயாளிகள் சிந்திக்க வேண்டும் எனுமளவுக்குத்தான் அரசு தமது மருத்துவமனை நோயாளிகளை நடத்துகிறது. இங்கே அதுதான் ஒரு ஏழை நோயாளியை, இயலாதவனை நடத்துவதற்கான அளவீடு. உனக்கெல்லாம் இதுவே ஜாஸ்தி எனும் தர்மகர்த்தா சிந்தனை அரசின் நிர்வாக மட்டத்தில் வேர்பிடித்திருக்கிறது. அவர்கள் பாலேஸ்வரம் இல்லத்தையும் அப்படித்தான் அனுகுவார்கள். காசு கொடுத்து தங்கவைக்கப்படும் முதியவர்களும், இயலாதவர்களும்கூட இப்படித்தான் பல இல்லங்களில் நடத்தப்படுகிறார்கள்.

இறுதி குற்றச்சாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது.

இதில் பிரதான குற்றவாளி அரசுதான். 5 மாதங்களுக்கு முன்னால் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் இல்லத்தின் சார்பாக வழங்கப்பட்டுவிட்டது. அதனை கிடப்பில் போட்டது அரசுதான். அங்கு தங்குவதற்கான ஆட்களை அரசு மருத்துவமனைகளும் போலீசுமே அனுப்பியிருக்கின்றன. இந்தியாவில் விதிமுறைகள் என்பவை தேவைப்படும்போது ஒருவனை சிக்க வைப்பதற்காகவும் லஞ்சம் வாங்கவுமே பயன்படுத்தப்படுகிறனவே அன்றி அவை ஒழுங்கான சேவை என்பதை இலக்காக கொண்டு பின்பற்றப்படுவதில்லை. பிணங்களை அடக்கம் செய்யும் தலைவலியில் இருந்து தான் தப்பித்துக்கொள்ள போலீஸ் அவர்களுக்கு அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஆனால் அப்படி வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பாலேஸ்வரம் இல்லம் இப்போது மூடப்பட்டுவிட்டது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய அதிகாரம் வழங்கிய அதிகாரிக்கு என்ன தண்டனை? 5 மாதங்கள் உரிமத்தை தாமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இவை குறித்து வாசுகி குழுவினரின் பரிந்துரைகள் என்னென்ன?

மேலும் சில கேள்விகள் எழுகின்றன..

அந்த இல்லத்தில் இருந்து வெளியேற விரும்பிய முதியவர்களின்பால் கரிசனம் கொண்ட வாசுகி குழு, அங்கே தங்க விரும்பிய முதியோரின் கோரிக்கை குறித்து ஏதேனும் யோசனை வைத்திருக்கிறதா?

அது ஒரு சாதாரண கருணை இல்லம். அரசின் கட்டமைப்பு பிரம்மாண்டமானது. அந்த அரசு ஒரு இல்லத்தை ஏற்று தற்காலிகமாகக்கூட நடத்த வக்கற்று நோயாளர்களை நலாப்பக்கமும் விசிறியடித்திருக்கிறது. ஆக 300 முதியவர்களைப் பராமரிக்கும் தகுதிகூட அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இது பற்றி மர்க்சிஸ்ட் இன்வெஸ்டிகேஷன் குழு எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

ஆயிரக்கணக்கான முதியோர் காப்பகங்களுக்கான தேவை நாட்டில் இருக்கிறது. வறியவர்கள் தமது வயதான பெற்றோரை கௌரவமாக பராமரிக்க மருத்துவ உதவியும் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது. அது குறித்து மா.கம்யூ எப்போது பேசும்?

காலையில் கஞ்சி, மதியம் மற்றும் இரவில் “ரேஷன்” அரிசி சாதம் ஆகியவை மட்டுமே கிடைப்பதாகவும். இட்லியை பார்த்தே பல மாதங்கள் ஆனதாகவும் புகார்கள் வந்திருப்பதாக இக்குழு சொல்கிறது. ரேசன் அரிசி சாதம் மோசமான உணவு எனில் அந்த சோற்றைத்தான் அரசு பலகோடி மக்களுக்கு தலையெழுத்தென விதித்திருக்கிறது. நாம் என்ன செய்யலாம், ரேசன் அரிசியின் தரத்தை பற்றி கவலைப்படலாமா அல்லது ரேசன் அரிசி சோறு பாலேஸ்வரம் இல்லத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் கவலைப்படலாமா?

இதே அழகில்தான் இங்குள்ள ஆகப்பெரும்பாலான ஆதரவற்றோர் இல்லங்கள் சோறிடுகின்றன. அவற்றை எப்போது ஆய்வு செய்யலாம்? அவற்றுக்கான மார்க்சிஸ்ட் உ.அ.குவின் தீர்வு என்ன?

இப்போதைய பிரச்சினைக்குப் பிறகு பாலேஸ்வரம் இல்ல முதியவர்கள் பல இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காப்பகங்கள் நிலை குறித்து மா.கம்யூ எப்போது ஆய்வு செய்யும்?

இதுவரைக்கும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு ஆட்களை அனுப்பியவர்கள் (போலீஸ், அரசு மருத்துவமனை) இனி எங்கே அனுப்புவார்கள். அரசின் அந்த வட்டாரங்களை எப்போது வாசுகி குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

வாசுகி குழுவினரின் நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும்கூட குறை சொல்ல வேண்டாம். அவை highly subjective. ஆனால் அதில் ஹீரோயிசம் மட்டுமே இருப்பதுதான் சிக்கல். இந்திய சமூக பொருளாதார அமைப்பை பீடித்திருக்கும் எண்ணற்ற நோய்களின் ஒரு அறிகுறிதான் பாலேஸ்வரம் இல்லம் மற்றும் அதன் விதிமீறல்கள். அதனை அற உணர்வோடும் குறைந்தபட்ச முழுமையோடும் மார்க்சிஸ்ட் அனுகியிருக்க வேண்டும். ஆனால் வாசுகியாரின் அறிக்கை இந்திய அரசுக் கட்டமைப்பின் ஒரு சிரங்கோடு செல்ஃபி எடுத்து போட்டுக்கொண்டது போல இருக்கிறது. ஆகவே அதனை அன்லைக் செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.

ஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா??!!

சமீபத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாணவர்கள் தற்கொலையின்போது அதன் காரணமாக சொல்லப்பட்டவை ஆசிரியர்களின் நடத்தை (அவர்கள் மாணவர்களை கையாளும் முறை மற்றும் தண்டிக்கும் முறைகள்). பெரும் பணத்தை செலவிட்டு பிள்ளைகளை படிக்கவைக்கும் நடுத்தரவர்க பெற்றோர்களின் வழக்கமான கல்விசார் புலம்பல் ஆசிரியர்களின் தரம் பற்றியதாகவே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் நடந்த ஆசிரியர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது வெளிப்பட்ட பொது விமர்சனமும் நவீன நாட்டாமைகளான நீதிபதிகளின் விமர்சனமும் ஆசிரியர்கள் தரம் பற்றிய அங்கலாய்ப்பாகவே இருந்தன. சில இடதுசாரி கண்ணோட்டமுள்ள பெற்றோர்களின் கருத்துக்களும் இவ்வாறாகவே இருந்ததையும் பார்த்திருக்கிறேன். இவற்றை ஒருங்கிணைத்து பார்க்கையில் நாம் ஆசிரியர்கள் மீது மிகவும் மோசமான அபிப்ராயம் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

இவற்றை முழு உண்மை என்றோ அல்லது முழுப்பொய் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் இத்தகைய நம்பிக்கையானது எவ்வித பகுப்பாய்வும் இல்லாமல் ஒரு தரப்பு பார்வையோடு வலுப்படுவது மிகவும் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும், அல்லது அவ்வாறான விளைவுகளை அது முன்பே உருவாக்கத்துவங்கிவிட்டது. இப்படியான ஒருதரப்புப் பார்வையும் ஆய்வுபூர்வமற்ற அவநம்பிக்கையும் தீர்வை நோக்கிய திசையில் நம்மை ஓரங்குலம்கூட நகர்த்தாது என்பதையும் கவலையோடு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. உணர்வுபூர்வமான எதிர்வினைகளை கடந்து நாம் இதனை தர்கபூர்வமாக அணுகவேண்டிய மிக அவசரமான காலத்தில் இருக்கிறோம். அதற்கான சமிஞைகளும் எச்சரிக்கைகளும் நமக்கு நாள்தோறும் வந்துகொண்டே இருக்கிறது.

ஆசிரியர்கள் மீதான அபிப்ராயங்களை நாம் ஊடக செய்திகள் வாயிலாகவும் மாணவர்களின் அறிவு, மதிப்பெண் மற்றும் நடத்தை வாயிலாகவும் உருவாக்கிக்கொள்கிறோம். ஆனால் இவற்றுக்கு எல்லாம் ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பா எனும் கேள்வியை நாம் எழுப்புவதே இல்லை. காரணம் அதற்கான பதிலுக்கு நீங்கள் உழைக்க வேண்டும். வெறும் புலம்பலை அந்தக் கேள்வி ஏற்றுக்கொள்வதில்லை. ஆத்திரத்தை இறக்கிவைக்கும் ஒற்றை எதிரி போதும் எனும் சமாதானத்துக்கு அந்தக் கேள்வி இடையூறாக இருக்கிறது. இருந்தாலும் நமக்கு வேறு வழியில்லை, நாம் அந்த கேள்விகளை நேர்மையாக எதிர்கொண்டே ஆகவேண்டும். முன்னேற்றத்துக்கான பயணம் ஒருபோதும் இனிமையானதாக இருக்காது.

முதலில் பள்ளிச்சூழல் பற்றிய சில கேள்விகளை பார்ப்போம்.

கடந்த 60 வருடங்களில் வகுப்பறை வடிவமைப்பு மற்றும் பாடம் நடத்தும் முறைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் என்னென்ன?

ஒரு கிராமப்பள்ளி ஆசிரியருக்கும் நகரப்பள்ளி ஆசிரியருக்கும் உள்ள பணியிட சவால்கள் முற்றிலும் வேறானவை. இங்கே ஆசிரியரின் திறனை அளவிடும் மதிப்பீட்டு முறைகளில் செய்யப்பட்ட மேம்பாடுகள் என்னென்ன?

பள்ளிகளில் உள்ள கற்றல் குறைபாடுள்ள சிறார்களை கண்டறியவும் அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கும் விதிமுறைகள் ஏதும் வகுக்கப்பட்டிருக்கிறதா?

பொதுப்பள்ளிகளில் படிக்க இயலாத சிறப்பு நிலை சிறார்களுக்கு அரசு உருவாக்கியிருக்கும் வாய்ப்புக்கள் என்ன? அல்லது அதற்கான திட்டங்களேனும் இருக்கிறதா?

ஆசிரியர்கள் தமது திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

ஒரு பாடத்தை ஏன் படிக்கவேண்டும் என்பதையும் எந்த கண்ணோட்டத்தோடு அப்பாடம் நடத்தப்படவேண்டும் என்பதையும் நாம் ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்றுவித்தாக வேண்டும். அப்படி ஏதேனும் பயிற்சிகளோ கையேடோ இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

நீண்டகால அடிப்படையிலான- கல்வித்துறை சார்ந்த மாற்றங்கள் பற்றிய வரைவுகளோ அல்லது இலக்குகளோ நம்மிடம் இருக்கிறதா?

வகுப்பு விதிகளுக்கு கட்டுப்படாத, இடையூறான நடத்தை கொண்ட (அல்லது பிறரை மோசமாக நடத்தும் இயல்பு கொண்ட) மாணவர்களை கையாள்வதற்கான நெறிமுறைகள் ஏதேனும் பயன்பாட்டில் இருக்கிறதா?

அனேகமாக எல்லா கேள்விகளுக்கும் நம்மிடையே பதில் இருக்காது. மாணவர்களது சிந்தனையை, ஆளுமையை பெருமளவு மாற்றவல்ல அசுரத்தனமான மாற்றங்கள் சமூகத்திலும் தொழில்நுட்ப தளங்களிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அவற்றை கவனத்தில் கொண்டு செய்யப்பட வேண்டிய எந்த ஆய்வும் சீர்திருத்தங்களும் பள்ளிக் கல்வியில் செய்யப்படவே இல்லை.

இந்தியாவின் பிரத்யோக இயல்பு ஒன்று உண்டு, அது இருப்பதில் பலவீனமானவர்கள் மீது பழியைப் போட்டு மற்றவர்கள் தப்பித்துக்கொள்வது. இந்த வழக்கம் இல்லாத துறையே இங்கு இல்லை. அதுதான் பள்ளிச் சூழல்களிலும் நிகழ்கிறது. அரசு, பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் எனும் கல்வியின் அதிகார அடுக்கில் கடைசியாக இருக்கும் ஆசிரியர்கள் மீது பழி போட்டு மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்வது சுலபமான இந்திய பாணி தப்பித்தலாக இருக்கிறது.

எல்.கே.ஜி வகுப்பில் இருந்து துவங்கும் பிரச்சினைகளை பார்ப்போம். பெரும்பாலான எல்.கே.ஜி வகுப்பு பாடங்கள் பிளே ஹோம்கள் மற்றும் ஆர்வமிகுதி அம்மாக்களால் (பாதிக்கும் மேலான குழந்தைகளுக்கு) பள்ளியில் சேரும் முன்பே கற்றுத்தரப்பட்டுவிடுகின்றன. ஆக ஒரு கே.ஜி ஆசிரியர் ஒரே நேரத்தில் ஒரே பாடத்தை நன்கு படித்த குழந்தைகள் மற்றும் அதில் அறிமுகமே இல்லாத குழந்தைகள் என இரண்டு வகையான சிறார்களுக்கும் கற்றுத்தர வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். படிக்கத்தெரியாத குழந்தைகளுக்கு கவனம் செலுத்தினால் ஏற்கனவே பாடம் படித்த குழந்தைகள் சும்மாயிருக்கும். ஆகவே அவர்களுக்கு குறும்பு செய்யும் அவகாசம் கிடைக்கிறது. படிக்கத் தெரிந்த குழந்தைகளை இன்னும் மேம்படுத்த முயல்கையில் புதிதாக கற்கும் மாணவர்கள் குறும்பு செய்வார்கள். இந்த அலைகழிப்பு ஒரு ஆசிரியருக்கு ”குழந்தைகளை மேய்க்கும்” வேலையை பிரதானமாக்குகிறது. அப்படி ஆரம்பிக்கும் இந்த மேய்ச்சல் வேலை 10 ஆம் வகுப்புவரை நீடிக்கிறது. உஷ், சைலன்ஸ், ஏய் போன்ற (ஆசிரியர்களின்) வார்த்தைகளை நீங்கள் பள்ளி வராண்டாக்களில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

எல்லா பள்ளிகளிலும் உத்தேசமாக 10 – 15 சதம் குழந்தைகள் மிகைக் குறும்பு குழந்தைகளாக, கற்பதில் சிரமம் உள்ள குழந்தைகளாக இருக்கிறார்கள். ஓரிடத்தில் 10 நிமிடம் தொடர்ந்து அமர இயலாத பிள்ளைகளை 8 வகுப்பில்கூட பார்க்க முடிகிறது. இவர்களைக் கையாள்வதற்கென்று வழிகாட்டும் நெறிமுறைகள் இங்கே இல்லை. இந்த வகை சிறார்களை கையாள்வது என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு. அதற்கு போதிய அவகாசம் மற்றும் கூடுதல் பணியாளர்கள் தேவை. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தும் அளவுக்கு மாணவர் – ஆசிரியர் விகிதம் இருக்க வேண்டும். கற்றல் குறைபாடுகளை ஓரளவு சரியாக கண்டறியும் வகையில் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள் தரப்பட வேண்டும். அப்படி கண்டறியப்படும் சிறார்களின் பிரச்சினையை உறுதி செய்யவும் அதனை சரி செய்யும் வழிகளை பரிந்துரைக்கவும் உரிய நிறுவனங்கள் தேவைப்படும். மேலும் பள்ளிகளில் சிறப்பு சிறார்களுக்கான தனிப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் வேண்டும்.

இவற்றை மாநிலம் முழுக்க கொண்டுவருவது என்பது மலையை நகர்த்தும் வேலை. தற்போதைய நிலையில் இதனை செய்யும் அளவுக்கு அரசு இல்லை, செய்ய நினைத்தாலும் சிறப்பு ஆசிரியர்கள், ஆய்வு மையங்கள் மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இது வெறும் 15 சதவிகிதம் குழந்தைகளின் சிக்கல்தானே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அவர்களை கையாள்வதில் ஆசிரியரின் நேரம் அதிகம் செலவாகிறது. உட்கார மறுக்கிற, அடுத்த குழந்தைகளிடம் எளிதில் சண்டையிடும் சிறார்கள் குறித்து ஆசிரியர் அதீத கவனம் செலுத்த நேர்கிறது. இது ஒரு ஆசிரியரின் செயல்திறனை பெருமளவு பாதிக்கிறது. எல்லா அமைப்புக்களின் ஒட்டுமொத்த தோல்வியின் கனத்தை ஆசிரியர் மட்டும் சுமக்க நிர்பந்திக்கப்படுகிறார். இந்நிலையில் அவருக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எக்கேடும் கெட்டு ஒழிஞ்சு போ என நினைத்து மேய்ச்சல் வேலையை செய்து மாணவர்களை அடுத்த ஆண்டில் மேல் வகுப்புக்கு தள்ளலாம்.

அவரைவிட பலவீனமான பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் மீது தமது சுமையை தள்ளிவிடலாம்.

அல்லது மேற்சொன்ன இரண்டையும் வேறு வேறு விகிதங்களில் கலந்து செயல்படவும் முடியும்.

விவாதம் யாருக்கு பொறுப்பு அதிகம் என்பதோ யார் பெரிய குற்றவாளி என்பதோ அல்ல. அது எளிதில் முடியக்கூடியதும் அல்ல. ஆனால் இதனை மாற்றுவதற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டியது பெற்றோர்கள்தான். காரணம் மற்றவர்களுக்கு அது ஒரு வேலை மட்டுமே.

இங்கே பெரிய பிரச்சினை மோசமான ஆசிரியர்கள் அல்ல, மாறாக சரியாக வேலை செய்ய விரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய களம் இல்லை. அது அவர்களது ஆர்வத்தைக் கொல்கிறது. சலிப்படைய வைக்கிறது இறுதியில் அவர்களும் ரிஸ்க் இல்லாத ஆசிரியப்பணி எனும் பாதுகாப்பு வளையத்துக்குள் செல்கிறார்கள். ஒப்பீட்டளவில் இதுதான் அதிகம் சிக்கலானது.

//

சில தகவல்கள் :

இந்த கட்டுரைத்தொடர் பள்ளிச்சூழல் பற்றிய சில அம்சங்களை விவாதிக்கும் நோக்கில் எழுதப்படுகிறது. மே இறுதி வரை வேறு வேறு தலைப்புக்களில் தொடரும்.

எனது தனிப்பட்ட அனுபவத்திற்கு உட்பட்ட பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படவிருக்கின்றன. ஆகவே இது முழுமையானதோ முழுக்க சரியானதோ அல்ல. வேறு சூழலில் உள்ள பிரச்சினைகளும் தீர்வுகளும் வேறாக இருக்கலாம்.

ஆசிரியர் மற்றும் மாணவர் தரப்புக்கு வக்காலத்து வாங்க இப்பதிவுகள் எழுதப்படவில்லை. அந்தத் தரப்பின் பார்வையையும் விவாதத்துக்கு கொண்டுவருவது மட்டுமே நோக்கம்.

ஒரு வேண்டுகோள் :

முக்கியமானது, எழுதப்பட வேண்டியது என கருதும் செய்திகளை பின்னூட்டமிட்டால் அவை குறித்தும் (தேவைப்பட்டால் மற்றவர்களிடம் ஆலோசனை பெற்று) பதிவிட முயல்கிறேன்.

தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள், வாரம் ஒரு கட்டுரையேனும் வருகிறாதா என பாருங்கள். இல்லாவிட்டால் அசிங்கமாக திட்டிகூட ஞாபகப்படுத்துங்கள். //

கெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.

சுமார் ஆறு மாதங்கள் முன்புகூட ”கெட்டவார்த்தை” எனும் வரையறைக்குள் வரும் வார்த்தைகள் குறித்து நான் அலட்டிக்கொண்டவன் அல்ல. அவற்றை பேசுவதில்லையே தவிர அதனை கேட்பதிலோ அல்லது படிப்பதிலோ எந்த அசூயையும் உணர்ந்ததில்லை. அது ஒருவரது தனிப்பட்ட தெரிவு என்பதாகவே புரிதல்  இருந்தது. சமூக வலைதள காலக்கோட்டில் எதிர்பாராத மனிதர்களின் கெட்டவார்த்தைப் பிரயோகங்களை பல சமயங்களில் பார்க்க நேர்கிறது. இந்த பதிவு அவை குறித்தானதும் அல்ல. கெட்டவார்த்தைகள் பள்ளி மாணவர்கள் இடையே உண்டாக்கும் மோசமான விளைவுகள் பற்றி விவாதிக்கவே இப்பதிவு.

மாணவர்கள் மத்தியில் உள்ள பெரும் பிளவுக்கு கெட்டவார்த்தைகளே முக்கியமான காரணமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கோபமூட்டுகிற அல்லது அதிர்ச்சியூட்டுகிற செய்கையாக சிறார்களின் கெட்டவார்த்தைப் பயன்பாடு இருக்கிறது. பிறகு அம்மாணவர்கள் அந்த அடையாளத்தோடுதான் அடுத்த வகுப்புக்களில் நுழைகிறார்கள். பதின்ம வயதின் துவக்கத்தில் இருக்கும் மாணவர்கள் அனேகர் தன்னியல்பாகவே குழுக்களாக இயங்க ஆரம்பிப்பார்கள். அவர்கள் குழுவை தீர்மானிக்கும் சக்தியாக கெட்ட வார்த்தைகள் இருகின்றன.

ஆறாம், ஏழாம் வகுப்பில் மாணவர்கள் குழுக்களாக செயல்படும் பொழுது கெட்ட வார்த்தை பேசும் குழந்தைகள் ஏனைய மாணவர்களால் புறந்தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தன்னை ஒத்த மாணவர்களோடு இணையும் வாய்ப்பு மட்டுமே மிஞ்சும். இந்த இடத்தில் இருந்தே அவர்கள் எதிர் மனநிலைக்கு ஆளாகிறார்கள். பதின்ம வயதில்தான் வகுப்புக்கு இடையூறு செய்யும் குழுக்கள் உருவாகின்றன (ஆரம்ப வகுப்புக்களில் குழுவாக இடையூறு செய்யும் மாணவர்கள் இருப்பதில்லை). உளவியலாளர்கள் பதின்ம வயதை குழு வயது என குறிப்பிடுகிறார்கள் (குரூப் ஏஜ்).

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் உடனான உரையாடல்களில் கெட்ட வார்த்தை பேசும் மாணவர்கள் மீதான அழுத்தமான வெறுப்பை அவதானிக்க முடிகிறது. ஒருவன் நல்லவனா கெட்டவனா என தீர்மானிப்பதற்கான பிரதான காரணியாக இந்த இயல்பு இருக்கிறது. இத்தகைய மாணவர்களை பள்ளியில் வைத்திருக்கக்கூடது என்பதாகவே எதிர்தரப்பு மாணவர்கள் கருதுகிறார்கள். இழிவானவர்கள் மற்றும் ஒதுக்கப்படவேண்டியவர்கள் யார் என்பதற்கான எளிய அளவீடாக நாம் கெட்ட வார்த்தை பேசுவதையே நிர்ணயித்திருக்கிறோம் (அப்படித்தான் சொல்லி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்). ஆசிரியர்களும் இத்தகைய மாணவர்கள் மீது கரிசனம் கொள்வதில்லை. உண்மையில் அது ஆசிரியருக்கு இருக்கும் ஒரு நெருக்கடி. மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் குறைசொல்வார்கள், தன் மாணவர்கள் அப்படி பேசினால் தன் பெயர் கெட்டுப்போகும் என்பதால் ஆசிரியர்களும் இத்தகைய மாணவர்களை முரட்டுத்தனமாகவே அணுகுகிறார்கள். பின்னாளில் இந்த பிரிவு மாணவர்கள் சமாளிக்க இயலாத அளவுக்கு குறும்பு செய்பவர்களாக மாறுவதற்கான வாய்ப்பு பரிபூரணமாக இருக்கிறது.

இந்த வகை மாணவர்கள் இடையூறான நடத்தையுள்ளவர்களாக மாறக்கூடும் என்பது மட்டும்தான் பிரச்சினையா என்றால் இல்லை.

அடிக்கடி தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட சிறார்களோடு பேசும்போது அவர்கள் தங்கள் மீதோ அல்லது சூழல் மீதோ வெறுப்பு கொண்டவர்களாக இருப்பதை அறிய முடிகிறது (கோவம் வந்தா கெட்ட வார்த்தை பேசுவேன், மத்தபடி நான் நல்ல பையன் சார்.) தங்கள் வாழும் ஏரியா மோசமாக இருப்பதால்தான் தான் இப்படி இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். தங்களை மற்றவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை என்பதும் ஆசிரியர்கள் நம்புவதில்லை என்பதும் அவர்களுக்கு பெரும் அவநம்பிக்கையை கொடுக்கிறது.  யாருமே ஏற்காதபோது நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் அவர்களுக்கு மேலோங்குகிறது. அல்லது நாம் எதற்கும் லாயக்கற்றவர்கள் எனும் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. (இரண்டு வகை மாணவர்களையும் சந்தித்திருக்கிறேன்.)

பிரச்சினை இடயூறான மற்றும் முரட்டுத்தனமான நடத்தை மட்டுமல்ல, வேறொருபுறம் பகுதியளவுக்கான மாணவர்களை இந்த சுபாவம் பெரும் குற்ற உணர்வுக்கு இட்டுச்செல்கிறது. வகுப்பு வாய்ச்சண்டை ஒன்றின்போது சக மாணவரை மோசமான வார்த்தையால் திட்டிவிட்டார் எங்கள் மாணவர் ஒருவர். சிறப்பாக படிக்கக்கூடியவர், அமைதியான இயல்புடையவர் என்பதால் ஆசிரியர்கள் அவரது இந்த எதிர்வினையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். பிறகு அவரிடம் பேசிய எல்லோரும் நான் உன்னிடம் இப்படியான நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றே பேசியதால், அவர் தன் மீதான சுயமதிப்பை இழந்துவிட்டார். இதுவரைக்கு பெற்ற நற்பெயருக்கு நான் தகுதியுடையவன் அல்ல என்றும் தான் கொஞ்சமும் விரும்பாத இந்த செயலுக்கு தன் அப்பாவின் நடத்தையே காரணம் என்றும் சொன்னார். (அவர் அப்பா அதீத குடிப்பழக்கம் உள்ளவர், குடித்தால் மிக மோசமாக பேசுபவர்). அச்சம்பவத்துக்குப் பிறகு அவர் சில மாதங்கள் தன் நண்பர்களுடன்கூட இயல்பாக பழகவில்லை. அவர் ஒரே ஒரு முறை பயன்படுத்திய வார்த்தை அவரது நடத்தை முதல் சுயமதிப்பீடுவரை பலவற்றை பாதித்தது.

அப்பாவின் குடிப்பழக்கம் பற்றி கவலைப்படும் பிள்ளைகளின் முதல் பயம் அல்லது குற்றச்சாட்டு அவர் மோசமாக பேசுகிறார் என்பதுதான் (முரண்பாடாக அந்த சிறார்களில் பெரும்பாலானவர்கள் கெட்டவார்த்தை பேசுகிறார்கள்). ஒரு சிறுமி தன் அப்பா பள்ளிக்கு வந்துவிடுவாரோ என்று பயப்படுகிறார். வந்து ஏதேனும் மோசமாக பேசிவிட்டால் தனக்கு மரியாதை போய்விடும் என்பது அவர் எண்ணம். இன்னொரு மாணவியின் அம்மா மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுகிறார். ஆகவே அந்த தாயால் தன் மகளை சரிவர கவனிக்க முடியவில்லை. அந்த மாணவியிடம் அவர் சந்திக்கும் சிரமங்களைக் கேட்டபோது முதலில் குறிப்பிட்டது “அம்மா நெறைய கெட்டவார்த்தை பேசுறாங்க, அது எனக்கு புடிக்கல” என்பதுதான். குறிப்பாக கெட்ட வார்த்தை பேசும் பழக்கம் உள்ள மாணவிகள் அப்பழக்கம் உள்ள மாணவர்களைவிட அதிகம் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இது ஏதோ அரசுப் பள்ளிகள் மற்றும் கீழ்நடுத்தரவர்க தனியார் பள்ளிகளின் நிலை என கருதவேண்டாம். லட்சங்களை சாப்பிடும் எலைட் பள்ளிகளிளில்கூட இதுதான் நிலை. ஆகவே இது ஒரு பிரிவு மக்களின் பிரச்சினை என நம்பி ஒதுங்கும் வாய்ப்பு யாருக்கும் இல்லை.

சரி, இதற்கு என்ன செய்யலாம்? (பெற்றோர்கள்)

குழந்தைகள் முன்னால் மோசமான வார்த்தைகள் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். மோசமான வார்த்தைகள் அதிகம் புழங்கும் இடங்களில் வசிக்கின்ற, ஆனால் கெட்டவார்த்தை பேசாத பெற்றோர்களின் குழந்தைகள் அனேகமாக மோசமாக பேசுவதில்லை.

கெட்ட வார்த்தை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகள் வளரும் பள்ளிச்சூழல் அதனை பெரும் குற்றமாக பார்க்கிறது என்பதை மனதில் வையுங்கள்.

நீங்கள் எத்தகைய சூழலில் எல்லாம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கண்டுபிடியுங்கள். அத்தகைய சூழலை இன்னும் சரியாக கையாள பழகுங்கள். அல்லது அதுமாதிரியான சூழலில் குழந்தைகள் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக மன உளைச்சலில் மோசமாக பேசுபவர்கள் தம் மன உளைச்சலை சரிசெய்யும் வழிகளை தேடலாம். வீட்டு செலவீனங்களைப் பற்றி பேசுகையில் எல்லாம் சண்டை வந்தால் அந்த விவாதங்களை குழந்தைகள் இல்லாத நேரத்துக்கு ஒத்தி வைக்கலாம்.

தவறிப்போய் பேசிவிட்டால் யாரிடம் பேசினீர்களோ அவர்களிடமும் அங்கிருக்கும் குழந்தைகளிடமும் மன்னிப்பு கேளுங்கள். அதன் மூலம் அவ்வார்த்தைகளை பேசுவது தவறு என அவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

அருகில் உள்ள யாரேனும் மோசமாக பேசினால் பதறி பிள்ளைகளை விரட்டாதீர்கள். மோசமான வார்த்தைகளின் பிரச்சினைகள் குறித்து விளக்கும் வாய்ப்பாக அதனை பயன்படுத்துங்கள். அது வேடிக்கை பார்ப்பவரைக்கூட காயப்படுத்தும் என விளக்குங்கள்.

குடிப்பழக்கத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களின் குழந்தைகள் எல்லோரும் தங்கள் அப்பா குடித்தால் கெட்டவார்த்தை பேசுவதாக சொல்கிறார்கள் (எல்லா வர்கத்தினரும்).

குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசிவிட்டால் அதிர்ச்சியடைந்து அடித்து தண்டிக்காதீர்கள். முக்கியமாக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என அச்சமடையாதீர்கள்.

என்ன வகையான உணர்வை வெளிப்படுத்த அவர்கள் அந்த வார்த்தைகளை பேசுகிறார்கள் என்பதை கண்டறியுங்கள். அந்த உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள். அதனை கெட்ட வார்த்தை சொல்லாமலே வெளிப்படுத்தலாம் என்பதை கற்றுக்கொடுங்கள்.

இது ஆசிரியர்களுக்கு,

கெட்ட வார்த்தை பேசும் குழந்தைகள் குற்றவாளிகள் அல்ல என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அவை  எங்கோ எப்போதோ கற்றுக்கொண்ட வார்த்தைகள், அவர்களுக்கு அது வெறும் வார்த்தைகளே.

எது கெட்ட வார்த்தை என்பதை 100% சரியாக வரையறுப்பது கடினம். மேலும் அதன் மீதான அசூயை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தாயைப் பழிக்கும் வார்த்தையை தன் மகனைத் திட்ட பயன்படுத்தும் அப்பாக்கள் இருக்கிறார்கள். ஆகவே அந்த மாணவரின் சூழலை பரிசீலிக்க முயலுங்கள்.

அப்படி பேசும் மாணவர்களை தனிமைப்படுத்தாதீர்கள் (சில ஆசிரியர்கள் மற்ற மாணவர்களை ஒதுங்கியிருக்கும்படி சொல்கிறர்கள்). மாறாக அதனை பக்குவமாக அறிவுறுத்தும்படிக்கு மற்ற மாணவர்களை தயார்படுத்துங்கள்.

அவ்வார்த்தைகள் தன்னியல்பாக வருகிறதா அல்லது வேறு நோக்கங்களுக்காக வருகிறதா என்பதை பாருங்கள். சில சிறார்கள் தங்களை பெரிய ஆளாக காட்ட இவ்வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். தன்னியல்பாக பேசினால், பெற்றோரை அழைத்து பேசுங்கள். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பேசினால், அவர்கள் தங்களை வெளிபடுத்திக்கொள்ளும் மாற்று வாய்ப்புக்களை உருவாக்கித்தர முயலுங்கள்.

ஆசிரியர்களால் சிறார்கள் கெட்டவார்த்தை பேசும் பழக்கத்தை சிறப்பான வகையில் கட்டுப்படுத்த இயலும். அக்கறை – தொடர் கண்காணிப்பு – கனிவான சுட்டிக்காட்டல் – அங்கீகாரம், இந்த வரிசையை பின்பற்றினால் அபாரமான மாற்றங்களை காண இயலும் (நாங்கள் செய்திருக்கிறோம்).

கெட்ட வார்த்தை பேசுவது என்பதாலேயே ஒருவன் கெட்டவன் என்றாகிவிடாது. அது தவறென்றே நீங்கள் கருதினாலும் அதனை ”ஒரு தவறு” என்று மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். அவர்களது ஏனைய திறன்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுங்கள். முக்கியமாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மற்ற மணவர்களுக்கு காட்டும் மனநிலையுடன் அனுக முயலுங்கள்.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன், சிறார்கள் கெட்ட வார்த்தை பேசுவது என்பது ஒரு விளைவு, ஒரு அறிகுறி அல்லது ஏதோ ஒரு தேவையின் வெளிப்பாடு. ஆகவே அதனை குற்றமாக கருத வேண்டாம். அப்படியே இருந்தாலும் எந்த குற்றத்துக்கும் நாம் பாதிக்கப்பட்டவனை தண்டிக்கவோ பொறுப்பாக்கவோ கூடாது.

மோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே ஒரு முகத்தையும் பெயரையும் பிராண்டாக மாற்ற செய்யப்பட்ட பெரும் முதலீடு மோடி மீது செய்யப்பட்ட முதலீடுதான். அந்த முதலீட்டின் பங்குதாரர்களுக்கு அது பெரும் லாபமளிக்கும் செலவாகவும் உத்திரவாதமான முதலீடாகவும் இல்லாதிருந்தால் இந்த ரிஸ்கை அவர்கள் எடுத்திருக்கப்போவதில்லை. மோடி ஒரு தேவதூதனாக அறிமுகம் செய்யப்பட்டு அது குறித்த விளம்பர முற்றுகையில் நாம் சிக்கி 5 ஆண்டுகள் ஆகிறது. மோடி ஒரு பேரபாயம் என அவரை எதிர்த்தவர்கள் தீவிரமாக எச்சரிக்க ஆரம்பித்தும் 5 ஆண்டுகள் ஆகிறது.

ஹீரோயிசம், பன்ச் வசனம், துரோகம், ரத்தம், ஐட்டம் டான்ஸ், பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட விளம்பரம் என ஒரு மசாலாப் படத்தின் எல்லா அம்சங்களும் கொண்ட மோடி பிராஜெக்ட் பெரு வெற்றி பெற்று மூன்றாண்டுகள் முடிந்தாயிற்று. அதிகாரபூர்வ மனைவியோடு தேனிலவு செல்லும் முன்பே ஊரைவிட்டு ஓடிய மோடிக்கு, காலம் யாருக்கும் கிடைக்காத அளவுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகால அரசியல் ஹனிமூன் வாய்ப்பை வழங்கிற்று. சூப்பர்மேன் என்றாலும் மோடிக்கும் சில பலவீனங்கள் இருக்கும் இல்லையா? அதில் பிரதானமானது அவருக்கு தன்னைத்தவிர வேறு எதன் மீதும் அக்கறை கிடையாது என்பது. அந்த வெறித்தனமான தன்முனைப்புக்கு யாராலும் நீண்டகாலம் முட்டுக்கொடுக்க முடியாது. குஜராத்தில் எப்படி 12 வருடகாலம் முதல்வராக இருந்தார் என கேட்கலாம். அது குஜராத்தின் கள நிலவரம் காரணமாகவோ அல்லது எதேச்சையாகவோ நிகழ்ந்திருக்கலாம். அந்த சாதகம் இந்திய அளவில் அவருக்கு இல்லை. ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு கச்சா எண்ணை விலை சரிவு எனும் சாதகம் இருந்தது, அதனைக் காட்டி தான் ஒரு அதிருஷ்ட்டக்காரன்தான் என்றும் பெருமையடித்துக்கொண்டார்.

அவையெல்லாம் முடிவுக்கு வருவது இப்போது தெரிகிறது. வேலைவாய்ப்பு அதலபாதாளத்தை நோக்கி விரைகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு சந்தையை நோக்கி புதிதாக வருகிறார்கள், அதில் 500 பேருக்கு மட்டுமே புதிய வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உற்பத்தித்துறை இன்னும் 30% வேலைவாய்ப்பு இழப்பை சந்திக்கும் என எச்சாரிக்கைகள் வந்துவிட்டன. ஜிடிபி வானளவு உயர்வதாக காட்டப்பட்ட பித்தலாட்டங்கள் தமது பளபளப்பை இழந்துவிட்டது. ஃபோர்ஜரி செய்துகூட இனி ஜிடிபியை உயர்த்த முடியாது எனும் நிலையில் பாஜக இருக்கிறது. பொருளாதார சுணக்கம் ஒரு தொழில்நுட்ப பிரச்சினை என அமித்ஷா சொல்கிறார். ஆனால் அருண் ஜெட்லியோ பொருளாதார இழப்புக்கு என்ன செய்வது என ஆலோசனை நடத்தி அரசு கூடுதலாக 50000கோடி செலவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயற்சி செய்யப்போகிறோம் என்கிறார். இனி எந்த நம்பரை வைத்தும் மக்களை ஏமாற்ற முடியாது எனும் அளவுக்கு பொருளாதாரப் பின்னடைவு எல்லா மட்டங்களிலும் அம்பலமாகிவிட்டது. அதை மறைக்க இயலாமல் அரசு கையைப்பிசைகிறது.

மோடி படோடாபமாக அடிக்கல் நாட்டிய புல்லட் ரயிலும் திறந்துவைத்த நர்மதா அணையும் கவனிப்பாரற்ற செய்திகளாக கடக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இது நிகழ்ந்திருந்தால் அதுகுறித்த செய்திச் சுனாமியில் நாம் மூழ்கிப்போயிருப்போம். இப்போதோ புல்லட் ரயில் பற்றி குஜராத்திகளே நக்கலடிக்கிறார்கள். சமூக வலைதள பிரச்சாரத்துக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை இறைத்த, சமூக ஊடக பொய்களை உற்பத்தி செய்ய தனி தொழிற்சாலைகளை நடத்திய பாஜகவின் தலைவர் அமித்ஷா “சமூக ஊடக செய்திகளை நம்பாதீர்கள்” என கதறும் நிலைக்கு வந்திருக்கிறார்.

சமீபகாலமாக வரும் மத்திய அரசு விளம்பரங்களில் மோடி வாயை பிளக்கும் காட்சிகள் வருவதில்லை. அதனை நிதின் கட்கரி போன்ற துணை நடிகர்கள் அலங்கரிக்கின்றார்கள். மோடி மூஞ்சை வைத்தெல்லாம் 2019ல் யாவாரம் செய்ய முடியாது என ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக அறிவிக்கிறது. கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு சர்வதேச நெருக்கடிகள் அதிகரிக்கும் சூழல் வந்தது. உடனே மோகன் பாகவத் 50 நாடுகளின் தூதர்களுக்கு காலை விருந்து வைத்து நாங்கள் பாஜகவை இயக்கவில்லை.. பாஜகவும் எங்களை இயக்கவில்லை என வாக்குமூலம் கொடுக்கிறார்.

இன்னொரு போக்கையும் நீங்கள் கவனிக்க இயலும். இந்தியாவுக்கான அமைச்சர்களையும் பிரதமரையும் நாமினேட் செய்யும் அமெரிக்கா இப்போது ராகுல் காந்தியை அழைத்து சீராட்டுகிறது. 2019ல் பிரதமர் வேட்பாளாராக நிற்கத் தயார் எனும் அறிவிப்பை முதலாத்துவத்தின் கருவறையான அமெரிக்காவில் போய் வெளியிடுகிறார் ராகுல். மேலும் அங்கே பல முக்கியமான தலைகளை தொடர்ந்து சந்திக்கிறார் அவர். வரலாற்றில் முதல் முறையாக ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேர்மறையான செய்திகள் எல்லா ஊடகங்களிலும் வருகின்றன. இதுவரை அவரை முதிர்ச்சியற்றவர் என விளித்த, அவர் பற்றிய எதிர்மறை செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்களின் இப்போக்கு கவனிக்கத்தக்கது. வாரிசு அரசியலால் ஒன்றும் தோஷமில்லை, ஆர்.எச்.எஸ்சில் கூட வாரிசு அரசியல் இருக்கிறது என ராகுலுக்கு மறைமுகமாக வரவேற்பளிக்கும் நடுப்பக்க கட்டுரையை எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டிருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து குழுமமும் ராகுல் மீதான கரிசனத்தை காட்ட ஆரம்பித்திருக்கின்றன. யுவராஜாவின் வருகையை நமக்கு அறிவிப்பது மட்டுமல்ல இந்த மாற்றத்தின் நோக்கம். மாறாக தேவை தீர்ந்த தொத்தல் மாடு நீ என கிழட்டு ராஜாவுக்கு உணர்த்தும் சமிஞைகள் இவை.

மோடிக்கு படியளந்தவர்களும் விலகும் சூழல் மெல்ல கனிகிறது. ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய கம்பெனிகளை நேரடியாக பாதிக்கின்ற முகேஷ் அம்பானிக்கு பெரும் லாபமளிக்கின்ற முடிவை டிராய் எடுத்திருக்கிறது. இரண்டு நிறுவனங்களுக்கு இடையே பரிமாறப்படும் அழைப்புக் கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 6 பைசாவாக குறைத்திருக்கிறது டிராய். பணமதிப்பிழப்பு மூலம் அமைப்புசாரா தொழில்களை சந்திக்கு கொண்டுவந்த மோடி ஜி.எஸ்.டி மூலம் முறைப்படுத்தப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்களை முடக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையிலும் பாஜகவை ஆதரித்த பல முதலாளிகளை எதிர்திசைக்கு விரட்டியிருக்கிறார்.

கடவுளின் தூதனாக அறிமுகமாவோர் பிறகு தாமே கடவுள் எனும் நிலைக்கு நகர்வதுதான் வழக்கம். மோடியும் தன்னை கடவுளாக கருதிக்கொண்டிருக்ககூடும். ஆனால் அதற்கு அவர் ராம் ரஹீம் சிங் போல ஒரு சிறிய பரப்பில் ஆசிரமம் துவங்கியிருந்திருக்க வேண்டும். இந்தியா என்பது முதலாளித்துவத்துக்கும் இந்து அடிப்படைவாதத்துக்கும் இருக்கும் பெரிய வேட்டைக்காடு. இதனை ஒற்றை மனிதனின் விளம்பர அரிப்புக்காக கார்ப்பரேட்டுக்களும் ஆர்.எஸ்.எஸும் ஒரேயடியாக விட்டுக்கொடுக்க துணியமாட்டார்கள். மோடி புறங்கையை நக்கும்வரை பிரச்சினை இல்லை. முதலுக்கே மோசம் வரும் என்றால் அவர் அப்புறப்படுத்தப்படுவார்.  ஆர்.எஸ்.எஸ்சும் அதனை ஆதரிக்கும் என்றே கணிக்க வேண்டியிருக்கிறது. காரணம் மோடியின் இடத்தை நிரப்ப பல வழிகள் இருக்கிறது (காங்கிரசை வைத்துகூட அதனால் சாதிக்க இயலும்).

ஆனால் மோடி மீது இதுவரை முதலீடு அவரை அவ்வளவு சுலபமாக கிளம்ப விடாது. அந்த மூலதனம் அவர் தன்னை கடவுள் என நம்பவைத்திருக்கிறது. அவரை நம்பும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களையும் உருவாக்கிவிட்டிருக்கிறது. மோடியின் வீழ்ச்சியின் மூலம் அவர்கள் தாங்கள் அம்மணமாக்கப்பட்டதாக உணர்வார்கள். அப்படி நடந்தால் மோடியும் அவர் பக்தர்களும் கணிக்க இயலாத கோமாளித்தனங்களையும் கொடூரங்களையும் செய்யக்கூடும். முடியிழந்த ராஜாக்கள் அடிபட்ட நாயைப்போன்றவர்கள். ஒன்று அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடக்கூடும் அல்லது கிடைப்பவன் மீது பாய்ந்து பிராண்டக்கூடும்….

ஆகவே கவனமாயிருங்கள்.

நவோதயா பள்ளி – ஏற்றுக்கொள்வோம், பிறகு அனிதாக்களை 5 ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடுவோம்.

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும்படி தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. சொன்ன நீதிபதி பாஜகவின் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசியவராம். நியாயத்தையும் தர்மத்தையும் வாட்சப் வழியே மட்டும் கற்றுணர்ந்த பலர் இந்த தீர்ப்பை கொண்டாடித் தீர்க்கிறார்கள். நவோதயா இல்லாததால்தான் தமிழக கல்வித்தரம் நாசமாய்போய்விட்டதென அம்பிகள் எல்லோரும் ஃபார்வேர்டு மெசேஜ் வழியே புகாரளிக்கிறார்கள். பெருங்குடிகாரன் ஏதோ ஒரு சரக்கு கிடைத்தால் போதும் என தவிப்பதுபோல சுயசிந்தனையற்ற மக்கள் பலர் சி.பி.எஸ்.சி, நீட், நவோதயா என கிடைக்கும் எல்லா வழியில் இருந்தும் பாபவிமோசனம் பெற்றுவிடலாமென வாட்சப் வழியே நம்பி அவற்றை வெறித்தனமாக ஆதரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

மிகப்பலரை வசீகரித்த ஒரு அம்சம் நவோதயாவில் இந்த ஆண்டு +2 படித்து நீட் தேர்வெழுதிய 14000 (+சொச்சம்) பேரில் 7000 பேர் இந்தியா முழுக்க மருத்துவம் படிக்க தேர்வாகியிருக்கிறார்கள் எனும் தகவல். இதில் எத்தனை எம்.பி.பி.எஸ் என்பது தெரியவில்லை. ஆனாலும் 580+ பள்ளிகளில் இருந்து 7000 டாக்டர்கள் எனும் மந்திர எண் மிடில்கிளாசுக்கு உச்சகட்ட கிளுகிளுப்பூட்டுகிறது. நம் ஊரில் அப்படியொரு பள்ளி இருந்து அதில் எப்படியாவது நம் பிள்ளையை சேர்த்துவிட்டால் அவன் மருத்துவராக 50% வாய்ப்பிருக்கிறது எனும் எண்ணம் அவர்களது பெருமளவு கவலைகளுக்கு வடிகாலாக இருக்கிறது. அதனால் அவர்கள் நவோதயாவை கண்மூடித்தனமாக ஆதரிக்க முற்படுகிறார்கள்.

நவோதயா பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை மட்டுமே உண்டு. 5 ஆம் வகுப்புவரை மற்ற பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி நவோதயா பள்ளிகளில் சேரவேண்டும். சராசரியாக நூறில் இருவர் தேர்வாகிறார்கள். தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் ஒவ்வோர் வகுப்பிலும் பயில்கிறார்கள் (5 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் கனிசமாக இருக்கும்). ஒப்பீட்டளவில் மிக அதிக அளவு நகர்ப்புற மாணவர்களைக் கொண்ட மாநிலம் இது. அவர்களின் பெற்றோர்கள் பலர் இனி நவோதயாவை ஒரு வெறித்தனமான லட்சியமாக வரித்துக்கொள்வார்கள். அதற்கான தயாரிப்பு இரண்டு மூன்றாம் வகுப்பிலேயே துவங்கும். இப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களும் 12ஆம் வகுப்பு மாணவர்களும் வதைமுகாம்களுக்கு ஒப்பான சூழலில் வாழ்கிறார்கள். பள்ளியில் கூடுதல் வகுப்பு, 10 ஆம் வகுப்பு என்றால் 2 மணிநேரத்துக்கும் குறையாத டியூஷன், 12 ஆம் வகுப்பு எனில் குறைந்தது 3 பாடங்களுக்கு டியூஷன். இப்போது நீட் பயிற்சி கூடுதலாக இணைய இருக்கிறது.

இப்போது வரைக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பது ஆரம்பப்பள்ளி வகுப்பு சிறார்கள்தான். இனி 10, 11, 12 ஆம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோர்களைப் போல 4, 5 வகுப்பு பெற்றோர்களும் பெரும் பதட்டத்துக்கு ஆட்படுவார்கள். இது ஒன்றும் மிகையான அனுமானமல்ல. என் அனுபவத்தில் இந்த காலகட்டத்தில்தான் (10, 12 ஆம் வகுப்பு) பெற்றோர்களால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். காரணம் பொதுத்தேர்வு, அந்த மதிப்பெண் மூலம் மட்டுமே தெரிவு செய்ய முடிகிற உயர் கல்வி வாய்ப்புக்கள். நவோதயா இந்த போட்டியை இன்னும் அடிமட்டத்துக்கு கொண்டுபோய் ஐந்தாம் வகுப்பையே உச்சகட்ட போட்டியுள்ள களமாக மாற்றும்.

ஏற்கனவே உயர்கல்வி போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு 25 ஆயிரம்கோடி கல்லா கட்டுகின்றன. நீட் அதனை 1 லட்சம் கோடியாக உயர்த்தவிருக்கிறது. இதில் ஆரம்பப்பள்ளியிலேயே நுழைவுத்தேர்வு எனில் என்ன ஆவார்கள் குழந்தைகள்..? ஒருவனுக்கு லட்சம் ரூபாய் பரிசு என அறிவித்துவிட்டு பல லட்சம் பேரிடம் கோடிகளில் பணம் பிடுங்கும் லாட்டரி வியாபாரம்போல மத்திய அரசு நவோதயாவை துவங்கியிருக்கிறது. ஆனால் இங்கே பரிசு தரப்போவது மத்திய அரசு, லாட்டரி வியாபாரத்தை தனியார் பயிற்சி மையங்கள் செய்யும்.

தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட நவோதய மோகம் தூக்கலாகவே இருக்கும். காரணம் படிப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்ட மக்கள் நாம். எதிர்கால வாழ்வுக்கு காலணாகூட சேமிக்காமல் சக்திக்கு மீறி கடன் வாங்கி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். வீட்டில் ரேஷன் அரிசியில் சமைப்பார்கள் என்பதால் மதிய உணவு கொண்டுவராத மெட்ரிக் பள்ளி பிள்ளையை நான் பார்த்திருக்கிறேன் (அந்த வறுமையிலும் அவர்கள் ஆண்டுக்கு 30ஆயிரம் கட்டி மகளை படிக்க வைக்கிறார்கள்). தமது ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை பிள்ளைகளின் பள்ளிக் கட்டணமாக செலுத்திவிட்டு மிச்ச பணத்தில் அவல வாழ்வு வாழும் குடும்பங்களை கொஞ்சம் மெனக்கெட்டால் உங்களாலும் பார்க்க இயலும். குடிசைப் பகுதியில் இருந்து வருவதால் தம் வீட்டு முகவரியை சொல்ல கூச்சப்படும் குழந்தைகள் பலரை சந்தித்திருக்கிறேன், (அவர்கள் தனியார் பள்ளிகளில் பயில்கிறார்கள்). பள்ளிகளில் கண்டறியப்படும் கற்றல் குறைபாடு கொண்ட மற்றும் நுண்ணறிவுக் குறைபாடு கொண்ட சிறார்கள் குறித்து பெற்றோர்களிடம் பேசக்கூட முடிவதில்லை. ஒன்று அவர்கள் முரட்டுத்தனமாக மறுப்பார்கள் இல்லை தமது பிள்ளைகள் படிப்புக்காக எத்தனை சிரமங்களை எதிர்கொள்கிறோம் என விளக்குவார்கள். தம் பிள்ளைகளால் மற்ற பிள்ளைகளைப்போல படிக்க முடியாது என்பதை அனேக பெற்றோரால் ஏற்கவே முடிவதில்லை.

நான் சந்தித்த ஒரு தாய் தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்திவிட்டதாக சொன்னார். வேண்டுதல் ஒன்றுதான் மகன் பத்தாம் வகுப்பில் (அவர்) சொல்லிக்கொள்ளும்படியான மதிப்பெண் வாங்க வேண்டும். என் நண்பர் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு எழுத்து கொஞ்சமும் வரவில்லை. அதிகபட்சமாக 5 மதிப்பெண் மட்டுமே அவரால் பெற முடிகிறது. சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியராலும் அவர் எழுத்துத் திறனை மேம்படுத்த இயலவில்லை. ஆற்றுப்படுத்துனரான நண்பர் அந்த குழந்தையின் தாழ்வுமனப்பான்மையை கருத்தில்கொண்டு வேறொரு சிறப்பு பள்ளியை பரிந்துரைத்தார். ஆனால் அக்குழந்தையின் அம்மா அந்த யோசனையை மூர்க்கமாக மறுக்கிறார். காரணம் அந்தப் பள்ளி அவர் கனவு, ஒரு சாதனை, ஆறாண்டுகால உழைப்பு அவர் மகள் கல்வியில் முதலீடாக இருக்கிறது. பக்கத்துல இருக்குறவங்க வயித்தெரிச்சல்படுறாங்க, நீங்களும் அவங்களுக்கு தக்க பேசுறீங்களா? எனும் கேள்விக்கு நண்பரால் பதில் சொல்ல முடியவில்லை.

தான் எதிர்பார்த்த மதிப்பெண் தன் மகளுக்கு +2வில் வராத நிலையில் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன வாக்கியம் “நாங்கள் (எங்கள் மகளால்) ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். உறவினர்களை எதிர்கொள்ள அவமானமாய் இருக்கிறது, அதனால் தொலைபேசியைக்கூட எடுக்க மனமில்லை”. மிட் டேர்ம் தேர்வில் 3 பாடங்களில் தேர்ச்சியடையாத ஒரு மாணவரது அப்பா ”இவன் அடுத்த பரீட்சையிலயும் இப்படி மார்க் எடுத்தா நாங்க (பெற்றோர் இருவரும்) தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேறவழியிலை” என மகன் முன்னாலேயே அழுகிறார். இவையெல்லாம் மிகையான எதிர்வினைகளாக தோன்றலாம். ஆனால் பெருந்தொகையான பெற்றோரின் மகிழ்ச்சி, கவலை, வெற்றி, தோல்வி, நம்பிக்கை, அவமானம் என சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக பிள்ளைகளின் மதிப்பெண் இருக்கிறது. அதுதான் வெற்றிகரமான பள்ளி என கருதப்படுபவற்றை நோக்கி பெற்றோர்களை ஓடவைக்கிறது. அப்படியான ஒரு பள்ளியில் தன் குழந்தையை சேர்க்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராய் இருக்கும் பெற்றோர்கள் இங்கே மிக மிக அதிகம்.

இந்த களச்சூழலில் இருந்து நவோதயாவைப் பாருங்கள். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி. அதில் அதிகபட்சம் வகுப்புக்கு 50 பேர் என்று வைத்தாலும் தமிழகம் முழுக்க 1500 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தோராயமாக 10 லட்சம் பேர் இருக்கும் இடத்தில் அதிக கற்றல் திறன் கொண்ட 1500 பேரை பொறுக்கி எடுத்து அவர்களுக்கு உச்சபட்ச வசதிகளை கொடுத்து அவர்களை இன்னும் திறமையாக தேர்வெழுதும் மாணவர்களாக உருவாக்கப்போகிறார்கள். குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி செலவில் 6 லட்சம் ரூபாயை மிச்சம் பிடிக்கவும், அதன் பிறகான கல்லூரி செலவில் இன்னும் அதிகம் மிச்சம் பிடிக்கவும், ஒரு வெற்றிகரமான பெற்றோராக தம்மை நிரூபிக்கவும் உள்ள பெரும் வாய்ப்பு நவோதயா பள்ளி சீட்டுக்களுக்கான ரேஸ்தான். ஆகவே தமிழக மிடில்கிளாஸ் ஒரு வெறித்தனமான முனைப்போடு தம் பிள்ளைகளை ஆரம்பப்பள்ளியிலேயே நவோதயா நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்யும். அமைச்சர்கள் தம் அதிகாரத்தின் கடைசி துளியையும் சுவைக்க விரும்புவதுபோல இவர்கள் நவோதயா சீட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பார்கள்.

அந்த கனத்தை சுமக்கப்போவது, நவோதயா பள்ளி என்றால் என்னவென்றே தெரியாத சிறார்கள். ஒப்பீட்டளவில் நெருக்கடியற்ற ஆரம்பப்பள்ளி வகுப்புக்களில் உள்ள பிள்ளைகளை பயிற்சி வகுப்புக்கு அனுப்பும் துயரங்களை நாம் பார்க்கவிருக்கிறோம். இனி ஆறாம் வகுப்பு மாணவர்களை 4 பிரிவில் அடக்கலாம்.

நவோதயாவை அறிந்திராத குழந்தைகள்

அறிந்திருந்தாலும் அதனை அனுகவியலாத குழந்தைகள்

அணுகி தேர்வாகாத பிள்ளைகள்

நவோதயா பிள்ளைகள்.

இதுவரை, நகரம் –கிராமம் என இருந்த பிரிவினை சற்றே மாறி அரசுப்பள்ளி தனியார் பள்ளி என்றானது. பிறகு தனியார் பள்ளி – நாமக்கல் பள்ளி என்றானது. அது இப்போது மாநில பாடம் – சி.பி.எஸ்.சி என்று இருக்கிறது. இனி அது நவோதயா – ஏனையை பள்ளிகள் என்று ஆகப்போகிறது. ஒரு பிரிவு மாணவர்களை மேம்பட்டவர்களாக காட்டி இன்னொரு பிரிவினரை தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளுவது இங்கே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது. அந்த பிளைவை இன்னும் கூர்மைப்படுத்த நவோதயா மோகத்தால் முடியும். 14,000 பேரில் 7000 பேரை மருத்துவம் போன்ற உயர்படிப்புக்கு அனுப்ப முடிகிற ஒரு பள்ளியை ஒரு தொழிற்சாலையாகவே கருத முடியும். முழுக்க புத்திசாலிகளால் நிறைந்திருக்கும் பள்ளி அடிப்படையில் தவறானது. கற்றல் குறைபடு உள்ள சிறார்களைக்கூட ஒரு பள்ளி கூடுமானவரை நிராகரிக்கக்கூடாது.

நடைமுறை சிரமங்கள் இருக்கட்டும். நவோதயா போன்ற ஒரு பள்ளியை அரசே நடத்துவது அறமற்ற செயல். குடிநீரும், கழிப்பறையும் இல்லாத பள்ளிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத ஏராளமான பள்ளிகளை நாடுமுழுக்க வைத்துக்கொண்டு அதில் படிக்கும் குழந்தைகளுக்கும் வாய்ப்பளிக்கிறோம் என பாசங்கு செய்து நுழைவுத்தேர்வு வைப்பது உச்சகட்ட வக்கிரம். எல்லா வசதிகளோடு ஒருசில குழந்தைகளை அரசே படிக்க வைப்பதும், ஏனைய லட்சக்கணக்கான சிறார்களை பிசைக்காரர்களைப் போல கிடைப்பதை வாங்கிக்கொள் என படிக்கவைப்பதும் அநீதி என்பது உங்களுக்கு புரியவில்லையா? 90 மார்க் இல்லை என்பதற்காக உங்கள் பிள்ளையை வராண்டாவில் உட்காரவைத்தால் ஒத்துக்கொள்வீர்களா? நவோதயா எனும் பெயரில் அரசு அதைவிட கேவலமான காரியத்தை செய்வதை எப்படி கல்வி வளர்ச்சி என் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது? நுழைவுத்தேர்வு எழுதாத மற்றும் அதில் தேறாத பிள்ளைகள் சிறந்த கல்விச்சூழலில் படிக்க வக்கற்றவர்கள் என அரசு மறைமுகமாக கொடுக்கும் அறிவிப்புதான் நவோதயா பள்ளிகள். ஒரு கல்வி நிலையத்துக்குள்ளேகூட அதிக மதிபெண் பெறுபவரை ஒருவிதமாகவும் குறைவான மதிப்பெண் பெறுபவரை வேறுவிதமாகவும் நடத்துவதே ஒரு மனித உரிமை மீறல். நீங்கள் அதனை சட்டப்படியேகூட தண்டிக்க இயலும். ஆனால் அதன் எலைட் வடிவமாக ஒரு பள்ளியை அரசே நடத்துவது அக்கிரமம் இல்லையா?

எல்லா திட்டங்களையும் குறை சொல்கிறோம் என உடனடியாக தேசபக்தர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அவர்களுக்கு பதிலளிக்க பல உதாரணங்களை கொடுக்க இயலும். வடசென்னையில் டான்பாஸ்கோ சபையின் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ செயல்படுகிறது. பல இடங்களில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிகளில் படிப்பவர்களில் பத்தாவது தேறாதவர்கள் அல்லது குறைவான மதிப்பெண் பெற்று 12 ஆம் வகுப்பு படிக்க ஆர்வமில்லாதவர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அது. அவர்கள் நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் தங்கள் அடையாளமாகவும் வெற்றியாகவும் கருதவில்லை, படிப்பு வராத மற்றும் பள்ளிக் கல்வியை தொடர விரும்பாதவர்களுக்குமான ஒரு உயர் கல்வியை கொடுக்கிறார்கள். அதே நிறுவனத்தின் உளவியல் சேவைப்பிரிவு பள்ளிகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கும் வேலையை செய்கிறது. அந்த ஆசிரியர்களின் சம்பளத்தில் பாதியை டான்பாஸ்கோ ஏற்றுக்கொள்கிறது (. அவர்கள் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசளிப்பதோடு தங்கள் கடமையை முடித்துக்கொள்ளவில்லை.

தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 2 மாணவர்கள் மட்டும் தோல்வியடைந்தார்கள். அவர்கள் இருவரும் போதிய நுண்ணறிவுத்திறன் இல்லதவர்கள். கடுமையான குறைபாடு உள்ளவர் 1 பாடத்தில் மட்டும் தேறினார். ஓரளவு குறைபாடு உள்ளவர் ஒரே பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தார். அந்த மாணவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்பதை அறிந்தேதான் அந்த தலைமை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதித்திருக்கிறார். ஒரு தலைமை ஆசிரியராக 100% தேர்ச்சியை தெரிந்தே இழந்து சிறு தோல்வியை சந்தித்திருக்கிறார். ஆனால் அந்த இரு மாணவர்களுக்கும் இது மகத்தான் வெற்றி இல்லையா!! (அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகர் அந்த மணவர்களின் முயற்சியைத்தான் தமது பெரும் சாதனையாக நினைக்கிறார் – தகவலுக்காக).

ஒரு சாதாரண தலைமை ஆசிரியர் கண்டிப்பாக தோல்வியடையும் மாணவனுக்கும்கூட போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என நினைக்கிறார். ஒரு கல்வி நிறுவனம் தமது மாணவர்களில் குறைவான மதிப்பெண் பெறுவோரும்கூட உயர்கல்வி வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய கல்வி நிறுவனத்தையே துவங்குகிறது. கல்விப் புலத்தை சரியான திசையில் கொண்டு செல்ல இப்படியான வழிகாட்டிகள் நமக்கு மிக அருகாமையிலேயே இருக்கிறார்கள். இந்திய அரசுகள் கும்பிட்டுத்தொழும் அமெரிக்காவோடு ஒப்பிட்டாலும் நவோதயா பள்ளிகள் செயல்படுவது ஒரு சமூக விரோத செயல்தான். ஹிந்தி திணிப்பெல்லாம் இரண்டாம் காரணி. உண்மையில் அது சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்ல நீதிக்கே எதிரானது. அது கல்வித்துறையை மேம்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. அதிக நவோதயா பள்ளிகளைக் கொண்ட உ.பி கல்வித்தரத்தில் கடைசியிலும் கடைசி படியில் இருக்கிறது.

அனிதா போன்ற எளிய மாணவர்களை உயர்கல்வி வாய்ப்பில் இருந்து விரட்டிவிடுவதற்கான பல திட்டங்களை அரசு பல தளங்களில் இருந்தும் செயல்படுத்துகிறது. ஆரம்பப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களையே நியமிக்காமல் இருப்பது, நீட் தேர்வு, ஐந்து & எட்டாம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு, உயர்கல்வி உதவித்தொகை குறைப்பு, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை வெட்டுவது என்பவை எல்லாமே பாமர மக்கள் உயர்கல்வி பயில்வதை நிறுத்தும் பல்வேறு உத்திகள்தான். நவோதயா என்பது அத்தகைய நடவடிக்கைகளின் காஸ்ட்லி வெர்ஷன். அதன் மூலம் ஒரு தரப்பு மக்களுக்கு போதையூட்டி இன்னொரு தரப்பு பிள்ளைகளை லாயக்கற்றவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்குவதே அதன் நோக்கம். இப்போது மாநில பாடத்திட்டம் மட்டமானது என மாணவர்களும் பெற்றோர்களும் நம்புவதுபோல நவோதயா வந்தால் மற்ற பள்ளிகள் மட்டம் என மக்களும் மாணவர்களும் நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கையை 6 ஆம் வகுப்பிலேயே கொன்றுவிட்டால் 12 ஆம் வகுப்பில் அனேகமாக போட்டியே இருக்காதில்லையா?

ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிப்பது என்பது மலிவான கூலிகளை உற்பத்தி செய்யும் நுட்பம். மிக அதிக அளவு மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் (தமிழகம், கேரளா) அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அங்கெல்லாம் வேலைக்கு வருவது ஏழைகளின் உயர்கல்விக்கு வாய்ப்பு குறைவாக உள்ள மாநில இளைஞர்கள்தான்.

நவோதயாவின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதன் விளைவு மேற்சொன்னபடிதான் இருக்கப்போகிறது. அரசுப் பள்ளிகளை முற்றிலுமாக அழித்தொழிக்க எல்லா வேலைகளையும் செய்யும் இந்த அரசாங்கம் நவோதயா எனும் பெயரில் ”அரசுப்” பள்ளிகளை கொண்டுவர இத்தனை முனைப்பாக இருப்பதில் இருந்தே அதன் பின்னால் ஒரு மோசமான உள்நோக்கம் இருப்பதை உணர இயலும். குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச்செல்வதைத்தான் நவோதயா செய்யும். அது உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் போகலாம் ஆனால் யாரோ ஒருவரின் பிள்ளைகளை உளவியல்ரீதியாக கொல்லத்தான் போகிறது. யாரோ ஒரு குழந்தை கொல்லப்படுவதை உங்களால் இயல்பாக கடந்து போக இயலும் என்றால் நவோதயாவை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்றால் இந்த நவோதயா எனும் கல்வித்தீண்டாமைக்கு எதிரான உங்கள் குரலை பதிவுசெய்யுங்கள்.

கௌரிக்கு மரணமில்லை.

கர்னாடகாவின் (பெங்களூரில் வசிக்கும்) மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி கிடைக்கும்வரை அவரை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனை அவரும் தெரிந்துவைத்திருப்பார். தாம் குறிவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் யாரால் குறிவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும்கூட அவர் அறிந்து வைத்திருப்பார். அர்னாப் போல ஊடகவியலில் நக்கிப்பிழைத்து சுகவாழ்வு வாழ இயலும் என்பதையும் அவர் அறியாதவர் அல்ல. ஆனாலும் கௌரி ஏன் மரணத்தை பரிசளிக்கின்ற பெரிய அங்கீகாரமளிக்காத வாழ்வை தெரிவு செய்ய வேண்டும்?

காரணம் அவர் வாழ்வதன் பொருளை உணர்ந்தவர். தன் சுயத்தை மதிக்கவும் அதனை மறைத்துக்கொண்டு வாழும் போலி சுகவாழ்வை வெறுக்கவும் கற்றிருந்தார். அவர் இந்துத்துவ எதிர்நிலைப்பாடு என்பதில் மட்டும் உறுதியாக இருந்திருகவில்லை. பாஜக எதிரணியில் உள்ள காங்கிரஸ் நடத்திய திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களை அவர் எதிர்த்தார். காங்கிரஸ் மந்திரிகள் ஜார்ஜ், சிவகுமார் ஆகியோரது ஊழல்களை கடுமையாக அம்பலப்படுத்தி வந்தார். சுருங்கச்சொன்னால் அவர் தன் கொள்கையின் வழிநின்று மகிழ்ச்சியை கண்டடைந்தார். ஒரு சித்தாந்தத்தின் மீதான வெறுப்பு அவரை வழிநடத்தியதாக யாரும் கருதிவிட வேண்டாம் என்பதற்காக இதனை குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஒரு பொறுப்பான பத்திரிக்கையாளரின் எந்த தகுதியிலும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை.

மரணம் ஒவ்வொரு நாளும் நம் பின்னால் நின்றுகொண்டுதான் இருக்கிறது. ஒரு டெங்கு கொசுவாலோ, குடிகார வண்டியோட்டியோ, தெருவில் நிற்கும் வெறிநாயோ யாரால் வேண்டுமானாலும் உங்களுக்கு மரணத்தை  பரிசளிக்க முடியும். எல்லோருக்குமான அந்த நீண்ட பட்டியலில் கௌரிக்கும் கல்புர்கிக்கும் இந்தித்துவ அடிப்படைவதிகள் எனும் அபாயம் கூடுதலாக இணைந்திருந்தது. எப்படி சொறிநாய்க்கு பயந்து நீங்களும் நானும் வீட்டுக்குள் முடங்குவதில்லையோ அப்படியே கௌரியும் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு பயந்து முடங்கியிருகவில்லை. இந்துத்துவாவின் கொலைப் பட்டியலில் இருந்து தப்பிப்பது அவர் இலக்காக இருந்திருக்க முடியாது. ஒரு கொசுவோ அல்லது ஒரு மதவெறியனோ யாரலோ அல்லது எதுவாலோ கொல்லப்படும் வரை ஒவ்வொரு நாளையும் வாழ்ந்துவிடுவது என்பதையே துணிச்சல் கொண்ட எல்லோரும் தீர்மானமாக கொண்டிருக்கிறார்கள். கௌரி லங்கேஷ்சும் அப்படியே வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர் குறித்த செய்திகள் சொல்கின்றன.

அடிப்படைவாதம், ஊழல் போன்றவற்றை எதிர்ப்பது மட்டுமல்ல கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் செயற்பாட்டாளர்களை கர்னாடகாவுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். பிணை விதிமுறை காரணமாக தார்வாடில் 2 மாதங்கள் தங்கியிருந்தபோதுகூட அந்த பகுதியில் மக்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்தார். கர்நாடகா என்பது குஜராத்தின் சற்றே காரம் குறைவான நகல். அங்கே தலித் ஆதரவு செயல்பாடுகளை தொடர்ந்து ஒருங்கிணைக்க அசாத்திய துணிவு வேண்டும். அது கௌரிக்கு இருந்த்து. கர்நாடக பார்ப்பனீய அடாவடித்தனங்களை எதிர்ப்பதிலும் இடதுசாரி, தலித் மற்றும் மனித உரிமை இயக்கங்களை ஓரணியில் திரட்டுவதிலும் அவர் தொடர்ந்து தொய்வின்றி பணியாற்றியிருக்கிறார்.

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரை கொன்ற 7.65 மில்லி மீட்டர் நாட்டுத்துப்பாக்கிதான் கௌரியையும் கொன்றது. அப்படியானால் அடிப்படைவாதம் வென்றுவிட்டது என்று பொருளா?

கொலைகள் மூலம் ஜெயிக்கலாம் என்றால் சர்வாதிகாரிகளால் உலகை எளிதாக ஆண்டிருக்க முடியும். நிஜம் அப்படி இருந்திருக்கவில்லை, இருக்கப்போவதும் இல்லை. வெறும் சொற்களை ஆயுதமாகக் கொண்ட கௌரி எனும் ஒடிசலான பெண் மொத்த இந்தியாவையும் ஆளும் தீவிரவாதிகள் பற்றி அச்சமின்றி தன் இறுதிநாள் வரை வாழ்ந்தார். ஆனால் எல்லா ஆயுதங்களும் இருந்த ஹிட்லர் ஒரு கோழையாக எலியைப்போல ஒளிந்தே வாழ்ந்தார். துப்பாக்கிகள் சிந்தனையை கொல்லும் எனில் அவை தபோல்கரை, பன்சாரேவை கொன்றபோதே கௌரி உருவாகாமல் தடுத்திருக்க முடியும். மனித இனம் துப்பாக்கிகளை செய்யக் கற்பதற்கு பன்னெடுங்காலம் முன்பே சிந்திக்க கற்றுக்கொண்டுவிட்டது. சிந்தனைத் திறன் உள்ளவரை கௌரிகளும் பன்சாரேக்களும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். கண்ணையா குமாரை இந்துத்துவ பொறுக்கிகள் நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கினார்கள். அரசு, போலீஸ், நீதிமன்றம் என எதுவும் உன்னை காப்பாற்றாது என்பதை அவர்கள் கண்ணையாவுக்கு தங்கள் வன்மம் நிறைந்த மொழியில் சொன்னார்கள். ஆனால் கண்ணையா அதன்பிறகுதான் இன்னும் வீரியத்தோடு சமூகப்பணிக்கு வந்தார்.

பகத்சிங், 23 வயதில் தூக்கிலேற்றப்பட்ட நாள்வரை அவருக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தது. மன்னிப்பு எனும் ஒற்றை வார்த்தை அவரது நீண்ட ஆயுளை உறுதி செய்திருக்கும். ஆனால் அவர் நீண்ட வாழ்நாள் எனும் வாய்ப்பை தெரிவு செய்யவில்லை, மாறாக வாழ்வை தெரிவுசெய்தார்.  யானுஷ் கர்ச்சாக் எனும் மருத்துவர் வார்சா நகரில் ஆதரவற்ற சிறார்களுகான விடுதி ஒன்றை நிர்வகித்து வந்தார். ஹிட்லரின் படைகள் அந்த நகரை கைப்பற்றியபோது ஆதரவற்ற சிறார்களை கொல்ல உத்தரவிடப்பட்டது. ராணுவ அதிகாரி யானுஷுக்கு இரண்டு வாய்ப்புக்களை வழங்கினார் ஒன்று விடுதியை விட்டு வெளியேறி வாழ்வது அல்லது விடுதியில் உள்ள குழந்தைகளோடு சேர்த்து கொல்லப்படுவது. அவர் தயக்கம் ஏதுமின்றி இரண்டாம் வாய்ப்பை தெரிவு செய்தார். மரணம் அருகாமையில் இருந்த அந்த தருணத்திலும் அவர் தம் பிள்ளைகள் அச்சமின்றி அச்சூழலை கழிக்க உதவினார். கல்புர்கி, கௌரி, பன்சாரே, தபோல்கர் எல்லோருக்கும் காலம் அப்படியான ஒரு வாய்ப்பை வழங்கிற்று. அவர்கள் சமரசம் செய்து பிழைத்திருப்பது எனும் வாய்ப்பை மகிழ்வோடு புறக்கணித்தார்கள். தம் கொள்கைகளுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்தார்கள்… சுருங்கச்சொன்னால் அவர்கள் வெறுமனே பிழைத்திருக்கவில்லை ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்தார்கள்.

சூழல் நமக்கும் அப்படியான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வலதுசாரி சித்தாங்களின் பின்னால் போய் வேறு காரணங்களால் சாகும்வரை வாழ்வதா (அங்கேகூட ரியல் எஸ்டேட், கள்ளக்காதல் விவகாரங்களால் கொல்லப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அவர்களில் சிலர் அந்த சித்தாந்தங்களின் வழிநின்று மரணத்தை தழுவுகிறார்கள்), அல்லது அதனை எதிர்த்து நின்று கொல்லப்படும் வாய்ப்போடு வாழ்வதா அல்லது எதுக்கு வம்பு எனும் பார்வையாளனாக வாழ்வதா எனும் வாய்ப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. உயிரோடிருப்பதற்கான காரணங்களும் தேவைகளும் நம் எல்லோருக்கும் இருக்கிறது. அவை ஒரு நாய்க்கும் பன்றிக்கும்கூட இருக்கிறது. அவைகளுக்கு வலதுசாரிகளால் ஒருபோதும் தொந்தரவு வரப்போவதில்லை. வலதுசாரிகளின் லிஸ்டில் இல்லாத அந்த நாய்களைப்போல வாழ்வதா அல்லது அவர்களால் கொலைப் பட்டியலில் இருந்த கௌரியைப்போல வாழ்வதா என்பது முற்றிலுமாக உங்கள் விருப்பத்தின்பாற்பட்டது. கௌரியைப்போல இருப்பது எனும் கம்பீரமான வாழ்வு அல்லது அவரைப்போக செத்துவிடக்கூடாது எனும் கோழைத்தனமான வாழ்வு  என இரு வாய்ப்புக்கள் எல்லோர் முன்னாலும் இருக்கிறது.

முடிவெடுக்கும் முன்னால் ஒன்றை நினைவில் வையுங்கள். எந்த பாதுகாப்பும் இல்லாத கௌரி தன் சிந்தனையும், கொள்கையும் தந்த துணிவோடு உலகின் மாபெரும் தீவிரவாத இயக்கத்தையும் அதன் துணை அமைப்புக்களையும் எதிர்கொண்டார். ஆனால் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு பல்லாயிரம் கோடி நிதியோடு இயங்கும் அமைப்பு எந்த பெரிய அமைப்பு பலமும் இல்லாத அவரது சிந்தனையை கண்டு அஞ்சி, கொன்று ஒழிக்கும் எல்லைக்கு சென்றது. கௌரி தன் கடைசி ஆயுள் காப்பீட்டையும் முடித்துக்கொண்டு அந்த பணத்தைக்கொண்டு கண்ணையா குமாரை இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் அனுப்ப உத்தேசித்திருந்தார். கண்ணையவை தம் மகனாக வரித்துக்கொண்டார். எதிரிகளை எதிர்க்கும் துணிவு மட்டுமல்ல அதனைக் கடந்து மற்றவர்களை அரவணைக்கும் கனிவும்  நிறைந்தவர் அவர்.

சாகும்வரை வாழ்ந்துவிடும் பெருவாழ்வா அல்லது சாவுக்கு காத்திருக்கும் அற்ப வாழ்வா என்பதில் நான் கௌரியின் வழியையே தெரிவு செய்வேன். கௌரி, கல்புர்கி, பன்சாரே என வலதுசாரிகளால் கொல்லப்பட்ட எண்ணற்ற போராளிகளுக்கான உண்மையான அஞ்சலி அதுதான்.

நீட் – குழந்தைகளைக் கொல்லும் ஏற்பாடு மட்டுமல்ல.

நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக இருக்கிறது. இந்த பதிவு அதற்கான முயற்சியில் ஒரு சிறிய பாகம் மட்டுமே. எங்கள் உறவுக்கார மாணவர்கள் இருவர் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

தகுதித் தேர்வு இல்லாவிட்டால் தகுதியான மருத்துவர்களை எப்படி உருவாக்க முடியும்?

டாக்டருக்கு மட்டுமல்ல, எல்லா பணிக்குமே தகுதியானவர்கள்தான் வரவேண்டும். ஆனால் ஒரு வேலைக்கான தகுதி என்பது வெறுமனே தகுதியான ஆளை தெரிவு செய்வது மட்டுமில்லை. முறையான பயிற்சி, அனுபவம் மற்றும் அதனை அளவிடும் தேர்வுகள் வாயிலாகவே தகுதியானவர்களை உருவாக்க முடியும். மருத்துவப் படிப்புக்கு பெரிய போட்டி இல்லாத நாடுகளில் சராசரி மதிப்பெண் எடுத்த மாணவர்களே மருத்துவப் படிப்பை தெரிவு செய்கிறார்கள். அப்படியானால் அவர்கள் தரமான மருத்துவர்களை உருவாக்கவில்லையா? தரமான மருத்துவர்கள்தான் தேவை என்றால் நாம் செய்ய வேண்டியது மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதுதான்.

இங்கே நாம் தகுதியின் அடிப்படையில் மருத்துவ மாணவர்களை தெரிவு செய்வதில்லை. எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நம்மிடையே போட்டி அதிகம் ஆகவே இருக்கும் வழிகளில் ஒன்றான மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்கிறோம். ஜப்பானில் அறுவை சிகிச்சை மருத்துவ சிறப்பு படிப்புக்கு அவர்கள் கை மற்றும் கண்களுக்கு இடையேயான ஒத்திசைவு ஒரு தகுதியாக சோதிக்கப்படும். இங்கே அப்படியெல்லாம் இல்லை. நாம் எளிமையான வழியான மதிப்பெண்ணை வைத்திருக்கிறோம்.

சரியான தகுதித்தேர்வு என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அமெரிக்க மாநிலம் ஒன்றில் பணியாற்றும் பேராசிரியர் சொல்லும் வழி இப்படி இருக்கிறது,

மாணவரின் பொருளாதார சூழல் (வசதியான மாணவர்கள் சுலபமாக படிப்பதற்கான வாய்ப்புக்களை தேடிப்பெற இயலும்)

வீட்டுச் சூழல் (பெற்றோரில் ஒருவர் இல்லாவிட்டால் மாணவரின் சுமை கூடும், )

பிறப்பு வரிசை (முதல் குழந்தைகள் கடைசி குழந்தைகளைவிட இயல்பாகவே படிப்பில் பிரகாசிப்பதாக தரவுகள் சொல்கின்றன)

மேல்நிலை வகுப்புக்களில் மாணவர்கள் ஏதேனும் பெரிய உடலியல் மற்றும் மனநல பிரச்சினையை சந்தித்து மீண்டிருக்கிறார்களா?

அதோடு 9,10, 11,12 ஆம் வகுப்புக்களில் அவர்கள் எடுத்த மதிப்பெண்.

இவை அனைத்தையும் பரிசீலித்தே மாணவரின் இறுதியான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படவேண்டும்.

கூடுதலாக ஒரு வகுப்பில் பாலின சமநிலை மற்றும் வெவ்வேறு இன மக்களின் இருப்பு ஆகியவற்றையும் பராமரிக்கும்படியாகவே மாணவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் (அதாவது வெறும் ஆண்கள் மட்டுமே இருக்கும்படியாகவோ அல்லது வெள்ளையின மக்கள் மட்டுமே இருக்கும்படியாகவே ”தகுதி” நிர்ணயிக்கப்படக்கூடாது, அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் தகுதியை சற்று சமரசம் செய்துகொண்டு சமநிலை கொண்ட வகுப்புக்கே முன்னுரிமை தர வேண்டும்)

இப்படியும் சில பல்கலைக் கழகங்கள் மாணவர்களை தெரிவு செய்கின்றன. ஆனால் அதனை செயல்படுத்த பெரிய அளவில் ஆள்பலமும், எல்லா துறை பணிகளுக்கும் ஓரளவு சமவிகித ஊதியம் மற்றும் ஓரளவு நேர்மையான கல்வித்துறையும் தேவை. அதற்கு வக்கில்லை என்பதால்தான் நாம் மதிப்பெண்ணை ஒரு  தகுதியாக வைத்திருக்கிறோம். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, டோக்கனை வீசியெறிந்து பொறுக்கச்சொல்வது, குலுக்கல் முறை ஆகியவற்றைவிட மதிப்பெண் சற்றே மேம்பட்ட வழிமுறை அவ்வளவே.

அப்படியானால் நீட் எனும் இன்னொரு தேர்வினால் என்ன கெட்டுவிடும்?

12 ஆம் வகுப்புத் தேர்வு மற்றும் நீட் தேர்வு ஆகியவை அடிப்படையில் வேறானவை. சிந்தனையில் இருந்து சொற்களை எடுத்து அதனை வாக்கியமாக்குவது ஒரு திறமை என்றால் மின்னல் வேகத்தில் சிந்தித்து ஒத்திருக்கும் பதிலில் சரியானதை தெரிவு செய்வது இன்னொரு திறமை. தமிழக மாணவர்கள் பதிலை எழுதுவதில்தான் 12 வருடங்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஏனைய உயர் படிப்புக்களுக்கு அப்படி படித்து வாங்கும் மதிப்பெண்தான் அடிப்படை. அது மாணவர்களுக்கு ஓரளவு பழக்கமாகியிருக்கிறது. இதில் புதிதாக நீட் எனும் தேர்வு நுழையும்போது அது மாணவர்களுக்கு ஒரு கறாரான விதியை நிர்ணயிக்கிறது. நீட் மதிப்பெண்னா அல்லது +2 மதிப்பெண்னா என்பதை முதலிலேயே நிர்ணயித்து அவர்கள் தமது படிப்பை துவங்க வேண்டியிருக்கிறது.

+2 தேர்வை வரையறையாக வைப்பதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. தனியார் பள்ளிகள் +1 பாடங்களை புறக்கணிக்கின்றன போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்மையே. ஆனால் ஒரு பிரச்சினைக்கான தீர்வு பிர்ச்சினையைவிட மோசமானதாக இருக்கக்கூடாது.  நீட் மாணவர்களை இரண்டு பிரிவாக பிளக்கிறது. மருத்துவமா அல்லது வேறா என ஒற்றை முடிவை நோக்கி அவர்களை அழுத்துகிறது. ஒரே வாய்ப்பை தெரிவு செய்யும்போது அதில் ரிஸ்க் அதிகமாகிறது ஆகவே அவர்கள் அதில் பெரும் முதலீடு செய்யும்படிக்கு மறைமுகமாக தூண்டபடுவார்கள். பெரும் பணக்கார குழந்தைகள் அப்படியான ஒரு ஒற்றை இலக்கை நோக்கி நகர்வது சுலபம். அதற்காக முதலீடு செய்வதும் அல்லது மீண்டும் மீண்டும் முயற்சிப்பதும் சுலபம். வடமாநிலங்களில் 6 ஆம் வகுப்பு முதலே ஐ.ஐ.டி போன்ற தேர்வுகளுக்கு வசதியான மாணவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். சைத்தன்யா போன்ற பள்ளிகள் இங்கேயும் அதனை செய்கின்றன. ஆனால் இப்படியான ஒற்றை இலக்கை நோக்கி சாமானிய மாணவர்களை விரட்டினால் அது கடுமையான மன அழுத்தத்துக்கு இட்டுச்செல்லும். காரணம் அவர்கள் ஒருவேளை தோல்வியுற்றால் என்ன வழி என்பதற்கு பதில் இல்லை.

மாநில அரசின் வடிகட்டும் முறை மாணவர்களின் ஒரு கையை கேட்கிறது என்பதற்காக மத்திய அரசு எனக்கும் ஒரு கையை கையை வெட்டிக் கொடு என கேட்பது நியாயமாகாது.

அப்படியானால் இது ஒரு நடைமுறை சிரமம், அதனை ஏன் தமிழகத்தின் மீதான பெரும் தாக்குதல் போல ஏன் சித்தரிக்க வேண்டும்?

காரணம் இது மத்திய அரசின் தாக்குதலில் ஒரு அங்கம் என்பதை நம்ப எல்லா முகாந்திரமும் இருக்கிறது. மருத்துவம், கல்வி என எல்லா சேவைகளையும் தனியார் வசம் ஒப்படைப்பதில் அரசு பெரும் முனைப்பு காட்டுகிறது. அதன் அங்கமாக அரசு அரசுக் கல்வியை ஒழிக்கும் நேரடி நடவடிக்கைகளை மோடி துவங்கிவிட்டார். 3 லட்சம் அரசுப்பள்ளிகளை மூடும் திட்டம், சிறப்பாக செயல்படாத பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் பரிந்துரை, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை குறைப்பது என அரசுக் கல்விக்கு சமாதி எழுப்பும் செங்கற்கல்களை விரைவாக அடுக்குகிறது மோடி அரசு. ஆகவே நீட் தேர்வையும் அதன் அங்கமாகவே நாம் பார்த்தாக வேண்டும்.

அந்த அடிப்படையில் பார்க்கையில் நாம் நீட்டை இன்னும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முன்னாலும்கூட கிராமப்புற மாணவர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் பெரிய அளவில் மருத்துவ சீட் பெறவில்லையே?

உண்மைதான், ஆனால் அதுவே நீட்டை ஏற்றுக்கொள்வதற்கான நியாயமாகிவிடாது. இப்போதைய சூழல் அடுத்த வட்டத்தில் இருக்கும் நடுத்தர வர்க மக்களையும் மருத்துவப் படிப்பு எனும் வாய்ப்பில் இருந்து வெளியேற்றுகிறது. உயர்கல்வியின் பரப்பு சுருங்கி இன்னும் தீவிரமாக பெரும் வசதியான மக்களிடம் மையம் கொள்கிறது. வட மாநிலங்களில் தேர்வுகளில் எத்தனை மோசமான திருட்டுத்தனங்கள் செய்யப்படுகின்றன என்பது தொடர்ந்து அம்பலமாகி வந்திருக்கிறது. டெல்லி எய்ம்ஸில் உயர் மருத்துவக் கல்வி படித்த சரவணன் கொல்லப்பட்டது சீட் போட்டியில்தான்.  இப்படி உயர்கல்வி வய்ப்புக்காக வடமாநிலங்களில் நடக்கும் குற்றங்கள் நம் கற்பனைக்கு எட்டாதவை. நீட்டின் வருகை இப்படிப்பட்ட பல கூடுதல் பிரச்சினைகளை தமிழகத்துக்கும் கொண்டு வரும். இப்போதிருக்கும் +2 மதிப்பெண் முறையை தமிழகமே மேம்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகளை போராடியாவது நம்மால் பெற முடியும். நீட்டை ஏற்றுக்கொள்வது அந்த வாய்ப்புக்களை எல்லாம் எட்டாக்கனியாக்கிவிடும்.

அறிமுகமான முதல் ஆண்டிலேயே 1000க்கும் மேலான வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து சேர்ந்திருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இது இன்னும் மோசமாகும். கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்கள் என துவங்கிய இந்த சுத்திகரிப்பு இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. கிராமப்புற மாணவர்களையும் அரசுப்பள்ளி மாணவர்களையும் இதுநாள்வரை புறக்கணித்த பாவத்தின் பலனைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிறோம். அதே பாவத்தை மீண்டும் செய்ய விரும்பாமல் மக்கள் வீதிக்கு வருகிறார்கள் அவ்வளவுதான்.

மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காததற்காக தற்கொலை செய்துகொள்வது எப்படி சரியாகும்? அதனை தியாகம் போராட்டம் என வர்ணிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடாதா?

தற்கொலையை வெறுமனே விரக்தியின் வெளிப்பாடாக பார்ப்பதன் விளைவுதான் இந்த சிந்தனை. இந்தியாவின் சமூக பொருளாதார சூழலை புரிந்துகொள்ளாமல் நிகழ்வுகளை பார்த்தால் தீர்மானங்கள் இப்படித்தான் இருக்கும். தற்கொலைக்கான பிரதான காரணமாக விரக்தி இருக்கிறதே தவிர அதுவே ஒரே காரணமாகிவிடாது.

இந்தியாவில் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வாக முன்வைக்கப்படுவது படிப்புதான். வறுமையா? படி சரியாகிவிடும். சாதீய வன்முறையா? படி சரியாகிவிடும். ஒரு தனி மனிதன் மீதான எல்லா ஒடுக்குமுறைக்கும் தீர்வாக நன்றாக படிப்பது எனும் ஒற்றை யோசனையே முன்வைக்கப்படுகிறது. பாமர மக்களும் தமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை கொடுப்பதற்கே அதிகம் போராடுகிறார்கள். சிறந்த படிப்பின் உச்சபட்ச எல்லையாக இருப்பது அரசுக் கல்லூரி எம்.பி.பி.எஸ்.

சாதி மற்றும் பொருளாதார படிநிலையில் கடைக்கோடியில் இருக்கும் அனிதா போன்ற ஒரு பெண் கல்வியின் உச்சத்தை தொட்ட பின்னும் அவரது வாய்ப்பை பணமிருக்கும் மாணவர்கள் இலகுவாக தட்டிக்கொண்டு போகையில் அந்த மாணவிக்கு இந்த சமூகத்தில் என்ன நம்பிக்கை மிச்சமிருக்கும்? இதுநாள் வரை உள்ளூர் அறிவுரை சப்ளையர்கள் முதல் உலக அறிவுரை சப்ளையர் அப்துல்கலாம் வரை எல்லோரும் படித்தால் போதும் படித்தால் போதும் என ஓதியவற்றை நம்பி தன் பள்ளி காலத்தை முழுமையாக செலவிட்ட ஒரு மாணவியை நீ மருத்துவம் படிக்க லாயக்கற்றவள் என டிஷ்யூ பேப்பரைப் போல தூக்கியெறிந்தால் அவள் எப்படி அதனை இயல்பாக கடந்துபோவாள் என நம்புகிறீர்கள்? 12 ஆண்டுகால உழைப்புக்கு ஊதியம் கேட்கும்போது உனக்கு தகுதியில்லை வேண்டுமானால் பிச்சை வாங்கிக்கொள் என்றால் சகித்துக்கொள்வீர்களா? ஏன் அக்ரி படிச்சா என்ன என்று அனிதாவைப் பார்த்து கேட்பதும் அப்படியானதுதான்

சில தருணங்களில் தற்கொலை ஒரு கூக்குரல், சமூகத்துக்கு விடுக்கும் செய்தி. எப்போதுதான் எங்களை கண்டுகொள்வீர்கள் எனும் ஆற்றாமை. அவர் வாழ்வதற்கான வாய்ப்புக்களை இந்த சமூகமும் அரசும் தரவில்லை. நீங்கள் காரணத்தை ஆராயாமல் விளைவை ஆராய்ந்தால் அனிதாதான் குற்றவாளியாக தெரிவார்.

பாடத்திட்டத்தை மாற்றினால் கல்வியின் தரம் உயரும் அல்லவா?

தரம் என்பதை யார் தீர்மானிப்பது? தரம் என்பதை அளவிட உலகெங்கும் இருக்கும் விதி, அது பயனாளியின் தேவையையும் விருப்பத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான். இங்கே பயனாளி தமிழக மக்கள். அவர்களுகான தரத்தை எங்கோ இருக்கும் ஒருவனால் எப்படி தீர்மானிக்க முடியும்?

கல்வியில் தரம் என்பது பல கூறுகளை உள்ளடக்கியது. அரசு, ஆசிரியர்கள், சமூக பொருளாதார நிலையில் குறைந்தபட்ச சமநிலை, அனைவருக்கும் ஒரே தரமுடைய பள்ளிகள் என நீளும் அந்த பட்டியலில் பாடத்திட்டம் கடைசியாகத்தான் வரும். இந்தியாவில் தரமான கல்விக்கான எல்லா அம்சங்களையும் அரசே எட்டி உதைத்து நாசமாக்குகிறது. அந்த எல்லா பாவங்களையும் ஒரு நுழைவுத்தேர்வு கழுவிவிடும் என மக்களில் ஒரு பிரிவினரை நம்ப வைத்திருக்கிறது அரசு. இந்தியா போன்ற நாட்டில் வெறுமனே புத்தகத்தை மாற்றி கல்வியின் தரத்தை மாற்றலாம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இந்த கருத்தை சொல்லும் மனிதர்களிடம் ஒரேயொரு கேள்வியை முன்வையுங்கள். தரமான கல்வி, சமமான போட்டி தேவையென்றால் எல்லா பள்ளிகளையும் அரசே நடத்தி சமமான போட்டியை ஏற்படுத்த வழி செய்யலாமா என கேளுங்கள். அப்போது அவர்களது எதிர்வினையே உங்களுக்கு தரமான கல்வி பற்றிய அவர்கள் அக்கறையை அம்பலப்படுத்தும்.

நீட் வந்துவிட்டது, இனி எப்ப போராடினாலும் அதனை மாற்ற முடியாது. அப்படியானால் இனி அதற்கு தயாராவதுதானே வழி?

மாற்ற முடியாது எனும் வாதம் அனேகமாக சொல்பவரின் விருப்பம் மற்றும் அச்சத்தில் இருந்து வருகிறது. உலகின் பெரிய மாற்றங்கள் எல்லாமே இது நடக்க வாய்ப்பில்லை என பலராலும் நம்பப்பட்டவைதான். அசைக்க முடியாத சக்திகளை எல்லாம் போராட்டங்கள் அசைத்திருக்கின்றன. வருங்கால வைப்புநிதியை எடுப்பதற்கு மோடி விதித்த கட்டுப்பாடுகளை பெங்களூர் ஆடைத்தொழிலாளர்கள் ஒருநாள் முற்றுகையில் தகர்த்தார்கள். இங்கே கேள்வி நீங்கள் போராடத்தயாரா என்பதும் அதன் நியாயமும்தான். அது வெற்றி பெறும் எனும் கியாரண்டி கார்டை கொடுத்தெல்லாம் யாராலும் யாரையும் போராட்டத்துக்கு அழைக்க முடியாது.

உன் மனைவியையும் மகளையும் எனக்கு கூட்டிக்கொடு என நட்டின் அதிகாரம் மிக்கவர் கேட்டால் அனேகம் பேர் சாவுதான் முடிவென்றாலும் அதற்கெதிராக போராடுவார்கள். சில சமயங்களில் தர்க்க ரீதியான சாத்தியம் போராட்டத்தை தீர்மானிக்கக்கூடாது அது உங்கள் உணர்வை அழுத்தமாக எதிரிக்கு சொல்ல வேண்டும்.

இனி மக்கள் என்னதான் செய்வது?

நீட் தேர்வு என்பது மக்களை சூழ்ந்திருக்கும் ஏராளமான மரண முற்றுகைகளில் ஒன்று. கல்வி, மருத்துவம் என எல்லா சேவைகளையும் முற்றாக தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. பொதுவிணியோகத்தை சிதைத்து அழிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது. பாமர மக்களை அழித்தொழிக்கு  தொடர் நடவடிக்கைகளின் ஒரு அங்கம் நீட். அதனை எதிர்ப்பது இந்த தொடர் அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான எதிர்வினை. இது குறைந்தபட்சம் உங்களை கொல்லும் செயல்பாடுகளை தள்ளிப்போடும். இதனை மவுனமாக ஏற்றுக்கொள்வது நீங்கள் அரசுக்கு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் அழிக்க கொடுக்கும் லைசென்ஸ். அதற்கு தயாரென்றால் அமைதியாக இருங்கள். இல்லையென்றால் சிந்தியுங்கள், பேசுங்கள் வீதிக்கு வாருங்கள்

குழந்தைகளுக்கு குழி வெட்டும் அரசு, தள்ளக் காத்திருக்கும் சமூகம்.

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் மக்களை அதிகம் வசீகரித்த வார்த்தை தாராளமயம். சோற்றுக்கு சிக்கல் இல்லாத தரப்பு மக்கள் அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு முழுநேர தாராளமய பிரச்சாரகர்களாக மாறினார்கள். தாராளமய ஆர்மியின் பேராதரவோடு சாத்தியமான எல்லா அழிவுகளையும் பார்த்துவிட்டது இந்தியா. ஆறுகள், மலைகள், காடுகள் என எதுவும் தப்பவில்லை. அழித்து ஓய்ந்தபிறகு அதிகாரவர்கத்தின் கண்ணை குழந்தைகள் உறுத்துகிறார்கள்.  அதனை நேர் செய்யும் நோக்கோடு கல்விக் கொள்கைகளை மாற்றும் வேலையை துவங்கியது பாஜக அரசு. அதற்கு கிடைத்த மிகக் கவர்ச்சியான பிரச்சார வார்த்தை ”தரம்”.

கல்வியில் தரம் எனும் வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், கக்கூஸ் பினாயில்கூட எக்ஸ்போர்ட் தரத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நியோ மிடில் கிளாஸ் உடனடியாக பரவச நிலையை எட்டிற்று. அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிற, பிள்ளைகளையும் எக்ஸ்போர்ட் தரத்தில் வளர்க்க விரும்பும் இந்த வர்க்கம்தான் முதலாளித்துவத்திற்கு துணிச்சல் கொடுக்கிறது. தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் முதலாளித்துவம் கல்விச் சீர்திருத்தம் எனும் பெயரில் இந்த மத்தியதர வர்கத்தைத்தான் முதலில் பதம் பார்க்கவிருக்கிறது. ஆனாலும் அதுகுறித்து அவர்கள் அச்சம் கொள்ளப்போவதில்லை. இன்றைக்கு உயரும் பெட்ரோல் விலையே அவர்களை உசுப்பாதபோது நாளை நாசமாய் போகப்போகும் பிள்ளைகள் பற்றி அவர்கள் யோசிக்க மாட்டார்கள்.

ஆகவே இவ்விவகாரத்தில் மாணவர்கள் சந்திக்கப்போகும் துயரங்கள் பற்றி பேசவும் கவலைப்படவும் ஆளிருக்கப்போவதில்லை. மாணவர்களது சமகால சிக்கல்களை எந்த விவாதமும் முழுமையாக பேசவில்லை. காரணம் அவர்கள் தரப்பை பேச அவர்களிடம் ஆளில்லை, அவர்களிடம் போய்க் கேட்கவும் நம்மிடம் ஆளில்லை.  இந்த நீட் தேர்வு மாணவர்களின் சமகால வாழ்வில் பெரும் நிலைகுலைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கண்கூடு. குழப்பம், நம்பிக்கையின்மை, பயம் என எல்லா எதிர்மறை உணர்வுகளாலும் சூழப்பட்ட வாழ்வை அவர்கள் வாழ்வதை ஒரு சாட்சியாக நின்று தினசரி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

சில உதாரணங்களை பார்க்கலாம்.

அத்தனை இனிமையான வீட்டுச்சூழல் இல்லாத மாணவி அவர், ஆனாலும் அவரது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் 94%. சிறந்த தடகள வீரரும்கூட. மதிப்பெண் அதிகம் பெறும் அனேக பிள்ளைகளைப்போல அவரும் மருத்துவம் படிப்பதையே லட்சியமாக வைத்திருக்கிறார். ஆனால் நீட் அவரது கனவை 11ஆம் வகுப்பிலேயே சிதைத்துவிட்டது. என்ன பண்றதுன்னு தெரியல சார், பிளஸ் டூ மார்க் வந்தப்புறம் எது கிடைக்குதோ அதுல சேரலம்னு இருக்கேன் என்கிறார். ஏன் நீட் எழுதலாம்ல என்றால் நல்ல செண்டர்ல  படிக்க 2 லட்சம் ஆகுமாம் அதெல்லாம் எங்கப்பாவால முடியாது.

ஒருவேளை அவருக்கு கட்டுப்படியாகும் விலையில் நீட் பயிற்சி கிடைக்கலாம். இல்லை பள்ளியில் கொடுக்க உத்தேசித்திருக்கும் பயிற்சி போதுமானதாக இருக்கலாம். இவையெல்லாம் வெறும் யூகங்களே, ஆனால் யதார்த்தம் உத்திரவாதமான அச்சங்களை விதைக்கிறது. இந்த ஆண்டு மெடிக்கல் சீட்டை தவறவிட்ட மாணவர்களை தயார்படுத்துகிறோம் எனும் வேலம்மாள் போதி வளாகத்தின் ஒன்லி நீட் பயிற்சி பற்றிய தினசரி விளம்பரம், வசதியற்ற விரைவில் சம்பாதித்தாக வேண்டிய மாணவியின் தன்னம்பிக்கையையும் ஆசையையும் கொல்லப் போதுமானவையாக இருக்கிறது. முதல் அடியிலேயே 2 லட்சத்துக்கு தயாராக இருக்கும் மணவர்களோடு நம்மால் போட்டியிட முடியாது என அவர் நம்பிவிட்டார். பணம் படைத்த வர்கத்தின் போட்டியாளர்களில் ஒருவர் இப்போதே விலகியாயிற்று.

இன்னொரு மாணவர் 38 ஆயிரம் கட்டி நீட் பயிற்சியில் சேர்ந்துவிட்டார். பல் மருத்துவம் அவரது விருப்பம். ஆனால் அது கிடைக்குமா என அவருக்கு குழப்பமாக இருக்கிறது. ஒருவேளை கிடைக்காவிட்டால் ஒரு பொறியியல் பாடப்பிரிவும் கலை அறிவியல் பாடப்பிரிவில் ஒரு படிப்பும் அவரது விருப்பத்தெரிவாக இருக்கிறது. ஆனால் அவருக்கு உள்ள குழப்பங்கள் தீர்வுகாண இயலாதவை,

நீட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது மதிப்பெண்னுக்கு இலக்கு வைப்பதா?

நீட் தேர்வை இலக்குவைத்து அது கைவிட்டுவிட்டால், ஏனையை விருப்ப பாடங்களுக்கு மதிபெண் தேவைப்படலாம். அத்ற்கென்ன செய்வது?

இரண்டையும் பேலன்ஸ் செய்ய முயன்றால் நீட் போட்டியில் எப்படி முந்த முடியும்?

2 அல்லது 3 லட்சம் கொடுத்து படிக்கும் மாணவர்களோடு (அதே வகுப்பில் இன்னொரு மாணவர் 1.5 லட்சம் கொடுத்து நீட் கோச்சிங் படிக்கிறார்) 38 ஆயிரம் கட்டி படிக்கும் என்னால் போட்டியிட்டு வெல்ல முடியுமா?

நீட் தேர்வை 25 வயதுவரைகூட எழுதலாம் என்கிறார்கள். அப்படியானால் நான் +2 எழுதும்போது தொடர்ந்து 3,4ஆண்டுகள் முயற்சி செய்வோர் பலரும் போட்டியிடுவர்கள். அப்படியானால் புதிதாக எழுதும் எனக்கான வாய்ப்புக்கள் இருக்குமா இருக்காதா?

இரண்டாம் விருப்பமான பொறியியல் படிக்க இன்னொரு தகுதித் தேர்வு வந்துவிடுமா? அது எந்த அடிப்படையில் இருக்கும்? அதற்கு எப்படி தயாராவது?

மாநில அளவில் நடக்கும் தடகள போட்டிகளில் பங்கேற்கும் திறமையான 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரது சிக்கல் வேறானது. சராசரி மதிப்பெண் பெறும் அவர் அருகாமையில் உள்ள பள்ளியொன்றில் அடுத்த ஆண்டு 11 ஆம் வகுப்பு காமர்ஸ் பிரிவில் சேர உத்தேசித்திருக்கிறார். அது விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி. ஆனால் அந்த திட்டம் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது. நீட் குழப்பத்தல் இந்த ஆண்டு பல மாணவர்கள் முதல் குரூப்பை கைவிட்டுவிட்டு அதே பள்ளியில் காமர்ஸ் சேர்ந்துவிட்டார்கள். ஆகவே அந்தப் பள்ளியில் காமர்ஸ் சேர தகுதி மதிப்பெண் கணிசமாக உயர்ந்துவிட்டது. சராசரி மாணவனான தன்னால் அந்த அளவு மதிப்பெண் எடுக்க முடியுமா எனும் குழப்பம் அவரை ஆட்டுவிக்கிறது. தன் விளையாட்டுக்கு வாய்ப்பிருக்கிற மற்றும் காமர்ஸ் படிப்பிருக்கிற பள்ளி ஒன்றை இந்த குழப்பமான மனோநிலையோடு அவர் இந்த ஆண்டே தேடியாக வேண்டும்.

உயிரியல்- கணிதப் பிரிவில் +2படிக்கும் 23 மாணவர்களிடம் கேட்டபோது அவர்களில் மருத்துவப் படிப்பு படிக்கும் விருப்பம் கொண்டவர்கள் 2 பேர்தான் இருந்தார்கள். இன்றைய தெளிவற்ற மருத்துவக்கல்வி சூழல் அவர்களை அந்த போட்டியில் இருந்து விலக்கிவைத்துவிட்டது. அவர்களுக்கு உள்ள கதிமோட்சம் இனி பொறியியல்தான். ஆனால் பொறியியலின் எதிர்காலம் அவர்களை இன்னமும் பயமுறுத்துகிறது. ஏன் மெக்கானிக்கல் படிக்க விரும்புகிறீர்கள் எனும் கேள்விக்கு “வேற என்ன படிக்கிறதுன்னு தெரியலயே” என பரிதாபமாக பதில் சொல்கிறார் ஒரு மாணவர். சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு உயிரியல் பாடத்தை எடுத்தவர்கள் பலரை பொறியியல் எனும் ஒற்றை வாய்ப்பை நோக்கி நெட்டித்தள்ளியிருக்கிறது அரசு. (பாரா மெடிக்கல் வாய்ப்பைக்கூட அவர்கள் தெரிவுசெய்யவில்லை, ஏன் என்பது விளங்கவில்லை) ஆகவே இந்த துயரங்களில் பலன் பொறியியல் கல்லூரி முதலாளிகளுக்கே செல்லப்போகிறது.

சமச்சீர் கல்வி மாணவர்கள் என்ன மட்டமா? பயிற்சி கொடுத்தால் அவர்களும் சாதிப்பார்கள் எனும் வாதத்தோடு அப்துல்கலாம் பாணி அறிவுஜீவிகள் கிளம்பி வருவார்கள். அவர்களுக்கான கேள்வியை முன்வைக்கிறார் ஒரு ஆசிரியர். போர்ஷனை முடித்து அதனை மீண்டும் மீண்டும் படிக்க வைப்பதே பெரும் பாடாக இருக்கிறது. சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் இருக்கின்றன. அனேக மாணவர்கள் குறைந்தபட்சம் 2 டியூஷனுக்கேனும் செல்கிறார்கள். இதுக்கே அவர்களுக்கு நேரம் பத்தாது. இதுல நீட் பயிற்சியையும் ஸ்கூல்லயே நடத்துனா பசங்க என்னத்துக்கு ஆவாங்க? அந்த வகுப்புக்கான நேரத்தை எப்படி ஒதுக்குவது? அரசு 54000 கேள்விகள் கொண்ட சி.டியை கொடுக்கப்போகிறதாம். அவ்வளவையும் எப்படி நடத்துவது? என கேட்கிறார் அவர்.

நம் மொத்த அரசமைப்பும் எப்படி மாணவர் விரோத சிந்தனையில் இருக்கிறது என்பதற்கு நீட் ஒரு அப்பட்டமான உதாரணம். பதினோராம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது இன்னொரு உதாரணம். பொதுத்தேர்வு என்றால் பள்ளியும் வீடும் மாணவர்களை எப்படி நடத்தும் என்பது நமக்குத் தெரியும். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு எனும் இரண்டு பொதுத்தேர்வுகளுக்கு இடையே ஒரு சிறிய இளைப்பாறுதலாக இருந்தது பதினோராம் வகுப்புதான். இப்போது அதில் மண்ணை போட்டிருக்கிறது அரசு. வரிசையாக 3 பொதுத்தேர்வுகள் எனும் இந்த நிலை அனேகமாக எல்லா மாணவர்களுக்கும்கடுமையான மன அழுத்தத்தை கொடுத்திருப்பதை அறிய முடிகிறது. இவ்வளவு கடினமான முடிவுக்கு அரசு சொல்லும் காரணம் தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்துவதில்லை என்பதே. ஆக குற்றவாளி பிராய்லர் தனியார் பள்ளிகள், ஆனால் தண்டனை லட்சக்கணக்கான அப்பாவி மாணவர்களுக்கு. பலவீனமானவர்கள் மீது சுமையை ஏற்றும் இழிவான சர்வாதிகாரியாக அரசு செயல்படுவதை அறிய இதைக் காட்டிலும் ஒரு துலக்கமான உதாரணத்தை நம்மால் குறிப்பிட முடியாது.

சமீபகால கல்வித்துறை அறிவிப்புக்கள் மாணவர்கள் மீது செலுத்தும் வன்முறை உண்மையில் கொடூரமானது. சி.பி.எஸ்.சியா, ஸ்டேட் போர்டா, நீட்டா, எஞ்சினியரிங்கா, காமர்ஸ் போய்விடலாமா, நீட்டுக்கு எத்தனை வருடங்கள் கூடுதலாக முயற்சி செய்யலாம் என்பதாக ஏராளமான குழப்பங்கள் இப்போது அவர்களை அலைகழிக்கின்றன. சிறப்பானதாக இல்லாவிட்டாலும் பழைய, மதிப்பெண் அடிப்படையிலான தேர்வு முறை அவர்களது மாற்று திட்டங்களுக்கு உகந்ததாக இருந்தது. சற்றே பதட்டமின்றி தமது இலக்கை நோக்கி அவர்கள் உழைக்க ஒரு நம்பிக்கையை அது கொடுத்தது. ஆனால் நீட் எனும் ஒற்றை நகர்வு அந்த நம்பிக்கை மீது அமிலம் வீசியிருக்கிறது.

எதிர்க்க வலுவில்லாதவர்கள் மீது வன்முறையை ஏவுவதும், தமது சுமைகள் யாவற்றையும் அவர்கள் தோளில் வைப்பதும் உச்சகட்ட சாடிசம். நமது அரசு வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் அத்தகைய கொடூர சாடிஸ்ட்டாகவே நடந்துகொள்கிறது. பெட்ரோல் விலை முதல் பண மதிப்பிழப்புவரை அதன் வெளிப்பாடுகள்தான். ஆனால் அத்தகைய நடவடிக்கையை நமது குழந்தைகள் மீது செய்கையில் – அதனை அனுமதிக்கிற நாமும் குற்றவாளியாகிறோம். குழந்தைகளுக்காவே வாழ்வதாக புலம்பித்திரியும் நமது ”குழந்தைகள் மீதான அக்கறையை” எள்ளி நகையாடுகிறது நீட். இது முதல் அடிதான், இன்னும் ஏராளமானவை வரிசை கட்டி வரும். அவை வெளிப்படையாக எல்லா வாய்ப்புக்களையும் பணக்கார, உயர்சாதி மாணவர்களுக்கு கொடுக்கும் ஏற்பாடாகவே இருக்கும். சாடிஸ்ட்டுக்கள் பிள்ளைக்கறி கேட்கலாம், அதற்கு அவர்கள் கூச்சப்படப்போவதில்லை அஞ்சப்போவதிலை. பிள்ளையை படையலிடும் தகப்பனாகவும், தாயாகவும் நீங்கள் இருக்கப்போகிறீர்களா என்பதுதான் கேள்வி!!.

(மாணவர்களிடம் நீட் உருவாக்கியிருக்கும் மோசமான விளைவுகள் மட்டுமே பதிவின் மையம். அதன் சமூக நீதி மீதான தாக்குதல், மருத்துவத்துறையில் அதன் பின்விளைவுகள் பற்றி ஏராளமான தரவுகள், கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றையும் தேடி வாசிக்கவும். நீட் பற்றிய முழுமையான பார்வைக்கு இது உகந்த பதிவல்ல என்பதை நினைவில் வைக்கவும்)

 

%d bloggers like this: