மூன்று லட்சம் மக்களின் போராட்டமும் நான்கு ஜெனரேட்டர்களும்… 2


அணுசக்தியின் தேவை குறித்த பிரச்சாரமும், அதன் உற்பத்தி செலவீனம் பற்றிய விவரங்களும் அபத்தமானவை. ஒரு விஞ்ஞானி உற்பத்தி செலவு மூன்று ரூபாய்/ யூனிட் என்கிறார் (சூரிய மின்சக்திக்கு 20, காற்றாலைக்கு 10 என கூடுதல் தகவல்கள் வேறு). இது எப்படியான நிர்ணயம் என யாரும் கேட்கமுடியாது. முதலீட்டு செலவு மற்றும் உற்பத்தி செலவு மட்டுமே ஏனைய தொழில்களுக்கு அடிப்படை கணக்கீடு. இங்கோ அது கட்டுமானத்தைவிட அதிகம் செலவு பிடிக்கும் மூடும் செலவு, கழிவுகளை பல்லாண்டு காலம் காப்பாற்றும் செலவு என புதிய தலைவலிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது, இவையெல்லாம் அவர்கள் 3ரூ விலைநிர்ணயத்தில் நிச்சயம் வந்திருக்காது. 2000 மெகாவாட் உற்பத்திக்கு முதலீடு 15000 கோடி, இயக்க செலவுகள் தனி. இதே அளவுக்கான முதலீட்டில் எவ்வளவு சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் என்றோ அல்லது எவ்வளவு காற்றாலை மின்னுற்பத்தி செய்ய இயலுமென்றோ அரசு நிச்சயம் ஒப்பிட்டு பார்க்க விரும்பாது.

குஜராத்தில் நிறுவப்படவிருக்கும் 3000 மெகாவாட் சூரியசக்தி மின் திட்டமொன்றுக்கான உத்தேச முதலீடு 50000 கோடி. கூடங்குளத்தின் 2000 மெ.வா நிர்மாண செலவையும் 30 வருடங்களுக்குப் பிறகு அதற்கு ஆகும் கருமாதி செலவையும் (அணுவுலையின் கருமாதி செலவு மட்டும்- நமக்கு தனி கணக்கு) கணக்கிட்டால் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. நூற்றுக்கணக்கிலான வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் தேவையும் சூரிய சக்தி மின்நிலையங்களுக்கு கிடையாது. ஆனால் ஏன் இந்திய அரசு அணுசக்திக்கு மட்டும் பணத்தை இறைக்கிறது?

நட்டம் ஏற்படுத்தும் அரசு நிறுவனங்களை விற்றே தீருவோம் எனும் நிலைப்பாட்டை மத்தியஅரசு எடுத்து பல ஆண்டுகளாகிறது. இப்போதுகூட மூன்று நிறுவனங்களை கைகழுவ முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் பல லட்சம் கோடி பணத்தை விழுங்கிவிட்டு அணுசக்தித் துறை நாட்டுக்கு சம்பாதித்து கொடுத்த லாபம் என்ன?  ஏன் அணுவுலைகளை புதிதாக நிறுவ மட்டும் இந்தியா இத்தனை மெனக்கெடுகிறது எனும் நியாயமான கேள்வியும், எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியாவில் உள்ள பாமர மக்களின் நல்வாழ்வைப்பற்றி சிந்தித்திராத பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே ஆட்சி நடத்தும் “கொலைவெறி ரசிகர்” மன்மோகன் ஏன் அணுமின்சார நிலையங்களுக்காக இத்தனை தூரம் சிரமம் எடுத்துக்கொள்கிறார் எனும் சந்தேகமும் அணுமின்சக்தி பற்றி நாம் முடிவெடுக்க போதுமான அடிப்படை ஆதாரங்கள். (ஒப்பந்த விதிகளை திருட்டுத்தனமாக மாற்றுவது, எம்.பிக்களுக்கு பணம் கொடுப்பது, அமர்சிங்கை அமெரிக்காவில் வைத்து குளிப்பாட்டியது ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் மன்மோகனின் அணுசக்தி சிரமம் கொஞ்சநஞ்சமல்ல)

 

தார்கரீதியாகவும் அணுவுலை ஆதரவு கோஷம் வலுவில்லாத்து. மேலோட்டமாக பார்த்தால் அணுவுலை எதிர்ப்பு பயம் எனும் உணர்வை அடிப்படையாக கொண்டதாகவும் ஆதரவு அறிவியல்பூர்வமானதாகவும் தெரியலாம். உண்மையில் எதிர்ப்பவர்கள் அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் பேசுகிறார்கள். செர்னோபில் விபத்தால் உண்டான நீண்டகால விளைவுகள், புகுஷிமா உலையை மூட ஆகும் 78000 கோடி செலவு, யுரேனிய சுரங்கங்களின் அருகே வசிக்கும் மக்களிடையே உருவாகும் உடல்நல பாதிப்புக்கள் எல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள். ஆதரவு கட்சியினர்தான் நம்பிக்கையின் அடிப்படையில் யோசிக்க சொல்கிறார்கள். கூடங்குளத்தில் ஆறு ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் வராது, செர்னோபில், புகுஷிமா போல விபத்துக்கள் நடக்காது, அணுவுலைக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படும்.. இவையெல்லாம் வெறும் நம்பிக்கையன்றி வேறென்ன?

கட்டுரை தேவையற்ற திசையில் பயணிப்பதாக கருதுகிறேன். காரணம் அணுவுலையின் பாதிப்புக்கள் அதனை எதிர்ப்பவர்களைவிட ஆதரிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அவர்கள் அணுவுலையை தீவிரமாக ஆதரிக்க காரணம் அவர்கள் இருக்கும் அல்லது இருக்க விரும்பும் வர்கம்தான். மேல்தட்டு வர்கத்தின் நலன் எப்போதும் பாமரமக்களின் துயரத்தை நம்பியிருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைகளில் அவர்கள் எப்போதும் காசை வாங்கிகிட்டு காலி பண்ணவேண்டியதுதானே என்றுதான் பதில் சொல்வார்கள்.. நிலமற்ற கூலி விவசாயிகள் என்ன செய்வார்கள் என்ற யோசனைகூட அவர்களுக்கு வராது. இந்தியாவில் பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதெல்லாம் சென்செக்ஸ் விழுந்துவிடுமோ என்று மட்டுமே அஞ்சிய மேல்தட்டு கூட்டம் தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த உடன் கைகளில் விளக்கு பிடித்துக்கொண்டு வீதிகளில் ஊர்வலம் போனது. குஜராத் பூகம்பத்துக்கு தாரளமாக நிதியளித்து போதாதென்று உண்டியல் குலுக்கும் அளவுக்கு வந்த பெரிய மனிதர்கள் அதற்கு முன்னால் நிகழ்ந்த பெரும் பேரழிவான ஒரிசா புயலின்போது பெரிதாக எதுவும் செய்திருக்கவில்லை. அங்கு மாதக்கணக்கில் பிணங்கள் கூட அகற்ற நாதியற்று கிடந்தன. காரணம், குஜராத் ஒரு உற்பத்தி கேந்திரம், ஒரிசாவோ சோற்றுக்கு வழியற்று மாங்கொட்டை சாப்பிட்டு உயிரை விட்ட மக்கள் வாழும் மாநிலம். பேரழிவின்போதான கருணையிலும் மேல்தட்டு வர்கத்தினரிடையே ஒரு கபடத்தனம் இருக்கும்.

கூடங்குளம் விவகாரத்திலும் இதுதான் நடக்கிறது. நிதி மிகுந்தோருக்கு அணுவுலையின் அபாயங்கள் குறைவு. அவர்கள் கூடுமானவரை பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறார்கள், அப்படியே அபாயம் நேர்ந்தாலும் தப்பிவிடும் வாய்ப்புடையவர்களாக இருக்கிறர்கள். ஆகவே அவர்களுக்கு மின்சாரம் மட்டுமே பிரதானமாக தெரிகிறது. கைகா, கல்பாக்கம் என அணுவுலைகளுக்கு அருகிலிருப்போர் மாநிலத்தின் வழக்கமான மின்வெட்டைத்தான் சந்திக்கிறார்கள். மாறாக அதன் அபாயங்களை அவர்கள் மட்டுமே பெரிதும் எதிர்கொள்கிறார்கள். அணுவுலை தொடர்பான நிலைப்பாட்டில் இரண்டு பெரும் துருவங்களுக்குப் பின்னால் இருப்பது அவர்களது வர்கம் மட்டுமே.

எந்த பக்கம் இருக்கிறோம், எந்த பக்கம் இருப்பது எனும் குழப்பத்தில் இருக்கும் பலரும் இங்கிருக்கிறோம். அவர்களை கவனத்தில் கொண்டே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஏழையாகிவிடக்கூடாது எனும் ஒற்றை லட்சியத்தில் இருக்கும் நடுத்தரவர்கம் தாராளமயத்துக்கு பிறகு தம் நடவடிக்கைகளில் ஒரு பணக்காரத்தனத்தை காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அன்னா ஆதரவு தொடங்கி ஜாக்கி ஜட்டி வாங்குவது வரை சாத்தியப்படும் இடங்களிலெல்லாம் இப்பழக்கம் பின்பற்றப்படுகிறது. அணுவுலை தொடர்பிலும் இது பிரதிபலிக்க வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்த காப்பியடிக்கும் இயல்பு அசிங்கமானது, நன்றிகெட்டத்தனம் மற்றும் பிரயோஜனமில்லாதது. சாலையில் நிகழும் விபத்தின்போது எந்த மெர்சிடீஸ் காரும் நின்றதாக சரித்திரமில்லை. சமானிய மக்கள்தான் ஒவ்வொரு விபத்து மீட்பு நடவடிக்கையின்போதும் உடனிருக்கிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு வரும் பத்திரிக்கை விளம்பரங்களை பார்த்து பணம் அனுப்புவோரில் பாதிபேர் தமது எதிர்காலத்துக்கென சேமிக்க வழியற்ற தினக்கூலிகள் (மேலோட்டமான கருத்தல்ல.. முழு உண்மை). ஒவ்வொரு தேசத்தின் விடுதலைப்போராட்டத்திலும் முன்னால் நின்றுவிட்டு விடுதலைக்குப் பிறகு மீண்டும் கடைசிக்கு போவது ஏழை மக்கள்தான். இப்படி ஒவ்வொரு தருணத்திலும் அவர்களது உழைப்பிலும் தியாகத்திலும் வாழ்க்கையை நடத்தும் நாம் சிந்தனையில் மட்டும் பணக்காரனைப்போல வாழ நினைப்பது…. கோடிட்ட இடங்களை பூர்த்திசெய்வது உங்கள் வசதியைப் பொறுத்த்து, நான் சொல்ல எதுவுமில்லை.

கூடங்குளம் விவகாரத்தில் முதலில் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்வி, யாருடைய நல்வாழ்வை நாம் விரும்புகிறோம் என்பதுதான். அதுதான் நமது முடிவை தீர்மானிக்கிறது.

கூடங்குளம் மக்களுக்கு சீக்கிரம் லஞ்சம் கொடுங்கள் இல்லாவிட்டால் இந்த போராட்டம் இந்தியா முழுக்க மற்ற அணுவுலை திட்டங்களுக்கு எதிராக பரவிவிடும் என பிரதமருக்கு புலம்பல் கடிதம் எழுதியிருக்கிறார் கலாம். அதையேதான் நானும் சொல்கிறேன். இந்த எழுச்சி நாடு முழுமைக்கும் பரவியாகவேண்டிய ஒன்று. சாதாரண மக்களிடமிருந்து எடுத்தே பழக்கப்பட்ட நடுத்தர வர்கம், அதற்கான தமது நன்றியை காட்டுவதற்கான மகத்தான வாய்ப்பு இது. மென்மேலும் நமது பணம் பன்னாட்டு அணுஉலை முதலாளிகளுக்கு சென்று சேராது தடுக்க கிடைத்த பொன்னான சந்தர்பம் இது. ஆகவே எளிய மக்களின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் துணையிருப்போம், கூடங்குளம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதை அதற்கான முதல் நடவடிக்கையாக்குவோம்.

“மூன்று லட்சம் மக்களின் போராட்டமும் நான்கு ஜெனரேட்டர்களும்… 2” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. “ஓட்டுப்போடுவது ஜனனாயகக் கடமை.”
    ஆனா, பதவிக்கு வந்துட்டா அவங்க கடமையை செய்யறதில்லை.

    அதே போலத்தான் இந்தக் கூடங்குளத்துக் கதை.

    “நாட்டுக்காக இதைத் தாங்கிக்கணும். நாடு, அதன் இறையாண்மை, அதன் பொருளாதாரம் முக்கியம்.”

    உற்பத்தி ஆரம்பிச்சாச்சுன்னா, அம்பானியோட கரண்ட்டு பில்லு எடுத்துக்கிட்டு, பணம் வசூல் பண்ண ரவுடிங்க ஆட்டொவுல எப்புடி வருவாங்கன்னு அரசாங்கத்துக்கும் அப்துல் கலாமுக்குமே வெளிச்சம். கரண்ட்டு பில்லு கட்ட முடியாததால, கனக்ஷன் கட் பண்ணி இருட்ல இருக்குறதவிட, ஆரம்பத்துல இருந்தே இருட்ல இருக்கப் பழகிக்கலாம். காசு மிச்சமில்ல!! மிஸ்டர். கலாம். பதில் சொல்லிட்டுப் போங்க!

பின்னூட்டமொன்றை இடுக