விஜயலட்சுமியுடனான பெரும் சமரில் சீமான் வெற்றி பெறவில்லை, அம்பலப்பட்டுப் போயிருக்கிறார். எப்படி?


சீமான் விவகாரத்தில் பெரியண்ணி வழக்கை வாபஸ் பெற்றாலும் அவர் செய்தது சிறப்பான சம்பவம் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. விஜயலட்சுமி ஊசலாட்ட மனநிலை கொண்டவர். யார் மீதும் அவரால் முழுமையாக நம்பிக்கை வைக்க முடியாது யாருக்கும் நம்பகமானவராக இருக்க அவரால் முடியாது என்பதை அவரது காணொளிகளை பார்க்கும் யாராலும் சொல்லிவிட முடியும். அப்படிப்பட்ட ஒருவரை யாராலும் சுலபமாக எதிர்கொண்டு இருக்க முடியும். ஆனால் சீமானால் ஏன் அது முடியவில்லை? காரணம் சீமானின் பர்சனாலிட்டி அதைவிட கேவலமானது. ஆகவே இங்கே விஜயலட்சுமி சுபாவம் நம் பிரச்சனை அல்ல, மேலும் அதனால் நமக்கு எந்த நட்டமும் இல்லை.

ஆனால் அவர் அம்பலப்படுத்தி இருக்கும் செய்திகள் தமிழகத்திற்கு மிக முக்கியமானவை. சீமான் ஒரு கோழை என்பதையும் சுலபத்தில் நிதானம் இழக்க கூடியவர் என்பதையும் குறைந்தபட்ச அவை நாகரீகம் இன்றி பேசுபவர், பெண்களின் மீது எவ்விதமான மதிப்பும் மரியாதையும் கொண்டிராதவர் என்பதையும் தன் ஒற்றை குற்றச்சாட்டின் மூலம் நிரூபித்திருக்கிறார் விஜயலட்சுமி. மேலும் இந்த தகவல்கள் எதனையும் விஜயலட்சுமி தன் வார்த்தைகளால் விவரிக்கவில்லை. சீமான் தன் வாயால் அவற்றை உலகத்திற்கு காட்டும்படி செய்திருக்கிறார்.

நேற்றைய சீமானது நேர்காணல் இயல்பில் சீமானின் ஆளுமை எத்தனை மட்டமானது என்பதை பட்டவர்த்தனமாக காட்டியது. ஒரு ஊடகவியலாளரை குறிப்பிட்டு அவர் வீட்டுப் பெண்கள் இப்படி பாலியல் குற்றச்சாட்டு வைத்தால் அதை வேண்டுமானால் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பதில் சொல்கிறார். அதற்கு அவர் கட்சியினர் கைதட்டுகிறார்கள். குடித்துவிட்டு கும்மாளமிடும் இடத்தில் கேட்க வாய்ப்புள்ள பேச்சை எல்லாம் ஒரு தலைவன் என்று தன்னை நம்பிக் கொண்டிருக்கிற நபரின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்க முடிகிற அவலம் தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

போகிற போக்கில் பிரபாகரனை துப்பவும் அண்ணன் மறக்கவில்லை. பிரபாகரன் தலைமையில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெரிய அண்ணியை ஏமாற்றிய சம்பவத்தை மட்டும் குறிப்பிடவில்லை. தனது பிரஸ்மீட்டில் கூட பிரபாகரன் பிள்ளை நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று அவரையும் சந்திக்கு இழுத்தார் சீமான்.

தன் கட்சி உறுப்பினர்களை அடியாள்படை போல பயன்படுத்தி இருக்கிறார். விஜயலட்சுமி மீது புகார் கொடுக்க தன் மகளிர் அணியை அனுப்பினார். அவர்களும் சீமானை போலவே பேசி அம்பலப்பட்டார்கள். இன்னொரு கும்பல் வீரலட்சுமி காவல் நிலையம் வந்தபோது அசிங்கமாக பேசி வீரம் காட்டியது. முத்தாய்ப்பாக என் தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா என்று சீமானே வெளிப்படையாக உசுப்பி விட்டார். அதன் பலன் இன்று (16.09.2023) திருவள்ளூரில் வீரலட்சுமி மீது தாக்குதல் தொடுக்க சீமான் பக்த பார்ட்டி முயற்சி செய்த செய்தி வந்திருக்கிறது. 

சீமான் அறிவித்த வேட்பாளர் குறித்து அதிருப்தி தெரிவித்து தனது கட்சிக்காரன் உணர்ச்சிவசப்பட்டால் அதனை கேவலமாக பேசி எதிர்கொள்ளும் சீமான், விஜயலட்சுமி விவகாரத்தில் தன் கட்சிக்காரன் உணர்ச்சிவசப்படுவதற்காக சிக்னல் கொடுக்கிறார். ஆக அவருக்கு கட்சி என்பதும் தொண்டர்கள் என்பதும் தனக்கு பயன்படும் ஒரு மெட்டீரியல் மட்டுமே என்பது இந்த விவகாரத்தில் ஊர்ஜிதமானது.

ஒரு வழக்கை நேர்மையாக எதிர்கொள்ளும் பண்பு சீமானுக்கு இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வினோதத்தையும் தமிழ் சமூகம் இன்றுதான் பார்க்கிறது. விஜயலட்சுமி, வீரலட்சுமி இருவரும் என் முன்னால் இருந்தால்தான் விசாரணைக்கு ஆஜராக முடியும் எனும் கோரிக்கையை உடன் இருக்கும் வழக்கறிஞர் தம்பிகளே எழுதுகிறார்கள் என்றால் இந்த மொத்த கும்பலின் அறிவுத்திறன் மீது நமக்கு சந்தேகம் எழுகிறது. கைது பண்ணிடுவியா என்று போலீசுக்கும் அரசுக்கும் சவால் விடுகிறார். ஒரு வழக்கிற்கு தொடைநடுங்கிப்  போய் ஓடி ஒளியும் ஒரு மனிதர் அரசுக்கு சவால் விடுவதும் பத்திரிகையாளர்களை படு கேவலமான முறையில் (அதாவது தனக்கே உரிய முறையில்) இழிவு படுத்துவதும் சீமானின் ஆளுமை எத்தனை தரம் தாழ்ந்தது என்பதை வெளிப்படுத்துகின்றது.

போலீஸ் எப்படி வேலை செய்ய வேண்டும், குற்றம் சாட்டுபவருக்கு துணைக்கு வருபவருக்கான தகுதிகள் என்னென்ன, ஊடகங்கள் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பது பற்றி விலாவாரியாக கிளாஸ் எடுக்கும் சீமான் விஜயலட்சுமிக்கு பணம் கொடுத்த செய்தி குறித்து பேச மறுக்கிறார். இவர் தம்பிகள் அவரை இழிவாக நடத்தியது குறித்து பதில் சொல்ல மறுக்கிறார். இந்த ஒழுக்கசீலர் எதற்காக ஒரு அதிமுககாரனை வைத்து விஜயலட்சுமியிடம் சமரசம் பேசினார் என்பது குறித்து பதில் சொல்ல மறுக்கிறார். ஆனால் இவர் உலகில் உள்ள எல்லோரையும் கேள்வி கேட்பார். அடிப்படை ஜனநாயக பண்பு இல்லாத இந்த நடிகர் கையில் ஒரு நகராட்சி தலைமை கிடைத்தால் கூட அது விளங்காது. 

ஒரு சராசரி அரசியல் அறிவுள்ள நபருக்கு சுலபத்தில் சீமானின் ஆளுமையும் தற்குறித்தனமும் புரிந்துவிடும். ஆனாலும் அவர் பின்னால் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கூட்டம் இருக்கிறது. இது சற்றே புரிந்து கொள்ள கடினமான செய்திதான். ஆனால் அது இயலாத காரியம் அல்ல. அடையாள சிக்கல் இருக்கிற, வெறும் உணர்ச்சியின் வழியே மட்டும் அரசியலை புரிந்து கொள்ள முயல்கிற இளைஞர் கூட்டத்தை சீமான் ஈர்ப்பது என்பது தவிர்க்க இயலாத நிகழ்வு. எப்படி இன்றைய சிறார்கள் டிடிஎஃப் வாசன் பின்னால் போகிறார்களோ அதற்கு ஒப்பான அரசியல் ரசிகர் மன்றம்தான் சீமான் கட்சி. சீமான் வாயால் வண்டி ஓட்டும் அரசியல் டிடிஎப். 

அதனை அம்பலப்படுத்த கிடைத்திருக்கிற ஒரு வாய்ப்புதான் விஜயலட்சுமியே தவிர இங்கு அவரது நிலையற்ற மனோநிலை என்பது நமக்கு அவசியமானதல்ல.  பின்னணியில் அவரது பொருளாதார தேவைகள் இருக்கலாம். அல்லது அவரே குறிப்பிடும்படி சீமான் கொடுத்த போலியான வாக்குறுதிகள் இருக்கலாம். அடிப்படையான செய்தி, சீமான் ஒரு பாலியல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். அந்த குற்றத்தின் எதிர்வினைகளை சந்திக்க பயந்து கோழைத்தனமாக சமரசம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். அந்த சமாதான நடவடிக்கையில்கூட ஊழல் செய்திருக்கிறார் (அதாவது கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை). அதில் கடுப்பாகி சீனியர் அண்ணியார் மீண்டும் புகார் கொடுக்க அண்ணன் நிதானம் இழந்து, இழிவாகப்பேசி, மிரட்டி தன் நிஜ முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக தன் கட்சியை சிந்திக்கும் திறன் இல்லாத ஜோம்பி படையாக மாற்றியிருக்கிறார் என்பதும் அம்பலமாகி இருக்கிறது. 

பெரிய அண்ணி இல்லாவிட்டால் இவற்றை எல்லாம் நாம் இளைய தலைமுறைக்கு புரிய வைத்திருக்க முடியாது. காரணம் சீமான் வசனத்துக்கு மறுப்பு சொல்லியே நாம் ஆயுளை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஆக, சீமானுக்கு எதிரான வலுவான ஆயுதங்களை விட்டுச் சென்றிருக்கிறார் விஜயலட்சுமி. 

பின்னூட்டமொன்றை இடுக