வாழும் காந்தி என்கிறார்கள் அன்னாவைப் பற்றித் தெரியாதவர்கள். ஆமாம் என்கிறார்கள் காந்தியை முழுதாக அறிந்தவர்கள்.


பணம் பணக்காரர்களிடமே இருக்கவேண்டும், ஏழைகளுக்கு அவர்கள் புரவலர்களாக இருப்பார்கள்- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இங்கிலாந்தின் ஒட்டுமொத்த மக்களையும் காவலுக்கு நிறுத்தினாலும் இந்தியாவை ஆங்கிலேயனால் இந்தியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது எனும் சூழ்நிலையில் எப்படி அவர்கள் வெற்றிகரமாக இங்கே ஆட்சி செய்தார்கள்? வெற்றியின் சூட்சுமம் அவர்கள் திறமையாக உருவாக்கிய துரோகிகளிடம்தான் இருக்கிறது. சக மன்னனை காட்டிக்கொடுத்த எட்டப்பனில் தொடங்கி மாப்ளா கிளர்ச்சியை ஒடுக்க வெள்ளையனிடம் கைகோர்த்த நம்பூதிரிகள் வரை, தனிநபர்களாகவும் குழுவாகவும் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய துரோகிகளே அவர்களது மற்ற எல்லா படைகளையும்விட வீரியமாக செயல்பட்டார்கள்.

ஆனால் காந்தியை இந்த துரோகிகளில் பட்டியலில் இணைக்க முடியாது. ஏனைய துரோகிகள் உயிரோடு இருந்தவரை மட்டும்தான் துரோகம் செய்தார்கள், அவர்கள் யாரும் இந்தியா எனும் பரந்த நிலப்பரப்புக்கு துரோகம் செய்யும் வாய்ப்பையும் திறமையையும் பெற்றிராதவர்கள். இந்த வகையில் காந்தி ஒரு ஒப்பிடவியலாத தலைவரே. அவர் தேசத் தந்தை என அழைக்கப்படுவதில் கூட ஆட்சேபிக்க எதுவுமிருப்பதாக நான் கருதவில்லை. சொந்த மக்களை விற்பனை செய்யும் தந்தையும், பிச்சை எடுக்க அனுப்பும் தந்தையும் இந்தியாவில் இருக்கத்தானே செய்கிறார்கள்??

உண்மையாக சுதந்திரத்துக்கு போராடிய பலரும் தன் வாழ்நாளில் பாதியை போராட்டத்துக்கு அர்பணித்த பிறகும்கூட மக்களிடம் பெரிதாக அறிமுகமாகவியலாத காலகட்டத்தில் காந்தி நாட்டுக்குள் வரும்போதே “தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமாக போராடிய” என்ற படோடாபமான அறிமுகத்தோடுதான் இங்கு வந்தார். வெள்ளைக்காரனுக்கு சிறு கீறல்கூட விழாத அளவுக்கு தன் சுதந்திரப் போராட்டங்களை அவர் வடிவமைத்தார்.

நமக்கு எளிதில் வாசிக்கக் கிடைக்கும் வரலாற்றை மேலோட்டமாக வாசிக்கையிலேயே காந்தியின் பிரிட்டிஷ் பாசம் தெரியவரும். வெள்ளையனுக்கு பிடிக்காத சுபாஷ் சந்திர போசை கட்சியில் தொடரவிடாத சிறிய சேவையில் தொடங்கி வெள்ளையன் கண்டு அஞ்சிய பகத் சிங்கை சீக்கிரம் தூக்கிலிடச்சொன்ன (அதுவும் லாகூர் மாநாட்டுக்கு முன்னால் செய்வது நல்லது) பெரிய துரோகம் வரை காந்தியின் கைங்கர்யம் பட்டியலில் அடங்காதது.

எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொண்டு அமைதி வழியில் போராடு என காந்தி சொற்படி ஆர்பாட்டம் செய்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சௌரி-சௌரா காவல்துறை. பொறுமையிழந்த மக்களின் எதிர்தாக்குதல் காரணமாக 22 காவலர்கள் கொல்லப்பட்டார்கள். உடனடியாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார் காந்தி. அதே சம்பவத்தில் கொல்லப்பட்ட 19 போராட்டக்காரர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்பட்டிராத காந்தி, வெள்ளையனின் போலீசார் சாவுக்காக கொந்தளித்து ஒரு தேசமே நடத்திய போராட்டத்தை கைவிடுகிறார் என்றால் அவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார் என்பது புரிந்துபோகும்.அதன் பிறகு கிட்டத்தட்ட ஐந்தாண்டுகாலம் இந்தியாவில் எந்த போராட்டமும் நடக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தால் பிரிட்டிஷ் அரசுக்கு அப்போது உண்டான நட்டம் 20 மில்லியன்- ஆகவே யாரவது ஒரு வெள்ளை அதிகாரியின் கார் பஞ்சர் செய்யப்பட்டிருந்தாலும் காந்தி போராட்ட்த்தை கைவிட்டிருப்பார். (முழுமையான தகவல்களுக்கு வாசிக்க : கீற்று= http://www.keetru.com/history/india/sowri_sowra.php)

அடிமைகளுக்கான தலைவனை எஜமானர்களே உருவாக்கும் தொழில்நுட்பம் நூறாண்டு பழமையானது. அதன் வெற்றிகரமான தயாரிப்பு காந்தி. இவரை எளிமையானவராக காட்டிக்கொள்ள நாம் ஏராளமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது என சரோஜினி நாயிடுவே ஒருமுறை சலித்துக்கொண்டதுண்டு. ஆனால் சுதந்திரத்துக்கு பிறகு வந்த தலைமுறைகளுக்கு காந்தியின் இருட்டு பக்கங்கள் அருமையாக மறைக்கப்பட்டது. நிராத் சௌத்ரி எனும் அறிஞர் இந்தியாவின் வரலாற்றில் இருந்து முற்றாக விலக்கிவைக்கப்பட்டார், காரணம் அவர் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தவர். காந்தி எனும் நபர் அகிம்சாமூர்த்தி என உலகெங்கும் பாராட்டு பரப்பப்பட்ட காலகட்டத்தில்தான் அவர் இரண்டாம் உலகப் போருக்கு வெளிப்படையாக இந்தியாவில் ஆள்பிடித்தார்.

வெள்ளையன் பாதுகாப்பாக இந்தியாவை கொள்ளையிட்டு பாதுகாப்பாக வெளியேற பேருதவி செய்த காந்தி தேசப்பிதாவாக முடியுமென்றால் அன்னாவால் ஊழல் ஒழிப்பு போராளியாவதொன்றும் சிரமமில்லை. ஆனால் ஏன் அன்னா ஹாசாரே இவ்வளவு பெரிய முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதுதான் நாம் யோசிக்க வேண்டிய விடயம்.

கணக்குவழக்கில்லாமல் ஒரு நாடு சுரண்டப்படும்போது, மக்களை வீதிக்கு வரவைக்காமல் இருக்க பல வழிகளில் முயல்கிறது அரசு. சீன தேசம் கஞ்சா மூலம் பிரிட்டன் பிடியில் வைக்கப்பட்டது (சப்ளை டாடா). ரஷ்யா வசமிருந்த ஜெர்மனியை மீட்க மைக்கேல் ஜாக்சனும் மடோனாவும் பயன்பட்டார்கள் (அவர்கள் பாடல்கள் மூலம்தான் சுவருக்கு வெளியே சொர்கமிருக்கிறது என மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்). இங்கேயும் அந்த வழிகள் கையாளப்படுகின்றன. இங்கேயும் சாராயம் தாராளமாக கிடைக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. சினிமாவும் டிவியும் அதனதன் கடமையை செவ்வனே செய்கின்றன.

அதையும் மீறி மக்களிடம் கோபம் வெளிப்பட்டால் என்ன செய்வது? கொஞ்சம் பேர் நக்சலைட் ஆகலாம், அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக வீதியில் இறங்கி கலவரம் செய்யலாம் (அவர்கள் மொழியில் சொன்னால்). நாட்டின் பெரும்பான்மை சொத்துக்கள் பெரு முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளிடமும்தான் இருக்கிறது. ஆகவே இந்த அபாயத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் அதிகார வர்கத்துக்கு இருக்கிறது. அதற்கான வழிதான் அன்னா ஹசாரே மாதிரியான நபர்களும் தன்னார்வ குழுக்களும்.

அன்னாவின் புறப்பாட்டின் மூலம் சுரண்டலுக்கு எதிரான சிந்தனையுள்ள சிலர் அவர் பின்னால் செல்வார்கள், பலர் ஏதோ ஒரு நல்லது நடக்கிறது தங்களை சமாதானம் செய்துகொள்வார்கள். உண்மையான சமூக சீர்திருத்தத்துக்கு முயற்சிப்போர் தனிமைப்பட்டு நிற்பார்கள். இதுதான் அதிகாரவர்கத்துக்கு தேவை. கைமீறிப் போய்விடாத இவ்வகையான போராட்டங்கள் வாயிலாக தங்களது பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்துகொள்கிறார்கள்.

தேவைப்படும்போது ஆரம்பிக்கவும் விரும்பியபோது முடிக்கவும் முடிகிற அன்னாவின் உண்ணாவிரத்த்தைப்போல ஒரு மகத்தான பரிசு அரசுக்கு இருக்க முடியாது. அதனால்தான் அரசு, பெரியவருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது. ஊழலின் மூலத்தைப்பற்றி அவர் அக்கறை கொள்ளாததால்தான் பாஜக அன்னாவை ஆதரிக்கிறது. மிஞ்சிப்போனால் ஒரு மெழுகுவர்த்தி அல்லது இந்தியாவின் கொடியை மட்டும் கோருவதால்தான் மத்தியதரவர்கம் அன்னாவை ஆராதிக்கிறது. இவரால் தமது கொள்ளை லாபத்துக்கு பங்கம் வராதென உறுதியாக நம்புவதால்தான் முதலாளிகள் கூட இவருக்கு பணத்தைத்தர தயங்குவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் ஹெட் ஆஃபீசான அமெரிக்கா வலிய வந்து அன்னாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கிறது.

அன்னாவின் நிஜமுகமும் சொத்தையான அவரது கோட்பாடுகளும் ஏற்கனவே பல தளங்களில் விவாதிக்கப்பட்டுவிட்டன. ஒருவேளை அவர் பரம யோக்கியராக இருந்தாலும் அவரது லோக்பாலை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது. சட்டத்தில் மாற்றத்தை மத்திய அரசால் செய்ய இயலுமென்றால் சட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது அதிகாரிகளால் அதனை வலுவிழக்கச் செய்யலாம். உண்மையில் அன்னாவுக்கு ஊழல் ஒழிப்பில் அக்கறையிருக்குமானால் அவர் லோக்பாலைத் தாண்டி கொஞ்சமாவது ஊழலின் அடிப்படையைக் களைவது பற்றி சிந்தித்திருப்பார், அவர் சாகாக்களுடன் விவாதித்திருப்பார். அது மாதிரி எதுவும் நடக்கக்காணோம், மேடை ஏற்பாடுகளும் ஊடக கவரேஜும் மட்டும் நாளுக்கு நாள் மேம்பாடடைந்துகொண்டே வருகிறது.

ஒரு வார உண்ணாவிரதம், பதினைந்து நாள், ஒரு மாத உண்ணாவிரதம் என மாறி மாறி பேசுகிறார்கள். உடல் நலம் உள்ளவரை உண்ணாவிரதம் என புரட்சிகரமாக பேசி அதிர்ச்சி தருகிறார் கிரண் பேடி. என்ன எழவு போராட்டம் இது என யோசிப்பதற்குள் சொந்த வீடுள்ளவனுக்கு நாலு சிலிண்டர்தான் என்கிறது அரசு. 3ஜி ஊழல் மெல்ல முக்கியச் செய்தியிலிருந்து நழுவுகிறது. அன்னாஜியின் சத்தத்தில் ஊழல் மக்கள் பார்வையில் இருந்து ஒளிந்துகொள்கிறதேயன்றி ஒழிக்கப்படுவதற்கான ஒரு அறிகுறியும் காணோம்.

இரண்டாவது காந்தியாக அன்னா விரும்பலாம். ஆனால் அதற்கு வாய்ப்பை நாம் தரக்கூடாது. ஒரு காந்தியின் துரோகத்தை நாம் எப்படியோ தாங்கிவிட்டோம். இன்னொரு காந்தியையும் இன்னொரு துரோகத்தையும் நம்மால் தாங்க முடியாது.. ஏனெனில் இந்தியாவின் இன்றைய எதிரிகள் வெள்ளைக்காரனைவிட  மோசமானவர்கள்.

“வாழும் காந்தி என்கிறார்கள் அன்னாவைப் பற்றித் தெரியாதவர்கள். ஆமாம் என்கிறார்கள் காந்தியை முழுதாக அறிந்தவர்கள்.” இல் 16 கருத்துகள் உள்ளன

  1. Your view might be right…But we need to put some kind of resist to the corrupt politicians. We all know corruption is everywhere in India but major source is from this politicians. Let wait and watch what will going to happen because of this hunger strike…………Jai Hind……..

    Thanks,
    Jack

  2. வில்லவன்,
    எப்பவும்போல நீண்ட இடைவெளிக்குப்பின், ஆனால் தகுந்த நேரத்தில் தேவையான ஒரு பதிவை எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

    மகாத்மாவாக்கப்பட்ட காந்தியை தோலுறித்தாயிற்று, ஆனால் மகாத்மாவாககூட வேண்டாம், குறைந்தபட்சம் காந்தியைப் போலாவது ஆக்கிவிடமாட்டார்கள் நம்ம ஊடகச்சிங்கங்கள் என்றிருக்கும் அன்னாவை தோலுறிக்காமல் ஓரவஞ்சனை செஞ்சிட்டீங்களே வில்லவன். உங்ககிட்ட ஒரு வேண்டுகோள், சீக்கிரம் அன்னாவைப் பற்றி, அவரின் மறைக்கப்பட்ட பின்புலம் பற்றி என்னைப்போன்றவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளும்படி ஒரு பதிவை எழுதுங்களேன்!

    //அன்னாவின் நிஜமுகமும் சொத்தையான அவரது கோட்பாடுகளும் ஏற்கனவே பல தளங்களில் விவாதிக்கப்பட்டுவிட்டன//
    இதற்கான இணையத்தொடர்புகள் எதாவது இருந்தா சொல்லுங்க வில்லவன்…..

    நன்றி,
    பத்மஹரி.

    /

  3. “இன்னொரு காந்தியையும் இன்னொரு துரோகத்தையும் நம்மால் தாங்க முடியாது.. ஏனெனில் இந்தியாவின் இன்றைய எதிரிகள் வெள்ளைக்காரனைவிட மோசமானவர்கள்.”

    முந்தைய எதிரிகள் அயல்தேசத்துக்காரர்கள். இன்றைய எதிரிகள் இங்கேயே இருக்கிறார்கள்.

    அன்னாவைப் பற்றிய மற்றொரு பதிவு:
    சூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்!
    http://hooraan.blogspot.com/2011/08/blog-post_23.html

  4. இலஞ்சம் மற்றும் ஊழல் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

    இலஞ்சம் என்பது கிராம நிர்வாக அலுவலரில் தொடங்கி மேல்மட்டம் வரை பொதுமக்களிடம் பெறும் கையூட்டு. எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறைப்படி ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானால்கூட கையூட்டு வெட்ட வேண்டும். இல்லை என்றால் காரியம் நடக்காது. அடுத்து அதே போன்றதொரு சான்றிதழை விதிமுறைகளை மீறி பெறவேண்டுமானாலும் கையூட்டு வெட்டியாக வேண்டும். என்ன இதற்கு தொகை கூடுதலாக இருக்கும்.

    ஊழல் என்பது ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒருசாராருக்கு சலுகை காட்டுவதற்காகவோ அல்லது திட்டத்தை அறைகுறையாக நிவேற்றியோ அல்லது முழுமையாக நிறைவேற்றாமலேயோ ஒதுக்கப்பட்ட நிதியை ஒரு சிலர் கபளீகரம் செய்து கொள்வது.

    சுருக்கமாகச் சொன்னால் இலஞ்சம் என்பது பெரும்பாலும் சாமான்யர்கள் சம்பந்தப்பட்டது. ஊழல் என்பது மேன்மக்கள் சம்பந்தப்பட்டது. ஆக இரண்டிலும் மக்கள் பணம்தான் கொள்ளை போகிறது. இலஞ்சம் நேரடியாக நாமே கொடுப்பதால் கோபம் கொப்பளிக்கிறது. ஊழல் மக்கள் வரிப்பணமாக இருந்தாலும் அரசாங்கப் பணமாக இருப்பதால் மக்களுக்கு கோபம் இருந்தாலும் அது அவ்வளவாக கொள்பளிப்பதில்லை.

    லோக்பால் கொண்டுவந்தால் இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை இதுவரை ஒருவரும் விளக்கவில்லை.

    மொத்தமாக ஒழியாது என்றாலும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு நல்ல முயற்சியாக இதை ஏன் பார்க்கக்கூடாது என சிலர் வாதிடுகிறார்கள்.

    ”நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிற வள்ளுவனின் வாக்கை எல்லாவற்றிருக்கும் பொருத்த வேண்டும் என்று சொல்கிகிறவர்கள் இதற்கு அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அன்னா அசாரே செய்வது ஒரு ஸ்டண்ட் என்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் தற்போது புரியத் தொடங்கியுள்ளது.

  5. We can find fault with everyone around us. Such blog-posts will only discourage anyone who takes earnest initiative to try/attempt any change in the Society/Administration. Many ideas may not be fool-proof at the time of conception; they can be improved by discussion or after introduction also. Wright brothers would not have designed a perfect plane at the first attempt. Arm-chair critiques have perhaps shut the mouths of thousands of first-movers. the scoiety continues to suffer.
    All the same, please have a look at today’s blog-post of kaveri maindhan: http://www.blogspot.vimarisinam

  6. வாழ்த்துக்கள் வில்லவன்,

    உங்கள் தலைப்பே உள்ளடக்கத்தையும் ஈர்த்துப் பிடித்திருக்கிறது. கொஞ்சம் சிரமம் பார்க்காது அடிக்கடி எழுதுங்களேன்

  7. Gandhiyin marupakkathai veliyitathu pola Ambedkar, Periyar ponravarkalin marupakkangalaiyum veliyida vendum. Ambedkar avargal ISLAM matham patri sonna karuthukalai podum Thairiyam ullatha?

  8. அண்ணா ஹஜாரே துரோகியாம். இங்க ஒரு நல்லவர் சொல்லிடாரு. எல்லாம் போய் புள்ள குட்டிய படிக்க வைங்க. எந்த விஷயத்துக்கும் தெருவுக்கு வந்து கோஷம் போடதீங்க. போய் தொலைக்காட்சி பொட்டிய பாருங்க. பிளாக்கர் ஓசில இடம் கொடுத்தால் என்ன வேணாலும் எழுதுவோம் நாங்க. எல்லாம் மொள்ளமாரி பசங்க. நாங்க மட்டும் தான் நல்லவனுங்க.

  9. அருமையான கட்டுரைங்க……

    தலைப்பே உள்ளடக்கத்தைச் சொல்கிறது………கட்டுரையை வினவுக்கு அனுப்புங்களேன் , நிறய பேர் படிக்க வாய்ப்பிருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக